மதங்கள் அழிக்கப்படவேண்டும்

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

தந்தை பெரியார்


உலகில் உள்ள மக்கள் அனைவரையும் பீடித்திருக்கும் ஒரு பெரும் வியாதி கடவுள்கள், மதங்கள் என்னும் இரு தொத்து நோய்களேயாகும். இவற்றுள் கடவுள்கள் நோயைவிட மதங்கள் நோய் என்பது மிகமிகக் கொடியதாகும்.

உண்மைக் கடவுள் என்கிற தத்துவத்தால் மக்கள் பிரிக்கப்பட்டிருக்கவில்லை; ஆனால், எப்படிப்பட்ட மதத்தாலேயும் மக்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் இப்படிச் சொல்லுகிறோம் என்றால், கடவுளைப் பற்றிய ஒரே கருத்துள்ளவரும் மதத்தால் வேறுபட்டவராகப் பிரிக்கப்பட்டவராக இருந்துவருகிறார்கள். ஆனால், கடவுளைப் பற்றிய இரு வேறு கருத்துள்ளவர்களும் மதத்தால் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.

உதாரணமாக, ஒரே கடவுள் அதுவும் உருவமற்ற கடவுள் என்கின்ற எண்ணமுள்ள முஸ்லீம், கிருஸ்துவர், பிரம்ம சமாஜத்தார் முதலிய ஏகத் தெய்வ கொள்கைக்காரர்களும் மதம் காரணமாக வேறுபட்டிருக்கிறார்கள். பலவிதமான கடவுள் தன்மை கொண்டவர்களும், கடவுளே இல்லை என்பவர், மாயாவாதி, சூனியவாதி, உலகாயதவாதி, இயற்கைவாதி, சாரவாகன், வேதாந்தி முதலிய பலரும் மதம் காரணமாக இந்துக்களாகவே இருந்து வருகிறார்கள். எனவே, மக்களைப் பிரித்து வைத்திருப்பதற்குக் கடவுளைவிட மதமே முக்கியக் காரணமாக இருந்து வருகிறது.

கடவுள் உணர்ச்சி வேறுபல காரணங்களுக்குக் கேட்டை விளைவிப்பதாக இருந்தாலும், உலகப் பொது நலனுக்கும் ஒற்றுமைக்கும் கேடு உண்டாக இடம் தந்து மக்களுக்கு ஒன்றுபோல் கேடு செய்து வருவன மதங்களேயாகும்.

கடவுள்கள் திருத்தத்திற்கு உட்பட்டவைகளாகலாம். ஆனால், மதம் திருத்தப்பாட்டுக்கு இடம் கொடுப்பதில்லை. மதத்தின் அழிவுதான் திருத்தம் என்று சொல்லவேண்டி இருக்கிறது.

மதம் பெரிதும் சடங்கையும், காரியத்தையுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆதலால், மதம் என்பது ஒரு மனிதனின் செய்கை, நடப்பு ஆக இருக்கவேண்டி இருப்பதால், வெளிப்படையாகப் பிரிந்திருக்க வேண்டியதாகிறது. கடவுளைப் பற்றிய கருத்து ரகசியமாக-வேறு யாருக்கும் தெரியாததாக இருக்கலாம். ஆதலால் கடவுளைப்பற்றி ஒருவருக்கொருவர் மாற்று அபிப்பிராயம் கொண்டவர்கள் ஒன்றாக இருக்கலாம். அதனால்தான் மனிதன் கடவுளை ஏமாற்றுகிறான். ஆனால், மதம் வெளிப்படையாய் வேஷம் போட்டு நடித்துத் தீர வேண்டியதாகவே இருக்கிறது. ஆதலால், ஒரு மனிதன் மதத்தை ஏமாற்ற முடியாது. ஏமாற்றினால் தெரிந்துவிடும்.

ஆகவே, மனித சமுதாயத்தை ஒன்றுபடுத்தவும், சமதர்மம் தழைத்து ஓங்கவும் மதங்களே முதலில் அழிக்கப்படவேண்டும். ஏனெனில், கடவுள் முன்னிலையில் மக்கள் யாவரும் ஒன்று என்று சொல்லி எந்தக் காரியத்தையும் துவக்கலாம். ஆனால், மதங்களின் முன்னிலையில், எல்லா மத மக்களும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது. மதங்களாலேயே மக்கள் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். எனவே, மக்கள் யாவரும் ஒன்று, சரிசமம் என்றால் மதங்கள் அழிய வேண்டி வந்துவிடுமாதலால், மதங்கள் மக்களை ஒன்றுபடுத்தச் சம்மதியா.

இந்தியாவில் அநேக மதங்கள் இருக்கின்றன. அநேகமாக இந்தியாவின் பூர்வகுடிகளே இன்று எல்லா மதக்காரர்களாகவும் இருந்து வருகிறார்கள். ஆரியர்களும், மங்கோலியர்களும் சில மதங்களில் கலந்து இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையுடையவர்களாகத்தான் இருக்கக்கூடும். ஆனாலும், இந்தியப் பூர்வக்குடிகளுக்கு என்ன மதம், என்ன கொள்கை இருந்தது என்று காட்டும் ஆதாரம் எதுவுமே காணக்கிடைப்பதில்லை. விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஆரியர் இந்நாட்டிற்கு வருவதற்கு முன் இங்கு என்ன மதம் இருந்தது என்பது இதுவரை யாராலும் தெளிவாக்கப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆரியர் இந்நாட்டுக்கு வரும் முன் நிலம், இடம் காரணமாக மக்கள் பழக்கவழக்க இயற்கைத் தன்மைகளில் பேதம் இருந்ததாகக் காணப்படுவதல்லாமல், மதம், மதத்தின் காரணமாக ஏற்பட்ட வேஷம், சடங்கு, ஜாதி என்பவைகள் காரணமாக பேதம், பிரிவு இருந்ததாகச் சொல்லுவதற்கு அறிகுறிகளைக் காண முடியவில்லை.

மதங்கள் பிரிவினைக்கும், பேதத்திற்கும் காரணமாய் இருப்பது மாத்திரமல்லாமல், மடமைக்கும், மூடநம்பிக்கைக்கும் காரணமாக இருக்கின்றன. பயத்தின் அஸ்திவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும், மூடநம்பிக்கை, மடமை என்கின்ற அஸ்திவாரத்தின் மீதே மதங்கள் இருக்கின்றன. இம்மாதிரி மதங்களேதான் கடவுளையும் சிறுமைப்படுத்திவிட்டன என்பது மாத்திரமல்லாமல், எதற்காகக் கடவுள் தேவை என்று சொல்லப்படுகின்றதோ, எதற்காகக் கடவுள் இருக்கிறார் என்று எண்ண மக்கள் செய்யப்படுகின்றார்களோ, அதற்கு மாறான பயன் உண்டாகும்படி மதங்கள் செய்துவிடுகின்றன.

மற்றும், எந்த மதமும் மக்களுடைய இயற்கைக் குறைபாடுகளுக்குப் பரிகாரம் செய்யவில்லை என்பது மாத்திரமல்லாமல், மதங்களால் மக்களுக்குப் பல செயற்கைக் குறைபாடுகளும் உண்டு பண்ணப்படுகின்றன. எனவே, மனித தர்மவாதி, மனித சமதர்மவாதி, (மனித) ஜீவகாருண்யவாதி, மதங்களால் பாதிக்கப்பட்டவனாகி, மதங்களில் இருந்து வெளிவந்து அல்லது மதங்களுக்கெல்லாம் மேம்பட்டவனாக இருந்துகொண்டு தொண்டாற்ற வேண்டியவனாகிறான்.

ஜூலை 27, 1946 ‘குடி அரசு ‘ இதழில் வெளியான பெரியார் பேச்சு. ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், 50 ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600007 ‘ வெளியிட்டுள்ள ‘பெரியார் களஞ்சியம் ‘ நூல் வரிசையின் நான்காம் தொகுதியில் (குறைந்த அளவு நன்கொடை ரூ.80) வெளிவந்துள்ள கட்டுரை இது.

(தட்டச்சு உதவி: ஆசாரகீனன் aacharakeen@yahoo.com)

பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகள்:

  • கோஷா முறை

    கண்ணகி கதை இலக்கியமா ?

    திருவள்ளுவரின் பெண்ணுரிமை

    எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ?

    ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது

    பெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்

    கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்

    கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்

    கல்யாண ரத்து தீர்மானம்

    பெண்கள் சொத்துரிமை

    மதம் பற்றிய சிந்தனைகள்:

    மத மாற்றமா ? மத ஒழிப்பா ?

    Series Navigation

  • தந்தை பெரியார்

    தந்தை பெரியார்