பாஜக ஒளிர்கிறதா ?

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

சின்னக் கருப்பன்


‘இந்தியா ஒளிர்கிறது ‘ பிரச்சாரத்தின் அடிப்படை பாஜக தேர்தல் பிரச்சாரம் என்பது வெளிப்படை. ஆனால், பாஜகவின் வெற்றி நிச்சயமானதா ?

தேர்தல் ஆராய்ச்சியாளர்களும், இந்தியா டுடேவும் இன்ன இதர பிற பத்திரிக்கைகளும், ‘இந்தியா ஒளிர்கிறது ‘ பிரச்சாரத்தில் மயங்கி விட்டனர் போலத்தான் காண்கிறது. ஆகவே, ஏறத்தாழ பாஜகதான் ஆட்சியைப் பிடிக்கும், சொல்லப்போனால் இன்னும் 300 தொகுதிகளுக்கு மேல் பிடிக்கும் என்றும், அதன் கூட்டணி கட்சிகளும் சேர்த்து நான்கில் மூன்று பங்கு தொகுதிகளைப் பிடித்துவிடுவார்கள் என்றும் ஒரு பிரமையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.

நான் அப்படி நினைக்கவில்லை.

முதலாவது சென்ற மூன்று தேர்தல்களை எடுத்துப்பார்த்தால், பாஜக 200 தொகுதிகளுக்கு மேல் போகமுடியவில்லை என்பது வெளிப்படை. 13 நாள் ஆட்சிக்குப் பிறகு பாஜக தீவிரமாக ஒரு அகில இந்திய கூட்டணியை ஏற்படுத்த முயன்றது. அது இரண்டு தேர்தல்களுக்குப் பின்னர் ஒரு ஐந்து ஆண்டுகால தேர்தல் இல்லாத ஒரு இடைவெளியை உருவாக்கித் தந்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு சற்று முன்னரே பாஜக மீண்டும் தேர்தலைச் சந்திக்க முடிவெடுத்திருக்கிறது.

இந்தத் தேர்தலில் பாஜக முன்பு இருந்த 200 தொகுதிகளை தக்கவைத்துக்கொள்ளுமா என்பதே கேள்விக்குறி என்பதுதான் எனது கருத்து.

பெரிய மாநிலங்களில் பாஜக வலிமையற்று இருக்கும் மாநிலங்கள் அதிகம்.

இந்தப்போட்டியில் வலிமையுடன் இருப்பது காங்கிரஸ் கம்யூனிஸ்டு கட்சிக்கூட்டணி தானே தவிர பாஜகவின் கூட்டணி அல்ல.

எந்த பாரத யாத்திரை சென்றாலும் மாறிவிடக்கூடிய நடப்பு நிலைமை இந்தியாவில் இல்லை.

ஒவ்வொரு பகுதியாக வருவோம். மேற்கு மாநிலங்களான, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில், குஜராத் (26) ராஜஸ்தான் (25) கோவா (2) வின் மொத்தமான 53 இடங்களில் மூன்றில் இரண்டு பங்கை பாஜக கைப்பற்றலாம். அதாவது சுமார் 35 இடங்கள். மஹாராஷ்டிரா (48) மற்றும் பஞ்சாபில் (13) வலிமையுடன் இருப்பது காங்கிரஸ்தான். அதுதான் அந்த மாநிலங்களில் ஆட்சியிலும் இருக்கிறது. பவாரின் தேசிய காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில்தான் இருக்கிறது. இங்கு மூன்றில் இரண்டு பங்கை காங்கிரஸ் கைப்பற்றினால், காங்கிரஸ் தொகுதிகள் எண்ணிக்கை 40 ஆகும். ஆகவே மேற்கில் பாஜக 40லிருந்து 45 தொகுதிகள் பெறலாம். 114 தொகுதிகளில் மீதமிருப்பவை அனைத்தும் காங்கிரஸ் கூட்டணிக்கே. அதாவது 69இலிருந்து 74 வரை.

அடுத்து தெற்கு மாநிலங்கள். இங்கு ஆந்திரா, தமிழ்நாடு கேரளாவில் பாஜகவின் சொந்த பலத்தின் மூலம் தொகுதிகள் பெறுவது என்பது கனவுதான். இங்கு தொகுதி உடன் பாட்டின் மூலம் தமிழ்நாட்டில் 2 தொகுதிகள், ஆந்திராவில் 5 தொகுதிகள் பெறலாம். கேரளாவில் இருக்கும் 20 தொகுதிகளும் காங்கிரஸ் கூட்டணிக்குத்தான். கம்யூனிஸ்டு கட்சிகளும், முஸ்லீம் லீகும் நிச்சயம் மத்தியில் காங்கிரஸ் கட்சியையே ஆதரிக்கும். கர்னாடகாவில் பாஜகவின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் அல்லது தக்கவைக்கப்படலாம். இருப்பினும் 28 தொகுதிகளில் 20 தொகுதிகளை கைப்பற்றினால் ஆச்சரியமே. ஆகவே தெற்கு மாநிலங்களில், பாஜகவின் தொகுதி எண்ணிக்கை 27 ஏ அதிக பட்ச எண்ணிக்கை. மொத்த எண்ணிக்கை 129. தமிழ்நாட்டில் அதிமுகவின் தொகுதிகள் அதிகபட்சம் 20. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் அதிகபட்ச எண்ணிக்கை 30. ஆக பாஜக கூட்டணியின் அதிகபட்ச எண்ணிக்கை 77. மீதமிருக்கும் அனைத்தும் காங்கிரஸ் கூட்டணிக்கே. அது குறைந்த பட்சம் 52.

வடக்கில் உத்தரபிரதேசம், பிகார் டெல்லி, காஷ்மீர், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்களில் மிகவும் வலிமையற்று பாஜக விளங்குகிறது. ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் ஹரியானா ஹிமாசல் பிரதேஷ் மாநிலங்களில் அது பெரும்பான்மை இடங்களை கைப்பற்றலாம். வடக்கில் இருக்கும் மொத்த தொகுதி எண்ணிக்கையான 206இல் பிகார் ஜார்க்கண்ட் பகுதியில் சுமார் 22 இடங்களையும், மத்தியபிரதேசத்தில் 30 இடங்களையும், ஹரியானாவில் 5 இடங்களையும், டெல்லியில் 2 இடங்களையும், ஹிமாசல் பிரதேசத்தில் 3 இடங்களையும் பாஜக கைப்பற்ற அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது. உத்தரபிரதேசம் உத்தராஞ்சலில் இருக்கும் 85 இடங்களில் நான்கு பிரிவாகப் பிரிய நேர்ந்தால், பாஜகவுக்கு அதிகபட்சம் 25 இடங்களே கிடைக்கும். மீதமிருக்கும் இடங்களில் பாஜக எதிர்ப்பு உணர்வு கொண்ட பிஎஸ்பி, எஸ்பி, காங்கிரஸ் கட்சிகளுக்கே சேரும். பிஎஸ்பி மற்றும் எஸ்பி இரண்டும் வெளியேயிருந்து காங்கிரஸ் ஆட்சியை ஆதரிக்க முடிவு செய்தால், அவற்றையும் காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்து கணக்கிடலாம்.

ஆகவே பாஜகவின் அதிகபட்ச எண்ணிக்கை 87ஆகத்தான் இருக்கும். (மேற்கண்ட கணக்கில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான சமதா கட்சி போன்றவற்றையும் இணைத்துள்ளேன்) மீதமிருக்கும் அனைத்து இடங்களும் காங்கிரஸ் ஆதரவுதான். அதாவது சுமார் 120.

இந்தியாவின் கிழக்குப்பகுதியில் இருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வேரூன்றவில்லை. மேற்குவங்காளம் (42), வடகிழக்கு (9), யூனியன் பிரதேசங்கள் (6), திரிபுரா (2) ஆகியவற்றில் பாஜகவின் எண்ணிக்கை ஒற்றைப்படையில்தான் இருக்கும். ஒரிஸ்ஸா (21)விலும் அஸ்ஸாம் (14)இலும் பாஜக குறிப்பிடத்தகுந்த தொகுதிகளைப் பெறலாம். மொத்த கிழக்கு மாநில தொகுதிகளான 94இல் பாஜக பெறுவது 13ஐத் தாண்டாது. கூட்டணிக் கட்சிகளான திரினாமுல், பிசு ஜனதாதளம் ஆகியவை சேர்த்து 25ஐத் தொடலாம். மீதமிருக்கும் அனைத்தும் காங்கிரஸ் கணக்கில்தான் வரும். அதாவது சுமார் 70 தொகுதிகள்.

பாஜக கூட்டணி இந்த முறை 45+ 77+ 87+ 25 = 234ஐத் தாண்டினால் ஆச்சரியமே. சென்ற தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடையே நடந்திருக்கும் மாநிலத் தேர்தல்கள் கணக்கை மாற்றிவிட்டன, முக்கியமாக தேர்தல் ரீதியில் முக்கியமான உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், பிகார், ராஜஸ்தான், மஹாராஷ்டிரம் ஆகியவை பாஜகவிடமிருந்து நழுவிவிட்டன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதனை விட முக்கியம் இந்த பிரதேசங்களில், திமுக அதிமுக போன்ற பிராந்திய கட்சிகள் வலிமையுடன் இருக்கின்றன. பிகாரில் லல்லுபிரசாத் யாதவ், உத்தரபிரதேசத்தில் மாயாவதி, முலயாம் சிங் யாதவ், மஹாராஷ்டிரத்தில் சரத்பவார் போன்றவர்கள் காங்கிரஸ் பாஜக என்ற இரு கட்சிகளுக்குமே இடம் கொடாமல் தனி சாம்ராஜ்யம் அமைக்க விரும்பினாலும், இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

மேலும், பாஜக வைத்திருக்கும் கூட்டணிகள் அதனை வளரவிடாமல் அடிக்கின்றன என்பதனையும் கவனிக்க வேண்டும். பிசு ஜனதாதளம் ஒரிஸ்ஸாவிலும், தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்திலும், சிவசேனை மஹாராஷ்டிரத்திலும், அகாலிதளம் பஞ்சாபிலும் பாஜக கட்டுமீறி வளர்ந்துவிடக்கூடாது என்பதில் அக்கறையுடன் இருக்கின்றன. அதனால் கூட்டணி பேரங்களின் போது, பாஜக குறைவான தொகுதிகளுடனேயே திருப்தி பட்டுக்கொள்ளும் நிலை இருக்கிறது. அதன் இன்னொரு விளைவு, காங்கிரஸ் மேற்கண்ட மாநிலங்களில் ஒரே எதிர்கட்சியாகவும் இருப்பது. இதனால், அகாலிதளத்தின் மாற்றாக பாஜக பார்க்கப்படுவதில்லை. அகாலிதளம், பிசு ஜனதாதளம், சிவசேனை போன்ற கட்சிகளின் மாற்றாக காங்கிரசே பார்க்கப்படுகிறது. இதுவும் பாஜகவின் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருக்கிறது.

தொடர்ந்து கூட்டணியை மறுத்து ஒரே கட்சி ஆட்சி என்ற பேச்சின் மூலம் காங்கிரஸ் ஓரளவுக்கு தன்னுடைய குழாம் காணாமல் போகாமல் வைத்திருக்கிறது. கூட்டணியும் குறைந்த பட்சக்கூட்டணியே இந்தத் தேர்தலிலும் வைத்திருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இதர உதிரிக்கட்சிகள் ஆதரவில் வரும் தேர்தல் முடிவில் காங்கிரஸ் ஆட்சியில் ஏறுவதுதான் நடக்கக்கூடியது. இந்தியா ஒளிர்கிறது என்பததெல்லாம் உண்மையாகவே இருந்தாலும், அது ஓட்டுக்களைப் பெற்றுத்தந்தாலும், அதனால் பயன்பெறப்போவது பாஜக இல்லை என்பதுவே உண்மை.

அதிமுக, தெலுங்கு தேசம், திரினாமுல் போன்ற கட்சிகள் திரிசங்கு நிலை கொண்டவை. எந்த நேரத்திலும் அவை பாஜகவை கை கழுவிட்டு மதச்சார்பற்ற அரசியலை நடத்தக்கூடியவை. ஆகவே மிகவும் குறைவாக பாஜகவின் தொகுதி எண்ணிக்கை உருவாகுமேயானால், ஓடப்போவது இவையே.

அந்த களேபரத்தில் ஏன் ஜெயலலிதா கூட பிரதமராக ஆகலாம்.

—-

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்