‘புலன் அடக்கத்தின் பொன் விழா’க் கொண்டாட்டம் – அன்று!,‘புலன் விசாரணை’ யில் சிக்கிய திண்டாட்டம் – இன்று !!

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

ஜோதிர்லதா கிரிஜா


சங்கர மடத்தின் மீது நமக்கு என்றுமே மரியாதை இருந்ததில்லை. காரணம், அதன் தலைவர்கள் கடைப்பிடித்து வந்துள்ள தீண்டாமையும், தலைமுடி வைத்துள்ள கைம்பெண்களைப் பார்ப்பது ‘பாவம்’ என்று கருதும் அவர்களது ஓரவஞ்சனைத்தனமான அணுகுமுறையும்தான். அண்மைக் காலமாகத் தலித்துகளின் குடியிருப்புகளுக்குக் காஞ்சி மடாதிபதி ஜயேந்திரர் சென்று வருவது கூட அவர்களை மதம் மாறுவதிலிருந்து தடுக்கும் முயற்சியின் பாற்பட்டதே தவிர, அவர் தீண்டாமையைத் தமது மனத்திலிருந்து அகற்றிவிட்டதன் அறிகுறி யன்று!

அவரது இந்தப் பொய்யான முகம் அவர் கைது செய்யப்பட்ட போது அவரது காரில் ஏறப் போன காவல்துறை அதிகாரியிடம், ‘இதுல பிராமணாள் மட்டுமே ஏறலாம்’ என்று கூறி அவர் ஏறுவதைத் தடுக்க முற்பட்டதிலிருந்து வெளியாகிவிட்டது!. ஆதி சங்கரர் முன் கடவுளே புலையர் வடிவில் தோன்றி அவருக்குப் பாடம் புகட்டிய வரலாறு நமக்குத் தெரியும். அப்படியும் சங்கர மடாதிபதிகள் திருந்தவில்லை! நிற்க.

கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்குத் தொடர்பாய்க் கைது செய்ய்ப்பட்டுள்ள மடாதிபதி ஜயேந்திரர் பற்றிப் பல்வேறு பாலியல் உறவுப் புகார்கள் வரத் தொடங்கி யுள்ளன. இவற்றில் மிக முக்கியமானதும், நம்பத் தகுந்ததும் எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்கள் பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிக்கும் அளித்துள்ள பேட்டிகளில் அடங்கியுள்ள அதிர்ச்சிதரத்தக்க செய்திகளாகும்.

அனுராதா ரமணன் இதைப் பற்றிப் பத்து அல்லது பதினோர் ஆண்டுகளுக்கு முன்னரே தொலை பேசியில் நாசூக்காகவும், பின்னார் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நாங்கள் சந்தித்த போது விவரமாகவும் நம்மிடம் கூறியுள்ளார். எழுத்தாளர் வட்டத்தில் உள்ள சிலருக்கு இது ஏற்கெனவே தெரிந்த ஒன்று என்பதால் எங்களுக்கு இப்போது மறுபடியும் ஏற்படும் அதிர்ச்சியை விடவும் பன் மடங்கு அதிக அதிர்ச்சி பொது மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

பாதிக்கப் பட்டவர்கள் அனுராதா ரமணனை ‘ப்ளேக் மெய்லர்’ என்று கூறுகிறார்கள். அப்படியே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், ‘ப்ளேக் மெய்லிங்’ என்பதன் உட்கிடையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நான் செய்துள்ள ஒரு குற்றம் உங்களுக்கு மட்டுமே தெரிந்து விடும் போது, ‘அதை நான் வெளியே சொல்லாதிருக்க வேண்டுமானால் எனக்கு நீ இவ்வளவு பணம் தர வேண்டும்’ என்று நீங்கள் கேட்டு என்னை மிரட்டுவதுதானே அது ? நான் உங்களை ‘ப்ளேக் மெய்லர்’ என்று திருப்பிச் சாடும் போது, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று நானாகவே மாட்டிக்கொள்ளுவது போன்றதுதானே இந்தப் பதில் குற்றச்சாட்டு ? ஆக, அனுராதாவை ‘ப்ளேக்மெய்லர்’ என்று சொன்னதன் மூலம், நுணல் தன் வாயால் கெட்டிருக்கிறது!

அடுத்து, அனுராதா தினமலரில் சில பெரிய மனிதர்களின் முகத்திரைகளைக் கிழித்து எழுதிய கட்டுரைத் தொடரின் இறுதிப் பகுதியாக வர இருந்த ஜயேந்திரர் பற்றிய கட்டுரையை வர விடாமல் தமது செல்வாக்கின் வாயிலாக அவர் தடுத்தார் என்பதும் ‘ எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்றுதான் சொல்லுகிறது. மடியில் கனம் இருப்பவர்க்குத்தானே வழியில் பயம் ?

‘இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே, ஜயேந்திரன் கெட்டதும் பெண்ணாலே’ என்று தொலைபேசியில் ஜயேந்திரர் கூறியதாக அனுராதா சொல்லியுள்ளார்.

அப்போது கூட, பாருங்கள்! இவர்கள் பெண்கள் மீதுதான் பழி போடுகிறார்கள். ஆண்கள் கெடுவது பெண்கள் மீது தாங்கள் கொள்ளும் உடல்வெறியால் என்பதை எப்போது இவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்! ‘பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசம்’ என்று பாடிய பரம்பரையில் வந்தவர்களாயிற்றே!

இவை யெல்லாம் ஒரு புறமிருக்க, வேறு எது எப்படிப் போனாலும், அனுராதா ரமணனைச் சீண்டியதன் வாயிலாக ஜயேந்திரர் நன்றாகவே மாட்டிக்கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை!

நியாயம் வெல்லப் போகிறதா உறங்கப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

. . . . . . . . .

jothigirija@vsnl.net / jothirigija@hotmail.com

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா