திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்….

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

கோச்சா


அந்தக் காலத்தில் சிலோன் ரேடியோவில் தவழ்ந்து வரும், ஒரு பாடலில் ‘திருடானாய் பாத்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ‘ என்று பாடுவது கேட்டு , என்னாடா சுத்தக் கேனத் தனமாய் இருக்கிறதே என்று நினைத்துள்ளேன்.

ஆனால் தற்போதைய தமிழக வேட்பாளர்களின் சரித்திரம் பார்த்தால், அந்த பாடலின் உண்மைப் புரிகிறது.

இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் வந்துள்ள வேட்பாளர் சிலரின் CV படியுங்கள்.

இது தவிர மற்றும் சிலர் விடப்பட்டுள்ளனர்.

சுரண்டல் லாட்டரி மன்னர்கள், கள்ளச்சாராய மன்னர்கள், குண்டு – கொலை வித்தகர்கள் எவருக்கும் பஞ்சமில்லை.

இது தவிர, புது வரவுகள் சில கூட தாதாக்களின் மனைவிகள்.

சரி, இவர்கள் கெட்டவர்கள் என்றால் பின் எப்படி பிற கட்சிகள் விட்டு வைக்கின்றன என நாம் கேட்கலாம்.

அதில் தான் இந்த அரசியல் கட்சிகளின் ஒற்றுமை உள்ளது. தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் தரம் பிற கட்சியின் வேட்பாளர்களுக்குக் குறைந்ததில்லை என்பதால் தான் அவர்கள் பிற வேட்பாளர்களின் தர நிர்ணயத்திற்கு தர்க்கம் பண்ணுவதில்லை.

கட்சிகள், தங்களின் எதிர் கட்சிகளின் தலைவர் தரத்தைப் பற்றி மற்றும் தான் பிச்சு பீராய்கின்றன.

இதில் தான் வாக்காளப் பெருமக்கள் மாட்டிக் கொள்கிறார்கள்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தலைவர்களால் ஒட்டு மொத்தமாக நல்லதை தர முடியாது.

நமது தொகுதி MP தரம் பொருத்தே தான் நமது தொகுதியின் முன்னேற்றம் உள்ளது.

அதனால் நாம் இங்கு சிந்திக்க வேண்டியது,

A) நல்ல தலைவர்களின் கீழ் உள்ள பொறுப்பற்ற, அடாவடி தளபதிகளா.. ? ( MP )

இல்லை

B) தலைவர் எப்படி இருப்பினும் அவரின் கீழ் பணியாற்றப் போகும் நல்ல பொறுப்புள்ள தளபதிகளா.. ? ( MP )

ஒன்று நிச்சயம், என்ன குட்டிக்கரணம் போட்டாலும் ஒரு கட்சியின் தலைவரை பொது மக்களால் நிர்ணயிக்கவோ அல்லது மாற்றவோ முடியாது..!

அதனால் நல்ல தலைவர் என்பது தற்போதைய தலைவர்களில் கானல் நீர் கதை தான்…!

ஆனால், MP களைத் – தளபதிகளைத் தேர்ந்தெடுப்பது மக்களின் கைகளில் உள்ளது.

நல்ல நோக்கு உள்ள மனிதர்களை தேர்ந்தெடுப்பதன் மூலமே, ஒரு தலைவனை நாம் கட்டுப்படுத்த முடியும்.

ஏனென்றால், இங்கு உள்ள இரண்டு Public Ltd Company -களான பிஜேபி – காங்கிரஸ் மற்றும் Private Limited Company -களான அதிமுக – திமுக மற்றும் கூட்டுறவு கம்பெனிகளான கம்யூனிஸ்ட்கள் தவிர Propreitor – கம்பெனிகளாகத் துக்கடா கட்சிகள் — இவைகளில் இருந்து தான் ஆட்சி முறை நடக்கிறது.

அதனால் மக்கள் நாம் வாக்களிக்கும் முறையில் தீர்மானம் கண்டால் தான் மாற்றம் வரும்.

கொஞ்சம் யோசியுங்கள், ஒரு எம்.பி என்பது என்ன கூடுதல் பணியா.. ? இல்லை தொழில் அதிபர்கள், சினிமா சிங்காரிகள் -சிங்காரர்கள், குண்டர்கள் இவர்களுக்கான வாழ்க்கையின் அடுத்த நிலையா.. ?

MP பதவி மக்களை நேசித்து அவர்களுக்காக சேவை செய்யும் எண்ணம் உள்ளவனுக்கு அதிகாரம் தரும் ஒரு அரிய வாய்ப்பு.

இதில் 90% பேர், MP ஆனவுடன், சென்னையிலும் , டில்லியிலும் தங்களின் அதிகார வளையத்தால் பெட் ரோல் பங்க் – காஸ் – தொழில் முதலீடுகள் என லாப நோக்குடன் தான் செய்ல்படுகிறார்கள்.

தொகுதியிலும், பார்லிமெண்டிலும் இவர்கள் கழிக்கும் நாட்கள் எண்ணினால் ஒரு கையிலுள்ள விரல்கள் போதும்.

அதிலும் மிகப் பெரிய ஜோக், இந்த எம்.பிக்கள் நிதி. ஒரு எம்பி தன் வேலையை ஒழுங்காக பார்த்தாலே தொகுதி முன்னேறும். அதை விடுத்து சில கோடிகளை எம்.பி நிதியாக அளிக்கிறது அரசாங்கம். இவர்களும் பஸ் ஸ்டாண்ட் நிழல் குடை, சில சதுர அடி பொதுக் கட்டிடங்கள் என செலவழித்து விட்டு கடமை முடிந்தாக நினைத்து கொள்கிறார்கள்.

அதனால், நாம் தீர்மானமாக சில முடிவுகள் எடுக்க வேண்டும்:

வாக்களிக்க ஒரு எம்.பி வேட்பாளருக்கான தர நிர்ணயம் செய்தல் வேண்டும்:

சில எண்ணங்கள்:

1. அவருக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளதா.. ?

2. இதுவரை அவர் அப்படிப்பட்ட காரியங்கள் செய்துள்ளாரா.. ?

3. கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்கும் குணமுள்ளவரா.. ?

(சிலர் தங்களின் சுய பிரச்சார காரணங்களுக்காக அடுத்தவரிடம் பணம் வாங்கி பெரிய விளம்பரத்துடன் சின்ன காரியங்கள் ஆற்றி அரசியலுக்கு வர முயற்சிப்பார்கள். இவர்களும் டேஞ்சர் வகை தான்.)

4. உங்கள் தொகுதியிலேயே நேரம் செலவிட்டு மக்களுக்காக வார்டு வார்டாக போய் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான யோசனைகளை பயமின்றி சொல்லக் கூடியவரா.. ?

5. கல்வி – மருத்துவம் – காவல் பற்றி தெளிவான சிந்தனை கொண்டவரா… ?

6. கண்மாய்களை ஆக்கிரமித்து பிளாட் போடுவதை தடுத்து, தண்ணீர் பிரச்சனை பற்றித் தெளிவான சிந்தனை கொண்டவரா.. ?

(மேலும் உங்களின் யோசனைகளைத் திண்ணைக்கு எழுதலாம்..!)

இதில் படித்தவரா என்ற விஷயத்தை நான் சொல்லவில்லை – காரணம்.. ?

படித்தவர் தான் தேவை என்றால் இப்போதிருக்கும் பல அடாவடி MP-க்கள் BL, MBBS , BE மற்றும் அமெரிக்க ஐரோப்பா பட்டம் பெற்றவறே…!!!

அதிலும் MP மற்றும் மந்திரிகள் இதயம் போன்றவர்கள்.

அறிவு மூளையாக இருக்க வேண்டியவர்கள் IAS, IPS , IFS அதிகாரிகள்.

பல அறிவு மேதைகள் MPக்களாகவும், இதயம் படைத்தவர்களாகம் இருந்துவிட்டால் நாம் யோகக்காரர்கள் தான்.

நம்மிடம் படித்த அறிவான அதிகாரிகளுக்குப் பஞ்சமில்லை.

ஆனால், அறிவு என்ற தகுதியா இல்லை இதயம் என்ற தகுதியா.. ? என்ற ஒற்றை நிலைப்பாட்டில் இதயத்திற்கே வாக்களிக்க வேண்டும்.

உதாரணமாக, கூத்தம்பாக்கம் இளங்கோவும், ப.சிதம்பரமும் ஒரு தொகுதியில் நின்றால், எனது வாக்கு கூத்தம்பாக்கம் இளங்கோவிற்கே…!

சிவகங்கைத் தொகுதியையே 20வருடங்களாக பதவியில் இருந்தும் அதை மேல் கொண்டு வராத சிதம்பரம் தமிழக மாற்றத்தைப் பற்றி பேசுவது,

கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதை தான்..!

ஆனால் தான் சார்ந்த ஊரில் மிகப் பெரிய பஞ்சாயத் ராஜ் மகிமையை நிரூபித்துக் காடிய இளங்கோ தமிழகத்தை , இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்பது அவர் சொல்லாமலே நம்பக் கூடியது.

சரி எது எப்படியோ, அரசியல்வாதிகளின் வேட்பாளர்களில் ஒருத்தரும் தேரவில்லை என்றால் என்ன செய்வது.. ?

வேறேன்ன செல்லாத ஓட்டு போட வேண்டியது தான்…!

அது தான் எலக்ட் ரானிக் ஓட்டு பெட்டியில் கிடையாதே என்றால்,

– அது தான் ஏதோ 49ஓ ஒன்று உள்ளதே..! அதை உபயோகிக்க வேண்டியது தான்.

அதுப் போக கோர்ட்டில் எலெக்ட்ரானிக் எந்திரத்தில் விருப்பமில்லாதவர் பட்டன் ஒன்றை சேர்க்கச் சொல்லி பொது நல வழக்கு தாக்கல் செய்ய வேண்டியது தான்.

அப்போது தான் அரசியலிலும் QA தேவை என்பது விஞ்ஞான ஜனாதிபதிக்கும் புரியும். அவரும் வேட்பாளர் தரம் எப்படியிருந்தாலும் ஓட்டுப் போடுவது கடமை என்று சொல்ல மாட்டார்.

தரமில்லாத வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் போது வாக்களிப்பது என்பது தண்ணீரில்லா வறண்ட ஆழ் கிணற்றில் குதிப்பது போன்றது.

இப்படி செல்லாத வாக்கோ, வாக்களிக்க விருப்பமில்லாததோ தொடர்ந்து வாக்களிக்காதவர் எண்ணிக்கை 45 > 55 > 66 > 80 என்று கூடினால் தான் நல்லவர்களை வேட்பாளர்களாக அரசியல் கட்சிகள் வேட்பாளராக போட நினைப்பார்கள்.

நிஜமாலுமா என்றால்,

வாக்குக்காக எதையும் செய்வார்கள் நம்ம தலைவர்கள்..!

அப்படி ஒரு நாள் வர வேண்டும். இல்லாவிடில் நாம் தீயிலும் , சுடு சட்டியிலும் மாறி மாறி வறுபட வேண்டியது தான்.

உங்கள் முடிவு….

என்ன.. ? என்ன.. ? 40 தொகுதியிலும் 49-ஓ படிவம் தானா… ?

அப்ப நிச்சயம் நல்ல நாள் நம்மை நெருங்குகிறது என்று புரிகிறது….!!!

சரி பாட்டிற்கு வருவோம்…! இதில் திருடன் என்பது வாக்காளர் தான். ஏன்.. ? வேட்பாளராக நின்று வெற்றிப் பெற்று மிகப் பெரிய கொள்ளையடிப்பவர்களுக்கு அவர்களுக்கு அதிகாரத்தை தரும் வாக்காளர்கள் தான் முதல் மிகப் பெரிய குற்றவாளிகள் – திருடர்கள்.

ஆகவே திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது நம்மை பார்த்தே பாடப்பட்டது.

எனவே நாம் திருந்துவோம் திருட்டை ஒழிப்போம்…!!!!

—-

gocha2004@yahoo.com

Series Navigation

கோச்சா

கோச்சா