சிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

வாஸந்தி


‘ஒரு பிரும்மாண்ட நாசத்தின் முன் பாமர சண்டைக்கும் சச்சரவுக்கும் பரஸ்பர அவநம்பிக்கைக்கும்

ஏது இடம் ? நம் எல்லோருடைய வாழ்வின் செயற்கை அங்கிகளும் கழண்ட நிலையில் ,ஆதார மானுட தேவைகளுக்கான தேடலில் நாம் எல்லாரும் ஒன்றாகிப் போனவர்கள் அல்லவா ? ‘— ஜார்ஜ் எலியட்

டிசெம்பர் 26,2004 வரை சுனாமி என்ற வார்த்தை நமது அகராதியில் இடம்பெற்றிருக்கவில்லை.

‘கடல் அலை ‘ என்ற அச்சுறுத்தல் தொனிக்காத அந்த ஜப்பானிய சொல்லை வடமொழிச் சொல்லாக

பாவித்தாலும் ‘மங்களமான பெயர் கொண்டது ‘ என்று அர்த்தம் தொனிப்பதாக ஒரு நண்பர் சொன்னார்.

இயற்கையின் விஷ்வரூபத்தை கேவலம் ஒரு சொல்லில் விளக்க மானுடனுக்கு சக்தி இல்லை என்பதை

திடாரென்று அன்று நிலமகள் அதிர்ந்ததில், பாற்கடலில் சயனிக்கும் ஆதிசேஷன் விழித்துப் புரண்டதுபோல இந்துமகா சமுத்திரம் சீறிப் பாய்ந்த அந்த சில கணங்களில் நாம் கண்டுகொண்டோம்.

பல சரித்திரப் புகழ் பெற்ற நகரங்களைக் ‘கடல் கொண்டுவிட்டதாக ‘ கூறும் இதிகாசங்கள் ஸுனாமியைத்தான் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது. தரணியில் பாபங்கள் உச்சத்தை அடையும் போது ஒரு யுகம் பிரளயத்தின் மூலம் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் என்று புராணங்கள் சொல்கின்றன.கணித வேகத்தில் அதிகரிக்கும் தன்மை கொண்ட ஜனத்தொகை கட்டுப்படுத்தபடவில்லை என்றால் அதன் வேகத்துக்கு உணவு உற்பத்தி ஈடுகொடுக்கமுடியாத நிலையில் பஞ்சமோ வெள்ளமோ நோயோ வந்து உயிரைமாய்த்துதான்

சமன்பாட்டை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர் டி.ஆர்.மால்தூஸ் சொன்னார்.அது பின்னர் பலரால்

நிராகரிக்கப்பட்டது. இயற்கையை நிந்திப்பதே மனிதன் செய்யும் மகத்தான பாவம்.அதற்கான தண்டனையே இயற்கையின் சீற்றங்கள்.அது நமக்குத் தெரியாததல்ல. இருபத்திஓறாம் நூற்றாண்டு மனிதன் அளப்பற்கரிய ஞானம் பெற்றவன். விஞ்ஞானத் துறையில் நம்பமுடியாத மைல்கல்களைத் தாண்டியவன். தரணியை ஒரு நொடியில் நிர்மூலமாக்கும் சக்தி கொண்டவன்.

அதி மேதாவியான நவீன மனிதனுக்கு தரணியைக்காக்கும் சக்தி இல்லை என்பதை சுனாமி

வெட்டவெளிச்சமாக்கிவிட்டது. அதன் வருகையையும், வீச்சையும் சக்தியையும் கணிக்கவும் எச்சரிக்கவும் கூட உலகத்துத் தலை சிறந்த விஞ்ஞானிகளுக்குத் தெரியாமல் போனது நவயுக மனிதனுக்குச் சவுக்கடி. ஆனால் சுனாமி தந்த வெளிச்சத்தில் ஒரு நம்பிக்கைக் கனலும் ஒளிர்வதாக நான் சமாதான மடைகிறேன். நாம் கேவலம் தூசு என்ற பிரஞ்ஞை ஏற்படுத்திவிட்ட பீதி சாமான்யர்களையும் பிரபலங்களையும், ஏழைகளையும் பணக்காரர்களயும் வெள்ளயர் கருப்பர் பழுப்பர் என்ற பேதமில்லாமல், பல இனம் பல மொழியினரையும் ஒன்றாக்கிவிட்ட அற்புதம் அந்த வெளிச்சத்தில் ஏற்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது. ஜனன காலத்து விரோதிகளாக நினைத்து வாழப் பழகி விட்ட சிங்கள அரசும் புலிகள் தலைவர்களும் ஸுனாமி தாக்கத்தில் விரோதங்களை ஒதுக்கி, ஒருங்கிணைந்து செயல்பட்டாலே அதை சந்திக்கும் பலத்தைக் கொடுக்கும் என்று உணர்ந்திருக்கிறார்கள். சிங்களர்,தமிழர் முஸ்லிம் என்று பிரித்துப் பார்க்கக் கூடிய சேதம் அல்ல- இது தேசிய சேதம் என்றார் இலங்கை பிரதமர். புலிகள் தலைவரும் சிங்கள மக்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்திருக்கிறார்.இருவரது இந்த மன நிலை இரு தரப்பிற்குமிடையே நிரந்தர சமாதானத்துக்கு வழி ஏற்படுத்தப் பிரார்த்திப்போம். அமெரிக்க இன்னாள் அதிபர் புஷ்ஷும் முன்னாள் அதிபர் கிளின்டனும் எதிர் எதிர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ஈகோ பிரச்சினை எதுவும் இல்லாமல் அவர்கள் வாழும் உலகத்தின் மறுகோடியில் நிகழ்ந்திருக்கும் ஸுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்

கு உதவ கைக்கோர்த்திருக்கிறார்கள். சேர்ந்து நின்று அறிக்கை விடுகிறார்கள். ஆனால் தி.மு.க.தலைவர் கருணாநிதியையும் அதிமுக தலைவி ஜெயலலிதாவையும் ஒருங்கிணைக்க அந்த சுனாமிக்கும் சக்தியில்லை என்பது தமிழர்கள் செய்த துர்பாக்கியம்.அவரவரது கட்சி சார்ந்த தொலைக்காட்சி சானல்களில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதும் சாடுவதும் நிற்கவில்லை.

உலகத்து பல மூலைகளிலிருந்து- அலாஸ்காவிலிருந்தும்- கருணை உள்ளம் கொண்ட மக்கள் குழுக்கள் தொண்டு செய்ய பாதிக்கப்பட்ட இந்தொனீஷிய பகுதிகளுக்கும் தமிழ் நாட்டில் நாகப்பட்டிணத்துக்கும் கடலூருக்கும் விரைவதை தொலைக் காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.தமிழ் தெரியாத பாலிவுட் நடிகர் கடலூருக்கு விரைந்து நீர் பொட்டலங்களை வினியோகிக்கிறார். ஒரு கிராமத்தை நிவாரணப்பணிக்காக தத்தெடுக்கிறார். இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள், வயோதிகர்கள், என்ற வயது பேதமில்லாமல், பதறிக்கொண்டு தமிழ் நாட்டுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ நினைத்து பல்வேறு மாநிலங்களிலிருந்து விரைகிறார்கள். நிவாரணப் பணிகளுக்காக உதவித்தொகை வரலாறு காணாத வகையில் சேகரிக்கப்பட்டு வருகிறது. மிகப் பணக்காரர்களிலிருந்து மத்திய, கீழ் மத்திய வர்கத்தினர், அன்றாட கூலி பெறுபவர்கள், பாக்கெட் மனி சேமிப்பிலிருந்து கொடுக்கும் பள்ளி மாணவர்கள் வரை எல்லா மட்டத்து மக்களும் பணத்தைக் கண் சொடுக்காமல் அளிக்கும் செய்திகளைப் படிக்கும்போது, மனிதத்தின் மீதான நம்பிக்கைத் துளிர்க்கிறது. நெஞ்சு நெகிழ்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் சோகத்தை ஒரு சிறிதளவேனும் இந்த ஒன்றுபட்ட கருணைத் திரட்டு குறைக்க உதவட்டும் என்ற பிரார்த்தனையுடன் செய்யப்படும் உதவி ஒவ்வொன்றும்– போய் சேரவேண்டிய இடத்துக்குப் போய் சேருமா என்ற பரிதவிப்புடன். பரிதவிப்புக்குக் காரணம் உண்டு.

தன்னார்வத் தொண்டு நிருவனங்கள் புற்றீசல்கள்போல் கிளம்பிவிட்டன.டி.வி. சானல்கள், வாரப்பத்திரிக்கைகள் எல்லாம் நிதி திரட்டுகின்றன ஸுனாமியின் பெயரில். வசிக்கும் அடுக்கு மாடி கட்டிடங்களில் குழந்தைகள் உண்டியல் குலுக்கக் கிளம்பிவிட்டன, சுனாமிக்காக. ஆடைகள், அரிசிப்பைகள், பருப்புப் பைகள் என்று ஆள் ஆளாக வாங்கிக் கொண்டு போகிறார்கள். இவற்றில் எத்தனை உண்மை யானவை எத்தனை போலி ? சுனாமிக்கே வெளிச்சம்.சுனாமியின் தாக்கம் ஒரு தேசிய தாக்கம். நமது நிவாரண நிதி பிரதமர் நிவாரண நிதி அல்லது முதலமைச்சர் நிவாரண நிதிக்குச் சென்றால்தான்

நிவாரணப்பணிகளுக்கு உபயோகப்படும் என்று நிச்சயமாக நம்பலாம்.தமிழ் நாட்டில் பாதிக்கப்பட்ட நாகைப்பட்டிணம், கடலூர் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பாக நிவாரண மற்றும் புனருத்தாரணப் பணிகள் நடைபெறுவதாக பி.பி.ஸி, ஸி என்.என். போன்ற அயல்நாட்டு தொலை காட்சி நிறுவனங்கள் பாராட்டுகின்றன. பணி செய்யமுற்படும் தொண்டு நிறுவனங்களில் சிலவே உண்மை.பல விளம்பரத்திற்கும் சுனாமியின் பெயரில் நிதி சுருட்டவும் கிளம்புபவை.

அப்படிச் சேகரிக்கப்பட்ட அரிசியையும் ஆடைகளையும் சென்னையிலேயே பலர் விற்பதாக நேரில் கண்டவர்கள் சொல்கிறார்கள். சுனாமியின் ராட்ஷஸ தாக்குதலில் பல சடலங்கள் கரையில் வீழ்ந்தபோது

உலகம் ஸ்தம்பித்துக் கிடந்த வேளையில் சடலங்களின் மேலிருந்த நகைகளைப் பலர் திருடிச் சென்றதாக

ஒரு செய்தி சொன்னது.நிவாரணத்திற்கு என்று சேகரித்ததை விற்பவர்கள் திருடர்கள். அந்தத் திருட்டுக்கு

நாம் இடமளிக்ககூடாது.தலைக்குத் தலை அம்பலமாகச் செயல்படும் நேரமில்லை இது. அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படவேண்டிய நேரம்–எதிர் கட்சித் தலைவர்களும்- கட்சி பேதமில்லாமல்.

—-

vaasanthi@hathway.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி