திருவள்ளுவரின் பெண்ணுரிமை

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

தந்தை பெரியார்


[மார்ச் 8 – உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் உரிமைகள் பற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவது மகிழ்ச்சி தருகிறது. இக் கட்டுரையில் திருவள்ளுவரின் பெண்ணுரிமை பற்றிய பெரியாரின் கருத்துகள் இடம் பெறுகின்றன. ‘பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், 50 ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600007 ‘ வெளியிட்டுள்ள ‘பெரியார் களஞ்சியம் ‘ நூல் வரிசையின் ஐந்தாம் தொகுதியில் (குறைந்த அளவு நன்கொடை ரூ.50) வெளிவந்துள்ள கட்டுரை இது. – ஆசாரகீனன்]

தற்காலம் நமது தமிழ்நாட்டில் வழங்கப்பெறும் நீதி நூல்களிலெல்லாம் திருவள்ளூவனால் இயற்றப்பட்டது என்று சொல்லப்படும் குறள் என்னும் நீதி நூலே மிகவும் மேலானது என்று சொல்லப்படுகின்றதானாலும் அதையும் பார்ப்பனர்களோ சைவர்களோ வைணவர்களோ மற்றும் எந்தப் பிரிவினர்களோ அடியோடு காரியத்தில் ஒப்புக் கொள்ளுவதென்றால் முடியாத காரியமாகவே இருக்கும்.

என்றாலும் திருவள்ளூவரைப் பற்றி ஏதாவது குற்றம் சொல்லிவிட்டால் பண்டிதர்களும் பெரும்பாலும் சைவர்களும் சண்டைக்கு மாத்திரம் வந்து விடுவார்கள். பார்ப்பனர்களென்றாலோ திருவள்ளூவரின் பெயரைச் சொன்னாலே சண்டைக்கு வந்து விடுவார்கள்.

இவ்வளவு இருந்தாலும், திருவள்ளுவர் யார் ? என்ன ஜாதி ? என்ன மதம் ? அவரது கொள்கை என்ன என்பதில் இன்னமும் எல்லோருக்கும் சந்தேகமாகவே இருக்கிறது. சைவர்கள் திருவள்ளுவரைத் தம் சமயத் தலைவர் என்று பாத்தியம் கொண்டாடிக் கொள்கிறார்கள். வைணவர்களில் சிலர் அவரை வைணவர் என்று கொண்டாடுகின்றனர். சமணர்கள் அவரைத் தம் சமயத்தவர் என்கின்றார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பார்களில் ஒரு சாராராகிய பறையர்கள் என்று சொல்லப்படுபவர்கள் திருவள்ளுவரைத் தம் இனத்தவர் என்று சுதந்திரம் பாராட்டுகிறார்கள். அவரைப் பற்றிக் கிடைத்திருக்கும் புராணமோ அல்லது அவரது சரித்திரக் கதையோ மிகவும் அசம்பாவிதமும் ஆபாசமானதுமாய்க் காணப்படுகின்றது. இவ்வளவு புறச்சான்றுகளையும் விட்டு விட்டு அகச்சான்று என்பதாகிய திருவள்ளுவர் குறளைப் பார்த்தாலோ, அதுவும் மயக்கத்திற்கிடமானதாக இருக்கின்றதே ஒழிய ஒரு தெளிவுக்கு ஆதாரமானதாய்க் காணப்பட வில்லை. அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும் மறுபிறப்பு, சுவர்கம், நரகம், மேல்லோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரியமத சம்பிரதாயங்களையும் மூடநம்பிக்கையையும் கொண்ட விஷயங்களையும் பரக்கக் காணலாம்.

எனவே, இவற்றைக் கொண்டு திருவள்ளுவர் யாராயிருக்கலாம் என்று பார்ப்போமானால், அவர் தற்காலப் பார்ப்பனர்களை மாத்திரம் குற்றம் சொல்லிக்கொண்டு அவர்களால் கற்பிக்கப்பட்ட தெய்வங்கள், புராணங்கள் முதலியவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு, பார்ப்பனீயம் என்னும் பார்ப்பனக் கொள்கைகளை ஒரு சிறிதும் தளர்த்த மனமில்லாதவர்களாய் இருந்து கொண்டு தங்களைப் பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்றும், தாங்கள் பெரிய கல்வி கேள்வி ஆராய்ச்சி முதலியவைகளில் தேர்ச்சி பெற்ற வல்லவர்கள் என்றும் சொல்லிக்கொண்டு தங்களை வெளியில் சமரச சன்மார்க்கச் சமயத்தவர் என்றும், உள்ளூக்குள் சைவ சமயம்தான் தன்னுடைய மதம் என்றும் மற்றும் இதுபோல் உள் ஒன்றும் புறமொன்றும் செய்கை ஒன்றுமாய் இருந்துகொண்டு தங்களை ஒரு பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளூம் இப்போதைய சீர்திருத்தக்காரரைப் போல்தான் காணப்படுகிறார்.

இவை எப்படி இருந்தாலும் திருவள்ளுவரின் பெண்ணுரிமைத் தன்மையைப் பற்றிக் கவனித்தால் பெண்களுக்கு அவர் கூறிய குறளிலுள்ள நீதிகள் ஒருபுறம் இருக்க, திருவள்ளுவன் மனைவியாகிய வாசுகியம்மையாரின் சரித்திரத்தைக் கேட்போர் மனம் பதறாமலிருக்க முடியாது. அதாவது வாசுகி அம்மையாரைத் திருவள்ளுவர் தம் மனைவியாக ஏற்றுக்கொள்ளுமுன் ஆற்று மணலைக் கொடுத்து சாதம் சமைக்கச் சொன்னாராம். அதாவது வாசுகி கற்புள்ளவரா அல்லவா என்று பரிட்சிக்க. அவ்வம்மையார் அந்தப்படியே மணலைச் சாதமாகச் சமைத்து கொடுத்து திருவள்ளுவருக்குத் தமது கற்பைக் காட்டினாராம்.

அம்மையார் கிணற்றில் நீர் இறைக்கும்போது நாயனார் அம்மையாரைக் கூப்பிட, அம்மையார் கயிற்றை அப்படியே விட்டுவிட்டு வந்தபோது கயிறு கிணற்றில் விழாமல் அப்படியே தொங்கிக் கொண்டிருந்ததாம்.

திருவள்ளுவர் ஒரு நாள் பகலில் நூல் நூற்கும் போது நூற்கதிர் கீழே விழ, உடனே அம்மையாரைக் கூப்பிட்டு, ‘விளக்கேற்றிக் கொண்டுவா, நூற்கதிரைத் தேடவேண்டும் ‘ என்று சொல்ல அம்மையார் ‘பகல் நேரத்தில் விளக்கு எதற்கு ‘ என்று கேட்காமல் – கேட்டால் பங்கம் வந்து விடுமெனக் கருதி உடனே விளக்குப் பற்ற வைத்துக்கொண்டு வந்து கொடுத்தார்களாம்.

ஒரு நாள் நாயனார் பழைய சாதம் சாப்பிடும்போது ‘சாதம் சுடுகின்றது ‘ என்று சொன்னவுடன் அம்மையார் ‘பழைய சாதம் சுடுமா ‘ என்று கூடக் கேட்காமல் – கேட்டால் பதிவிரத தன்மை கெட்டுப்போகுமோ என்று கருதி உடனே விசிறி எடுத்துக்கொண்டு வந்து வீசி ஆற்றினாராம்.

திருவள்ளுவர் அம்மையாரைத் தினமும் ஒரு டம்ளரில் தண்ணீரும் ஒரு ஊசியும் தனியாகக் கொண்டு வந்து வைத்துவிட்டு, சாதம் பரிமாறும்படி கட்டளை யிட்டிருந்தாராம். அவ்வம்மையாரும் ‘இது எதற்காக ‘ என்று கேட்காமல், கேட்டால் பதிவிரதா தன்மை கெட்டுப்போகுமே என்று கருதிக் கொண்டு தினமும் அந்தப் படியே செய்து வந்தாராம். ஆனால் அம்மையாரின் நிர்வாண காலத்தில் அம்மையார் உயிர் போகாமல் ஊசலாடிக் கொண்டிருக்க, அது ஏன் என்று திருவள்ளுவர் அம்மையாரைக் கேட்கும்போது, அம்மையார் பயந்து கொண்டு ‘தினமும் பாத்திரத்தில் தண்ணீரும் ஊசியும் வைக்கச் சொன்னீர்களே அது எதற்காக என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை முடிவு பெறாமல் இருப்பதால் உயிர் போகாமல் ஊசலாடி மரணாவஸ்தைப்படுகிறேன் ‘ என்று சொன்னாராம்.

பிறகு திருவள்ளுவர் தயவுசெய்து பெரிய மனது வைத்து அதன் காரணத்தை, அதாவது சாப்பிடும் போது அன்னம் கீழே விழுந்தால் அந்த ஊசியில் குத்தி எடுத்து அந்த டம்ளர் தண்ணீரில் கழுவுவதற்கு என்று சொன்னாராம். அதன் பிறகுதான் அம்மையாரின் உயிர் நீங்கிற்றாம். இது திருவள்ளுவர் புராணத்தில் உள்ள அவரது மனைவியின் சரித்திரம். எனவே இது இடைச் செருகலாகவோ, கற்பனைக் கதையாகவோ இல்லாமல் உண்மைக் கதையாயிருந்தால் திருவள்ளுவரின் பெண்ணுரிமை என்ன என்பதையும் கற்பனையாக இருந்தால் கற்பனையல்லாத புராணம் எது ? அதற்கு என்ன பரிட்சை ? என்பதையும் அறிஞர்கள் வெளிப்படுத்துவார்களாக.

– ஜனவரி 20, 1929 ‘குடி-அரசு ‘ இதழில் தந்தை பெரியார் அவர்கள், சித்திரபுத்திரன் என்னும் புனை பெயரில் எழுதிய கட்டுரை.

(தட்டச்சு உதவி: ஆசாரகீனன்)

aacharakeen@yahoo.com

Series Navigation

தந்தை பெரியார்

தந்தை பெரியார்