தமிழ் நாட்டில் தாய்த் தமிழ்ப் பள்ளிகள்

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

மயிலாடுதுறை சிவா


ஆங்கில மோகத்தையும் மேற்கத்திய கலாசாரத்தையும் நோக்கி வெகு வேகமாக இன்று நகர்ந்து கொண்டிருக்கிறது நம் தமிழ் இனம். ‘தமிழ் இனி மெல்லச் சாகும் ‘ என்பது போய், ‘தமிழ் இனி வேகமாகச் சாகும் ‘ என்ற நிலை வந்து விடுமோ என்று நாம் நினைக்கும் முன், அந்த வேகத்தை சற்றே இழுத்துப் பிடித்து தமிழ் இனத்தை சிந்திக்க வைத்திருக்கிறது இப்பொழுது ஆங்காங்கே தமிழ் நாட்டில் முளைத்துக் கொண்டிருக்கும் ‘தாய்த் தமிழ் பள்ளிகள் ‘. முக்கியமாக, வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் கவனத்தை தாய்த் தமிழ் பள்ளிகள் வெகுவாக ஈர்த்திருக்கின்றன. இப்பள்ளிகளைப்பற்றி கேள்விப்பட்டவர்கள், தமிழ் நாடு செல்லும் போது நேரில் சென்று அந்தப் பள்ளிகளை பார்க்கிறார்கள். அந்த பள்ளிகளின் நோக்கம், செயல்படும் விதம், அங்கே வேலை செய்பவர்களின் ஈடுபாடு இவையெல்லாம் எதிர்காலத்தில் தமிழ் சீரும் சிறப்புமாக வாழும் என்ற நம்பிக்கையை தமிழர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

தாய் தமிழ் பள்ளிகளில் முதலிடம் வகிப்பது திருப்பூர் தாய் தமிழ் பள்ளி. அரசாங்க பள்ளிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தாய்த் தமிழ் பள்ளி மாணவர்கள் பொது அறிவில் பல மடங்கு முன் நிலையில் இருக்கிறார்கள். அதற்கு காரணம், கல்வி கற்பிக்கப் படும் விதம். தாய் தமிழ் பள்ளியின் கல்வித் திட்டம், மிகுந்த கவனத்துடன் தீட்டப்படுள்ளது. தேவையற்ற செய்திகள், கருத்துக்கள் மாணவர்களை சென்றடையக்கூடாது என்பதில் ஆசிரியர்கள் திடமாக இருக்கிறார்கள். இங்கு படிக்கும் பிள்ளைகள் அன்பாகவும், பண்பாகவும், பாசத்தோடும் பழுகுகிறார்கள். அதற்குப் பல உதாரணங்களை சொல்லலாம். அரசாங்க தமிழ் பள்ளிக்கும், இந்த தாய் தமிழ் பள்ளிக்கும் உள்ள வித்தியாசம் பல பல.

திருப்பூர் பள்ளி வகுப்பறைகளில் ‘மெல்லத் தமிழ் இனி வாழும் ‘ என்று பலகையில் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் அங்கே மாட்டப்பட்டிருக்கும் கடிகாரத்தில் 12 எண்களுக்கு பதில் ‘அ ‘ வில் தொடங்கி 12 தமிழ் எழுத்துக்களும் உள்ளன. என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை! ‘வணக்கம் அய்யா ‘, ‘வெற்றி நிச்சயம் ‘, ‘மீண்டும் சந்திப்போம் ‘ – இது போல மாணவர்கள் தூய தமிழ் பேசுகிறார்கள். அங்கு சென்ற நண்பர் ஒருவர் கையை கட்டிகொண்டு நின்று கொண்டிருந்த போது, ஒரு குழந்தை அவரிடம் வந்து ‘அய்யா நீங்கள் ஏன் கையை கட்டிகொண்டு நிற்கிறீர்கள் ? அப்படி நின்றால் நீங்கள் ‘அடிமை ‘ என்று அர்த்தம். கைகளை கட்டாதீர்கள் ‘ என்று சொல்லியதை கேட்டு தான் பிரமித்து போய்விட்டதாகச் அவர் சொன்னார். சிறிய வயதில் என்ன ஒர் தெளிவான சிந்தனை ?

ஒவ்வொரு பயிற்சியும் குழந்தைகளுக்கு பிடித்த வடிவத்தில் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. உடற்பயிற்சியை கூட இயந்திரத்தனமாக செய்யச்சொல்லாமல் பாட்டுப் பாடி அந்த பாட்டிற்கு தகுந்தாற்போல் கை, கால்களை அசைக்கச் சொல்கிறார்கள். ‘என் படகு ஐலசா ‘ என்ற பாடலை குழந்தைகள் பாடிக்கொண்டு படகு ஓட்டுவது போல் கைகளை அசைப்பது ஒரு நல்ல உடற்பயிற்சி தானே ? கதைகளும் நாடக வடிவில் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. மாணவர்கள் பாத்திரங்களாக மாறும் போது, கதை தெளிவாகவும் சுலபமாகவும் அவர்கள் மனதில் பதிகிறது. பல பழைய கதைகளை நாம் இன்னும் அப்படியே படித்துகொண்டிருக்கிறோம், நம் குழந்தைகளுக்கும் அப்படியே அதை சொல்கிறோம். அந்தக் கதை தேவைதானா ? அந்த கதையின் செய்தி எந்த மாதிரியான தாக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் என்பதில் நாம் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் தாய்த் தமிழ் பள்ளியில் தவறான செய்திகளை சொல்லும் கதைகளை மாற்றி நல்ல கருத்துகளை மாணவர்களுக்கு சென்றடையச் செய்கிறார்கள். உதாரணமாக ‘இந்த பழம் புளிக்கும் ‘ என்ற கதை எல்லோருக்கும் தெரியும். ஒரு நரி திராட்சை தோட்டத்தில் உயரத்தில் இருக்கும் திராட்சையை பறித்து தின்பதற்காக முயற்சித்து முடியாமல் போனதும், ‘சீ..இந்த பழம் புளிக்கும் ‘ என்று சொல்லிச் சென்றுவிடும். ஒரு காரியத்தில் தோல்வி ஏற்பட்டால் அதை கைவிட்டுவிடவேண்டும் என்பது ஒரு தவறான செய்தி. இது குழந்தைகளுக்கு தேவை இல்லை. எனவே அந்த கதையை மாற்றி அந்த நரி திராட்சை பழத்தை எட்டி பறிக்க முடியாததால், தன் நண்பனான மற்றொரு நரியை அழைத்து வந்து, அதன் முதுகில் ஏறி திராட்சையை பறித்தது என்று சொல்லிகொடுக்கிறார்கள்.

இது போலவே ‘Rain rain go away. Come again another day ‘ என்ற பாடலை நம் குழந்தைகள் பல வருடமாக படித்து வருகிறார்கள். ஆனால் இந்த பாடல் நம் சூழலுக்கு ஏற்றதா ? கட்டாயம் இல்லை. தமிழ் நாட்டிற்கு மழை அவசியம் தேவை. மழை வேண்டும் என்று எத்தனை பேர் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்கள் ? அப்படி இருக்கும் போது நம் குழந்தகள் எல்லாம் ‘மழையே மழையே போய்விடு ‘ என்று பாடினால் அது முரண்பாடாக உள்ளதே! எனவே இந்தப் பாடலையும் மாற்றி ‘மழையே மழையே வா வா. மண்ணை ஈரமாக்க வா வா ‘ என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். மற்றுமொரு வியப்பான செய்தி – எப்பொழுது விடுப்பு விடுவார்கள் வீட்டுக்கு செல்லலாம் என்று பள்ளி மாணவர்கள் ஆசைப்படுவார்கள். ஆனால் தாய்த் தமிழ் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு விடுப்பு வேண்டாம் என்று சொல்கிறார்களாம்!. இப்படி பல சிறந்த உதாரணங்களை சொல்லிகொண்டே போகலாம்.

தாய்த் தமிழ் பள்ளிகள் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியே இருக்கின்றன. குடிசைகளிலும் (தற்பொழுது மாற்றும் பணியில் உள்ளார்கள்), மண் தரைகளிலும் தான் வகுப்புகள் நடக்கின்றன. அங்கே பணி புரியும் ஆசிரியர்களுக்கு அதிக பட்சம் 800 அல்லது 1000 ரூபாய்கள் மட்டுமே மாதச் சம்பளம் கிடைக்கிறது. மற்ற பள்ளிகளில் வேலை செய்தால் 2000 ரூபாய்களுக்கு மேல் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். எனினும் அவர்கள் தமிழ் மேல் உள்ள பற்றினால் தாய் தமிழ் பள்ளிகளில் மிகுந்த ஈடுபாடுடன் வெலை செய்கிறார்கள். தாய்த் தமிழ் பள்ளிகளில் எல்லா பாடங்களும் முழுக்க முழுக்க தமிழிலேயே கற்று கொடுக்கப்படுகிறது. தாய் மொழியில் கல்வி பயின்றால், அது குழைந்தைகளுக்கு சுலபமாக மனதில் பதியும் என்பதே இப்பள்ளிகளின் அடிப்படை நம்பிக்கை. திருப்பூர் பள்ளியில் 600 க்கும் மேற்பட்ட குழைந்தைகள் படிக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் மூன்றாம் வகுப்புக்கு மேல் ஆங்கிலம் இரண்டாவது மொழியாக கற்றுகொடுக்கப்படுகிறது. தாய் மொழி தமிழில் மட்டும் அல்லாமல் ஆங்கிலமும் நன்கு சொல்லி கொடுக்கப் படுகிறது. பாடங்களுடன் சேர்த்து அன்பு, பண்பு, வீரம், மரியாதை ஆகியவையும் கற்றுகொடுக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் பெற்றோர்கள் தாய்த் தமிழ் பள்ளிகளில் தம் குழந்தைகளை சேர்க்கத் தயங்கினார்கள். ஆங்கிலக் கல்வி தான் கெளரவமானது என்ற தவறான கருத்து தமிழ் நாட்டில் இருப்பது தெரிந்தது தானே!. போகப்போக தாய்த் தமிழ் பள்ளிகளில் படிக்கும் குழந்தகளின் அறிவு வளர்ச்சியைப் பார்த்ததும் பெற்றோர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. 1995 ஆம் ஆண்டு 25 குழைந்தகளுடன் தொடங்கப்பட்ட திரூப்பூர் பள்ளியில் இன்று கிட்ட தட்ட 600 குழந்தைகள் படிக்கிறார்கள். பெற்றோர்களின் அங்கீகாரம் கிடைத்துவிட்டாலும், அரசாங்கத்தின் முழு அங்கீகாரம் இன்னும் இந்தப் பள்ளிக்கு கிடைக்கவில்லை. நம் குடியரசு தலைவர் அப்துல் கலாம் முதல் இன்னும் எத்தனையோ பேர் தாய் மொழி, தமிழ் மொழியில் படித்து உயர்ந்த இடத்தை அடைந்தவர்கள். மாவட்ட ஆட்சியர் தேர்வுகள் கூட தமிழில் எழுதி வெற்றி பெற்றவர்கள் நிறைய வந்துவிட்டார்கள். அதுமட்டும் அல்ல நம் தாய் மொழி செம்மொழி ஆக போகிற இக்கால கட்டத்தில் நாம் நம் தாய் தமிழ் பள்ளிகளை வள படுத்த வேண்டாமா ? தமிழ் மொழியையும் பண்பாட்டையும் செவ்வனே வளர்க்கும் கருவியாக தாய் தமிழ் பள்ளிகள் செயல்படுவதால், இந்த பள்ளிகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் தம்மால் இயன்ற பொருளாதார, மனித நேய மற்றும் கல்வி உதவிகளைச் செய்யவேண்டும் என்று அங்கு சென்ற பலர் வலியுறுத்துகிறார்கள்.

திருப்பூர் தாய் தமிழ் பள்ளி நன்கு வளர்ந்து வருகிற பள்ளி. அதுமட்டும் அல்லாமல் சென்னை, மேடவாக்கம், வண்டலூர், குன்றத்தூர், மதுரை, கோவை, பொள்ளாச்சி, பல்லடம், உடுமலை, அவிநாசி, சங்கரன் கோவில் மற்றும் மயிலாடுதுறை இப்படி பல ஊர்களில் பரவி வருகின்றது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் வாய்ப்பு கிடைக்கும் பொழுது தமிழகம் செல்லும் பொழுது தாய் தமிழ் பள்ளி சென்று வாருங்கள். தமிழ் நாட்டில் தனியாக தாய் தமிழ் பள்ளிகள் எதற்கு ? ஏன் ? என்று நினைப்பவர்கள் அவசியம் நேரில் சென்று அதனை பார்த்து விட்டு வந்தால் இன்னும் தெளிவாக புரியும். தாய் தமிழ் பள்ளிகளை ஆதரிப்பவர்கள் தமிழ் தீவரவாதிகள் அல்ல, ஆங்கிலத்திற்கு எதிரானவர்களும் அல்ல. சுருங்க சொன்னால் தாய் தமிழ் மொழியை மனதார நேசிப்பவர்கள். வாழ்க தமிழ் வளர்க அதன் புகழ்!!!

நன்றிகள் பல திண்ணை மின் இதழுக்கு….

‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் ‘

என்றும் தமிழ் பணியில்

மயிலாடுதுறை சிவா…

mpsiva23@yahoo.com

Series Navigation

மயிலாடுதுறை சிவா

மயிலாடுதுறை சிவா