டச்சு கலை உலகை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம்

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

ஆசாரகீனன்


முஸ்லிம் பெண்களின் மீதான மத ரீதியான வன்முறைக்கு எதிராக எடுக்கப்பட்ட சப்மிஷன் குறும்படம் பற்றியும், பின்னர் அதன் இயக்குனர் தியோ வான் கோ இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டது பற்றியும் திண்ணையில் எழுதியிருந்தேன்.

நெதர்லாந்தின் கலை உலகைப் போன்ற சுதந்திரமான, எதையும் திறந்த மனதுடன் அணுகும் இடத்தில் எதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது எதை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முடிவு செய்யவது சாத்தியமா ? கடந்த சில வாரங்களில் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது அது சாத்தியமே என்றே தோன்றுகிறது.

ரோடர்டாம் (Rotterdam) நகரில் நடக்கும் நெதர்லாந்தின் முக்கியமான திரைப்பட விழாவில், முஸ்லிம் பெண்களின் மீதான மத ரீதியான வன்முறைக்கு எதிரான தியோ வான்கோவின் குறும்படம் ‘சப்மிஷன் ‘ காட்டப்பட இருந்தது. இது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இஸ்லாமிய தீவிரவாதி ஒருவனால் தியோ வான் கோ படுகொலை செய்யப்பட்டு மூன்று மாதங்களே ஆகியுள்ளது கவனத்துக்குரியது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மிரட்டல் காரணமாகவும், காவல்துறையினரின் ஆலோசனையின் படியும் படத்தைத் திரையிடாமல் விலக்கிக் கொள்வதாக இந்தக் குறும்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார்.

அதே சமயத்தில், ஜனவரி 15-ம் தேதி ஆம்ஸ்டர்டாம் நகரத்திலுள்ள நவீன கலைகளுக்கான அருங்காட்சியகத்தில் தம் ஓவியக் கண்காட்சியை நடத்தத் தொடங்கிய ஓவியர் ஒருவர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கொலை மிரட்டல் காரணமாக தலைமறைவு வாழ்க்கை நடத்தும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதிகளைக் கேலி செய்யும் ஓவியங்களைத் தீட்டிய ராசிட் பென் அலி (Rachid Ben Ali) என்பவருக்கே இந்தக் கதி. இவர் மொராக்கோவிலிருந்து புலம்பெயர்ந்து நெதர்லாந்தில் குடியேறியவர்.

இத்தகைய பயப்படும் போக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளை ஊக்குவிக்கவே செய்யும் என்று பல எழுத்தாளர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் தங்கள் செயல் திட்டங்களைத் திணிப்பதையும், நெதர்லாந்து நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் கருத்து சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையை நசுக்குவதையும் சமீபத்திய சம்பவங்கள் காட்டுவதாக இவர்கள் கருதுகின்றனர். சமூக அமைதியைக் காக்க வேண்டும் என்பதற்காக சுய-தணிக்கை வலியுறுத்தப்படுவதற்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

‘எதிர்ப்பைத் தெரிவிக்கும் இத்தகைய கலைக் கண்காட்சியை நடத்த விடாமல் தடுக்கும் சுய-தணிக்கையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருப்பது மிகவும் வேதனைக்குரியது. இந்தக் கண்காட்சி எங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. ஓவியங்கள் நன்றாக இருக்கின்றன என்பதால் அல்ல. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் இளம் முஸ்லிம்களிடையே எழுந்துள்ள வாதப் பிரதிவாதங்களே இதற்குக் காரணம் ‘ என்கிறார் கோப்ரா மியூசியத்தின் இயக்குனரும், பென் அலியின் ஓவியக் கண்காட்சியின் காப்பாட்சியருமான (க்யுரேட்டர்) ஜான் ஃப்ரைஜ் (John Frieze).

மொராக்கோ-நெதர்லாந்து 2005 என்ற தலைப்பிலான கலாச்சார நிகழ்வுகளின் ஒரு பகுதியான இந்த ஓவியக் கண்காட்சியைத் துவக்கி வைத்தவர் அல்டர்மன் அஹமத் அபுதாலெப் (Alderman Ahmed Aboutaleb). இவரும் மொராக்கோவிலிருந்து வந்து நெதர்லாந்தில் குடியேறியவர். ஆம்ஸ்டர்டாம் நகர அரசியல்வாதி. இவர் கருத்துச் சுதந்திரத்தை மிகத் தீவிரமாக ஆதரித்துப் பேசினார். இதன் காரணமாக இவருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்தன. இப்போது தனிப்பட்ட பாதுகாவலர்களுடனும், காவல் துறையின் பாதுகாப்புடனும் தான் இவரால் நடமாட முடிகிறது.

கலாச்சார நிகழ்வுகளுக்கு பெயர் பெற்ற நகரமான ஆம்ஸ்டர்டாமை இரண்டாம் உலகப் போரின் போது நாஜிகள் ஆக்கிரமித்த காலகட்டத்தில் மட்டுமே கலைஞர்களுக்கு இத்தகைய அச்சுறுத்தல்கள் இருந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பென் அலி வரைந்து, காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சுமார் நாற்பது ஓவியங்களை நீக்கி விடும் எந்த நோக்கமும் தங்களுக்கு இல்லை என்று கோப்ரா அருங்காட்சியக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தற்பால் புணர்ச்சி பற்றிய ஓவியங்களால் ஏற்கனவே விமர்சனத்துக்கு உள்ளானவர் பென் அலி. தற்கொலைப் படையினரும் வெறுப்பை வளர்க்கும் இமாம்களும், தீமையே வடிவான மதப் பிரசாரகர்கள், மல வாந்தியெடுப்பவர்கள் அல்லது வெடிகுண்டுகளைத் துப்புபவர்கள் – ஆகிய ஓவியங்களையும் இவர் வரைந்துள்ளார். பார்க்க: பென் அலியின் ஓவியங்கள்.

இந்த ஓவியக் கண்காட்சி தொடங்கியதிலிருந்தே தலைமறைவாக இருக்கிறார் பென் அலி. அந்த அளவுக்கு மிரட்டல்கள் வந்தன என்று சொல்கிறார் அருங்காட்சியகக் காப்பாட்சியர் ஃப்ரைஜ். ‘பென் அலியின் ஓவியங்கள் நடப்புப் பிரச்சினை பற்றிப் பேசுபவை. சர்ச்சைக்குரியவை என்றாலும் அவை நவீன ஓவியத்தின் ஒரு பகுதியே என்பதால் நாம் அவற்றைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்ளக் கூடாது ‘ என்றார் அவர்.

ரோடர்டாம் திரைப்பட விழாவில் ‘கொந்தளிப்பான காலகட்டத்தில் படமெடுத்தல் ‘ (Filmmaking in an Age of Turbulence) என்ற வரிசையின் கீழ் தியோ வான் கோவின் படமும் திரையிடப்பட இருந்தது. இந்த வரிசையில் தீவிரமான தணிக்கைக்கு ஆளாக்கப்பட்ட ரஷ்ய, இந்தோனேசிய மற்றும் செர்பிய திரைப்படத் தயாரிப்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

ஆனால், தம் குழுவினர் எவருக்கும் எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என்பதால் இந்தப் படத்தைத் திரையிடாமல் பின் வாங்கியதாக படத்தின் தயாரிப்பாளர் வெஸ்டெலகென் (Gijs van de Westelaken) ஒரு தொலைபேசி நேர்காணலில் தெரிவித்தார். தான் ஓர் அரசியல்வாதியோ அல்லது காவல் துறை அதிகாரியோ அல்ல என்பதால் தீவிரவாதிகளுக்குப் பணிய வேண்டி இருக்கிறது என்று சொன்ன அவர், தியோ வான் கோவைக் கொலை செய்தவர்கள் தாங்கள் செய்ய விரும்பியதை ஏற்கனவே செய்து விட்டார்கள் என்றும் நாட்டையே அச்சத்தில் ஆழ்த்திவிட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இப் பிரச்சினையில் ரோடர்டாம் நகர மேயர் தலையிட வேண்டும் என்று கோரி நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடிதம் எழுதினர். மேயர் கேட்டுக் கொண்ட பின்னரும் படத்தைத் திரையிடுவதில்லை என்ற தம் முடிவில் உறுதியாக இருப்பதாக தயாரிப்பாளர் வெஸ்டெலகென் தெரிவித்தார்.

இப் படத்தின் கதையை எழுதியவரும் நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிர்ஸி அலிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். நெதர்லாந்து அரசாங்கம் கேட்டுக் கொண்டதன் பேரில் மூன்று மாத காலம் அமெரிக்காவில் தலைமறைவாக இருந்த அவர் சமீபத்தில்தான் நாடு திரும்பியுள்ளார். இஸ்லாத்தின் பெயரால் பெண்கள் கொடுமைப் படுத்தப்படுவதை விமர்சிப்பதை நிறுத்தப் போவதில்லை என்றும், சப்மிஷன் படத்தின் இரண்டாம் பகுதியை அவர் எழுதிக் கொண்டிருப்பதாகவும், மூன்றாம் நான்காம் பகுதிகளைக் கூட எழுதக் கூடும் என்றும் ஹிர்ஸி அலி தெரிவித்தார். மதம் என்ற அடிப்படையில் இஸ்லாத்தைத் தாம் எதிர்க்கவில்லை என்றும், இஸ்லாத்தின் அதீதங்களை (excesses of Islam) மட்டுமே எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இயக்குனர் தியோ வான் கோவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு படம் எடுக்கப்படுகிறது. அது ஏப்ரல் மாத வாக்கில் திரையிடப்படும். 13 திரைக்கதை எழுத்தாளர்களும், 15 இயக்குனர்களும், 10 தயாரிப்பாளர்களும் சேர்ந்து 15 குறும்படங்களை எடுக்கின்றனர். இந்தப் 15 குறும்படங்களும் கொத்தாக ஒரே திரைப்படமாக வெளியிடப்படும். நவம்பர் 2, 2004 அன்று நடந்த தியோ வான் கோ படுகொலையின் போது நெதர்லாந்தில் நிலவிய வருத்தம், கோபம், நம்பிக்கை ஆகியவற்றை விளக்குவதாக இப்படம் இருக்கும். இதற்கான செலவு மூன்று லட்சம் யூரோக்கள். நடிகர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் அனைவரும் தம் சேவையை இலவசமாக அளிக்க முன்வந்துள்ளனர்.

(நியூயார்க் டைம்ஸ், எக்ஸ்பாடிகா பத்திரிகை செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்