புலம்பல் – பக்கம்:1 வெள்ளியும் மழையும் இன்ன பிற புலம்பல்களும்

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்


காலக் கணக்குகளை அளந்தறியும் பொய்யா மாக்கள் குறித்து முல்லைப்பாட்டு கூறுகிறது.(பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் -முல்லை.55) புறநானூறு இயற்கையை அளவிடல் குறித்து பின்வருமாறு கூறுகிறது:

இரு முந்நீர்க்குட்டமும்,

வியல் ஞாலத்து அகலமும்,

வளி வழங்கு திசையும்,

வறிது நிலைஇய காயமும், என்றாங்கு

அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை (புறம் 20:1-5)

பூமியிலிருந்து காணப்படும் ஆதவ இயக்கத்தை அறிந்து அதன் அடிப்படையில் கோள்களின் இயக்கத்தை அளவிடலும் பேசப்படுகிறது.

செஞ்ஞாயிற்றுச் செலவும்,

அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்

பரிப்பு சூழ்ந்த மண்டிலமும்,

வளி திரிதரு திசையும்,

வறிது நிலைஇய காயமும், என்று இவை

சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும்

இனைத்து என்போரும் உளரே. (புறம். 30:1-7)

கோள்களுக்கே சென்று அளந்ததைப் போல கூறுவார்களாம் (சென்று அளந்து அறிந்தோர் போல). வான் கோள்களின் அடிப்படையில் சில நிலம் சார்ந்த இயற்கை நிகழ்ச்சிகளை முன்னறிவித்தல் பழக்கமும் சங்ககாலத்தில் இருந்தது என்பதனையும் நாம் அறிகிறோம். சுக்கிரன் வெண்ணிறம் கொண்டதென்பதால் அது வெண்மீன் என அழைக்கப்படுகிறது. வெள்ளி எனவும் கூறுவர். இம்மீன் தெற்கே ஏகுதல் மழைவளத்தைப் பாதிக்கும் என்பது பண்டை தமிழர் நம்பிக்கை.

அணங்கு கதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்

இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரிமும்

அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட (புறம். 35:6-8)

வெள்ளி தென்புலத்து உறைய, விளை வயல்,

பள்ளம், வாடிய பயன் இல் காலை (புறம். 117:1-3)

ஆகிய புற நானூற்று வரிகளால் இதை அறியலாம்.

வெள்ளி மழை குறித்த கோளாகக் கருதப்பட்டமையும் அது வடபக்கம் தாழுமாயின் மழை உண்டாகும் என்றும் அது தென்பக்கத்து எழுமெனில் மழை இல்லாதாகும் என்றும் கருதப்பட்டது.

வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர,

வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி

பயம்கெழு பொழுதொடு ஆயம் நிற்ப (பதிற்றுப் பத்து. 24:23-25)

இத்தகைய நம்பிக்கைகளின் வரலாற்று அடிப்படைகள் ஆராயப்பட வேண்டும். பொதுவாக வானியல் சுழற்சி நிகழ்வுகளைக் கொண்டு பூமியின் சில இயற்கை நிகழ்வுகளினைக் கணிக்கமுடியும். உதாரணமாக, சில விண்மீன்களின் ஏற்றத்தைக் கொண்டு நைல் நதியின் பெருக்கினை எகிப்திய வானவியலாளர் கணக்கிடுவர். இதற்கு காரண-காரிய தொடர்பில்லை ஆயின் பண்டைக்காலங்களில் இம்முறை இயற்கையினைக் கணிக்க மிகவும் திறமையானதாகவே இருந்தது. இது போக பல உயிரினங்களின் நடவடிக்கைகளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்குமான தொடர்புகளும் பாரம்பரிய அறிவுப்பதிவுகளில் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றினை சித்தாந்த விருப்பு வெறுப்பு இன்றி பதிவு செய்து ஆய்வு செய்ய வலிமையும் பிரச்சார மற்றும் பண பலமும் கொண்ட ஒரு அமைப்பு நமக்கு இல்லை என்பது பெரும் குறை.

இனி அக்மார்க் புலம்பலுக்கு போகலாம்.

பாரம்பரிய அறிவு பாதுகாப்பில், திரு ரவி ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுவது போல, அனில் அகர்வாலின் ‘பானி யாத்ரா ‘ மற்றும் பாரம்பரிய தண்ணீர் சேகரிப்பு அமைப்புகளை அவர் பிரபலப்படுத்திய விதம் ஆகியவை முக்கியமானவை. புற்று நோயால் அவதிப்பட்ட தம் இறுதிக்காலத்திலும் எவ்வித தளர்ச்சியும் இன்றி அவர் ஆற்றிய தொண்டு எழுச்சியூட்டும் உதாரணமேயாகும். (அனில் அகர்வாலை ‘காவிமயப்படுத்துவதாக ‘ யாராவது எண்ணி விட வேண்டாம். மனிதரின் மகத்தான சூழலியல் பிடிப்பையும், அதற்காக அவர் அயர்ச்சியின்றி உழைத்தமையையும் அவர் பாரம்பரிய அறிவினை பதிவு செய்த திறத்தையும் பாராட்டுவது ஒவ்வொரு பாரதக் குடிமகனது கடமை. ஆனால் அவரது கருத்தியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த மோதல் பார்வை ஆகியவற்றில் எனக்கு கடுமையான விமர்சனம் உண்டு.) இத்தகைய பானி யாத்ராக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்விநிலையங்களில் ஏற்பாடு செய்யப்படலாம். ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் இம்முறைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்விதத்தில் தமிழர் பாரம்பரிய அறிவு முக்கியமானது. உதாரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் இன்று Eutrophication ஆல் அழிந்துகொண்டிருக்கும் இம்மாவட்டத்தின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நன்னீர் அமைப்பு – wetland complex- ஐம்பதிற்கும் மேற்பட்ட அரிய பறவை இனங்களின் சரணாலயமும் கூட. இதில் படகுவிடுகிறேன் பேர்வழி என்று கரடிவிட்ட மாஜி ஒருவரின் மாளிகை வளர்ந்தது இங்கோ நீர் பரப்பெங்கும் ஆகாயத்தாமரை (water hyacinth) மலர்ந்தது. அந்தந்த ஊர் சமுதாயங்களிடம் இந்த ஏரிகளைக் கொடுத்தால்

போதும் என்றால் குமரி மாவட்ட மக்கள் புத்திசாலிகள். குளமோ ஏரியோ வறண்டால் ப்ளாட் போட்டு வித்து ஷாப்பிங் காம்ப்ளக்ஸும், திருமண மண்டபமும் கட்டிவிடுவார்கள். நியாயப்படி நாகர்கோவில் நகரமே குளத்துக்குள் மிதக்கவேண்டும். ஆனால் கடந்த ஐம்பது வருடங்களில் நகரத்துக்குள்ளேயே மூன்று பெரிய அழகிய குளங்களை மூடி நாகரிகத்துக்கு வரவேற்பு கொடுத்துள்ள அறிவுஜீவி ஊரையா இது. சாலையோர காகங்களின் வாழ்வுரிமை பாதிப்பைக் குறித்து ஜேகே தாக்கத்துடன் சிறுகதை எழுதும் முதுபெரும் எழுத்தாளர்கள் ஹங்கேரிக்காக ஏங்கும் தம் மெல்லியமனதில் எழும் இலக்கியங்களில் மூடிய குளங்களின் குரூரம் குறித்து பதிவு செய்திருக்கிறார்களா தெரியவில்லை. நாகராஜா கோவிலுக்கருகில் இருந்த குளத்தின் கல்படிகட்டுகளையும் அதன் கட்டுமானங்களையும் எடுத்து கல் ‘கோவில் ‘ எனும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு மீட் பாதிரி பயன்படுத்தியுள்ளார். மீட்பாதிரியை நம்பி கட்டுமானப் பொறுப்பை ஒப்படைத்த அந்த பத்மநாப தாசரான திருவிதாங்கூர் ராஜா வாழ்க. பின்னர் மற்றொரு பிரம்மாண்ட குளத்தை மூடி மற்றொரு கிறிஸ்தவ தேவாலயத்தின் முன் ‘குளத்து ‘ பஸ் ஸ்டாண்ட்டை உருவாக்கிய பெருமக்களுக்கும் மற்றொரு ‘வாழ்க ‘வும்

போடவேண்டும். கம்பீரமாக நீர்நிலைகள் அருகே நின்று உடைப்புகளிலிருந்து அவற்றைக் காக்கும் பூதத்தான் சிலைகள் மூடிய ஏரிகளில் எழும் ஷாப்பிங் காம்பெளக்ஸுகளின் வாசல்களில் பொருளிழந்து நிற்க ‘இந்த வாட்ச்மேன் பொம்மையை ஏன் இங்கு நிறுத்தியிருக்கா டாடி ‘ என வாண்டுகள் கேட்கும் ஒரு நாள் வரக்கூடும் என்று நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. ‘Well, from a feudal water body guardian deity he has become a capitalist society ‘s shopping complex guardian deity ‘ என்று அமெரிக்க தோள்குலுக்கலுடன், மூக்கைச் சொரிந்து, மோட்டுவளை பார்த்து சொல்லிவிட்டுப் போய் அமெரிக்க தூதரகத்தில் பச்சை அட்டை வாங்கும் மார்க்ஸிஸ்ட்டோ அல்லது இடதுசாரி அறிவுஜீவியோ நான் அல்லவே. (Lord save us from the ignoramus Marxist vision and its Stegosaurus skin- with due apologies to William Blake)

இறுதியாக:

Centre for Indian Knowledge Systems என்பது Centre for Indigenous Knowledge Systems ஆக மாறியது எதோ சின்னபிழையாக இருக்கலாம். ஆனால் இன்றைய தேதியில் திரு ரவி ஸ்ரீநிவாஸ் கூறுகிற ethnic sciences-க்கு மறுப்பு தெரிவிக்கிற பெருத்த குரலை எழுப்பிவரும் இடதுசாரி அறிவுஜீவி மிரா நண்டாவின் ஒன்றுக்கும் மேற்பட்ட நேர்மையற்ற கட்டுரைகள் குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்பது முரண்பாட்டியங்கியலின் பரிசுத்த ஆவிக்கே வெளிச்சமான விஷயம். ஆனால் ஒரு விஷயம் ஜோஸப் டெர்ரன்ஸ் மோண்ட்கோமெரி நேதம் முதல் ஜோசப் ஜெவர்கீஸ் வரை பாரம்பரிய அறிவு பாதுகாப்பு மற்றும் புணருத்தாரணம் குறித்து கூறி வழக்கம் போல ‘என்ன இருந்தாலும் வெள்ளைத்தோல் வெள்ளைத்தோல்; ஐரோப்பாகாரன் செஞ்சா அது தனிமகத்துவம் தான். அவன் கிட்டேருந்து நாம படிக்க வேண்டியது ரொம்ப இருக்கு ‘ என்கிற இடதுசாரிகளுக்கே உரிய விசுவாசத்தைக் காட்டும் பெரியமனிதரிடம் ஒரு சில ஐயங்கள்.

திபெத்தின் பாரம்பரிய அறிவு அழிக்கப்பட்டமைக்கு தீவிர சோஷலிஸ்ட்டும் மதவைராக்கியமுள்ள கிறிஸ்தவரும் சீன அரசின் தீவிர ஆதரவாளருமான நேதம் அவர்களின் எதிர்வினை என்னவோ ? நிச்சயமாக அவர் சீன அரசாங்கத்தை எதிர்த்திருக்க வேண்டுமே ? ‘கலாச்சார புரட்சியின் போது பல்லாயிரம் பெளத்தமடாலயங்கள் அழிக்கப்பட்டனவே அதற்கு அவரது எதிர்வினை என்னவாக இருந்தது ?

1979 களில் வெளிவந்த சீன மக்கட்தொகை ஆவணங்களின்படி 1958 முதல் 1962 வரையிலான காலகட்டத்தில் குறிப்பாக 1960-இல் மார்க்சிய அரசின் அடிமுட்டாள்தனமான சித்தாந்த முடிவுகளால் ஏற்பட்ட பஞ்சத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடி. அதேகால கட்டத்தில் சீன அரசாங்கத்தின் மதிப்பிற்குரிய பிரச்சார பீரங்கியாக நேதம் திகழ்ந்து ‘சீனாவின் கூட்டமைப்பு சமையலறைகள் சீனாவின் பெருமையின் சின்னம் ‘ என அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார். 1958 இல் மாவோ சோவியத்களிடமிருந்து கடன் வாங்கிய லைசன்கோ திட்டத்தை சீன விவசாயத்தில் அறிமுகப்படுத்தி சீனாவின் லைசன்கோவாக ஷி யிகியானை (Shi Yiqian) வளர்த்து விட்டுக்கொண்டிருந்தபோது நேதம் பெருமானார் என்ன செய்து கொண்டிருந்தார் ? செஞ்சீனப்பருத்தியின் பாரம்பரிய அழகினை இரசித்துக் கொண்டிருந்தாரா ? (செஞ்சீனப்பருத்தியின் மகிமையை அறியாதவர்களுக்கு: இடதுசாரி மரபியல் மாக்கான்கள் sorry மகான்கள் தக்காளியையும் பருத்தியையும் இனக்கலப்பு செய்து உருவாக்கியதாக பிரச்சாரம் செய்த ஒரு கப்ஸாதான் செஞ்சீனப்பருத்தி -பிரிட்டிஷ் இடதுசாரிப் பத்திரிகையான Guardian இச்செய்தியை வெளியிட்டிருந்தது – 24 மார்ச் 1960) நேதம் இச்சமயங்களில் காத்த மவுனம் மகத்தானது. இத்தகைய மனிதரை ஏதோ வளரும் நாடுகளின் பாரம்பரிய அறிவின் ஆபத்பாந்தவராக வர்ணிப்பது அவசியமற்றது. ஆனந்த குமாரசுவாமி, தரம் பால், சுபாஷ் காக், பாலசந்திரராவ், CIKS பால சுப்ரமணியம், ‘சிலந்தி ‘ புகழ் விஜயலட்சுமி, ராம் ஸ்வரூப், சீதாராம் கோயல் போன்றவர்களையெல்லாம் நமது அறிவுஜீவிகள் கடைக்கண்ணால் நோக்க இன்னமும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை. ஆனால் இழப்பு அவர்களுக்கல்ல.

நம் நாட்டில் பாரம்பரிய அறிவினை உள்ளபடி மெய்ப்பித்துக்கொண்டுள்ள அமைப்புகள் பல உள்ளன. அவற்றிற்கு பெரும் பணபலமும் பிரச்சார பலமும் இல்லைதான் ஆயினும் அவை இயங்குகின்றன. தனிமனிதர்களில் பலர் செய்திருக்கும் சாதனைகளும் மகத்தானவையே. ஜெவர்கீஸின் Peacock crest-ஐ புகழ்பவருக்கு இத்துறையில் மிக முக்கியமானவரான Dr.எஸ்.பாலசந்திர ராவ்வின் Indian Mathematics and astronomy Some Landmarks (Jnana Deep Publications, Banglore விலை Rs 120/-) மற்றும் Indian Astronomy – an Introduction (University Pres விலை ரூ. 190/-) ஆகியவை கண்ணில் படாததன் மர்மம் என்னவோ ? இத்தனைக்கும் ஜெவர்க்கீஸின் பல அதீத தாவல்கள் பாலசந்திர ராவ்விடம் இல்லை. ஒரு வேளை நம்மூரில் எளிதாகக் கிடைக்கும் இந்த நூல்கள் எல்லாம் மேல்நாட்டு பல்கலைக்கழக நூலகங்களில் கிடைக்காததாலோ ?

ஒருவழியாக இந்தவார புலம்பல் முடிந்தது. இனி எந்த வாரமோ ?

[சீனாவின் மார்க்சிய பஞ்சங்கள் குறித்த தகவல்கள் ஜேஸ்பர் பெக்கரின் ‘Hungry Ghosts : China ‘s Secret Famine ‘ (John Murray, 1996) நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. பிரிட்டிஷ் நூலகத்தில் ஒருவேளை கிடைக்கலாம். எனக்கு தெரியாது. ஆரல்வாய்மொழிக்கு வடக்கே நான் அதிகமாக காலடி எடுத்துவைத்தது கிடையாது. காரல்மார்க்ஸ் நூலகத்திலெல்லாம் நிச்சயமாகக் கிடைக்காது.]

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்