தமிழ் அறியாத தமிழர்கள்

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

புதியமாதவி


====

தமிழகத்தில் மூன்றாவது மொழிப்போர்.

தமிழ் நாட்டில் தயாரிக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ்ப் பெயர்

சூட்டவேண்டும் என்ற விழிப்புணர்வு..

இந்த நிகழ்வுகளுக்கு நடுவில் மும்பை மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும்

15 இலட்சம் தமிழர்களின் இளைய தலைமுறை குறித்த அதிர்ச்சி தரும்

செய்திகள் தமிழ் மொழி, இன உணர்வாளர்களின் கவனிப்புக்கு

வரவேண்டும். இந்தப் பிரச்சனை மும்பை மண்ணுக்கு மட்டும் உரியதல்ல.

இன்றைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழ்ந்துவரும் தமிழர்களின்

பிரச்சனை. உலகமெங்கும் பரந்து விரிந்து அந்த மண்ணிலேயே

தங்கள் வாழ்க்கையைத் தொடரும் தமிழர்களின் பிரச்சனை.

மும்பையில் அண்மையில் நடந்து முடிந்த புத்தகக் காட்சியில் கிடைத்த

உண்மைத் தகவல்கள், புள்ளிவிவரங்கள் மிகவும் கவலைத்தருகின்றன.

ஏப்ரல் 1 முதல் 8 வரை மும்பை தமிழ்ச்சங்கத்தில் தமிழ்நாட்டின்

மிகச்சிறந்த பதிப்பகங்கள் 40 பேர்கள் மும்பை வந்திருந்தார்கள்.

1985க்குப் பிறகு மும்பையில் நடைபெறும் புத்தகக்காட்சி என்பதால்

மும்பையின் வாசகர்களைப் பற்றி அறியும் முதல் வாய்ப்பாகவும்

இந்த நிகழ்வு அமைந்தது.

கள்ளிக்காட்டின் இதிகாசத்தை வாங்கினார்கள். ஆனால் யாரும் கவிஞர்

வைரமுத்துவின் கவிதை தொகுப்பினை வாங்கவில்லை.

சுஜாதாவின் புத்தகங்கள், கல்கி, லட்சுமியின் புத்தகங்கள் விற்றன.

ஆன்மிகம் பற்றிய புத்தகங்கள், சித்தர்களின் வரலாறு வாங்கியவர்கள்

சிலர். ஒன்றிரண்டு க. ப. அறவாணன், அப்பாத்துரையார் புத்தகங்கள்,

சில சைவசித்தாந்த பதிப்பின் சொல்லகராதிகள் வாங்கப்பட்டன.

நவீன இலக்கியம் குறித்த எந்தப் பாதிப்புகளுமில்லை.

ஆட்டோ சங்கரின் வரலாறும் வீரப்பனின் வரலாறும் வாங்கினார்களே தவிர

சோளகர்த்தொட்டியைப் பற்றி அறிந்திருக்க வில்லை.

இதற்கெல்லாம் மும்பை தமிழர்களைக் குறை சொல்லவும் முடியாது.

வெகுஜனப் பத்திரிகைகளின், ஊடங்களின் சமூகத் தொண்டில் சீரழிந்துப்போன

சிந்தனைகளின் அவலம் இது.

ஜெயலட்சுமியும் செரினாவும் புத்தகம் போட்டிருந்தால் அதுவேகூட

அதிகம் விற்றிருக்கலாம். நல்ல வேளை அப்படி எதுவும் இன்னும்

நடந்துவிடவில்லை.

எந்த மாதிரி புத்தகங்கள் அதிகம் வாங்கப்பட்டன என்பது ஏற்படுத்திய

கவலையைவிட எந்த வயதினர் வந்து புத்தகங்களைப் பார்த்தார்கள்,

வாங்கினார்கள் என்பது மிகப் பெரியஅதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேர்வு நேரத்தில் புத்தகக்காட்சி நடந்ததால் கூட்டம் வரவில்லை

என்பது ஒருபக்கமிருந்தாலும் இளைஞர்கள் யாரும் புத்தகங்களை

காட்சிப் பொருளாகப் பார்க்கவும் வரவில்லை.

பதிபகத்தாருடன் ஏப்ரல் 6ல் புக்கார் (PUKAR ORG) அமைப்பின் ஓர்

ஆய்வுக்காக நேர்க்காணல் நடத்தி சில புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன.

15 இலட்சம் பேர்கள் இருக்கும் மும்பையில் புத்தகக் காட்சிக்கு வந்தவர்களின்

எண்ணிக்கை 500 தாண்டவில்லை.

வந்தவர்கள் அனைவரும் 70 விழுக்காடு 60 வயதினைத் தாண்டிய

முதியவர்கள். 20 விழுக்காடு 35 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்.

10 விழுக்காடு மும்பையில் இருக்கும் தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள்.

அதுவும் மும்பையில் மட்டும் 65 தமிழ் அமைப்புகள் இருக்கின்றன!!.

இந்தப் புள்ளிவிவரத்தின் படி பார்த்தால் இன்னும் பத்து வருடங்கள்

கழித்து மும்பையில் புத்தகம் வாசிப்பவர்கள் 50 வயதுக்காரர்கள்தான்.

இந்த 15 இலட்சம் தமிழர்களின் இல்லங்களில் வளர்ந்து வரும் கிட்டத்தட்ட

25 இலட்சம் தமிழர்கள் தமிழ் புத்தகங்கள் வாசிக்கப்போவதில்லை.

இதிலும் 20 இலட்சம் பேர்கள் தமிழ் வாசிக்கத் தெரியாதவர்களாகவே

இருப்பார்கள். தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்கள் இன்று மும்பையின்

நகர் மன்றப்பள்ளிகளில் தமிழ் வழிப் பாடங்கள் பயிலும் குடிசைவாசிகளின்

குழந்தைகள். அவர்களிலும் எத்தனைப் பேர்கள் ஊடகங்களின்

வெளிச்சத்தில் எது தமிழ் என்பதே தெரியாமல் போய்விடுவார்களோ

தெரியாது.

இன்னும் 20 வருடங்கள் கழித்து பலரின் பெயர்களில் மட்டுமே தமிழின்

அடையாளம் ஒட்டிக்கொண்டிருக்கும்.

ஏன் இன்றைக்கு தென்னாப்பிரிக்காவில் பலர் தமிழர்கள். தமிழ்ப் பெயர்கள்.

மும்பையிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு தன் அலுவல் பணி நிமித்தம்

சென்ற திரு. குமணராசன் அவர்கள் தன்னுடைய பயணக்குறிப்பில்

இந்தச் செய்தியைத் தெரிவிக்கிறார்.

‘தென்னாப்பிரிக்காவுக்குப் போனவுடன் சில தமிழ்ப் பெயர்களை

தொலைபேசி புத்தகத்தில் பார்த்து மகிழ்வுடன் தொடர்பு கொண்டேன்.

எங்களுக்குத் தமிழில் பேசத் தெரியாது என்றார்கள். வயதானவர்கள்

சிலரின் தொலைபேசி எண்களைத் தந்தார்கள். தமிழ்ப் பேசத் தெரியாத

நம் தமிழினம் ‘ என்று எழுதியுள்ளார்.

மும்பையிலும் தமிழ்ப் பெயர்களிருக்கும். 20 வருடங்களுக்குள்

தமிழ்ப் பேசத் தெரியாத தமிழினம் மும்பையில் ..

எழுதவும் நினைக்கவுமே நெஞ்சம் பதறுகிறது. ஆனால் இதுதான்

உண்மை.

இதைப் பற்றி சில நண்பர்களிடன் பேசிக்கொண்டிருந்தேன்.

ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்றேன்.

‘ அட வெள்ளம் வந்து மூழ்கியப் பிறகு ஜாண் போனால் என்ன ?

முழம் போனால் என்ன ? தமிழ்ப் படிக்காமல், தமிழே தெரியாமல்

தமிழ் நாட்டிலேயே பட்டங்கள் வாங்கி இளைய தலைமுறை வந்து

கொண்டிருக்கும்போது.. மும்பையில் என்ன செய்யமுடியும் ? ? ? ? ‘

என்று விரக்தியுடன் சொன்னார்கள்.

தமிழினத்தை அழிக்கப்போகும் சுனாமி எச்சரிக்கை இது.

என்ன செய்யப் போகிறோம் ?

இங்கே நம் கண்ணுக்குத் தெரியாமல்

வேர்களே அழுகிக்கொண்டிருக்கும் போது

பல நேரங்களில் மலர்களைப் பறித்ததற்காக நாம்

போராடிக்கொண்டிருக்கிறோமோ ? ?

….

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை