தமிழா….தமிழா!

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

கண்ணன் பழனிச்சாமி


தமிழைக் காப்பாற்றவும், வளர்க்கவும் ‘தமிழ்க்குடி தாங்கிகள் ‘ ராமதாசும், திருமாவளவனும் அறிவிக்கின்ற யோசனைகளும், மிரட்டலுடன் கூறும் ஆலோசனைகளும் நமக்கெல்லாம் சில சமயங்களில் நகைச்சுவையாகவும், சில சமயங்களில் வேதனையாகவும் இருக்கிறது. திரைப் படங்களுக்கு மட்டுமல்லாது, கூடுமான வரை நம் குழந்தைகளுக்கும், நிறுவனங்களுக்கும் கூட தமிழில் பெயர் வைப்பது நல்ல செயல் தான். ஆனால், இது தான் தீர்வு என முழங்குவது ‘வெற்று ‘ அரசியலே!

மொழிக்காக உயிரையும் கொடுப்போம் என திருமா முழங்குகிறார். உங்கள் உயிரெல்லாம், தமிழுக்கு வேண்டாம். நீங்கள் உண்மையிலேயே தமிழுக்கு ஏதாவது செய்ய நினைத்தால், உங்கள் மூளையும், நேரமும் மட்டுமே போதும். உங்கள் இருவரின் கட்சி அல்லது அமைப்பின் தலைவர்களின் குழந்தைகளில் எத்தனை பேர், தமிழ் வழிக் கல்வி பயில்கின்றனர் ? ‘தமிழ் வழிக் கல்வி ‘ எதிர்கால வேலைவாய்ப்புக்கு ஒரு தடையாக இருக்கும் என்ற தமிழ்ப் பெற்றோர்களின் மனப்போக்கை மாற்றி, தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க என்ன திட்டம்

வைத்திருக்கிறீர்கள் ? இது ஒரு விதத்தில் உண்மையும் கூட. இந்தச் சூழ்நிலையில், தமிழ் வழிக் கல்வி பயில்வோர்களுக்கு, தகுந்த வேலை வாய்ப்பினை உருவாக்கித் தர திட்டம் ஏதாவது உண்டா உங்களிடம் ?

உ.வே.சா. என்ற தனி ஒரு மனிதரால், தென்னகம் எங்கும் பரவிக் கிடந்த ஓலைச் சுவடிகளையெல்லாம் சேகரித்து, தமிழன்னைக்கு மகத்தான பணியைச் செய்ய முடிந்த போது, அமைப்பு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வலுவாக இருக்கும் உங்களால் ஆக்கப் பூர்வமான ஓரிரு செயல்களை ஏன் செய்ய முடியாது ? தமிழில் கலைச் சொற்களை உருவாக்க ஆர்வமாக உள்ள அறிஞர்களுக்கும், பொருளாதார ரீதியாகச் சிரமப்படும் நல்ல படைப்பாளிகளுக்கும் உறுதுணையாக ஏன் நீங்கள் இருக்கக் கூடாது ?

மூச்சுக்கு முந்நூறு முறை ‘தமிழ் ‘, ‘தமிழ்க் கலாச்சாரம் ‘, ‘தமிழ்ப் பண்பாடு ‘ என்று முழங்கும் திருமா-விடம் தமிழனுக்கான அடையாளம் இருக்கிறதா ? நிதியமைச்சர் ப.சிதம்பரத்தில் ஆரம்பித்து ஏறத்தாழ எல்லாத் தமிழகத் தலைவர்களின் உடையை வைத்தே அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி விடலாம். ஆனால், நீங்கள் ? இதை ஒரு வாதத்திற்காகத் தான் இங்கே கூறி உள்ளேன். காலத்திற்கேற்ப நீங்கள் மாறும் போது, நம் மொழியையும் அதன் மாண்பு சிதையா வண்ணம், மாறுதலுக்கு உட்படுத்த வேண்டும்.

நடிகர் கமலஹாசனின் தமிழ்ப் பற்றும், இலக்கிய ஆர்வமும் நம் அனைவருக்கும் தெரிந்ததே. உலக அளவில், தமிழனின் திரைப்படத் திறமையை எடுத்துக் காட்டக் கூடிய அந்தக் கலைஞனின் தமிழார்வத்தை ஒரு திரைப் படத் தலைப்பின் மூலம் நீங்கள் சந்தேகிப்பது அப்பட்டமான அரசியலே அன்றி, வேறொன்றும் அல்ல! இது போன்ற போராட்டங்களை அரசு அனுமதிக்காது என்ற முதல்வரின் அறிவிப்பு நல்ல செய்தி (அரசியல் ஆதாயத்திற்காகவே இருந்தாலும்)! இத்தனை நாள் அமைதியாக இருந்து விட்டு, முதல்வரின் அறிவிப்புக்குப் பின், ‘ம.தி.மு.க. இந்தப் போராட்டங்களுக்குத் துணை போகாது ‘ என்று வைகோ-வும் அவர் பங்குக்கு ‘அரசியல் ‘ செய்கிறார்.

தமிழ், தமிழன், பகுத்தறிவு பற்றியெல்லாம் பேசும் போது, கருணாநிதி நிச்சயம் நினைவுக்கு வருவார். பேரனின் தொலைக்காட்சி தமிழ் அலைவரிசைகளுக்குத் தமிழில் பெயர் வைக்கச் சொல்ல மாட்டார்! ஆத்திகர்கள் கூட ஏற்றுக் கொள்ள முடியாத அளவு மூட நம்பிக்கைகள் நிறைந்த தொடர்களை ஒளிபரப்ப வேண்டாமென்று பேரனிடம் கூற மாட்டார்! கேட்டால், அது தொழில் என்பார். ஆமாம்..ஆமாம்.. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் ‘தொழில் வேறு.. கொள்கை வேறு ‘…. ஆனால், உடன்பிறப்புக்களும், ஏனைய தமிழர்களும் இரண்டையும் ஒன்றறக் கலந்து வாழ வேண்டும். நல்ல நிலைப்பாடு…! ‘வரதராஜப் பெருமாள் வந்து சாட்சி சொல்வாரா ? ‘ என்ற நையாண்டி வேறு! அழகிரி சிறையில் இருந்து வெளியே வந்த போது, உங்கள் மனைவி அவர் கையில் கட்டிய தாயத்து தான் அவரை வழக்கில் இருந்து காப்பாற்றுமா ? நையாண்டியாக மனைவியிடம் இது குறித்துக் கேட்டார்களா ?

மொழியை, இனத்தை எல்லாம் தயவு செய்து அரசியலுக்குப் பயன்படுத்தாதீர்கள்! இது தான் எங்களின் கோரிக்கை!

— கண்ணன் பழனிச்சாமி, சிங்கப்பூர்.

kannan_vnp@yahoo.com

Series Navigation

கண்ணன் பழனிச்சாமி

கண்ணன் பழனிச்சாமி