வாரபலன் நவம்பர் 25, 2004(ஜெயேந்திரர் சோதனை, சர்தார்ஜி சாதனை, குஞ்ஞாலிக்குட்டி வேதனை, திருமேனி ரோதனை)

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

மத்தளராயன்


தீபாவளி காலையில் அணில் மார்க் சீயக்காய்த் தூள் விளம்பரம் முன்பாரம் பின்பாரமாக வர, நாராயணா நாராயணா என்று சின்னத்திரை சானல் எல்லாவற்றிலும் எண்ணி ஐந்து நிமிடம் பேசும் சங்கராச்சாரியார், தீபாவளி ராத்திரியிலிருந்து தமிழ்நாடு முழுக்க விழித்திருக்கும் நேரமெல்லாம் பேசும் விடயமானதோடு ஒப்பிட்டால் மற்ற நிகழ்வுகள் எல்லாம் வெகு பின்னால் தான்.

அராபத் சவ அடக்கத்தின்போது கூட அவர் தான் திரைக்குக் கீழே தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார். எங்கே போனாலும் எல்லாப் பேச்சும் ஜெயேந்திரரில்தான் வந்து நிற்கிறது. நண்பர் ஜோசப் எனக்கு முடி திருத்தும்போது பக்கத்து நாற்காலியில் வந்து உட்கார்ந்தவர், ‘அப்புறம் ? ‘ என்கிறார். எதுக்கு அப்புறம் அல்லது இப்புறம் என்று குழம்பாமல், ‘அரசியல் பேசறதில்லேன்னு முடிவு பண்ணிட்டேனுங்க ‘ என்கிறார் ஜோசப் உடனே. ‘ஆமாய்யா, உன்கிட்டே அரசியல் பேசத்தான் இம்புட்டுத் தூரம் காரை எடுத்துட்டு ஓடி வந்தேன். தொழிலைப் பாருய்யா ‘ என்று முரட்டு நரை மீசையும், அரை வழுக்கையும், உரத்த சிரிப்புமாகச் சொல்லும் நபர் அரசியல்வாதியோ காவலரோ தெரியவில்லை.

சென்னைச் சுவரை எல்லாம் வளைத்து நற்செய்தியாக ‘சினிமா நடிகையோடு சாமியார் ஆட்டம் ‘ போஸ்டர் ஒட்டிய பத்திரிகை சர்க்குலேஷன் இந்த ஒரு வாரமாவது எகிறி இருக்கும். அவர் நேப்பாளத்துக்கு ஹெலிகாப்டரில் தப்பி ஓடத் திட்டம் என்று கேபிள் டிவியில் சொன்னபோது பொட்டல்காட்டில் நிற்கிற ஏதோ ஒரு ஹெலிகாப்டர் திரையில். இதுதானா அது என்று எல்லாம் யாரும் கேட்கப் போவதில்லை. எல்லோருக்கும் கேட்கவும் பரிமாறிக்கொள்ளவும் சுவாரசியமான செய்திகள் தேவைப்படுகின்றன. சிறையில் சாமியார் கழிவறையைப் பயன்படுத்த மறுத்து, வெட்டவெளியில் காலைக் கடன் கழித்துத்தான் தனக்குப் பழக்கம் என்றதும், அவருக்கு அந்தக் காரியத்துக்காக வாழையிலை விரித்து வசதி செய்து கொடுத்தது கூடப் பத்திரிகையில் மசி புரட்டி வருகிறது.

கும்பமேளாவுக்குக் கிளம்பியவர் வழிதப்பி வந்த மாதிரி இந்தியும் தொந்தியுமாக ஒரு வடக்கன் சாமியார் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு முன்னால் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து நாலைந்து பேர் காவிக் கொடியை உயர்த்திப் பிடித்து முன்னால் நிறுத்த, பத்திரிகைக் கட்டத்துக்குள்ளும் காவல் நிலையத்திலும் பத்திரமாக இருத்தப்படுகிறார்.

முகத்தில் இரண்டு நாள் தாடியும், கழுத்தில் மணிமாலையுமாக விருச்சிகப் புலரியில் ஐய்யப்ப சாமிக்குச் சரணம் விளித்து மாலை போட்ட காவல் அதிகாரி சங்கராச்சாரியாரைக் காஞ்சி நீதிமன்றத்துக்கு அழைத்து வருகிறார். அவர் முகத்தில் தெரியும் சாந்தமும் நிதானமும் ஆசுவாசம் தருகின்றன. மீடியாவிலிருந்து நான் எடுத்து வைத்துக்கொண்ட ஒற்றை பிம்பம் இதுமட்டும் தான்.

****

கை நிறையச் செய்ய வேண்டிய காரியமும், தலைக்குள் குடையும் ஒற்றைத் தலைவலியுமாகத் தில்லிக்குப் புறப்பட்டபோதே இந்தப் பயணம் விமானத் தாவளம் – அலுவலகம் – விமானத் தாவளம் மட்டும் என்றானது.

கூட்டாலோசனை, சொற்பொழிவு செய்தல், செவிமடுத்தல் இத்யாதி விஷயங்களில் சிரத்தை பதித்து இயங்கும்போது மதியச் சாப்பாடு என்று அழைத்துப் போய் அம்பாரமாகக் குவிந்த கோதுமைப் பதார்த்தங்களுக்கும் உருளை, வெங்காயக் கலவைகளுக்கும் இடையே உட்கார்த்தினார் குப்தாஜி.

‘ஏம்ப்பா அரஸ்ட் செஞ்சீங்க ? ‘

அவர் னானைக் கிழித்தபடி விசாரிக்க, கூட இருந்த இன்னும் இரண்டு நண்பர்கள் துஷ்டனே என்று என்னைப் பார்வையால் சுட்டெரித்துவிட்டுச் சமாதானமாகி, இன்னும் கொஞ்சம் பாலாடைக்கட்டியைத் தட்டில் போட்டுக் கொண்டார்கள்.

‘அவர் பதவி விலகுவதுதான் நியாயம். அடுத்து ஒருத்தரை அப்பாயிண்ட் பண்ண வேண்டியதுதான் ‘

குளிர்காலம் இன்னும் வராத தில்லியில் அவசரமாகப் பெட்டியை விட்டு இறங்கிய கம்பளி ஸ்வெட்டர் அணிந்த தோழியர் மெல்லிய குரலில் சொன்னார். பத்தே நாளில் நூறு டாட் நெட் விற்பன்னர்களை வேலையில் சேர்த்த அனுபவம் தந்த நம்பிக்கையில் ஆசாரியாரோ, ஜும்மா மஜ்ஜித் இமாமோ, இல்லை பேராயரோ, சொன்ன மாத்திரத்தில் கொண்டு வந்து சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை அவர் கண்களில் தெரிந்தது.

‘முன்னூறு கோடி ரூபாய் தேறுமாமே ? ‘

தெலுங்குதேச நண்பர் அக்கறையாகக் கேட்டார்.

விசாரித்துத்தான் சொல்லணும்.

ராத்திரி அலுத்து வந்து தொலைக்காட்சியைப் போட, ஃபட்ஃபட்கஞ்சில் காரை பெயர்ந்த கட்டிடத்தில் வைத்து நடத்தும் கேபிள் டிவி கம்பெனி லோக்கல் விளம்பர சானலில், நண்பர் ஞாநி எக்ஸ்ட்ரா கான்ஸ்டிட்யூஷணல் அதாரட்டி பற்றி பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். சர்வ சுதந்திரமாக மற்ற டிவி சானல்களிலிருந்து கத்தரித்துப் போட்ட செய்தியை குறுக்கே வெட்டிக் கொண்டு, சர்தார்ஜிமார் தாடியைச் சீராக வைத்திருக்கக் காலையில் தடவும் ஹேர் பிக்ஸர் விளம்பரம்.

சீரான தாடியும் தலைப்பாகையுமாக பாலம் விமான நிலையக் கழிப்பறையில் இரண்டு கையையும் ஓய்வாகப் பின்னால் கட்டியபடி மூத்திரம் ஒழித்துக்கொண்டிருந்த சர்தார்ஜி பக்கவாட்டில் பார்த்துச் சிரித்த பார்வையில், ‘உன்னால் முடியுமா ? ‘.

எல்லா சாதனையாளர்களுக்கும் ஸ்தோத்ரம்.

****

சூர்யா டிவியில் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் அருகே கூட்டம் குறைந்த பா.ஜ.க உண்ணாவிரதப் பந்தல். ஐஸ்கிரீம் பார்லர் மைனர் பெண் பாலியல் வன்முறை வழக்கில் அமைச்சர் குஞ்ஞாலிக் குட்டி பதவி விலக வேண்டும் என்று பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்திருந்த நாலு பேருக்கு முன்னால் இல.கணேசன் தமிழில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.

‘எக்ஸ்பிரஸ் வண்டி வரும்போது பாசஞ்சர் வண்டி வழிமாறி நிற்கிறதுபோல், சங்கராச்சாரியார் விவகாரம்தான் இப்போதைக்கு முக்கியம். குஞ்ஞாலிக்குட்டியை சாவகாசமாகக் கவனித்துக் கொள்ளலாம். ‘

என்றாலும் குஞ்ஞாலிக்குட்டி நிம்மதிப் பெருமூச்சு விடமுடியாதபடி கேரளம் முழுக்க உயர்ந்து வருகிற எதிர்ப்புக் குரல்களில் காங்கிரஸ் தலைவர் சுதீரன் போன்றோரும் அடக்கம்.

எட்டு வருடத்துக்கு முந்தி ஐஸ்கிரீம் பார்லர் விவகாரம் முதன்முதலில் எழுந்தபோது குஞ்ஞாலிக்குட்டியும், மற்றவர்களும் வனிதா கமிஷன் என்ற மகளிர் விசாரணைக் கமிஷனுக்கு அளித்த சாட்சியங்கள் கமிஷனின் பேங்க் லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டன. அப்போதைய கமிஷன் தலைவர் கவிஞர் சுகதகுமாரி இதற்கு சாட்சி. தற்போதைய கமிஷன் தலைவர் கமலம் அம்மையார் லாக்கரில் ஒரு காகிதத் துண்டும் இல்லை என்று கையை விரித்து விட்டார். இது தவிர, அட்வகேட் ஜெனரலும், பிராசிக்யூஷன்ஸ் இயக்குனரும் வேறே நானா நீயா என்று கட்சி கட்டிக் கொண்டு வழக்கை விசாரணைக்கு எடுப்பதைத் தாமதப்படுத்த, இதெல்லாம் திட்டமிட்டுச் செய்யப்படுகிற காரியங்கள் என்கின்றன பத்திரிக்கைகள்.

குஞ்ஞாலிக்குட்டி மாத்திரம் பதவி விலக வேண்டாம். உம்மன் சாண்டியின் அமைச்சரவையில் உள்ள நாலு முஸ்லீம் லீக் அமைச்சர்களும் சேர்ந்து விலகிவிடலாம். ஐஸ்கிரீம் பார்லர் விவகாரத்தில் ராஜினாமா செய்ததாக இல்லாமல், சமூக நீதிக்கு வழிவகை செய்யும் நரேந்திரன் கமிஷன் அறிக்கையை நடப்பாக்கவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்து வெளியே நடப்பதே கெளரவமாக இருக்கும் என்று கட்சியில் பொதுவான கருத்து நிலவுவதாகத் தெரிகிறது.

இதற்கு இடையில், சகாவு அச்சுதானந்தன் பூடகமாகக் குறிப்பிட்ட வி.ஐ.பி யார் என்று தெரிவதற்குள் அந்த நபர் சென்று பார்த்து உடல்நிலை மோசமடைந்த பரிதாபத்துக்குரிய கிளிரூர் இளம்பெண் சாரி குழந்தைகள் தினமான நவம்பர் பதினாலாம் தேதி இறந்து போனாள். சின்னத்திரை சீரியலில் நடிக்க ஆசை காட்டி அவளை அழைத்து வந்து அடைத்து வைத்துத் தொடர்ந்து பாலியல் வன்முறை மூலம் அவளைக் கருவுறச் செய்த பிரமுகர்கள் யாரென்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. பதினெட்டு வயது கூட நிரம்பாத சாரிக்கு இந்த சமூக அயோக்கியர்களின் சுதந்திரமான வன்புணர்ச்சியின் காரணமாகப் பெண் குழந்தை பிறந்தது கடந்துபோன ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியில்.

‘நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் ‘ என்கிறார்கள் சென்னை மலையாளிகள். வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து கிளம்பும் நேரத்தை மாற்றி வைக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அவர்கள் இது குறித்து அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்து வருகிறார்கள்.

****

பேராசிரியர் குப்தன் நாயர் சொன்ன நம்பூதிரி(பாட்) பலிதம் ஒன்று –

மலையாள மனோரமா பத்திரிகையில் வாராவாரம் ஒரு பிரமுகரின் ஜாதகத்தைப் போட்டு, கூடவே அவருக்குரிய ராசிபலன்களையும் விவரமாகத் தருகிற வழக்கம். ஒரு வாரம் கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாடின் ஜாதகமும், பலனும் வந்திருந்தது இந்தப் பகுதியில்.

‘கணித்துச் சொன்ன ராசிபலன் எல்லாம் சரியா இருக்கா திருமேனி ? ‘

பத்திரிகையிலிருந்து யாரோ ஈ.எம்.எஸ்ஸை விசாரித்தார்களாம்.

‘ரொம்ப சரியா இருக்கு ‘ , ஈ.எம்.எஸ் சொன்னார். ‘என் பிறந்த தினம்னு நீங்க போட்டிருக்கிற தேதிதான் தப்பு ‘.

***

மத்தளராயன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்