கூட்டணிகளா, இன்றேல் வேட்டணிகளா ?

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

ஜோதிர்லதா கிரிஜா


ஒவ்வொரு முறை இந்கியாவில் பொதுத்தேர்தல் வரும்போதும் பல்வேறு கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணிகளை அமைத்துக் கொள்ளுகின்றன. இந்தியாவில் ஏராளமான கட்சிகள் உள்ளதாலும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் போல் இரண்டே கட்சிகள்தான் போட்டி போடும் என்கிற நிலை இல்லாததாலும் கூட்டணி அமைத்துக் கொள்ளாமல், இவை தனித் தனிக் கட்சிகளாகத் தேர்தல் களத்தில் இறங்கினால், வாக்குகள் சிதறிப் போய், எந்தக் கட்சிக்கும் ஆட்சி யமைக்கும்படியான பெரும் பான்மை கிடைக்காமல் போய் விடுகிறது.

கொள்கை யளவில் எந்த வகை ஒற்றுமையும் உடன்பாடும் தங்களுக்குள் இல்லாத கட்சிகளாக இருந்தாலும், இவை கூட்டணி யமைத்துத் தேர்தலில் போட்டியிடும் போது அறுதிப் பெரும்பான்மை எந்த ஒரு தனிக்கட்சிக்கும் கிடைக்காத சிக்கலான நிலை தவிர்க்கப் படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையேயும் கூடச் சில நேரங்களில் இந்தச் சிக்கல் ஏற்படத்தான் செய்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கான இந்தியாவின் அரசியல் நிலையைக் கவனித்தால், இனித் தனிப்பட்ட எந்தக் கட்சிக்கும் பிற கட்சி எதனுடையவும் கூட்டு இன்றி ஒன்றியாகவே ஆட்சி யமைக்கும் வாய்ப்பே கிடைப்பதற் கில்லை என்கிற நிலை கண்கூடாகத் தெரிகிறது. எனவே, கூட்டாட்சி என்பது தவிர்க்க முடியாத நிலையாகிவிட்டது.

ஆனால், வெற்றி பெறும் ஒரு கூட்டணி, அடுத்த பொதுத்தேர்தல் வருவதற்கான இயல்பான நாள் வரையில், அதாவது ஐந்தாண்டுக்காலம், தொடர்ந்து ஆட்சி செய்ய இயலும் என்கிற உத்தரவாதம் அறவே இல்லை. இதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

ஆட்சியைப் பிடித்துப் பதவிகளில் அமர வேண்டும் என்னும் ஒரே நோக்கம் தவிர, வேறெந்த நோக்கமும் இல்லாதவை இந்தக் கட்சிகள். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் நோக்கமோ, நாட்டின் ஆட்சி நல்ல முறையில் நடக்கவேண்டும் என்னும் இலட்சியமோ பொதுவாக எந்த அரசியல் கட்சிக்கும் கிடையவே கிடையாது.

இதனால்தான் ஒரு கூட்டணி அமைச்சரவையை அமைப்பதற்குரிய வெற்றியைத் தேர்தலில் பெற்றாலும், அந்தக் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கோ விரும்பிய அளவுக்கோ அமைச்சரவையில் இடமளிக்கக் கூட்டணியின் தலைமைக் கட்சி முன்வராத போது அதிருப்தி யடைந்து கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளுவதாக அறிவிக்கின்றனர்! இதனால், வெற்றி பெற்ற கூட்டணியின் வலிமை குறைந்து, அதன் விளைவாக அது பிரச்சினைகளைச் சந்திக்க நேர்கிறது.

ஆட்சி செய்யும் கூட்டணிகளில் உள்ள கட்சிகளே இப்படி என்னும் போது, எதிர்க் கட்சிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. நம் நாட்டில், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் கட்சிக்கோ, கூட்டணிக்கோ எதிர்க்கட்சிகள் ஒரு நேர்மையான தார்மிக ஆதரவைத் தருவதே யில்லை. ஒரு சட்டமன்றத்தில் – அல்லது பாராளுமன்றத்தில் – எந்த எதிர்க் கட்சியும் உருப்படியான முறையில் செயல் பட்டதாக வரலாறே இல்லை. (இந்தப் பொதுவான விதிக்கு ராஜீவ் காந்தியின் தலைமையில் பாராளுமன்றத்தில் செயல்பட்ட எதிர்க்கட்சி ஒரு விதி விலக்கு என்று அரசியல் வல்லுநர்கள் பலர் எடுத்துச் சொல்லியுள்ளனர். காங்கிரஸ் கட்சி எது செய்தாலும் அதைக் குற்றம் கூறிக் கடுமையாக விமர்சிப்பதையே இயல்பாய்க் கொண்ட ஒரு வார இதழ் ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதற்கு ராஜீவ் காந்தி நல்ல முன்னுதாரணம் என்று பாராட்டியுள்ளது.)

நாம் அறிந்த வரையில், எப்படி யெல்லாம் செயல்பட்டால், முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழும், தாங்கள் மறுபடியும் தேர்தலைச் சந்தித்து வெற்றி வாய்ப்பைப் பெறலாம் என்கிற ஒரே நோக்கத்தைத் தவிர வேறெந்த நோக்கமும் எந்த எதிர்க்கட்சிக்கும் இருந்ததே கிடையாது. ஏழை மக்களின் நலனுக்காகப் பயன்பட வேண்டிய கோடிக் கணக்கான பணம் ஒவ்வொரு தேர்தலுக்காகவும் எவ்வாறு வீணாய்ச் செலவாகிறது என்பதைப் பற்றிய உணர்வோ, உறுத்தலோ கடுகளவு மின்றி எதற்கெடுத்தாலும், “ஆட்சியைக் கலைத்துவிட்டு மறுபடியும் தேர்தல் நடத்த வேண்டியதுதான் ‘பிரச்சினை’ தீர ஒரே வழி!” என்று ஆர்ப்பாட்டம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர்களும் சரி, ஆட்சி செய்யும் கூட்டணியிலிருந்து விலகும் கட்சிகளும் சரி மக்களின் பார்வையில் அப்பட்டமான சூதாடிகளே.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்க வேண்டிய இந்தத் தேர்தல் சூதாட்டம் 2 அல்லது 3 ஆண்டுகளிலேயே நடப்பது நாட்டுப்பற்றும் மக்கள் பற்றும் உள்ள வாக்காளர்களின் இரத்தத்தைக் கொதிக்கவன்றோ செய்கிறது ?

ஆளும் கட்சி ஊழல் செய்யும் போதும், தவறுகள் செய்யும் போதும், அதைத் தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்குக் கட்டாயம் உண்டுதான். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால், ஆட்சியைக் கலைப்பது தவிர வேறெந்த நோக்கமும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை. இந்த விதிக்கு ஆளும் கட்சிக் கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியும் கூட விதிவிலக்கன்று.

ஒரு மாநிலத்தில், க, கா, கி, கீ, கு, கூ என்று ஆறு கட்சிகள் ஒருங்கிணைந்து ஆட்சி யமைப்பதாய்க் கொள்ளுவோம். “க” கட்சிதான் இந்த ஆறில் அதிகச் செல்வாக்குப் பெற்ற கட்சி என்றும் கொள்ளுவோம். அதே அகர வரிசையில் பிற கட்சிகளின் செல்வாக்கும் உள்ளதென்றும் இருக்கட்டும்.

தொகுதி உடன்பாடு மட்டுமின்றி, ஒரு கூட்டணி ஜெயித்த பிறகு அமைச்சர் பதவிகளை எவ்வாறு தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி எழுத்தில் இவர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். ஆனால், சில கட்சிகள், இது பற்றி ஒப்பந்தத்தில் ஏதும் குறிப்பிடாமல், தேர்தலில் வெற்றி பெற்றால், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்னும் ரீதியில் ஒப்பந்தத்தை எழுதிக் கொள்ளுவதால், வெற்றி பெற்ற பிறகு இவர்களுள் தகராறு முளைக்கிறது.` இது விஷயமாய் ஒப்பந்தமே செய்து கொண்டிருந்தாலும் கூட, நேர்மையற்று மேலும் பதவிகளுக்கு ஆசைப் பட்டுத் தகராறு செய்யும் கட்சித் தலைவர்களும் உண்டுதான்.

ஒப்பந்த மீறல் வழக்காடு மன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படக்கூடிய உரிமைக்கான நிபந்தனையும் அவ் வொப்பந்தத்தில் இருக்க வேண்டும். ஜெயித்த பின்னர், எந்தக் கட்சியும் நியாயமான காரணத்துக்கு அல்லாது, வேறு புதிய காரணம் எதையாவது சொல்லிக் கொண்டு கூட்டணியிலிருந்து விலகக் கூடாது. அப்படி விலகுவதாயின், அதற்கு ஒரு கட்சி கூறும் காரணம் நியாயமானதா அன்றா என்பதைத் தேர்தல் ஆணையமோ அல்லது நீதி மன்றமோதான் தீர்மானிக்கவேண்டும்.

இன்னின்ன காரணங்களுக்காக மட்டுமே ஒரு கட்சி அது இணைந்துள்ள கூட்டணியிலிருந்து விலகலாம் என்பதைத் தேர்தல் ஆணையம் பட்டியலிட வேண்டும். கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஒரு மாநாட்டில் கூட்டிச் சந்தித்துப் பேசிய பின் தேர்தல் ஆணையம் இவ்விதி முறைகளை அவர்களது ஒப்புதலுடன் அமைக்கலாம். உதாரணமாக, ஒரு கூட்டணியிலுள்ள கட்சி அதன் தலைமைக் கட்சித் தலைவர் (எழுத்து மூலமாக) வாக்களித்திருந்தபடி தன் கட்சிக்கு அமைச்சர் பதவிகளைத் தரவில்லை யெனில், கூட்டணியிலிருந்து அது விலகலாம். கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும் தொகுதிகளுடைய எண்ணிக்கையின் விகிதாசாரப்படி அமைச்சர் பதவிகளை ஒதுக்க ஒப்புக்கொள்ளும் தலைமைக் கட்சி அவ்வாறு செய்ய மறுத்தால், ஒரு கட்சி அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதற்கு அது ஒரு நியாயமான காரணம் என்பதை எவரும் ஒப்புக்கொள்வர்.

அமைச்சரவை அமைத்த பிறகு, தலைமைக் கட்சியையோ, கூட்டணிக்கட்சிகளில் ஒன்றையோ சேர்ந்த அமைச்சர் / அமைச்சர்கள் புரியும் ஊழலை ஆட்சேபித்து நேர்மையான ( ?!) ஒரு கட்சி அக் கூட்டணியிலிருந்து விலகலாம். தலைமைக் கட்சித் தலைவர் நேர்மையானவராக இருந்து ( ?!) கூட்டணியைச் சேர்ந்த பிற கட்சிகளுள் ஒன்றைச் சேர்ந்த அமைச்சர் ஊழல் புரிந்தால், அவரை விலக்கிவிட்டு, அதே கட்சியைச் சேர்ந்த வேறொருவரை அந்த இடத்தில் நியமிக்கலாம்.

மேற்சொன்ன காரணங்களுக்காகவும் இது போன்ற இன்னும் சில நியாயமான காரணங்களுக்காகவும் ஒரு கட்சி கூட்டணியிலிருந்து விலகலாம். ஆனால் இவை யெல்லாம் – இன்னும் சிலவற்றுடன் – தேர்தல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பட்டியலிடாத வேறு ஏதேனும் புதிய காரணம் இருப்பின், அதை ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று, மெய்ப்பித்து – அது சரியான காரணம் என்று தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தால் மட்டுமே – கூட்டணியிலிருந்து ஒரு கட்சி விலகலாம். மற்றபடி, வேறு மறைமுக, தன்னல நோக்கங்களுக்காக எந்த ஒரு கட்சியும் கூட்டணிக்கு வேட்டு வைத்தல் இயலாததாய்ச் செய்யத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடான விகிமுறைகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துதல் வேண்டும்.

இவ்வாறு செய்தால், ஆட்சியில் அமரும் கூட்டணி தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்குச் செயல்படுதல் இயலும். இல்லாவிடில், கூட்டணிக்கு வேட்டு வைக்கும் தலைவர்களால் பொதுப்பணமே விரயமாகும். மக்கள் நலத் திட்டங்களில் எதையும் செயல்படுத்துதல் இயலாததாகிவிடும்.

ஆகவே, தேர்தல் ஆணையம் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கான விதிமுறைகளைத் திட்டவட்டமாக அறிவித்தல் நலம். (ஒரு வாக்காளர் எனும் தகுதியில் மட்டுமே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.)

jothigirija@vsnl.net

jothigirija@hotmail.com

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா