தென்கிழக்கு ஆசியா: அச்சுறுத்தும் பெண்கள் குழந்தைகள் கடத்தல்

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

மைக்கேல் பிளம் (தமிழில் : அசுரன்)


தென்கிழக்கு ஆசியாவில் ஆண்டுதோறும் வறுமையின் காரணமாக 2,25,000 பேர்- பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் வீட்டிலிருந்து ஆசைகாட்டி அழைத்து அல்லது கடத்திச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர். இதுபோல, உலகளவில் ஆண்டுதோறும் 20 இலட்சம்பேர் இவ்வாறு கடத்திச்செல்லப்படுகின்றனர் என்று அமெரிக்க அரசின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

பொதுவாக கடத்தல் என்றாலே பொருட்களை, குறிப்பாக போதைப்பொருட்களை கடத்துவது என்பதே நமக்குத் தெரியும். ஆனால் கடந்த 10 ஆண்டுகாலமாக இக்கடத்தலில் மனிதர்களும் இடம்பெறத்தொடங்கினர். அதிலும் பெண்களும் குழந்தைகளுமே அதிகம். முறையான வேலை கிடைக்கும் என்று நம்பிச் செல்பவர்கள் விரைவிலேயே சுரண்டப்படுகின்றனர், வஞ்சிக்கப்படுகின்றனர் இறுதியாகப் பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர். இதில், போதைப்பொருளையும் மிஞ்சும் அளவிற்கு பெருமளவு பணம் கிடைக்கிறது. இதன் மதிப்பு ஆண்டுக்கு 600 கோடி டாலர் முதல் 700 கோடி டாலர் வரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மிகச்சரியான எண்ணிக்கை கிடைக்கவில்லை என்றாலும் ஐ.நா. குழந்தைகள் நிதியத்தின் (யுனிசெப்) கணக்கீட்டின்படி கடந்த 30 ஆண்டுகாலத்தில் ஆசியாவிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை 3 கோடியாகும். இவர்கள் பொதுவாக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வேலை அல்லது கல்வியை எதிர்பார்க்கும் அவர்களிடம் அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்று ஆசைகாட்டி ஏமாற்றப்படுகின்றனர். அதேநேரம் பிறர் நண்பர்களாலோ உறவினர்களாலோ கடத்தப்பட்டு விற்கப்படுகின்றனர். அடிப்படை மனித உரிமைகளை பணம் மீறுகின்ற இது ஒரு இரக்கமற்ற வியாபாரமாகும்.

கடத்தல்காரர்கள் பொதுவாக உள்ளூர், கிராமப்புற ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த பெண்களையும் குழந்தைகளையுமே குறிவைக்கின்றனர். சிலநேரங்களில் குடும்பத்தினரே குழந்தைகளை தரகர்கள் அல்லது கடத்தல்காரர்களிடம் விற்றுவிடுகின்றனர். பெற்றோர்கள், தம் பிள்ளைகள் நல்ல வேலையையோ அல்லது கல்வியையோ பெறுவார்கள் என்று நம்புகின்றனர். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதன் முடிவு பாலியல் தொழிலாகவோ அல்லது வேறு தொழிலாகவோ இருக்கிறது. எதுலாக இருந்தாலும் அவர்கள் தம் வாடிக்கையாள˜களுடன் பாலுறவுகொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

ஆசியப்பகுதியிலிருந்து இவ்வாறாக நடைபெறும் கடத்தலைத் தடுப்பதற்காகவும், இதற்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்துவதற்காகவும் ஐ.நா.வால் நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க வழக்கறிஞரான கிறிஸ்டா கிராஃபோர்டு, ‘இத்தகைய குற்றவாளிகளைஸ்ரீ கைது செய்வதிலுள்ள ஒரு குறைபாடு என்னவென்றால், இப்படி கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ எதிராகச் சாட்சிசொல்ல யாரும் முன்வருவதில்லை. சாட்சிகளைப் பாதுகாக்கும் வழிவகை ஏதும் இல்லை. எனவே, சில வழக்குகளிலேயே தண்டனை கிடைக்கிறது ‘ என்கிறார்.

அமெரிக்காவில் கடத்தல், வன்முறை பாதுகாப்புச் சட்டம் 2000 உள்ளது. இது 89 நாடுகளின் நிலை குறித்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிடுகிறது. இத்தகைய குற்றங்களுக்கு எதிராக, அந்தந்த நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள், குறிப்பாக சட்டரீதியிலான நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோருக்குப் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டல் என்பவற்றின் அடிப்படையில் அவை மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் நிலையில் நல்ல முயற்சிகள் எடுக்கும் நாடுகள் உள்ளன, இரண்டாவது நிலையில் சிறிதளவு முயற்சி எடுத்துள்ள நாடுகள் உள்ளன. எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத நாடுகள் மூன்றாவது நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பெண்களும் குழந்தைகளும் ஆசைகாட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட இன்னமும் வறுமையே முதன்மையான காரணமாக இருக்கிறது. ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் மட்டும் உலக மக்களில் சுமார் மூன்றிலொரு பங்கினர் வசிக்கின்றனர். இவர்களில் ஏறத்தாழ 25% பேர் நாளொன்றிற்கு ஒரு டாலருக்கும் குறைவான வருவாயுடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

செல்வி கிராஃபோர்டு, ‘கடந்த 3 ஆண்டு காலமாக மூன்றாவது நிலையில் இருந்த கம்போடியா, 2003 சனவரியில் ஸ்வேபாக் பாலியல் தொழிற்பகுதியை (சிவப்பு விளக்குப் பகுதி) மூடியது. மூன்றாவது நிலையிலிருந்து தன்னை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சியே அது. இது இன்னமும் இத்தகைய கடத்தல் ிநடவடிக்கைகளின் மூல நாடாகவும், சேருமிடமாகவும், கொண்டு செல்லும் நாடாகவும் உள்ளது. இதன்மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு சர்வதேச அமைப்புகள் கம்போடிய அரசை வலியுறுத்திவருகின்றன. எனினும் சில கைது நடவடிக்கைகளே எடுக்கப்பட்டுள்ளன. ஆசிய-பசிபிக் வட்டாரத்திலுள்ள மியான்மர் (பர்மா), இந்தோனேசியா ஆகிய நாடுகள் இவ்விசயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மூன்றாவது நிலையில் உள்ளன.

தாய்லாந்து இரண்டாவது நிலையில் இருந்தாலும் இதுவும் பெண்களையும் குழந்தைகளையும் பெறும் மூல நாடாகவும், சேருமிடமாகவும், கொண்டு செல்லும் நாடாகவும் உள்ளது. அருகிலுள்ள லாவோஸ், மியான்மர், சீனா ஆகிய நாடுகளிலிருந்து பெண்களும் குழந்தைகளும் தாய்லாந்து வழியாகவே அமெரிக்கா, சப்பான், தைவான், ஆஸ்திரேலியா மற்றம் ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றனர் ‘ என்கிறார்.

தாய்லாந்தில் இக்கடத்தலுக்கு எதிரான சட்டமும், விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளும் இருந்தாலும் அவை வரம்பிற்குட்பட்டவையே. காவல்துறையினருக்கும் பாலியல் தொழிற்கும்பல்களின் உரிமையாளர்களுக்கும் இடையேயான இலஞ்சலாவண்யத் தொடர்பு வெளிப்படையானதே. எனவே பெண்களையும் குழந்தைகளையும் இவர்களிடமிருந்து காப்பாற்றவேண்டுமானால் வேறு வழிகளைஜ்தான் தேடவேண்டும்.

தாய்லாந்தில் 15 வயதுக்கும் குறைந்த வயதுடைய சிறுமியையோ சிறுவனையோ ஒரு வெளிநாட்டுக்காரருக்காகப் பெறுவது கடினமானதல்ல. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஐ.நா.வின் குற்றம் மற்றும் நீதி தொடர்பான உலகளாவிய அறிக்கையில் சப்பானில் 40,000 முதல் 50,000 தாய்லாந்து பெண்கள் சட்டவிரோதமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம் பட்டக் கடனைத் தீர்க்கும்வரை அவர்களின் கடவுச்சீட்டுகள் பறித்துவைக்கப்படுகின்றன.

தாய்லாந்தின் தலைநகரான நாம் பென் நகரிலிருந்து 11 கி.மீட்டர் தொலைவிலிருந்த, கே-11 என்ற பெயரில் அழைக்கப்பட்டுவந்த ஸ்வே பாக் பகுதியானது அது மூடப்படும்வரை அவ்வட்டாரத்திலேயே குறிப்பிடத்தகுந்த பாலியல் தொழில் பகுதியாக இருந்தது. அங்கு இருந்தவர்களில் பெரும்பாலானோர் 11 முதல் 20 வயதுக்குட்பட்ட வியட்நாமிய சிறுமியரே. இவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்தாராலோ அல்லது நன்பர்களாலோ விற்கப்பட்டு, வியட்நாமிலிருந்து கடத்திவரப்பட்டவர்கள்.

வியட்நாமிய தெருவோரச் சிறார்கள் தொடர்பான எங்கள் ஆராய்ச்சியின் பொருட்டு நாங்கள் ஒருமுறை இரு நாட்கள் ஒரு பாலியல் தொழில் தலைவருடனும் அவர்களின் சிறுமியருடனும் கழித்தோம். அப்போது வாடிக்கையாள˜கள் வந்து, சென்றுகொண்டிருந்தனர். அவ்விடுதித் தலைவி எங்களுக்கு விரிவாக விளக்கினார். இவர்களில் பெரும்பாலான சிறுமியர் வியட்நாமின் தென்மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள். ‘இப்பெண்கள் ஏஜெண்டுகள்மூலம் வாங்கப்படுகின்றனர். கன்னிப் பெண்களுக்கு 350- 400 டாலர்களும் பிறருக்கு 150- 170 டாலர்களும் விலையாக கொடுக்கப்படுகின்றன. வாடிக்கையாளருக்கு விடுதி ஏற்பாடு செய்து, ஒரு வாரத்திற்கு கன்னிப்பெண்ணை அனுப்பினால் 300- 400 டாலர்கள் கட்டணம் வசூலிக்கிறேன் என்று அவர் சொன்னார். மேலும், இப்பெண்களுடன் தான் ஒரு குடும்பமாக வசிப்பதாகவும் வியட்நாமின் ஏழை கிராமங்களைச் சேர்ந்த அவர்கள் தங்கவும் வேலைசெய்யவும் தான் வசதி ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் தாம் இவ்வாறாக ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதாகவும் அவர் சொன்னார்.

நாங்கள் பாங்காக் வீதிகளில் பிச்சை எடுக்கும் அல்லது பூ விற்கும் இந்திய, கம்போடிய சிறுமியர் பலரையும் பார்த்தோம். பூக்களை விற்கும்போது சில வெளிநாட்டவர்கள் பாலுறவிற்கும் அழைப்பார்களாம். ஆங்கிலத்தில் பேசிய அவர்கள் தாம் பாங்காக்கில் ஒரு தாய்(லாந்து) குடும்பத்தினருடன் வசிப்பதாகவும் அவர்கள் அளிக்கும் பணத்திற்கு ஈடான தொகையுடன் பூக்களை விற்றுத் திரும்ப வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் அடிஉதைதான் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர். அத்துடன் காவல்துறையினரிடமும் ஒப்படைக்கப்படுவார்களாம்.

பெண்களும் குழந்தைகளும் இவ்வாறு ஆசைகாட்டி பாலியல் தொழிலில் தள்ளப்பட ஏழ்மையே முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நச்சுச் சுழலில் இருந்து சிலர் மட்டுமே தப்பிக்கின்றனர். பெரும்பாலானோர் அன்றாட பிழைப்பிற்காக இச்சுரண்டலில் வீழ்கின்றனர்.

மூன்றாம் உலக வலைப்பணியத்தின் (Third World Network Features) ஆங்கிலச் செய்திமடலில் இருந்து தமிழில்: அசுரன் (asuran98@rediffmail.com)

….

Series Navigation

அசுரன்

அசுரன்