சென்ற வாரங்களில் (பெப்ரவரி 3, 2005) கோவா, பிகார், ஈராக், நேபாள், ஈரான், சீனா, தமிழ்நாடு

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

சின்னக்கருப்பன்


**

கடந்த 50 வருடங்களில் மிக அதிகமான கட்சித்தாவல்களையும் எதிர்கட்சி ஆட்சிகளை சட்டப்பூர்வமின்றி கவர்னர் மூலம் கலைப்பதையும் ஒரு கலையாக பயின்று வந்த காங்கிரஸ், இன்று கோவா அரசை கவிழ்த்து பிரதாப் சிங் ரானே அவர்களை முதல்வர் பதவியில் கவர்னர் துணையுடன் உட்காரவைத்திருக்கிறது.

நான்கு பாஜக எம் எல் ஏக்களை ராஜினாமா செய்யவைத்து எண்ணிக்கையை 36 ஆக ஆக்கி, பாஜக கூட்டணியை சிறுபான்மையாக ஆக்கி, நம்பிக்கை வாக்கெடுப்பு நிலையை தோற்றுவித்தது காங்கிரஸ். ஒரு சுயேச்சை எம் எல் ஏவை அவையிலிருந்து நீக்குவதன்மூலம் பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என்று பாஜக முனைய, பாஜக கூட்டணி அரசின் மீதான நம்பிக்கைத் தீர்மானத்தில் 18 வாக்குக்கள் பாஜகவுக்கும் 6 வாக்குக்கள் அரசு மீது நம்பிக்கை இல்லை என்றும் விழுந்திருக்கின்றன. இருந்தும், கவர்னரால் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு காங்கிரஸ் முதல்வரை உட்கார வைத்திருக்கிறார் கவர்னர்.

36 எம் எல் ஏக்களில் 18 வாக்குக்கள் பாஜகவுக்கு விழுந்திருக்கும் போது 1 சுயேச்சையை வெளியேற்றியதன் மூலம் எவ்வாறு இந்த அரசு நெறிமுறை தவறிவிட்டது என்பது எனக்குப் புரியவில்லை. இருவர் பக்கமும் 18-17 என்று விழுந்திருந்தாலும் கூட, அப்படிப்பட்ட ஒரு இழுபறியில் அவை ஸ்பீக்கர் தனது ஓட்டை போடலாம். அவை ஸ்பீக்கர் பாஜகவைச் சார்ந்தவர். எவ்வாறு ஓட்டுப் போடுவார் ? ஆகவே எப்படியிருந்தாலும் பாஜகதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்திருக்கும். ஒரு எம் எல் ஏவை வைத்து கூத்தடித்து சட்டம் ஒழுங்கு சிதறிவிட்டது போல காட்டி அரசை டிஸ்மிஸ் செய்து காங்கிரஸ் முதல்வரை உட்காரவைத்திருக்கிறார்கள்.

இது அவமானம். இதனை விட்டால், நாளை எதிர்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற தான் தோன்றித்தனமான ஆட்சிக்கலைப்பு செய்து காங்கிரஸ் முதல்வரை உட்காரவைத்து, அரசு மீது நம்பிக்கை தீர்மானத்தை ஆறுமாதத்துக்குள் நிறைவேற்றவேண்டும் என்று கவர்னரை விட்டு சொல்ல வைத்து நீண்ட நெடுங்காலம் காங்கிரஸ் ஆட்சியை ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்டுவரலாம்.

இதுதான் காங்கிரஸின் ஜனநாயகம், மதச்சார்பின்மை இன்ன பிறவற்றின் எடுத்துக்காட்டு. இது ஜனநாயகத்தைப் பற்றிய அவநம்பிக்கையைத்தான் மக்களிடம் தோற்றுவிக்கும். மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழப்பது எல்லா கட்சியினருக்கும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஆபத்து. அதன் காரணமாகவே, எல்லா கட்சியினராலும், எதிர்க்கப்பட வேண்டியது என்று கருதுகிறேன்.

**

லல்லு பிரசாத் யாதவ் பிகாரில் தேர்தலுக்கு நிற்கிறார். இது போன்ற தேர்தல்கள் இல்லையென்றால், ஆயிரமாண்டு முதல்வராகவோ (அல்லது ராஜாவாகவோ) முடிசூட்டிகொள்ள இவர் போன்றவர்களுக்கு தடையிராது. நான் இங்கு கலைஞர், புரட்சித்தலைவி இருவரையும் சேர்த்தே சொல்கிறேன்.

ஆனால், தேர்தல் வழியாகத்தான் அரசுக்கட்டில் ஏறமுடியும் என்ற நிலையில், லல்லு பிரசாத் யாதவ் மற்ற அரசியல்வாதிகளுக்கு பாடம் சொல்லித்தரும் தகுதி படைத்தவர். ஏற்கெனவே திட்டமிட்டு எப்போது எந்த அறிக்கையை வெளிவர வைக்கவேண்டும் என்பது தெரிந்தவர். சரியாக பெப்ரவரி தேர்தல் வரும் அதே நேரத்தில் கோத்ராவைப் பற்றி ஒரு தற்காலிக அறிக்கை சமர்ப்பிக்க வைத்து அதை வைத்து பாஜகவை திட்டவும், முஸ்லீம்கள் ஓட்டை தன் பக்கம் இறுத்தி வைத்துக்கொள்ளவும் தெரிந்தவர். ரயில்வே பட்ஜட் சமர்ப்பிக்கும் போது கோத்ராவை பற்றி ஆராய ஒரு பானர்ஜி விசாரணை கமிஷன் என்று சொன்னபோதே நினைத்தேன். உச்ச நீதி மன்றத்தில் இருந்த யு சி பானர்ஜி, இடதுசாரிகளுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். ஜோதிபாசு தாராளமனதுடன் வழங்கிய நிலங்களுக்கு உரிமையாளர் என்று பத்திரிக்கைகளில் அப்போதே செய்தி வந்தது. இது அட்ஹோமினம் என்று எனக்குத் தெரியும். இருப்பினும், இது சில சமயங்களில் சில உள்நோக்கங்களையும் மறைக்கப்படும் சில விஷயங்களையும் சொல்கிறது.

ஆனால், லல்லு பிரசாத் யாதவ் வெற்றிபெற இருக்கும் வாய்ப்புகள் வெகுவேகமாக குறைந்து வருகின்றன என்றே கருதுகிறேன். இதற்காகவே முன் கூட்டியே திட்டமிட்டு குஜராத் கலவரத்தின் போது பதவி விலகிய ராம் விலாஸ் பாஸ்வன், அதே காரணத்தைச் சொல்லி, முஸ்லீம்களின் ஓட்டை தனக்குக் கேட்கிறார். இது நடுவில் தொடர்ந்து நடக்கும் கடத்தல்கள் பணம்பறிப்புகள் என்ற பிகார் சூழ்நிலை அரசியல் பிரச்னையாக உருமாறி வருகிறது. தலித் மற்றும் ஏழைக்குழந்தைகளுக்கான படிப்பு என்பது கானல் நீராகி வருகிறது. ரீடிஃபில் படித்த ஒரு வார்த்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது. ‘மாஸ்டர்ஜி ஆயேகா நஹிந்தோ லட்கேன் படேகா கஹான் ? ‘

ஆனால், லல்லு பிரசாத் யாதவின் உதவியோடு மத்திய அரசாங்கத்தில் இருக்கும் காங்கிரஸ் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், ஒருபக்கம் பஸ்வான் கூட்டு மற்றொரு பக்கம் லல்லு பிரசாத் யாதவ் கூட்டு என்று களம் இறங்கியிருக்கிறது. ஏகப்பட்ட பணம் செலவழித்து பிகாரில் காங்கிரஸ் பிரச்சாரம் நடப்பதாகக் கேள்வி. ஆனால் இதன் விளைவு மேல்ஜாதி ஓட்டுக்கள் காங்கிரசுக்கு விழும் என்று பாஜக பயப்பட்டாலும், பிரச்னை லல்லு பிரசாத் யாதவுக்கே என்பது என் அனுமானம். இந்த தேர்தலில் முஸ்லீம் ஓட்டுக்கள் காங்கிரசுக்கும், பாஸ்வானுக்கும் சிதறினால், வெற்றி பெறப்போவது ஜனதாதள நிதிஷ் குமாரும் பாரதிய ஜனதா கட்சியுமே. சிதறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கமருதீன் படத்தைப் போட்டு ஓட்டுக்கேட்கிறார்; கண்ணில் தென்படும் முஸ்லீம் முல்லாக்கள் எல்லோரையும் சந்தித்து ஆசி வாங்கிக்கொண்டிருக்கிறார் லல்லு பிரசாத் யாதவ். ஆனால், முஸ்லீம் ஓட்டு சிதறும் என்ற உணர்வு பரவினால், அவர் உறுதியாக நம்பும் யாதவர் ஓட்டும் வேகமாக பாரதிய ஜனதா கட்சிக்கும் நிதிஷ் குமாருக்குமே செல்லும். காங்கிரசுக்கோ அல்லது பாஸ்வானுக்கோ செல்லாது.

அதே போல ஜார்க்கண்ட் மாநிலத்திலும் சென்றமுறை காங்கிரஸ் பெற்ற வெற்றிகளை திருப்பி செய்து காட்டமுடியுமா என்பது கேள்விக்குறிதான்.

**

ஈராக் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. பெரும்பான்மையான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். சுதந்திரமான தேர்தல் என்று பார்வையாளர்கள் கூறுகிறார்கள். தேர்தல் முடிவுகள் கட்சி சார்பாக நடந்திருப்பதால், மக்கள் கட்சிக்கே வாக்களித்திருக்கிறார்கள். (இது குறிப்பிட்ட வேட்பாளர்களை வன்முறையாளர்கள் கொல்வதிலிருந்து காப்பாற்றுவதற்காக)

இது என்னை ஒரு வினோதமான நிலையில் நிறுத்தி வைத்திருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்ஸிஸ்ட் தலைவர்கள் இந்த தேர்தலை ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்கள். அதனாலேயே நான் இதனை ஆதரித்தாக வேண்டும் என்பது போல தோன்றுகிறது.

பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின் என்பது குறள் வாக்குதான் என்றாலும், புரை தீர்ந்த நன்மை என்று ஒன்று உண்டா என்பது நான் அடிக்கடி என்னை நானே கேட்கும் கேள்வி. இதைப் பற்றி இன்று எழுதிய வேறு ஒரு கட்டுரையில் குறிப்பு எழுதியிருக்கிறேன்.

**

சமீபத்தில் நேபாளத்து மாவோயிஸ்டுகள் சுமார் 700 சிறார்களையும் கூடவே ஆசிரியர்களையும் கடத்திச் சென்று, அரசாங்கத்துக்கு எதிரான போரில் ஈடுபடுத்த இருக்கிறார்கள் என்று படித்தேன்.

http://news.newkerala.com/india-news/ ?action=fullnews&id=65815

கம்யூனிஸம், லெனினிஸம், மாவோயிஸம் படித்து, கரைத்துக் குடித்து, வர்க்கப்போராட்டத்துக்கான அனைத்து அடிப்படைகளையும் அறவே அறிந்து, வர்க்கப்போராட்டமே சிறந்த வழி என்று அறிவுப்பூர்வமாக உளமார உணர்ந்த பின்னரே இந்த சிறார்கள் போராடப் போகிறார்கள் என்று நம்புகிறேன். அதற்கு மிக அதிக நாளாகாது என்றும் நாம் நம்பலாம். இதே போல ஆப்பிரிக்காவில் லார்ட் ரெசிஸ்டென்ஸ் ஆர்மி என்று ஒன்று இருக்கிறது.

விவிலிய கடவுள் கொடுத்த 10 கட்டளைகளை வடக்கு உகாண்டாவில் நிலை நிறுத்த இந்த படை ஜோஸப் கோனி என்பவரின் கீழ் போராடிக்கொண்டிருக்கிறது. இங்கும் குழந்தைகளை கடத்திச் சென்று பயிற்சி அளித்து இந்த படையில் போராட வைக்கிறார்கள். உண்மையிலேயே குழந்தைகள். ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சிறுவர்களையும் சிறுமிகளையும் கடத்திச் சென்று சிறுவர்கறை¢ற்ள ஆயுதப் பயிற்சிக்கும் சிறுமிகளை பாலுறவு உபயோகத்துக்கும் பயன்படுத்துகிறார்கள். (இது மேற்கத்திய உலகுக்கு பயங்கரவாதமாகத் தெரியவில்லை போலும். தெரிந்தாலும் நம்ம கடவுள்தானே என்று விட்டுவிட்டார்களோ என்னவோ)

http://www.globalsecurity.org/military/world/para/lra.htm

எல்லோரும் போராடுவது ஒரு இனிய பொற்காலம் நோக்கி. அந்த பொற்காலத்துக்கான பாதை நமது ரத்தத்தின் மீதும் நமது குழந்தைகளின் ரத்தத்தின் மீதும், அறியாப்பருவம் தொலைத்த குழந்தைகளின் ஊடாகவும் தான் அமைக்கப்பட்டிருக்கிறது.

***

அமெரிக்காவின் அடுத்த குறி ஈரான் என்று பேசிக்கொள்கிறார்கள். இது சும்மா பயமுறுத்தவா அல்லது உண்மையிலேயா என்பது தெலியலேது.

***

ஈரானாக இருக்க சாத்தியங்கள் நிச்சயம் உண்டு. ஏனெனில் உலகப்படத்தைப் பாருங்கள். துருக்கி ஆரம்பித்து பாகிஸ்தான் வரையிலான பரப்பில், எல்லா இடங்களும் அமெரிக்காவின் நேரடியான அல்லது மறைமுகமான கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. துருக்கி, ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று நீண்டிருப்பதில் நடுவே ஈரான் உருத்திக்கொண்டு நிற்கிறது.

மேலும், தற்போதைய ஈராக்கில் அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரத்தை ஷியா மக்கள் மத்தியில் செய்யும் செல்வாக்கு பெற்றது ஈரான். ஈராக் முழுமையாக ஷியாபிரிவினர் கையில் வரும் வரைக்கும் ஈரான் காத்திருக்கும் என்றே தோன்றுகிறது. அதுவரைக்கும் ஷியா மதகுருக்களின் ஆட்சி ஈரானில் இருந்தால் அது ஈராக் அமெரிக்காவின் துணை காலனியாக தொடர்ந்து இருப்பதற்கு இடையூறு.

ஈரான் அமெரிக்க புவியியல்-அரசியல் சதுரங்கத்தில் வீழ்த்தவேண்டிய காய் என்று அமெரிக்காவின் புதுப் பழமைவாதிகள் (நியோகான்ஸ்) நினைக்கலாம். என்றும் இல்லாத புதுமையாக சீனா- இந்தியா கூட்டு அறிக்கையில் உலகின் அதிகார மையங்கள் பல இடங்களில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டதற்கும் ஈரான் மீது அமெரிக்காவின் கண் ஒரு காரணம் எனத் தோன்றுகிறது.

***

சீனாவில் இன்று 120 ஆண்களுக்கும் 100 பெண்கள்தான் இருப்பதாக பல கணக்கெடுப்புகள் சொல்கின்றன. இது உண்மையில் படு தீவிரமான பிரச்னை. 9 வயதுக்குள் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை மட்டும் எடுத்துப் பார்த்தால், சுமார் 1 கோடியே 30 லட்சம் பையன்களுக்கு துணை கிடைக்கும் வாய்ப்பே இல்லை. இதன் காரணங்கள் ஆண்குழந்தையை விரும்பும் கலாச்சாரமும், சீனாவின் ஒரு குழந்தை குடும்பக் கட்டுப்பாடு முறையும், தாராளமாகக் கிடைக்கும் குழந்தை பால் பரிசோதனை மற்றும் அபார்ஷன் வசதிகளும்.

1850களில் வெள்ளம் பஞ்சம் பட்டினிக்கு நடுவில் வட சீனாவில் மக்கள் பெண் சிசுக்கொலையை பரவலாக உபயோகிக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் இது யாருக்கும் பிரச்னையாக இல்லை. ஆனால், வெகு சீக்கிரமே சுமார் 25 சதவீத ஆண்களுக்கு பெண் துணையே இல்லாமல் போனது. இப்படிப்பட்ட கனியாத கிளைகள் ஆங்காங்கே ஒன்று கூடி வன்முறை கும்பல்களாக இணைந்தார்கள். வெகு சீக்கிரமே இந்த கும்பல்கள் இணைந்து 10000 பேர் சேர்ந்த ஒரு படை உருவானது. இந்த படை இந்த வட சீனாவை முழுவதும் வன்முறை மூலம் தான் தோன்றித்தனமாக ஆண்டது. இது நியன் (Nien) எதிர்ப்பு போராட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதனை அடக்கி அங்கு அமைதியை நிலைநாட்ட சீன மத்திய அரசுக்கு வெகுகாலம் பிடித்தது.

நம் ஊரில் நாமக்கல் பிரச்னை பற்றிய ஒரு கட்டுரை சில காலத்துக்கு முன்னர் திண்ணையில் படித்தேன். யாரேனும் இது பற்றி எழுதுகிறார்களே என்று சந்தோஷமாக இருக்கிறது.

***

சமீபத்தில் அதைவிட மோசமான ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. அது தமிழகத்து இளம் சிறார்கள் கேரளாவில் வேலைக்கு விற்கப்படுவது. ஒரு பக்கம் ஒரிஜினல் ‘மதச்சார்பற்ற ‘ காங்கிரஸ் ஆட்சி, மறுபக்கம் ‘மதச்சார்பற்ற ‘தாக மாறிய அதிமுக ஆட்சி. (அது ஒன்று மட்டும் போதுமே ஓட்டுப் போட ?).

அநியாயம்! போலீஸ்காரர்களும், அரசாங்கமும் பல் குத்திக் கொண்டிருக்கிறார்கள். பொழுது போகாதபோது, கூடவே நீதித்துறையும் பல் குத்த வந்துவிடுகிறார்கள்.

சமீபத்தில் எனக்கு அநியாயம் என்று பட்ட தீர்ப்பை கேரள நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. 1996இல் பலரால் பாலுறவு பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு 16 வயது பெண்ணின் பிரச்னையை எடுத்து ஸ்திரீவேதி என்ற அமைப்பைக் கொண்டு (முன்னாள் நக்ஸலைட்) அஜிதா அவர்களும் மெர்ஸி அலெக்ஸாண்டர் அவர்களும் போராடி வந்திருக்கிறார்கள். அதில் கைது செய்யப்பட்ட 35 பேரையும் விடுதலை செய்து அதில் முக்கிய குற்றவாளியான எஸ்.எஸ் தர்மராஜனுக்கு ஆயுள்தண்டனையிலிருந்து 5 வருட தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஐஸ் கிரீம் பார்லர் கேஸில் சம்பந்தப்பட்டவராக கருதப்பட்ட அமைச்சர் குன்ஹலிக்குட்டி சமீபத்தில்தான் பலத்த எதிர்ப்பைத் தாங்க முடியாமல் ராஜினாமா செய்தார். அதற்கும் அஜிதாவே காரணம் என்று அறிகிறேன்.

***

ஏன் குழந்தைகளை பெற்றோர் விற்கிறார்கள் ? இத்தனைக்கும் தமிழகம் மற்ற மாநிலங்களை விட சமூக நீதியிலும், தொழில்துறை முன்னேற்றத்திலும், படிப்பறிவிலும், பொருளாதாரத்திலும் சிறப்பானதாக இருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் மூலம் தெரிவிக்கிறார்கள்.

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்