சூடான் ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue


சூடான் பிரதேசத்தில் மனித குலம் சுமார் 9 மில்லியன் வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வந்திருக்கிறது. மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து மத்தியதரைக்கடல் வரைக்கும் சுமார் 4000 மைல்கள் செல்லும் நைல்நதியின் பாதையின் நடுவே இந்த சூடான் பிரதேசம் அமைந்திருக்கிறது. யூப்ரேடஸ் நதிதீரத்தில் தோன்றி நாகரீகம் போலவே இந்த சூடான் பிரதேசமும் நாகரிகத்தொட்டிலாக இருந்திருக்கலாம். கிரிஸ்துவுக்கு சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட மாடுகள் ஓட்டும் தண்ணீர் சக்கரம் இன்றும் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. காம்பிஸஸ் என்னும் பெர்ஸிய (ஈரானிய) அரசர் எகிப்தை ஆக்கிரமிக்க வந்த போது (525 bc) இங்கு ஒட்டகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.

கிரேக்க புலவரான ஹோமருக்கு சூடான் தெரிந்திருந்தது. அவரது நாட்டினர் சூடானுடன் வர்த்தக உறவுகளை வைத்திருந்தனர். துணிகள், ஒயின், அராபிக் பசை, வாசனைப்பொருட்கள் மற்றும் அடிமைகள் இந்த வர்த்தகப்பொருட்கள். ரோம அரசர் நீரோ இங்கு ஒரு படைப்பிரிவை அனுப்பி வைத்தார். இந்த படைப்பிரிவின் தளபதி தெற்கு சூடானில் ஒரு பெரும் அடர்ந்த பாப்பிரஸ் புல் சதுப்பு நிலத்தை தாண்ட முடியால் செய்தி அனுப்பினார். இந்த சதுப்பு நிலம் ‘சுட் ‘ (அராபிய மொழியில் சுட் என்றால் தடை என்று பொருள்) என்றழைக்கப்பட்டது. ஜஸ்டினியன் என்ற ரோம அரசரின் காலத்தில் பல சூடானிய முடியரசுகள் கிரிஸ்துவத்துக்கு மாற்றப்பட்டன. நைல் நதி தீரம் முழுவதும் கிரிஸ்துவ சர்ச்சுகளால் நிறைந்திருந்தன. இது 14ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் இங்கு ஆக்கிரமிப்பு செய்யும் வரைக்கும் நீடித்தது.

நெப்போலியன் நவீன சூடானிய வரலாற்றுக்கு முக்கியமானவர். 1797இல் பிரமிட் போர்கள், எகிப்திய மாமலுக் வமிசத்தை (எகிப்தை ஆண்ட வெள்ளையின ஆட்சியாளர்கள்) அழித்து அல்பேனிய போர்வீரரான மொஹம்மது மி என்பவரது வலிமையின் வளர்ச்சிக்கு இது வித்திட்டது.

மொஹம்மது மி தன்னுடைய மூன்றாவது மகனான இஸ்மாயீல் என்பவரை 10000 போர்வீரர்கள் கொண்ட படைக்கு தலைவராக ஆக்கி பாலைவனத்தைக் கடந்து செல்ல பணித்தார். 1821இல் வடக்கு மற்றும் மத்திய சூடான் இவரது ஆளுகைக்குக் கீழ் வந்தது. வரலாற்றில் முதன் முறையாக ‘கறுப்பர்களின் நிலம் ‘ என்ற பொருளில் வழங்கப்பட்ட சூடான் ஒரு அரசியல் அமைப்பாக உருவாகத் தொடங்கியது.

எதிர்ப்பு பாலைவனத்திலிருந்து வந்தது. டோங்க்லா இனத்து படகு கட்டுபவரின் மகனாக 1844இல் பிறந்த மொஹம்மது அஹ்மது ஒரு மதகுருவாக வளர்ந்து அபா தீவில் தங்க கிளம்பினார். இந்த தீவு கார்தோம் நகரத்திலிருந்து 150 மைல் தொலைவில் உள்ளது. இவர் 1881இல் தன்னை மெஹ்தி (இரண்டாவது பெரும் இறைதூதர்) என்று அழைத்துக்கொண்டார். மேற்கு பிரதேசத்தின் பழங்குடியினர் இவரது குரலின் பின்னே எழுந்து மதநம்பிக்கை அற்றவர்கள் மீதும், கொடுங்கோலர்கள் மீதும் போர் புரிய 1884இல் கிளம்பினார்கள். 1884இல் கார்த்தோம் தவிர மற்ற அனைத்து சூடான் பிரதேசங்களுக்கும் மெஹ்தி தலைவரானார்.

இந்த நேரத்தில் பிரிட்டன் எகிப்துக்குள் நுழைந்திருந்தது. சுடான் பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்று உணர்ந்து ஜெனரல் சார்லஸ் கோர்டன் என்பவரை கார்த்தோம் நகரை காலி செய்ய அனுப்பியது. 317 நாட்களுக்குப் பின்னர், மெஹ்தியின் டெர்விஷ் படைகள் இந்த நகரத்தின் பாதுகாப்புக்களை உடைத்து கார்த்தோம் நகரை அழித்தன.

கார்த்தோம் விழுந்து ஐந்து மாதங்களுக்குப்பின்னர், மெஹ்தி டைபஸ் காய்ச்சலில் இறந்தார். அவருக்குப்பின்னர் காலிபா அப்துல்லா பதவியேற்றார். இவர் பதவியேற்றபின்னர் தொடர்ந்து உள்நாட்டுப்போர் பற்றி எரிந்தது சூடானெங்கும். 1898 செப்டம்பரில் ஆங்கில எகிப்து படைகள் ஜெனரல் ஹெர்பர்ட் கிட்ச்னர் தலைமையில் காலிபாவின் 60000 வீரர்களோடு ஓம்துர்மான் நகருக்கு வெளியே இருந்த ஒரு பரந்த வெளியில் சந்தித்தது. (ஓம்துர்மான் நகரம் காலிபாவினால் புதிதாகக் கட்டப்பட்ட நகரம்). 10800 காலிபாவின் வீரர்கள் கொல்லப்ப்பட்டார்கள். 16000 காலிபாவின் வீரர்கள் படுகாயமுற்றார்கள். கிட்ச்னர் ஓம்துர்மான் நகருக்குள் வெற்றிவீரராக நுழைந்தார்.

1899 ஜனவரி 19இல், பிரிட்டனும் எகிப்தும் ஒரு ஒப்பந்தம் எழுதின. இதற்கு காண்டோமினியம் அக்ரீமெண்ட் என்று பெயர். இதன் படி, சூடான் இருவராலும் பொதுவாக நிர்வகிக்கப்படவேண்டும். அடுத்த 12 வருடங்களில் சூடானின் வருமானம் 17 மடங்கு அதிகரித்தது. அதன் செலவு மூன்றுமடங்காக அதிகரித்தது. அதன் வரவு செலவு நிர்வாகம் 1960வரை ஒரே மாதிரியாக நிர்வகிக்கப்பட்டது. எகிப்திய தேசியவாதம் முதலாம் உலகப்போருக்குப்பின்னர் அதிகரித்ததால், 1924இல் சூடானின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஸர் லீ ஸ்டாக் கெய்ரோ தெருவில் கொல்லப்பட்டார். இது பிரிட்டனின் எதிர்வினையாக எல்லா எகிப்தியர்களையும் சூடானிலிருந்து வெளியேற்றும் உத்தரவாக வெளிப்பட்டது.

1936இல் ஆங்கிலோ-எகிப்திய ஒப்பந்தத்தின் காரணமாக எகிப்தியர்கள் சிறுபதவிகளுக்கு சூடானில் அனுமதிக்கப்பட்டார்கள். 1936இன் ஒப்பந்தம் சூடானிய தேசியவாதிகளை பொங்கி எழச்செய்தது. எகிப்தியர்களோ மற்ற தேசத்தினரோ ஏன் தங்கள் நாட்டின் விதியை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அவர்களை இட்டுச்சென்றது. இஸ்மாயீல் அல் அஜாரி என்பவரின் கீழ் கிராஜ்வெட்ஸ் காங்கிரஸ் என்ற அமைப்பின் கீழ் தேசியவாதிகள் ஒன்றுதிரண்டனர்.

அரசியல் கட்சிகள்

1945இல் இரண்டு அரசியல் கட்சிகள் சூடானில் தொடங்கப்பட்டிருந்தன. நேஷனல் யூனியனிஸ்ட் பார்ட்டி என்ற கட்சி அல்-அஜாரி அவர்களால் தலைமை வகிக்கப்பட்டு, சூடானும் எகிப்தும் ஒரே நாடாக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. இது சூடானில் இருந்த வலிமை பொருந்திய இஸ்லாமிய மதத்தலைவரான ஸாயித் ஸர் அலி அல் மிர்கானி அவர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. உம்மா பார்ட்டி என்ற கட்சி ஸாயித் ஸர் அப்துர் ரஹ்மான் அல் மஹ்தி என்பவரின் தலைமையில் சூடானுக்கு எந்த நிபந்தனையுமில்லாத சுதந்திரமும், எகிப்துடன் எந்த உறவும் வேண்டாம் என்ற கோரிக்கையும் கொண்டு ஆதரவு திரட்டியது.

காண்டோமினியத்தின் முடிவு

பெப்ரவரி 12, 1953இல் பிரிட்டனும் எகிப்தும், காண்டோமினியம் ஒப்பந்தத்தை முடிவுக்குக்கொண்டுவர இன்னொரு ஒப்பந்தம் எழுதின. சூடானுக்கு இன்னும் மூன்றுவருடத்தில் சுயாட்சி வழங்கவும் ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தம் சூடானுக்கு ஒரு பாராளுமன்றமும், மந்திரி சபையும் பிரதிநிதிகள் சபையும் அமைக்கவும், இதனை பன்னாட்டு கமிஷன் ஒன்று மேற்பார்வை பார்க்கவும் வழி வகுத்தது.

தேர்தல்கள் நவம்பர் டிஸம்பர் 1953இல் நடந்தது. இது நேஷனல் யூனியனிஸ்ட் பார்ட்டிக்கு வெற்றியாக அமைந்தது. இஸ்மாயில் அல் அய்ஹாரி சூடானின் முதல் பிரதமராக பதவியேற்றார். உடனே சூடானின் பிரிட்டஷ் மற்றும் எகிப்திய அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு சூடானிய அதிகாரிகள் நியமிக்கபடுவது விரைவாக்கப்பட்டது.

சுதந்திரம்

டிஸம்பர் 19, 1955இல் பாராளுமன்றம் சூடானை ‘முழு சுதந்திரம் மற்றும் முழு சுயாட்சி கொண்ட நாடாக ‘ அறிவித்தது. பிரிட்டிஷ் மற்றும் எகிப்திய போர்வீரர்கள் ஜனவரி 1 1956இல் வெளியேரினர். அதே நாள், கவர்னர் ஜெனரலின் அதிகாரங்களை கொண்ட ஐந்து ஆட்கள் கொண்ட கவுன்ஸில் ஆஃப் ஸ்டேட் அறிவிக்கப்பட்டது. புது அரசியலமைப்புச் சட்டம் ஒப்புக்கொள்ளும்வரை இந்த குழு ஆட்சி செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

இரண்டு வருடங்களுக்குப்பின்னர். நவம்பர் 17 1958இல் ஜெனரல் இப்ராஹீம் அப்பாவுத் அவர்கள் அல்-அஜாரி அவர்களது அரசாங்கத்தை ரத்தமின்றி கவிழ்த்தார். ஜெனரல் இப்ராஹீம் அப்பாவுத் அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும். 13 ராணுவ அதிகாரிகள் கொண்ட அமைப்பு அரசாங்கத்தை நடத்தும் என்றும் ஜனநாயகம் உடனடியாக நிறுத்தப்படுகிறது என்றும் அறிவித்தார். அவர் சூடானை ‘நேர்மை மற்றும் ஒருமை ‘ ‘honesty and integrity ‘ மூலம் ஆட்சி செய்யப்போவதாகவும் அறிவித்தார்.

தெற்கில் பிரச்னை

1966இல் சாதிக் அல்-மெஹ்தி என்னும் 30 வயது நிரம்பிய உம்மா கட்சியின் தலைவர் பிரதமராக பதவியேற்றார். உள்நாட்டில் தெற்கு பிரதேச சூடான் தொடர்ந்து கவலைக்கிடமானதாக இருந்தது. தெற்கு சூடானில் இருந்த போராளிகள் தொடர்ந்து பிரச்னைகளை ஏற்படுத்தி வந்தார்கள். தெற்கு பிரதேசத்துக்கு அடிக்கடி பிரதமர்கள் சென்றாலும் அது தீர்வதாக இல்லை.

தெற்கு பிராந்திய அமைச்சகம், தெற்கு பிராந்தியங்களில் சூடான் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை நிலவவும், சாதாரண நிலைக்கு பிராந்தியத்தைக் கொண்டு வரவும், முயற்சி செய்துவந்தது, 1970இல் பெரும் படைகளை தெற்கு பிராந்திய போராளிகளை அடக்க அனுப்பி வைத்தது

மார்ச் 1972இல் இந்தப்போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்த்து. கர்னல் நுமெய்ரி தெற்கு பிராந்திய அன்யா-ந்யா போராளிகளின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் லாகு அவர்களுடன் அமைதி ஒப்பந்தம் எழுதினார்.

உள்நாட்டு கலவரம்

1976 சூலையில், ஜனாதிபதி நுமெய்ரி தன்னுடைய 8 வருட ஆட்சிக்கு பெரும் சவாலை எதிர்கொண்டு உயிர்பிழைத்தார். முன்னால் நிதிமந்திரியாக இருந்த ஹ்ஊசென் அல்ஹிந்தி அவர்களும், (வெளிநாட்டு ஓடிவிட்ட) முன்னாள் பிரதமரான சாதிக் அல் மெஹ்தி சுமார் 2000 ஆயுதம் ஏந்திய போராளிகளைக் கொண்டு கார்த்தாம் ஓம்துர்மான் ஆகிய நகரங்களில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த முயன்றார்கள். இந்த போராளிகள் ஏராளமான சேதம் விளைத்தார்கள். சூடானின் விண்ராணுவம் (ஏர்போர்ஸ்) முழுவதுமாக அழிந்தது.

பழிவாங்குவதும் உடனடியானதாகவும், தீவிரமானதாகவும் இருந்தது,. 98பேர் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் பங்கெடுத்துக்கொண்டதற்காக கொல்லப்பட்டார்கள் பல நூற்றுக்கணக்கானவர்கள் சிறைப்படுத்தப்பட்டார்கள். சூலை ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி சூடானை தனது இரண்டு அருகாமை நாடுகளுக்கு அருகே கொண்டுவந்தது. எகிப்து நாட்டுடன் உடனடியாக ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் எழுதப்பட்டது. சவூதி அரேபியா மற்றும் எகிப்து இரண்டு நாடுகளுடனும் இன்னொரு முக்கோண பாதுகாப்பு ஒப்பந்தமும் எழுதப்பட்டது.

தொழிற்சாலை துறை கலவரங்கள் (1981)

1981இல் 43000 ரயில்வே மற்றும் ஆற்று போக்குவரத்து தொழிலாளர்கள் அதிக சம்பளம் கோரி ஒரு பெரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். சூடான் அரசாங்கம் இதனை வெளிநாட்டிலிருந்து தூண்டப்பட்ட ஒரு சதி என்று இதனை கண்டனம் செய்தது. சூன் 16ஆம் தேதி இந்த வேலை நிறுத்தத்தில் முக்கியமான தலைவர்களை கைது செய்யும் படி ஜனாதிபதி நுமெய்ரி தனது ராணுவத்துக்குக் கட்டளையிட்டார். சூடான் சோஷலிஸ்ட் யூனியன் என்ற அரசாங்க அமைப்புக்குக் கீழ் அனைத்து தொழிலாளர்களும் இருக்கும்படிக்கும் இனி வேலை நிறுத்தமே செய்யக்கூடாது எனவும் கட்டளைகளைப் பிறப்பித்தார்.

1971இலிருந்து சூடான் தனது மிக நெருங்கிய சோவியத் யூனியன் நட்புறவிலிருந்து விலகிக்கொண்டே அரபு மற்றும் மேற்கு நாடுகளுக்கு அருகாமையில் சென்று கொண்டிருந்தது. இந்த புதிய திசை உள்நாட்டு பொருளாதார மாற்றங்களையும் பாதித்தது. வெளிநாட்டினர் சொந்தமான வியாபாரங்கள் மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகளை தேசியமயமாக்கும் தேசியக்கொள்கையிலிருந்து 1973இல் விலகி இப்படி கைப்பற்றப்பட்ட தொழில்கள் அதன் முந்நாள் சொந்தக்காரர்களுக்கே அளிக்கப்பட்டன.

இஸ்லாமிய சட்டம் அறிமுகம்

ஜாபர் மொஹம்மது அல் நுமேய்ரி அவர்கள் செப்டம்பர் 8 1983இல் இஸ்லாமிய சட்டத்தோடு உயிர்ப்பு ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் ‘organically and spiritually ‘ சூடான் நாட்டு சட்டங்கள் அனைத்து இணைந்திருக்க வேண்டும் என்று அறிவித்தார். திருட்டு, திருமணத்துக்கு வெளியே உறவு, கொலை மற்றும் இதர குற்றங்களுக்கு குரானின் படியே நீதி வழங்கப்படும் எனவும் அறிவித்தார். மதுவும் சூதாட்டமும் முழுவதுமாக தடை செய்யப்பட்டது. முஸ்லீம் அல்லாதவர்கள் கொலை மற்றும் திருட்டு தவிர மற்ற குற்றங்களுக்கான குரானின் தண்டனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டார்கள்.

தலைநகரம் கார்த்தோமில் செப்டம்பர் 23ஆம் தேதி ஜனாதிபதி நுமெய்ரி அவர்களால் இந்த புதிய சட்டம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதில் மது பாட்டில்கள் நைல் ஆற்றில் கொட்டப்பட்டன. 1983 சூன் மாதம் ஜனாதிபதி நுமெய்ரி அவர்களால் நீதித்துறை குரானின் படி சீர்திருத்தம் செய்யப்பட்டதை அறிவிக்கப்பட்டது.

வேலை நிறுத்தங்கள்

1983 ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று கார்த்தோம் நகர பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. ஆகஸ்ட் முழுவது தொடர்ந்து மின்சாரத்தடை இருந்துவந்ததை கண்டித்து,ம் மற்ற சமூகக்காரணங்களுக்காகவும் இந்த மாணவர்கள் போராட்டம் நடத்தப்பட்டது. மார்ச் 1 1984இல் மருத்துவர்கள் தங்களுக்கு மிகவும் குறைவாக சம்பளம் கிடைப்பதை எதிர்த்தும், மருத்துவத்துறை சீரழிந்து கொண்டிருப்பதை எதிர்த்தும் வேலை நிறுத்தம் செய்தார்கள். மார்ச் 8ஆம் தேதி நாட்டின் அனைத்து 2000 மருத்துவர்களும் மார்ச் 28ஆம் தேதியிலிருந்து தாங்கள் ராஜினாமா செய்வதை எழுதி ராஜினாமா கடிதங்களை கொடுத்தார்கள். அரசாங்கம் இந்த ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்ள மறுத்து, மருத்துவர் சங்கத்தை தடை செய்தது. இந்த தடை பிறகு நீக்கப்பட்டது.

மாறும் காலங்கள்

ஏராளமான அகதிகள் 1982இல் போர்ட் சூடான் நகருக்கு வந்தபோது பிரச்னைகள் தீவிரத்தை அடைந்தன. இது அங்கு தெருக்கலவரத்தை உண்டு செய்தது. ஜனாதிபதி நுமெய்ரியின் அரசாங்த்தினர்களே இந்த அகதிகள் உள்ளே வருவதை தடுக்க நாட்டின் எல்லைகளை மூடவேண்டும் என்று கோரினார்கள். நுமெய்ரி முழுக்க மறுத்துவிட்டார். பழங்காலத்திய அரபு வழக்கத்தை கூறி அரபிகள் விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்றவர்கள். இந்த அகதிகள் சூடானின் விருந்தினர்கள் என்று கூறினார்.

பெப்ரவரி 1985இல் இந்த நாட்டில் சுமார் 10 லட்சம் அகதிகள் இருந்தார்கல். இவர்களது எண்ணிக்கை 20லட்சமாக உயரவும் ஆரம்பித்தது. 1986இல் இந்த சூழ்நிலை மோசமடைந்து வருகிறது என்று ஐக்கிய நாடுகள் அகதி மேம்பாட்டு நிறுவனர் கூறினார்.

1985 மார்ச் மாதம், சுமார் 500 மில்லியன் மெட்ரிக் டன் உணவுப்பொருட்கள் தெற்கு சூடான் பிரதேசத்துக்கு, ஸ்வீடன், ஐக்கிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டன. 20000 டெண்ட்கள், 83000 போர்வைகள், 19000 தண்ணீர் வங்கிகள், 7 பெரும் தண்ணீர் வங்கிகள், 50000 லிட்டர் சேமிக்கும் இன்னும் 6 தண்ணீர் வங்கிகள் 61000 ஆரல் டாஹைட்ரேஷன் உப்புக்கள், மருத்துவப்பொருட்கள் இன்னும் இதர பொருட்களும் இங்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இவற்றின் காரணமாக இந்த நிவாரணத்துக்கு இதுவரை சுமார் 14526000 டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இவரது அகதிப் பிரச்னைகளிலேயே மிகவும் சிக்கலான அகதிப்பிரச்னை எத்தியோப்பிய யூதர்கள் பிரச்னையே. இவர்கள் ஃபலாஷா என்று அழைக்கப்படுகிறார்கள். (அம்ஹரிய மொழியில் ஃபலாஷா என்றால் வெளியூர்க்காரர்கள் எனப் பொருள்) இவர்கள் எத்தியோப்பியாவில் தங்களுடைய பழங்காலத்திய யூதப் பழக்கங்களை விட்டுவிடாமல் இருந்த யூத மதத்தினர். இவர்களை இஸ்ரேல் நாட்டுக்கு விமானம் மூலம் இஸ்ரேல் அழைத்துக்கொண்டது. இந்த செயலுக்கு ஆப்பரேஷன் மோஸஸ் என்ற பெயர் குறிப்பிடப்பட்டது. இந்த விஷயம் வெளியே தெரிந்து நுமெய்ரிக்கு பிரச்னை வந்தது. இவ்வாறு இஸ்ரேல் நாட்டுக்கு உதவியது சூடான் அரபு லீக் அமைப்பில் இருக்கும் போதே நடந்ததால், பிரச்னையாகி இந்த செயல் திடுமென்று நிறுத்தப்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஃபலாஷாக்கள் சூடானிலேயே தங்கும்படியும் இவர்களது உறவினர்கள் இஸ்ரேலிலும் இருக்கும்படியாக ஆயிற்று.

நுமெய்ரி விரைவிலேயே பல நாடுகளால் மனிதாபிமான முறையில் ஃபலாஷாக்களுக்கு உதவும்படி கோரப்பட்டார். இந்த மீதமிருக்கும் பலாஷாக்களை கண்டறியும் இவர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும்படியும் கோரியும், இந்த பலாஷாக்கள் அங்கிருக்கும் மற்ற சூடானிய அகதிகளுடன் கலந்திவிட்டபடியால் இவர்களை பிரித்தரிவது கடினமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

அரபு உலகத்தின் ரொட்டிக்கூடை என்று அழைக்கப்பட்ட சூடான், சோர்கம் தானியத்தை ஏற்றுமதி செய்வதிலிருந்து அதனை இறக்குமதி செய்யும் நாடாக மாறியது. மோசமான பருவநிலை மற்றும் நஞ்சை நிலங்களில் மிகுதியான சாகுபடி ஆகியவை நிலத்தை அழித்துவிட்டமையால், உணவு உற்பத்தி 1984இல் 13 மில்லியன் டன்களாக குறைந்துவிட்டது. இதன் விளைவு நாடெங்கும் உணவுத்தட்டுப்பாடு.

தெற்கு சூடானில் இரண்டு வருடமாக தெற்கு சூடான் மக்கள் விடுதலை படையினரால் நடத்தப்பட்ட கொரில்லா போர் முழு தெற்கு சூடானிலும் பரவியது. இந்த போராளிகள் கிரிஸ்துவ மதத்தினர். இவர்கள் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் வாழ விருப்பமில்லாமல் நுமெய்ரியை எதிர்த்து 1983இல் போர் புரிய ஆரம்பித்தனர்.

இவர்களது வெற்றி சூடானியர் அல்லாத வேலைக்காரர்களை சிறை பிடிப்பதும், செவ்ரான் ஆயில் கம்பெனியும் ஜோங்க்லி கால்வாய் நிறுவனமும் இங்கு வேலை செய்வதை தடுப்பதும் ஆகும்.

வாஷிங்டன் இந்த பிரச்னையிலிருந்து விலகி இருப்பதாக இருக்கிறது. எகிப்து நாட்டின் தெற்கு எல்லையை காப்பதற்காக அது சூடானை முக்கியமான பிரதேசமாக கருதுகிறது. மேலும் மத்தியக்கிழக்கு எண்ணெய் வயல்களை கைப்பற்ற நடக்கக்கூடிய போரில் சூடானிலிருந்து தாக்குதலை தொடங்கலாம் என்றும் கருதிவந்துள்ளது.

1985இல் நுமெய்ரி அரசின் மீதான குற்றச்சாட்டுகளும் அதிருப்தியும் அதிகமாக அவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது லெப்டினண்ட் ஜெனரல் ஸ்வார் அல் டஹாப் அவர்கள் அரசைக் கைப்பற்றினார். சிலகாலத்துக்குப் பிறகு இவர் தனது அரசை கலைத்து மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசுக்கு மாற்றினார். சாதிக் அல் மஹ்தி மீண்டும் பிரதமரானார். 1988இலும் 1989இல் மீண்டும் அரசின் மீது அதிருப்தி காரணமாக ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தது. சூன் 30 1989இல் பிரிகேடியர் ஓமார் ஹாசன் அஹ்மது எல் பசீர் 15 ராணுவ அதிகாரிகள் கொண்ட தேசமீட்பு புரட்சி கட்டளை கவுன்ஸில் (Revolutionary Command Council for National Salvation) உருவாக்கி அதன் தலைவரானார். அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் ஆகியவை நிறுத்தப்பட்டு எல்லா அரசியல் அமைப்புகளும் கலைக்கப்பட்டன. மீண்டும் அக்டோபர் 30இல் பழைய கவுன்ஸிலை கலைத்துவிட்டு புதிய அரசாங்கத்தை எல் பசீர் ஏற்படுத்தினார். 1996 டிஸம்பரில் பழைய கவுன்ஸில் கலைக்கப்பட்டு புதிய கவுன்ஸில் ஏற்படுத்தப்பட்டது.

www.sudan.net/society/history.html

**

Series Navigation

செய்தி

செய்தி