பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 2

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

ஜேம்ஸ் வில்ஸன் (தமிழில்: ஆசாரகீனன்)


பயங்கரவாதச் செயல்களுக்கு ஆள் சேர்ப்பதில் மையமானது, எந்தக் குழு ஆள் சேர்ப்பு நடத்துகிறது என்பதே. அபு நிதால் அமைப்பைச் சேர்ந்த ஒமார் ரெஜாக் என்ற பயங்கரவாதி ஒரு விமானத்தைக் கடத்தி, எகிப்திய மீட்புப் படையினரால் பிடிக்கப்படுவதற்கு முன், இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பயணிகளைக் கொன்றவர். ஜெரால்ட் போஸ்ட், இவருடன் சுமார் எட்டு மணி நேரம் நேர்காணல் நடத்தினார். குற்றவாளியின் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர், ரெஜாக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான பின்னர் ஏற்படும் ஒரு வகை மன உளைச்சல் உள்ளவர், அதனால் தன் செயலின் தவற்றை சரியாக உணர முடியாதிருந்தார் என்று கூறியதைச் சோதிக்கவே இந்த நேர்காணல் நடந்தது. ஒமார் ரெஜாக்குக்கு இத்தகைய மனப் பிறழ்வு எதுவும் இல்லை என்று போஸ்ட் முடிவு செய்தார்.

[சொல்லப்பட்டதற்கு] மாறாக, ஜெரால்ட் போஸ்ட் சந்தித்த ரெஜாக் மிகவும் அமைதியான, நன்கு பயிற்சி பெற்றுத் தேர்ந்தவராக இருந்தார். வறுமையற்ற மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தைக் கொண்ட ரெஜாக், 1967-ல் நடந்த அரபு-இஸ்ரேலியப் போருக்குப் பின்னர் தன் அம்மாவுடன் அகதிகள் முகாமிற்குச் செல்ல நேர்ந்தது. பள்ளியில் ஒரு தீவிரவாத பாலஸ்தீன ஆசிரியர் அவருள் இஸ்ரேலிய வெறுப்பை விதைத்ததோடு, 12-வது வயதிலேயே ராணுவப் பயிற்சி தரும் முகாம் ஒன்றில் சேரவும் உதவினார். அங்கிருந்து, ரெஜாக் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியால் நடத்தப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றுக்குச் சென்றார். ஜார்டானின் ராணுவத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே, ரெஜாக் அதை விட்டு ஓடி ஃபடா இயக்கத்தில் சேர்ந்தார். அங்கு ஜயானிஸம்[13] பற்றி அறிந்ததோடு, மேலதிக ராணுவப் பயிற்சியும் பெற்றார். இஸ்ரேலுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் இவர் ஈடுபடுத்தப்பட்டாலும், பணி எதுவும் இல்லாமல் இருந்த காலகட்டங்கள் இவருக்குச் சலிப்பூட்டின. தீவிரமாக ஈடுபட வாய்ப்பைத் தேடிக் கொண்டிருந்த இவர் நாளடைவில் அபு நிதால்[14] அமைப்பில் சேர்ந்தார்.

ஒரு விமானத்தைக் கைப்பற்றி, எகிப்து அரசாங்கம் சில குறிப்பிட்ட தீவிரவாதிகளைச் சிறையிலிருந்து விடுவிக்கும் வரை விமானத்தைப் பிடித்து வைத்திருக்கும்படி அபு நிதால் அமைப்பு ரெஜாக்கிற்குக் கட்டளை இட்டது. அதன்படி கைப்பற்றப்பட்ட விமானம் மால்டாவில் தரை இறங்கிய பின்னர், பயணிகளைக் கொலை செய்யத் தொடங்கினார் ரெஜாக். இரண்டு இஸ்ரேலியர்களையும் (அவர்கள் எதிரிகள் என்பதால்) மூன்று அமெரிக்கர்களையும் (எதிரிக்குத் துணை புரிபவர்கள்) கொன்றார். பிறரைக் கொல்லும் முன், மீட்புப் படையினர் விமானத்துக்குள் பாய்ந்து நுழைந்து ரெஜாக்கைக் பிடித்து விட்டனர்.

பேராசிரியர் போஸ்டிடம் ரெஜாக் அமைதியாகவும், ஒழுங்காகவும், உணர்ச்சி வசப்படாமலும் பேசினார். தன்னை ஒரு சிப்பாயாகவும், தான் சுட்டுக் கொன்றவர்களை எதிரிகளாகவும் கருதினார். தன்னுடைய செயல், குற்றம் என்று அவருக்குப் புரிந்தது – அதனால்தான் அவர் தன் அடையாளத்தை மறைக்க கண்களைத் தவிர முகத்தை முழுவதும் மூடும் முகமூடி (ski mask) அணிந்திருந்தார். அக் கொலைகளை அவர் தவறான செயலாகக் கருதவில்லை: என்ன இருந்தாலும் ஜயானிஸத்திற்கு எதிரான போராட்டம்தானே அது. அவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கருதுவதே அசட்டுத்தனமானது. அவர் அப்படி மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தால், மிகவும் திறமை மிக்க குழுவான அபு நிதால் அமைப்பு ரெஜாக்கை எப்போதோ களைந்திருக்கும். அபு நிதால் ரோம் மற்றும் வியன்னா விமான நிலையங்களில் நடத்திய படுகொலைகளில் பலரைக் கொன்றது, காயப்படுத்தியது, மேலும், பிரிட்டனில் இஸ்ரேலிய தூதுவராக இருந்தவரைத் தாக்கிப் படுகாயப்படுத்தியது: மன நோயாளிகளை வைத்துக் கொண்டு இத்தகைய செயல்களைச் சாதிக்க முடியாது.

தற்கொலைப் படையினருள் சிலர் மிரட்டிப் பணிய வைக்கப்பட்டவர்கள். மேலும் சிலரோ அவர்கள் வாகனங்களில் பொருத்தப் பட்டிருக்கும் குண்டுகள் அவர்கள் இறங்கிப் போன பின்னரே வெடிக்கும் என்று தவறாக நம்ப வைக்கப்பட்டவர்கள். நான் நம்புவது என்னவென்றால், இத்தகைய ஆள் சேர்ப்பு முயற்சி இன்றளவில் சிறு-குழுக்கள் வழியான வற்புறுத்தலையும், அதிகாரத்தனம் மிக்க தலைவர்களையும் நம்பி இருக்கிறது. சமூக-அறிவியலை கல்லூரியில் பயின்ற எவருக்கும், ஸ்டான்லி மில்க்ராமின் புகழ் பெற்ற பரிசோதனைகள் நினைவில் இருக்கும். 1960-களில் யேல் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர் மில்க்ராம்[15], நாளேடுகளில் விளம்பரம் செய்து, நினைவுத் திறனை மேம்படுத்த உதவும் ஒரு பரிசோதனையில் பங்கு பெறுபவர்களுக்குப் பணம் தருவதாக அறிவித்து, சாதாரண மனிதர்களைத் தேர்ந்தெடுத்தார். சில வார்த்தைகளை ஒருவரிடம் படித்துக் காட்டி, அவர் அதைத் திரும்பச் சொல்லாத பட்சத்தில், தண்டனை தருவதன் மூலம் நினைவுத் திறன் மேம்படுத்தப்படும் என்பதாகச் சொல்லப்பட்டது. மில்க்ராமின் ஆள் ஒருவரே நாற்காலியில் பிணைக்கப்பட்டிருப்பார். அவரது மணிக்கட்டில் மின்-முனை பொருத்தப் பட்டிருக்கும். பரிசோதனையில் பங்கு பெற வந்திருப்பவர்களுக்கு அந்தத் தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் ஒரு கட்டுப்பாட்டு முனையத்திலிருந்து படிப்படியாக 15 முதல் 450 வோல்டுகள் மின்சாரத்தைப் பாய்ச்சும் பணியை மேற்கொண்டார்கள். இந்த மின் அளவுகோலின் மிகைப் பகுதியில் ‘அபாயம் – மோசமான மின் அதிர்ச்சி ‘ என்று தெளிவாக எழுதப் பட்டிருக்கும். இந்தப் பணியில் அமர்த்தப் பட்டிருப்பவர்கள் இந்தக் கற்பனையான மின் அழுத்தத்தை அதிகரிக்கும் போதெல்லாம், நினைவு ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள அமர்ந்திருப்பவர், வலியால் அலறித் துடிப்பதைப் போல நடிப்பார்.

மில்க்ராம் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்தவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் 450 வோல்டுகள் வரை மின்சாரத்தைப் பாய்ச்சினர். ஆனால், சோதனையில் அமைக்கப்பட்ட இரு நிலைகள் மட்டுமே வேறுபட்ட முடிவைக் கொடுத்தன: அறையில் தெளிவான அதிகாரம் கொண்ட தலைமை இல்லாத நிலையும், ஒத்த நிலையில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பவராக இருப்பதும். இந்த வேறுபாடுகள் இல்லாத போது கிட்டத்தட்ட அனைவருமே ‘கட்டளைக்குக் கீழ்படிய ‘ முடிவு செய்தனர். சரியாக நிர்வகிக்கப்படும், அதிகாரமுள்ள தலைவரைக் கொண்ட ஒன்றுபட்ட குழுவுக்கு எதையும் செய்யக்கூடிய நபர்களை சேர்ப்பதில் சிரமம் இருக்காது என்பதையே இந்த ஆய்வு காட்டுவதாக நான் கருதுகிறேன்.

ஸ்டான்லி மில்க்ராமின் ‘அதிகாரத்துக்குக் கீழ்ப்படிதல் ‘ என்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்களோ இல்லையோ, பயங்கரவாதக் குழுக்கள் இந்த விதிகளைப் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தட்டிக் கேட்கப்படவே முடியாத தலைவர்களுடன் உறுப்பினர்களைப் பேச விடுவதன் மூலம் எதிர்ப்பு காட்டக் கூடியவர்களை எளிதில் களைந்து விடுகிறார்கள். சந்தேகப்படுபவர்களை ஒழித்துவிடுவதன் மூலம் சந்தேகங்களையே ஒழித்துக் கட்டி விடுகிறார்கள்.

இந்த முறை, மிக நெருக்கடியான கட்டத்தில் வீரர்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்க ராணுவம் பயன்படுத்தும் முறைகளில் இருந்து மிகவும் வேறுபட்டது அல்ல. நாயகத் தன்மை தீரச்செயலுக்கான ஆழமான உந்துதலினாலோ, தாய்மாரிடம் பெறும் கருத்துகளாலோ, நாட்டின் விழுமியங்களிலிருந்தோ, மேலும் தேசிய கொள்கையிலிருந்தோ பெறப்படுவதில்லை. மாறாக, அது போராடும் பிறரை உதாரணமாகக் கொள்வதிலிருந்தே வருவது.

மில்க்ராம் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி தந்தவர் அல்ல; மாறாக [மேலே சொன்ன] ஸிந்தியா ஓஜிக் கருத்தில் கொள்ளாது விடுத்த ஓர் உள்ளுணர்வை அவர் இனம் காட்டுகிறார் – குழுவாக இருக்க விரும்பும் உள்ளுணர்வானது பிறரிடம் நயமாக நடந்து கொள்ளச் சொல்லும் உள்ளுணர்வைப் போலவே வலிமையானது என்பதை மில்க்ராம் நிறுவினார். ஒருக்கால், அவர் ஒரு பயங்கரவாதக் குழுவின் தலைவராக இருக்கிறார், தனக்குக் கீழ்ப் படிபவர்களை தன் குழுவில் சேர்த்துக் கொள்கிறார், அவரது குழுவுக்கு ஆதரவாகக் கல்வி நிலையங்களும், மக்கள் நடுவே பெரும் பிரசாரமும் இருக்கிறது என்றெல்லாம் வைத்துக் கொள்வோம். (அப்படிப்பட்ட நிலையில்) அத்தகைய உறுப்பினர்களைக் கொண்டு அவர் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு அனேகமாக ஓர் எல்லையே இல்லை. அவர்கள் மருத்துவ ரீதியில் பாதிக்கப்படாதவர்களாக இருந்தாலும், மனப் பிறழ்வான ஓர் இயக்கத்தினுள் அவர்கள் இழுத்துப் பொருத்திக் கொள்ளப் பட்டிருப்பார்கள்.

பயங்கரவாதிகள் பற்றிய உண்மைகளுள் மையமாக இருப்பது அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பது அல்ல, அவர்கள் தனியானவர்கள் அல்ல என்பதே. பாலஸ்தீனர்களிடையே ஹமாஸ், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத், அல்-அக்ஸா தியாகியர் படை ஆகிய அமைப்புகளே பெரும்பாலும் இவர்களை வளைத்துப் போடுகின்றன. சிங்கப்பூரில், இவர்களைத் திரட்டும் பணி மதப் பள்ளிகளில் தொடங்குகிறது. ஊக்கம் உள்ளவர்களும், பணிந்து நடப்பவர்களும் அங்குள்ள ஜமா இஸ்லாமியா என்ற அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டு, தம்மை ஒத்தவர்களுடன் சேர்ந்து இயங்கும் வாய்ப்புப் பெறுகிறார்கள். ரகசிய உணர்வு, சங்கேதப் பெயர்கள், சிறப்புப் பயிற்சி ஆகியவற்றின் மூலம் குழுவில் தான் இருப்பது பற்றி ஒவ்வொரு உறுப்பினருக்கும் தம்மைப் பற்றிய பெருமிதமும், சாதாரணத்திலிருந்து பிரிந்து உயர்ந்து விட்ட உணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. பின்னர், ஜிஹாதில் பங்கு பெற்று மடிவதன் மூலம் தியாகி ஆகும் வாய்ப்பு அவர்களுக்குத் தரப்படுகிறது. எல்லா குழுக்களிலும், தற்கொலைப் படையினரை ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து அவர்களைப் பிறரிடம் இருந்து தனிமைப்படுத்துவது, தங்களது இறுதி அறிக்கையை எழுத வைப்பது, அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு விடும் பிரிவுச் செய்தியை ஒளிநாடாவில் பதிவு செய்வது ஆகியவற்றின் மூலம் தலைவர்கள் அவர்களின் உறுதியை வலுப்படுத்துகிறார்கள்.

சரி, பயங்கரவாதம் இவ்வளவு நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறதே, அது தனது நோக்கங்களை அடைகிறதா என்பதைப் பார்ப்போம். கொள்கைப் பின்னணி கொண்ட சில பயங்கரவாதிகளுக்கு, அடையப்படக்கூடிய தெளிவான குறிக்கோள்கள் எதுவும் கிடையாது. ஆனால், பல அரசியல் கொலைகாரர்களுக்கும் மத பயங்கரவாதிகளுக்கும், கொடுங்கோலாட்சியை ஒழிப்பது, மதக் கருத்தாக்கங்களைப் பரப்புவது அல்லது ஒரு தேச விரோதியைத் தோற்கடிப்பது போன்ற முக்கியமான குறிக்கோள்கள் இருக்கின்றன.

இந்தத் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், பயங்கரவாதத்தால் எந்தப் பலனும் கிடையாது. அரசியல் படுகொலைகள் பற்றிய தனது நீண்ட வரலாற்றுப் புத்தகத்தின் இறுதியில் ஃப்ராங்க்ளின் ஃபோர்ட், ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர, அரசியல் கொலைகளால் அவற்றைச் செய்பவரின் நோக்கத்துக்குச் சாதகமான எந்த விளைவுகளும் ஏற்பட்டிருக்கவில்லை என்றே முடிவு செய்கிறார். வால்டர் லேக்கர்[16], தனது ஆய்விலும் இதே போன்ற முடிவுக்கே வருகிறார்: 1945 முதல் 1985 வரையில் நடத்தப்பட்ட 50 பிரதம மந்திரிகள் மற்றும் நாட்டுத் தலைவர்களின் படுகொலைகள், ஏதோ ஒரு நாட்டின் கொள்கைகளைக் கூட மாற்றியது எனக் கருத முடியாது.

பெர்னார்ட் லூயிஸ் [அந் நாளைய] அஸாஸின் குழுவினர் தோல்வி அடைந்தார்கள் என்றே கருதுகிறார்: நிலவும் சமூக அமைப்பைத் தூக்கி எறிவதிலோ அல்லது சுன்னிகளின் இடத்தில் ஷியாக்களை மாற்றிப் பொருத்தி விடுவதிலோ அவர்கள் ஒருபோதும் வெற்றி பெறவில்லை என்கிறார். 1983 முதல் 2001 வரையிலான தற்கொலைப் படை பயங்கரவாதம் பற்றிய மிகச் சமீபத்திய ஆய்வு, ‘பயங்கரவாதம் சுமாரான அல்லது மிகக் குறைந்த அளவில் தனது குறிக்கோள்களை அடைந்திருந்தாலும், தாம் தாக்கிய குடியரசுகளை அவற்றின் தேசிய நலன்களையும் பாதுகாப்பிற்கு இன்றியமையாததாக இருக்கும் குறிக்கோள்களையும் கைவிடும்படி மிரட்டுவதில் தோல்வியே அடைந்துள்ளது. ‘

இந்தத் தோல்விக்கான ஒரு காரணத்தை இஸ்ரேலிய மக்கள் கருத்து பற்றிய ஆய்வில் காணலாம். 1979-ஆம் ஆண்டில் இஸ்ரேலிலும், அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலும் 271 பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்றன. இவற்றில் 23 பேர் இறந்ததோடு 344 பேர் காயமடைந்தனர். இத்தகைய தாக்குதல்கள் இஸ்ரேலியர்களைப் பெரிதும் கவலைக்கு உள்ளாக்கின என்று பொதுக் கருத்துக் கணிப்புகள் சுட்டிக் காட்டின. ஆனால் இந்த அச்சம் அவர்களைச் சமரசம் தேடும் முயற்சிகளை ஆதரிப்பதை நோக்கி இட்டுச் செல்லவில்லை. மாறாக அவர்களின் மனங்களில் கடுமை ஏறியதோடு, குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப் படுவதைக் காணும் விருப்பமும் அதிகரித்தது. தற்போதைய இன்டிஃபாதா வன்முறையும் இத்தகைய விளைவையே இஸ்ரேலில் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் தீவிரவாதம், அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடைய உற்றாரின் கருத்துகளை மாற்றவில்லை என்றால், அதே போல தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளும், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களின் கருத்துகளை மாற்றுவதில்லை. பல சமூக அறிவியலாளர்களும் இந்த முடிவுக்கே வந்துள்ளனர்.

1970-களில் நான் கலந்து கொண்ட ஓர் அறிஞர்களின் மாநாட்டில் பங்கெடுத்தவர்கள், ஜெர்மன் செம்படைக் குழு மற்றும் இத்தாலிய செஞ்சேனையினரின் தீவிரவாத நடவடிக்கைகளை எப்படி நிறுத்துவது என்று விவாதித்தனர். அங்கு நிலவிய பொதுவான கருத்து, எதிர்த் தாக்குதல்கள் எவ் வகையிலும் உதவப் போவதில்லை என்பதே. பயங்கரவாதத்தை முறியடிக்க, அதன் மூல காரணங்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்று என் நண்பர்கள் கருதினர்.

எனக்கு அக் கருத்தில் நம்பிக்கையில்லை. என் உள்ளுணர்வு என்னவென்றால் – குற்றவாளிகளை நேரடியாகப் பிடித்துக் கைது செய்வது உதவும் அளவு குற்றத்தின் மூலம் என்று பழி சுமத்தப்படும் காரணங்களைச் சீர் செய்ய முயல்வது உதவாது என்பதே. அதனால்தான் எனக்கு அப்படி ஓர் அவநம்பிக்கை. ஏனெனில், மூல காரணங்களைப் பற்றி நமக்கு அதிகமாக எதுவும் தெரியாது. மேலும், நாம் அடையாளம் காணும் மூல காரணங்களுள் பெரும்பாலானவற்றை ஒரு சுதந்திர சமூகத்தில் மாற்றுவதென்பது முடியாதது – அல்லது வேறு எந்த சமூகத்திலுமே கூட அத்தகைய மாற்றங்கள் சாத்தியம் இல்லை.

இப்படி அரசியல் ரீதியில் எழுந்துள்ள ஓர் ஆழ்ந்த சிக்கலை எதிர் கொண்ட ஜெர்மன் மற்றும் இத்தாலிய அதிகாரிகள், மூல காரணங்களை மாற்றுவதில்லை என்றும் பயங்கரவாதிகளைக் கைது செய்வது என்றும் முடிவு செய்தனர். அதே நேரத்தில், கிழக்கு ஜெர்மனி வீழ்ச்சியடையவும், பயங்கரவாதிகளுக்கு அங்கிருந்து கிடைத்து வந்த உதவிகளும் நின்று போனதால் இம் முயற்சி வெற்றி பெற்றது. சில ஆண்டுகளிலேயே செம்படைக் குழுவும் செஞ்சேனையும் காலாவதியாகி விட்டன. அமெரிக்காவில், வெதர் தலைமறைவு இயக்கத்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின் அந்த இயக்கமும் மறைந்தது.

ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதம் இவற்றை விடவும் கடினமான சவாலை முன் வைக்கிறது. இந்த பயங்கரவாதிகள் தங்களிடம் அனுதாபம் கொண்ட மக்களிடையே வாழ்ந்து, இயங்குபவர்கள். கைது செய்யப்படுபவர்களின் இடத்தை நிரப்ப வேறு ஆட்கள் கிடைப்பார்கள்; கொல்லப்படுபவர்கள் கொண்டாடப் படுவார்கள். பல இஸ்லாமிய நாடுகளிலும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எதிரான பயங்கரவாதிகளுக்கு பெரும் ஆதரவு இருப்பதைக் காட்டுகின்றன. பயங்கரவாதிகள் தங்களுக்குச் சாதகமான நதி ஒன்றில் நீந்துகிறார்கள். ஆக, நாம் நதியையே எதிர் கொள்ள வேண்டி இருக்கலாம்[17].

பெரும்பாலான முஸ்லிம் பத்திரிகைகளும் முஸ்லிம் கல்வி நிலையங்களும் இடைவிடாது யூதர்கள், இஸ்ரேல் மற்றும் ஜயானிஸம் ஆகியவற்றின் மீது அவதூறைப் பரப்புகின்றன. இந்த வகை பிரசாரத்தினால் பயங்கரவாதிகளுக்குக் கிட்டியிருக்கும் ஆதரவு, முன்பு அமெரிக்க அல்லது ஐரோப்பிய பயங்கரவாதிகளுக்கு மக்களிடையே கிட்டிய ஆதரவை விட பல மடங்கு பெருத்தது. 75 சதவீதத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் தற்போதைய இன்டிஃபாதாவை ஆதரிப்பதோடு, ஹய்ஃபா நகரில் மேக்ஸிம் என்ற உணவு விடுதியில் 2003-ஆம் ஆண்டு நடந்தப்பட்ட குண்டு வெடிப்பையும் ஆமோதிக்கிறார்கள். தற்கொலைத் தாக்குதலை நடத்துபவர்கள் தியாகிகளாகக் கருதப்படும் போக்கினால், இப் பணியில் சேர முன் வரும் புதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. [ஜெர்மனியின்] பாதெர்-மையின்ஹாஃப் குழுவினருக்குக் கிட்டிய ஆதரவை விட, இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாதத்துக்குக் கிடைத்துள்ள ஆதரவுப் பெருக்கு மிகவும் ஆழமும், அகலமும் உள்ளது.

ஜனநாயகம் என்பதே ஒரு தீமை என்றும், எதிர்காலத்தில் மார்க்ஸிய அலையே வீசப் போகிறது என்றும் பெரும்பாலான மேற்கு ஜெர்மனியர்கள் நினைத்திருந்தாலோ, கொல்லப்படும் அல்லது சிறை பிடிக்கப்படும் இக் குழுவின் உறுப்பினர் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் பெரிய தொகை ஒன்றை சோவியத் யூனியன் வழங்கியிருந்தாலோ, மக்களாட்சியின் தீமைகளையும், பயங்கரவாதிகளைக் நாயகர்கள் என்று சொல்லித் தரும் கல்வி நிலையங்களில் மேற்கு ஜெர்மனி மாணவர்கள் பயின்றிருந்தாலோ, மேற்கு ஜெர்மனியின் பல மாகாணங்கள் அல்-ஃபத்தா போன்ற குழுக்களால் ஆளப்பட்டிருந்தாலோ, காஜாவைப் போன்ற ஒரு பகுதி ஜெர்மனியில் இருந்து, அதில் சினம் கொண்ட ஜெர்மனியர்கள் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து, அவர்கள் தங்களுக்கு ஒரு தாய்நாட்டிற்குத் திரும்பும் உரிமை இருக்கிறது என்று நம்பியிருந்தாலோ, பாதெர்-மையின்ஹாஃப் குழுவை ஒழிப்பது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

ஆனால், போராட்டத்துக்கான ஆதரவு என்பது முடிவற்ற போர் ஒன்றுக்கான ஆதரவு அல்ல. கொள்கை மற்றும் கருத்துக் கணிப்பு ஆய்வுக்கான பாலஸ்தீனிய மையம், நவம்பர் 2002-ல் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில், மேற்குக் கரையிலும் காஜா பகுதியிலும் வாழும் பாலஸ்தீனியர்களில் நான்கில் மூன்று பேர், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் ஆகிய இரு தரப்பினரும் வன்முறையை நிறுத்துவதையும், இஸ்ரேலியருக்கும் புதியதாக உருவாக்கப்படவிருக்கும் ஒரு பாலஸ்தீன அரசுக்கும் இடையில் சமரசம் ஏற்படுவதையும் ஆதரித்தனர். இஸ்ரேலிய மக்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த பாலஸ்தீன ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பதையும் பெரும்பாலானோர் ஆதரித்தனர். பாலஸ்தீனர்களில் பாதி பேர் இன்டிஃபாதாவும், இஸ்ரேலுடனான பேச்சு வார்த்தைகளும் ஒரே நேரத்தில் நடப்பதை விரும்புவதும், 15 சதவீதத்தினர் பேச்சு வார்த்தைகளை மட்டுமே விரும்புவதும் மற்றொரு கருத்துக் கணிப்பில் தெரிய வருகிறது.

மிக அரிதாகவே அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளிவரும் இந்தத் தகவல்கள், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அராஃபத்தின் மூலம் ஒரு தீர்வு காண்பது தவிர்க்க முடியாதது என்று நம்மிடம் இடைவிடாமல் சொல்லி வரும் பல மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பியத் தலைவர்களின் அறிக்கைகள் எந்த அளவுக்கு அர்த்தமற்றவை என்பதையே உணர்த்துகின்றன. பெரும்பாலும் உள்ளூர் அரசியல் தேவைகளைக் கருதியே எழுப்பப்படும் இத்தகைய கோரிக்கைகள், அராஃபத்தின் சொந்த மக்களே அவரை எவ்வளவு தூரம் வெறுக்கிறார்கள் என்பதையும், மக்களை மதிக்கும், ஊழலைத் தவிர்க்கும் ஒரு ஜனநாயக அரசாங்கம் அமைவதில் அவர்களுக்கு எவ்வளவு ஆர்வம் உள்ளது என்பதையும் கருத்தில் கொள்வதில்லை.

ஒரு நாட்டுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதையோ, பயங்கரவாதம் செயல்பட தம் நாட்டில் இடம் தருவதையோ மற்றொரு நாடு செய்யும்போது, நிலைமை இன்னமும் மோசமாகிறது. அந்த நிலையில், அந்த அரசாங்க ஆதரவை நிறுத்துவது முக்கியமாகிறது. இதற்கு, அத்தகைய ஆதரவின் பின் விளைவாக அந்த நாடுகளின் தலைவர்கள் கடுமையான இழப்புகளை மேற்கொள்ள நேரும் என்பதைத் தெளிவாக்குவது அவசியமாகிறது. பலரும் ஏற்க மறுத்தாலும், அமெரிக்க அதிபர் புஷ் சில நாடுகள் ‘தீமையின் அச்சாக ‘ விளங்குவதைக் கண்டித்தது சரியானது என்றே நான் கருதுகிறேன். சம்மந்தப்பட்ட நாடுகளின் தலைவர்கள் ஹமாஸ், அல்-கய்தா அல்லது ஹெஸ்புல்லா ஆகியவற்றுக்கு நிதி உதவி அளிக்கும், ஊக்குவிக்கும் பட்சத்தில் அதற்குரிய கடுமையான விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்பதை இந்த அறிவிப்பு தெளிவாக்கியுள்ளது. அது எத்தகைய கடுமையான விலையாக இருக்க முடியும் என்பதை இராக் அறிந்திருக்கிறது.

இஸ்ரேலில் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதோடு, அவற்றிற்கு ஆதரவும் தரும் பாலஸ்தீனத் தலைமையை, தக்க கடும் விலையைக் கொடுக்க வைக்க இஸ்ரேலிய அரசாங்கம் முயல்கிறது. இம் முயற்சி வெற்றி பெறுமா என்பதைச் சொல்லப் போதுமான காலம் கடக்கவில்லை. கைதுகளும், தடுப்பு முறைகளும் தற்கொலைத் தாக்குதல்களை உடனடியாகத் தடுக்க முடியாது என்றாலும், சிறந்த உளவு முறையின் மூலம் அவற்றைக் குறைக்க முடியும். மேலும், தலைவர்களைச் சிறை பிடிப்பதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். அண்மையில் தற்கொலைத் தாக்குதல்கள் குறைந்துள்ளதற்கு நிச்சயம் பாலஸ்தீனப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரைக் காரணமாகக் கருதலாம். இப்படி ஏகப்பட்ட பொருள் செலவில் [பாதுகாப்புப் படையினர்] நிறுத்தப்படுவது மட்டுமே தாக்குதல்களை முற்றிலுமாக நிறுத்தி விடாது. இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனர்களின் வெறுப்பு வளர வளர, அந்த வெறுப்பை ஊட்டி வளர்க்கும் விதமாகப் பாலஸ்தீனக் கல்வி நிலையங்கள் மேலும் வெறுப்பைக் கற்பிப்பதாலும், மனித வெடிகுண்டுத் தற்கொலைப் படைக்குப் புதியவர்களைச் சேர்ப்பது எளிதாகிறது.

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு புதிய அரசியல் ஏற்பாடு தேவைதானா என்பதுதான் முக்கிய கேள்வி. பாலஸ்தீன மக்கள், இஸ்ரேலுக்கு அது ஒரு பாதுகாப்புடன் இருக்கும் உரிமையை வழங்கி அதற்குப் பதிலாகத் தங்களுடைய சொந்த நாட்டைப் பெற்றுக் கொள்வதே நன்மையானது. இத்தகைய ஒரு தீர்வுக்கு இஸ்ரேலியர், பாலஸ்தீனர் ஆகிய இரு தரப்பிலும் பெரும் வரவேற்பு இருக்கக் கூடும். ஆனாலும், இரு தரப்பிலும் இருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவராவது இத்தகைய எதிர்காலத்துக்கான வழியை முன் மொழிவார்களா என்பது ஐயத்திற்குரியது. பயங்கரவாதமும் [அதற்கு எதிரான] அரசாங்க நடவடிக்கையும் அதிகரிக்க அதிகரிக்க, பேச்சு வார்த்தைக்கான வாய்ப்புகள் மங்குவதோடு, எந்தப் புதிய பேச்சு வார்த்தையும் அர்த்தமுள்ள முடிவைக் கொண்டு வரும் என்பதில் பொதுமக்களுக்கு இருக்கக் கூடிய நம்பிக்கையும் அருகவே செய்யும். இதற்கான தீர்வை இதுவரை எவரும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நன்றி: ஸிட்டி ஜர்னல் Winter 2004 இதழ்

பின் குறிப்புகள் – மொ.பெ.

கட்டுரையாளர் James Q. Wilson பற்றி:

1960களில் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகத் தொடங்கியவர். தற்போது, லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராக இருந்து வருகிறார். இவர் இன்னமும் ஊக்கத்துடன் செயல்படுகிறார் என்பதற்கு ஒரு சான்று – அமெரிக்க அதிபரின் உயிர்-அறம் (bio-ethics) பற்றிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்பது. அண்மையில், உயிர்-அறம் என்பது மேலை நாடுகளில் பெரும் பிரச்சினையாகக் கிளம்பி இருக்கிறது. இவர் குற்றவியல், பொருளாதாரம், அரசியல் துறைகளில் பெயர் பெற்ற ஆய்வாளர். மேல் விவரங்களுக்கான சுட்டி:

http://www.anderson.ucla.edu/admin_dept/media_rel/facultydir/wilson.html

மனித இயல்பும் அறவுணர்வும் என்பது குறித்து ஏராளமாக எழுதியிருக்கிறார். இவற்றில், இவரது நல்லொழுக்க உணர்வு (The moral sense) என்ற 1997-ஆம் ஆண்டுப் பிரசுரம், ‘ஒழுக்கம் பற்றிய சீர் தூக்கல்: வளர்ப்பில் கேடு நேர்ந்ததை ஒரு சாக்காகக் கொள்வது நம் நீதி அமைப்பைக் குலைக்கப் போகிறதா ? ‘ என்ற 1998-ஆம் வருடப் பிரசுரங்களும் அடங்கும்.

இவரது முக்கியப் பிரசுரங்களின் ஒரு பட்டியல்:

http://reason.com/bks.wilson.shtml

மையப் பாதையில் இயங்கும் ஆய்வாளராக இவரைக் கருதலாம். சில நேரம் வலதுசாரியினருக்கு இவர் போன்ற சிந்தனையாளர் ஒரு கேடயமாகப் பயன்படுவர். இடதுகளும் அப்படியே இவரைப் பயன்படுத்தும் வாய்ப்புண்டு. இருதலைக் கொள்ளியாக இவர் சில நேரமாவது உணர்வாரா என்று இவரைச் சந்தித்தால் கேட்க வேண்டும்.

13. Zionism-பற்றி இங்கு ஒரு விரிவான விளக்கம் தர முற்படுகிறேன். கட்டுரையின் மையத்திலிருந்து சிறிது விலகிய இந்த விளக்கம், கட்டுரை வெறுமே சுட்டி விட்டுத் தொடாமல் போன பல கருத்துகளை இங்கு முன்வைக்கிறது. காரணம், கீழே தரப்படும் தகவல்களும், சில மேம்போக்கான விளக்கங்களும் ஓரளவு பின்புலனைத் தெளிவாக்கும் என்ற நம்பிக்கை. மாறாகக் கட்டுரையே தெளிவு, விளக்கம் எதற்கு என்று வாசகர் கருதும் பட்சத்தில், விளக்கத்தைப் படிக்க வேண்டாமே!

இங்கு குறிப்பிடப்படும் ஜயானிசம் என்பது யூத தேசியம். உலகின் பல பகுதிகளிலும் யூத தேசியமும், உலக மயமாகும் இஸ்லாமும் எதிரெதிராக நிற்கின்றன என்பது தெரிந்ததே. இன்று உலக முஸ்லிம் சமுதாயம் தேங்கி இருக்கக் காரணமே யூத தேசியமும், அடிப்படைக் கிருஸ்தவமும், சண்டிக் குதிரையான இந்துக் கூட்டங்களும்தான் என்று கூடத் தீவிரவாத முஸ்லிம்கள் கருதுகிறார்கள். இது வழக்கம் போலத் தமது குறைகளைப் பிறர் குறைகளாகக் காணும் உத்தி. இங்கு யூத – முஸ்லிம் சமூகங்களைப் பற்றி மட்டும் சிறிது பார்ப்போம்.

யூதருக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுவாக உள்ள பிரச்சினைகளுள் ஒன்று – மதத்தை அல்லது இறை நம்பிக்கையை அரசியலில் இருந்து எப்படி விலக்குவது என்பதே. கருத்தாக்க அளவில் யூதர் ஓரளவாவது இத்தகைய விலக்கலை ஏற்கிறார்கள். இறை நம்பிக்கையை மையமாகக் கொள்ளாத அரசியல் (Secular politics) சாத்தியம் என்பதை அவர்கள் ஏற்கிறார்கள். முஸ்லிம்கள் இத்தகைய சாத்தியத்தை ஏற்பதில்லை. யூதர்களும் வாய்ப்பிருந்தால் இறை நம்பிக்கையை மையப்படுத்தியே அரசியல் நடத்த விழைவர் என்பது உண்மை. ஆனால் உலகெங்கும் மிகச் சிறுபான்மையாக வாழ்ந்து வரும் ஒரு சமூகக் குழுவுக்குப் பிற மதங்கள் ஆட்சியில் இருப்பதை விட எந்த மதமும் ஆட்சியில் இல்லாத, மதங்கள் தனி நபர் வாழ்வுக்குள் அனுப்பப் பட்டுவிட்ட அரசியலே பரவாயில்லை என்று கருதும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அப்படி அதிகம் வாழாத முஸ்லிம்களுக்கு இன்னமும் மதம் ஓரம் கட்டப்பட்ட இத்தகைய வாழ்வு பிடிப்பதில்லை. ஆனால், பொதுவாக அவர்கள் ஒரு முரண்பட்ட நிலையைக் கைக் கொள்கிறார்கள்.

காட்டாக, முஸ்லிம்கள் எங்கெங்கும் உள்ள ‘கடவுள் ‘ அரசியலிலும் இருந்தே ஆக வேண்டும் எனவும், வாழ்க்கையின் சகல அம்சங்களையும் இறை நம்பிக்கையும் அதன் வெளிப்பாடாகக் கொடுக்கப்பட்ட முறைமைகளும் கட்டுப்படுத்துவது தகும் எனவும், எனவே அரசையும் மதத்தையும் பிரிப்பது ஏற்புடையதல்ல எனவும் கருதுகிறார்கள். தீவிர மரபுவாதிகளான யூதர்களும் இத்தகைய சிந்தனையையே கொண்டவர்கள். ஆனால், யூதர்கள் நடுவே தாராளவாதிகளும், புரட்சிவாதிகளும், நாத்திகரும், அவநம்பிக்கையாளரும் மதம், சமுகம், அரசியல் மற்றும் அரசு பற்றிய விவாதங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள். தர்க்கமும், அதன் வழியே முடிவுகளை அடைவதும் ஒரு மரபாகவே யூதத்தில் இருக்கிறது. இஸ்லாத்திலும் இப்படிப்பட்ட அல்லது ஓரளவு இதையொத்த வாதங்களின் மூலமாக புதுப் பார்வைகளை அடையும் முறை இருக்கிறது, ஆனால் வெகு காலமாக இது மூலப் புத்தகங்களில் நிபுணர்களாகக் கருதப்படுபவர்கள் கையில் அகப்பட்டு, அரசியலில் பதவியில் இருப்போருக்கு மக்களை அடக்கும் கருவியாகி விட்டது என்றே கருதவேண்டி உள்ளது.

யூதத்தில் வாதம் புரிந்து மரபை எதிர்ப்பவர்களுக்கு எதிராக ‘ஃபத்வா ‘ கத்திகள் உயர்த்தப் படுவதில்லை. பல பத்தாண்டுகள்(decades) முன் வரை மிகவும் அதீதமாகப் பாதை மாறுபவரைச் சமூகத்திலிருந்து வெளித் தள்ளுதல் ஒரு தண்டனையாகக் கையாளப்பட்டது என்று தெரிகிறது. ஆனால் பல நாடுகளிலும் பரவி, நாடோடிகளாகவும் சிறுபான்மையினராகவும் வாழ்ந்த யூதரின் வழிமுறைகளுக்கும், பெரும் சாம்ராஜ்யங்களைப் பல நூறாண்டுகள் ஆண்ட பெருமையை இன்னமும் தம் மனதில் வைத்திருக்கும் அராபிய முஸ்லிம்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. நாடோடி – அகதி சமுகமாக பல நூறாண்டுகள் வாழ்ந்த யூத இனக் குழுக்களிடம் நாம் இறுகலை எதிர்பார்த்தால் அது தவறாகாது. ஆனால், நிலைப்யையும் தகர்ப்பையும் மாறி மாறி அனுபவித்த யூதரின் குழு மனப்பாங்கு பல விதமாக அமைகிறது.

ஒற்றுமை என்று பார்த்தால் இரு கூட்டத்தாரும், தமது மதம் ஒன்றுதான் உண்மையான மதம் என்று நம்புகிறார்கள். முஸ்லிம்கள் ஒரு துணைத்தேற்றமாக, மற்ற நம்பிக்கைகள் எல்லாம் தமது ஆளுமையின் கீழ் இருப்பது தகும், ஆனால் தாங்கள் மற்றவரின் ஆளுமையில் இருப்பது தகாது எனவும் பொதுவாக நம்புகிறார்கள். ‘என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நான் ஆளும் போது உன்னை நான் தக்க விதத்தில் நடத்துவேன். ஆனால் உன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, நீ என்னை தக்க விதத்தில் நடத்த மாட்டாய், அதனால் நானே ஆட்சியில் இருப்பேன் ‘ என்ற வகை வாதம் இது. இதை ஒரு தனி நபர் அல்லது குடும்ப உறுப்பினர் சொன்னால் அவரை நாம் ‘கட்டுப்பாட்டுப் பித்து ‘ (control freak) என்று உளவியல் ரீதியாக ஓரம் கட்டுவோம். பெரும் குழுக்கள் இதே மனோபாவத்துடன் வாழ்ந்தால் அது இயல்பானதாக, சாதாரணத்துவம் (normalization) அடைகிறது. உண்மையில், இது எந்த சமூகத்திற்கும் உபயோகமான மனப்பாங்கு அல்ல.

முஸ்லிம்கள் (மத சார்பற்ற ஜனநாயகம் உள்ளிட்ட) பிற சமூகங்களில் சிறுபான்மையினராக இருந்தால், (பொது ஆட்சி பிறர் கையில் இருந்தால்) அவர்கள் தம்மைத் தாமே ஆளும் தனி உரிமை பெற வேண்டும் என்றும் நம்புகிறார்கள். உலகெங்கும் முஸ்லிம் அல்லாதாரின் நாடுகளில் முஸ்லிம்கள் தொடர்ந்து பிரச்சினைகளைச் சந்திப்பதற்கு இத்தகைய நம்பிக்கைகளின் தொகுப்பு ஒரு காரணம். பொதுவாகவே, இன்று அவர்கள் ஏதோ காரணங்களால் பிறரின் கீழ் வாழ்ந்தாலும், விரைவிலேயே பிறரைத் தாம் ஆளும் காலம் வந்து விடும் என்பது அவர்களுடைய ஆழ்ந்த நம்பிக்கை. ஏனெனில் இறைவன் அவர்களுக்கு உலகை ஆளும் உரிமையை வாக்களித்திருக்கிறார் என்பது ஓர் அடிப்படை நம்பிக்கை. இன்னொன்று உலக சமூகத்தை முஸ்லிம் சமூகமாக மாற்றுவது அவர்களது அடிப்படைக் கடமையும், உரிமையும் என்றும் முஸ்லிம்களில் தீவிரவாதிகள் கருதுகிறார்கள். இதர முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இக் கருத்துகள் தம்மிடையே புழங்குவதற்கு எதிர்ப்பேதும் தெரிவிப்பதில்லை, மாறாக அது நல்ல கருத்துதான் என்றே கருதுகிறார்கள் – அதைச் செயல்படுத்தத் முன்வராத போதிலும். இதே கருத்தைப் பிற சமூகங்கள் முன்வைத்தால், அதற்குக் கடும் எதிர்ப்பைக் காட்ட எல்லா முஸ்லிம்களும் முன் வருவார்கள் என்பதுதான் இதில் முரண்.

இதே போலவே, ஆனால் பல மடங்கு குறைவான அளவில், பிற சமூகங்களின் ஆட்சியின் கீழ் வாழ்வதில் யூதர்களுக்கும் பிரச்சினை உண்டு. யூதர்களும் தம் சமூகத்தைத் தாமே ஆள விரும்புகிறார்கள். அவர்களுடைய கடவுளும் தனிப்பெரும் கடவுள். பிற கடவுள்கள் பொய்யானவர். அவர்களுக்கும் பிற மதங்கள் மீது அல்லது பிற பண்பாட்டுச் சமூகங்கள் மீது நம்பிக்கை இல்லை. முஸ்லிம்கள் போலவே அவர்களும் உங்கள் நம்பிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம் என்று வெளிப் பேச்சில் சொல்வார்கள். ஆனால், உண்மையில் இத்தகைய மதிப்பு இருக்காது. உங்களைக் கட்டாயப்படுத்தி அல்லது மனம் மாற்றி யூதராக்குவதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் பிற கடவுள்களை நம்புபவர்கள் பதிலிகளை அதாவது பொய்மையைக் கைப்பற்றியவர், கானல் நீரைத் துரத்திப் பாலையில் அலைபவர்களை ஒத்தவர்கள். அடிப்படையில் இதையே இஸ்லாமும் கருதுகிறது. பிரச்சினைகள் இத்தகைய சுய–மையப் பார்வையில் இருந்து எழுவதை இவர்கள் பார்க்கத் தயாராக இல்லை. ஆனால், யூதர்களும், முஸ்லிம்களும், ஓரளவு கிருஸ்தவர்களும் பிற இனங்களை அல்லது அடையாளக் குழுக்களை தன்மயக்-குழுவாதிகள் (ethno-centric) என்று சுலபமாகவே குற்றம் சாட்டத் தயாராக இருப்பார்கள்.

பொதுவாக, தம் சமுகங்களின் நடுவே, (அல்லது உலகிலேயே கூட) உங்களை வாழ விடுவதே தமது சகிப்புத் தன்மையைக் காட்டுகிறது, அதற்காக நீங்கள் என்றென்றைக்கும் அவர்களுக்குக் கடமைப்பட்டவர் என்று எல்லா செமிதிய மதத்தினரும் கருதுகிறார்கள். உங்களை வளர விடுவது அவர்களுக்குச் சாத்தியம் இல்லை. உங்களுக்குக் குடியுரிமை எல்லாம் கொடுத்தால் அது தேவைக்கு அதிகமான பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று வேறு கருதுவார்கள். ஆனால் என்றென்றும் மாற்று அடையாளமுள்ள நீங்கள் சந்தேகத்துக்கு உரியவர்தான் என்பதை அவர்கள் மறுக்கவோ அல்லது மறைக்கவோ போவதில்லை. பொய்மையைத் துரத்தும் உங்களை அவர்கள் வேறெப்படிக் கருத முடியும், இல்லையா ? (இதில் மார்க்ஸியரையும் சேர்த்துக் கொள்வது தவிர்க்க முடியாததாகிறது. அடிப்படையில் அதுவும் ஒரு (செமிதிய) நம்பிக்கை வழி (மதம் ?) தானே.) நீங்கள் உங்களது நம்பிக்கைகளுடன் சக மனிதராகவோ, அல்லது எல்லா உரிமைகளும் உள்ள குடிமகனாக அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் வாழ்வதோ, அல்லது சாதாரண வழியில் ஆட்சியாளராக வருவதோ அனேகமாக நடக்காது. என்றென்றைக்கும் சிறுபான்மையினராக, ஆளப்படுபவராக இருப்பதே உங்களுக்கு சரி. தாம் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் பெரும்பான்மையினரின் கருத்துப்படியான ஆட்சியே சரி என்று வாதிடும் இத்தகைய குழுவினர், தாம் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் பெரும்பான்மையின வாதத்தைக் (majoritarianism) கடுமையாக எதிர்ப்பார்கள். காட்டாக, பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் பள்ளிகளில் அல்லது அரசு அலுவலகங்களில் முகம் மறைப்பதை அல்லது முக்காடிடுவதை அரசாங்கம் தடுக்கக் கூடாது என்றும், சவுதி அரேபியாவில் பிற முஸ்லிம் அல்லாத பெண்கள் தலையில் முக்காடில்லாமல் வெளியே செல்லக் கூடாது என்பதுதான் சரி என்றும் எதிரும் புதிருமாக வாதிடுவது. இத்தகைய மனப்பாங்கால் அடையாள அட்டைகளுக்குப் புகைப்படம் எடுக்கையில் முழுவதும் முகம் மூடிய படத்தை ஏற்க முடியாது என்று அரசாங்கம் சொன்னால் அதை எதிர்க்கக் கூடத் தயாராகிறார்கள்.

பொதுவாக யூதர்கள் பிற நாடுகளில் தம் மதப் பார்வைகளைச் சற்று அடக்கியே வாசிக்கிறார்கள் என்றாலும், 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யூதர்கள் அடக்கி வாசிப்பது தம்மையே அழித்துவிடும் என்ற முடிவுக்கு வந்து தம் தனித் தன்மையைத் தூலமாக வெளிப்படுத்துவதில் கவனம் காட்டுகிறார்கள். மேலும், யூத எதிர்ப்புப் போக்கை எங்கு கண்டாலும் அதை அம்பலப்படுத்தி அதை மேற்கொள்வோரை நாணப்படுத்துவதன் மூலம் பின்னே தள்ளி நிற்க வைக்க முயற்சிக்கிறார்கள். மேலும், இஸ்ரேலில் அரசாளும் மன்றத்தில், தத்தம் சமூகப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப் படுவதை பிற சமூகங்களுக்கு யூத தேசியம் அனுமதித்திருக்கிறது. அதற்கு மேலே போய், இஸ்ரேலின் ஆட்சியில் தலைமை எடுத்துப் பங்கெடுக்கப் பிற மதத்தினருக்கோ, பிற அடையாள சமூகத்தினருக்கோ இடம் உண்டா என்பது தெரியவில்லை. வாசகரில் யாராவது தெரிவிக்கக் கூடும் என்று நம்புகிறேன். அப்படி சமத்துவத்திற்கு வாய்ப்பு இராது என்று நான் கருதுவதால், அதற்கு மாறாக இருந்தால்தான் வியப்பு ஏற்படும்.

தம் கடவுள், தம் பாதை ஒன்றுதான் சரி என்று வாதிடும் எந்த மதமும், அல்லது அரசியல் கொள்கையும் (பொதுவான மார்க்ஸியம், குறிப்பாக மார்க்ஸிய-லெனினியம் அல்லது மாவோயிஸம்), தேசியமும், மொழிப் பற்றும் இத்தகைய சகிப்பற்ற தன்மையை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும். இதுவன்றி அவர்களிடம் தம் சமூகக் கூட்டத்தை ஒருங்கிணைக்கவும், செயலுக்குத் தயாராக்கவும், போரிடத் தூண்டுவதற்கும் தேவையான கறாரான உளவியல் கருவி வேறெதுவும் இருக்காது. ஒருங்கிணைப்பு, ஊக்கமான செயல்பாடு, போரிடுதல் என்பன இத்தகைய குழுக்களின் பொதுவான மூன்று கால்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் போர்க் குணம் கொண்ட பாதைகளாக இவை இருப்பதன் மூல காரணம், உலகை ஆள்வதில் இப் பாதைகளுக்கு இருக்கும் பேராசை (megalo-mania)யே என்று சொல்லலாம்.

இதனால் இந்த வகை இயக்கங்கள் கொடூரமானவை, வெறி பிடித்துப் பிறரை அடக்கி ஆள்பவை என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், அத்தகைய அடக்கு முறைகளுக்கு இந்த வகைச் சிந்தனையில் வாய்ப்புகள் அதிகம். இன்றைய உலக மதமான, உலக முதலாளியம் இதையே வேறு விதமாகச் செய்கிறது. அதன் முக்கியக் கருவி சற்று வேறுபட்டது. எந்த ஒரு மக்கள் குழுவையும் ஒருங்கிணைப்பது அதற்கு ஆபத்தாகும் என்பதால் அது சகட்டு மேனிக்கு எல்லா நாடுகளிலும் (உலக) மக்களை சில்லுகளாக உடைக்கவே முயல்கிறது. தனித் தனி நபராக மனிதரை ஆக்கிய பின்னர், அவரையே முரண்பட்ட கருத்துகளின் கலவையாக, பல விதமான கட்டுக்கடங்காத ஆசைகளின் தொகுப்பாக ஆக்குவதன் மூலம் சிதைக்கிறது. தொடர்ந்து சிதைக்கப்பட்ட உதிரி மனிதரால் ஒன்றிணைந்து அதற்கு எதிராக ஓர் இயக்கத்தைக் கட்டி, அதன் காட்டு வெள்ளப் போக்கிற்கு அணை போட முடியாமல் ஆக்குவதுதான் அதற்குத் தெரியும் வழி. இதை மிகத் தெளிவாக உணரும் அயதுல்லா கொமெய்னி பொன்ற இஸ்லாமியத் தலைவர்கள் உலக முதலாளியத்தை ‘ஷைத்தான் ‘ என்று அழைப்பது இதனால்தான். இதில் ஆதி கிருஸ்தவத்துக்கும் உடன்பாடு இருக்கும். ஏனெனில், பணத்தையே அது சைத்தான் என்றுதான் கருதியது. மார்க்ஸியமும் பணத்தை, மூலதனத்தை மற்றும் பதிலியை வழிபடும் எந்த முறையையும் (reification) எதிர்ப்பதை நாம் கண்டிருக்கிறோம். இதற்கு அதன் செமிதிய மூலமே காரணம்.

யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள ஓர் அடிப்படை வேறுபாடு என்னவென்றால், யூதர்கள் பிறரைத் தம் நம்பிக்கைக்கு மாற்ற முற்படுவதில்லை. பெரும்பாலும் அதை அவர்கள் விரும்புவதும் இல்லை. திருமணம் போன்ற வகைகளில் மாறி வருபவர்களை அல்லது தன்னியல்பாக மாற விரும்புவர்களை அவர்கள் விலக்குவதில்லை என்றாலும், அதையும் தவிர்க்கவே முயல்கிறார்கள். இது தவிர பெருமளவு நவீனப்பட்டு விட்ட யூத சமுகங்கள் உலகெங்கும் சிறு குடும்பங்களையே கொண்டிருக்கிறார்கள். யூத மக்கள் தொகை அதிகரித்து வரவில்லை, உலகெங்கும் குறைகிறது. இதனால், யூத தேசியம் சிறு நிலப் பரப்பைத்தான் ஆள முடியும் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. அவர்களுடைய தேசியம் பண்பாட்டளவில் உலகளாவியது – பல மொழி, பல நாட்டுப் பின்புலன் கொண்டு யூதர் வாழ்வதால். ஆனால், எதார்த்த அரசியல்படி இது பாதுகாக்கப்பட்ட சிறு தேச (enclave) அரசியல் என்றே கருதவேண்டும். அதாவது யூத தேசியம் பெரும் ஏகாதிபத்தியமாக, உலகளாவியதாக ஆவதற்கு வாய்ப்புகள் இல்லை. மாறாக, முஸ்லிம்களுக்கு உலக ஏகாதிபத்தியமாக ஆகும் பேராசை கிட்டத் தட்ட இயல்பாகவே (natural characteristic), சமூக உள்ளுணர்வாகவே (social instinct) இருக்கிறது என்பது அவர்களுடைய சமுகத்தில் கருத்துப் பரிமாற்றங்களைக் கவனிப்பவர்களுக்குப் புலப்படும். ஆனால் முஸ்லிம் தீவிரவாதிகள், பணத்தின் மூலம், உலக முதல் (global capital) வழியே யூதர்கள் உலகை ஆள்கிறார்கள் என்று பழி சாட்டுகிறார்கள். உலக மூலதனம், அராபிய மற்றும் பன்னாட்டு முஸ்லிம்கள் கையிலும் ஏராளமாக இருக்கிறது என்பதை நாம் மறந்து விடுவோம் என்று கருதுகிறார்கள் போலும். மேலை நாடுகளில் (சீனத்திலும் ஜப்பானிலும் கூட ?) யூத எதிர்ப்பு வலுவாகவே இருக்கிறது என்பதையும் நாம் மறந்து விட வேண்டும் போலும்.

யூத தேசியம் காலம் காலமாக இருந்ததென்று யூதர்களில் மரபுவாதிகள் சொல்கிறார்கள். என்றாவது ஒரு நாள் தம் மண்ணிலிருந்து பண்டைக் காலத்தில் விரட்டப்பட்ட யூத சமுகங்கள், உலகெங்கிலிருந்தும் திரும்பி வந்து, ஒன்று கூடி யூத நாடாக அமைய வேண்டும் என்பது இதன் மரபு உரு என்றாலும், பாலஸ்தினியர்கள் பல நூற்றாண்டுகளாக குடியமைத்து வாழ்கிற அதே மண்ணில் புலம் பெயர்ந்த அல்லது விரட்டப்பட்ட யூதர்கள் திரும்பி வந்து ஒரு யூத நாட்டை உருவாக்குவது எப்படி ? அதுதான் நவீன ஜயானிசத்தின் பிரச்சினை. தலையாய பிரச்சினை. என்ன சொல்லி ஒரு நியதியை இதற்கென்று உருவாக்குவது ? பல விளக்கங்கள் இதற்கு உண்டு. பலவகை மதவெறியர்கள், ஜாதி வெறியர்கள், மொழி/இன தேசியவாதிகளின் இடக்கு மடக்கு வாதங்கள், பன்னாட்டுக் கம்யுனிஸ்டுகளின் வழக்கமான அன்றன்றைக்கான அந்தர்பல்டி வாதங்கள், பன்னாட்டுப் பண முதலைகளின் ‘ஜனநாயக ‘ மாயாஜாலத் தந்திரங்கள் இவற்றோடு ஜயானிசத்தின் மூடத்தனங்களையும் சேர்க்க வேண்டியதுதானா ?

விவரங்களை ஓரளவு தெரிந்து கொள்ள மூன்று சுட்டிகளைத் தருகிறேன். இவை துவக்க கட்ட வாசிப்புகளே.

முதல் சுட்டி அமெரிக்க அரசில் வெளிநாட்டு உறவு வேலைகளில் இயங்கிய பல அனுபவசாலிகளும், அந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற சிந்தனையாளரும் சேர்ந்து கட்டியுள்ள ஒரு வலைமையம். இதில் ஓரளவு இஸ்ரேலுக்கான சாதகமான பார்வை இருக்கும் என்றாலும், அமெரிக்கருக்கே உரிய தன்னலப் பாதுகாப்புப் பார்வையும் இடையோடும். எனவே முழுவதும் ஜயானிசத்தை ஆதரிக்கும் இடம் இல்லை இது.

http://www.wrmea.com/html/focus.htm

அடுத்து ஒரு யூதப் பேராசிரியர் ஜயானிசத்தை ஒரு சுருக்கமான கட்டுரையில் விளக்குகிறார். இது ஓரளவு நடுநிலையானது என்றாலும், யூதரின் நலனை முன்வைத்து எழுதப்பட்டது. யூதரில் ஓரளவு நிதானப் பார்வை கொண்டவர்கள் கூட என்ன நிலை எடுக்கிறார் என்று பார்க்க உதவும்.

http://www.mfa.gov.il/mfa/go.asp ?MFAH00ng0

யூதரில் எல்லாரும் யூத மத வழிப் பார்வை, அல்லது யூத மக்கள் நலனை முன் வைத்த அரசியல் என்று இருப்பதில்லை. தமது ஜாதி அல்லது மதத்தை எதிர்க்கும் இந்துக்கள் இருப்பதில்லையா ? வடவரான ராமனின் படத்தைக் கொளுத்தி தன் கெளரவத்தைப் பச்சைத் தமிழர் மனதில் பெருமளவு உயர்த்திக் கொண்ட இந்து மத எதிர்ப்பாளர் சிலரைப் போல, ஜயானிசம், யூத தேசியம், யூத இன நலன் பார்வை ஆகியவற்றை சுட்டெரிக்க வேண்டும் – அப்படி எதிர்த்து வெளி வந்த சாதாரண யூதர் பாலஸ்தினியருடனும் அராபியருடனும் கூட்டமைப்பு வைத்து ஒரு சோசலிச சமுதாயம் அமைக்க வேண்டும் என்று மனப்பால் குடிக்கும் யூதரும் உண்டு. அதற்கு ஒரு காட்டு அடுத்த வலைச் சுட்டி:

http://www.balkanunity.org/mideast/english/zionism/

இவற்றை எல்லாம் படித்து – ஏற்கனவே தெளிவாக இருந்தால் குழம்புவீர்கள் என்றும், குழம்பியிருந்தால் தெளிவு அடைவீர்கள் என்றும் நம்புகிறேன். குழம்பிய குட்டைதான் தெளியும் என்று பழமொழி சொன்னாலும், தெளிந்த குட்டைதான் குழம்பும் என்பதையும் அவ் வழக்கு கருதியிருக்க வேண்டும். தெளிந்த குட்டையில் கல் வீசுவதுதான் எவ்வளவு வசீகரமானது ?

(தரிசனம் பெற்றபின் குழம்பாது என்று மரபு சார் அழகியலாளர் கருதக்கூடும். புற எதார்த்தமான இந்திய சமூகத்தின் நடுவில் இருந்து கொண்டு இப்படிக் கூட ஒருவரால் கருத முடியும் என்பதே சிரிப்பைத் தூண்டுவதுதான். ஆனால் எதிர் என்பதே ஒரு விதத்தில் புதிர்தானே ?)

14. அபு நிதால் அமைப்பு பற்றி சுருக்கமாக அறிய:

http://library.nps.navy.mil/home/tgp/abu.htm

விவரமாக அறிய:

http://www.ict.org.il/inter_ter/orgdet.cfm ?orgid=2

15. Stanley Milgram ஒரு புகழ் பெற்ற சமுக உளவியலாளர். எல்லாமே பிரதி என்று வெறுமே கூச்சலிட்டுத் தம் கருத்தை எல்லார் மீதும் திணித்து, நம் அனைவர் காதையும் செவிடாக்கிக் கொண்டிராமல், சோதனைகள் மூலம் தம் கருத்துகளை ‘உண்மை ‘ என நிறுவ முயன்றார். (உளவியலாளர் பலரின் அடிப்படை நம்பிக்கையான) அனைத்து மனிதருக்குமான பொதுவான சில உளப் பாங்குகளை, சார்புகளை, சாய்வுகளை வெளிக் கொண்டுவரப் பாடுபட்டார். இதில் சில சோதனைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதிகாரம் எப்படி அமைப்புகளில் இயங்குகிறது, தனி நபர்கள் எப்படி அமைப்பு வழிப்பட்ட அதிகாரத்துக்கு கேள்விகள் இல்லாமலே அடிபணிகிறார் என்பதை ஆராயப் புகுந்தார். ‘பணிதலும் தனி நபர் பொறுப்பும் ‘ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரை செறிவான மொழியில் எப்படி எழுதுவது என்பதைக் காட்டுகிறது:

http://home.swbell.net/revscat/perilsOfObedience.html

இவரைக் குறித்த இதர சுட்டிகள்:

http://webtext.library.yale.edu/xml2html/mssa.1406.con.html

http://www.stanleymilgram.com/milgram.html

இவை எல்லாம் துவக்க வாசிப்புகளே. ஆழப் படிக்க வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். தற்கால சமூக உளவியல் மில்கிராமின் கருத்துகளை எந்த நிலையில் வைத்திருக்கிறது என்று உளவியலாளர் யாரேனும் இங்கு எழுதித் தெரிவித்தால் நல்லது.

16. பயங்கரவாதம் என்பது இன்றைய கதை அல்ல என்பதுதான் இக்கட்டுரையின் மையம் என்றாலும், ஏராளமான புத்தகங்கள் இது பற்றி வரத் தொடங்கி இருப்பது இப்போதுதான் என்பதென்னவோ உண்மை. அதாவது உலக அரசியலில், அந்தஸ்தின் அடிப்படையில் விளிம்பில் உள்ள லத்தின் அமெரிக்க நாடுகளிலோ, பல ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலோ எத்தகைய பயங்கரவாதத்தாலோ- இடது, வலது, ஏகாதிபத்தியக் கைக்கூலிகள், ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டங்கள், வெறும் கொள்ளையர் கூட்டங்கள், மத/இன/சிறு/பெரும் தேசிய இயக்கங்கள்; ஏதோ ஒரு கொள்ளை நோய், எதுவானால் என்ன – சாதாரண மக்கள் ஈ, எறும்பு, கொசு அல்லது கரப்பான் போல நசுக்கப்பட்டு, பூண்டோடு அழிக்கப்பட்ட போதெல்லாம் கையும், வாயும், கண்ணும் காதும் பொத்திக் கிடந்த மேலை நாட்டுப் பிரசுரங்கள், தற்போதைய உலக சாம்ராஜ்யத்தின் நடு மையத்தில் சுமார் 3000 பேரும், இரு பெரும் கட்டிடங்களும், சில விமானங்களும் ஒரே நேரத்தில் நாசமானவுடன் விழித்துக் கொண்டு பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டியதன் அவசர அவசியம் பற்றி, அன்றும் இன்றும் பயங்கரவாதத்தால் பீடிக்கப்பட்டு அல்லலுறும் அரசியல் அமைப்பில் வாழ்பவர்களிடம் பேசுவது என்பது மிகவும் ஆபாசமானது. ஆனால், இப்போதாவது நாறிப் போன சாக்கடையின் அடைப்பை எடுக்க வருகிறார்களே என்று கூடிய மட்டும் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டிய அவல நிலை நம்முடையது. இரும்புக் கரத்தால் மக்களை ஒடுக்கி ஆளும் நாடுகளான சீனா, ரஷ்யா எல்லாமே பயங்கரவாதத்தில் சற்று ஆடிப் போய் இருக்கையில் என்றுமே பஞ்சையான (ஆனால் ஒப்பீட்டில் குரூரம் சற்றும் குறையாத) அரசைக் கொண்ட இந்தியா எம்மாத்திரம் ? இந்தக் கட்டத்தில் பயஙகரவாதம் பற்றி யார் எழுதினாலும் படிக்க வேண்டிய வலுக் கட்டாயம் – அது உள்ளூர் M.B.ராமனாகவோ, பிரான்ஸின் பெர்னார்ட் லெவியாகவோ, அமெரிக்காவின் வால்டர் லெக்கராகவோ, எவரானாலும் சரி. நமக்கு வேண்டியது தகவல், தகவல்…

வால்டர் லெக்கர் (walter laqueur) யார் ? கீழ்க்கண்ட சுட்டியில்

http://www.laqueur.net/english3.html

அவரைப் பற்றியும் அவர் எழுதிய புத்தகங்கள் பற்றியும் சுருக்கமாக தகவல் உண்டு. சுமார் 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதித் தள்ளியிருக்கிறார். ரஷ்யப் புரட்சியில் இருந்து, உலக யுத்தங்கள், ஹிட்லரின் மாயாஜால அரசியல், யூதருக்கேற்பட்ட இனப் படுகொலை, மத்திய கிழக்கு/மேற்கு ஆசியாவில் அராபியருக்கு ஏற்பட்ட பெரும் குழப்பங்கள் என்று பொதுவாக பெரும் சமூகப் புரட்டல்களும் கடும் குழப்பங்களும் ஏற்படும் சமூகங்கள் அக் காலகட்ட வரலாறு ஆகியன குறித்து எழுதுகிறார். இவர் இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியிலிருந்து தப்பித்த இளம் யூத அகதிகளில் ஒருவர். அண்மைக் காலம் வரை தொலை இலக்குக்கான அரசியல் உத்திகளும் பன்னாடுகளும் பற்றிய ஆய்வுக்கான கூட்டுக் குழுவின் தலைவராக (Research Council of the Center for Strategic and International Studies) அமெரிக்கத் தலை நகரமான வாஷிங்டனில் இயங்கியவர். பிறகு அதே அமைப்பில் ‘தனிப் பெருமை பெற்ற ‘ ஆய்வாளராக (distinguished scholar) இயங்குகிறார். ஜயானிசத்தின் வரலாறு குறித்தும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் எனக் குறிப்பு தெரிவிக்கிறது. இப்புத்தகத்தின் மகிமை என்னவென்றால், யூதரின் முகமூடியைக் கிழித்தெறியப் பாலஸ்தினியர் நடத்தும் ஒரு வலை மையத்தில் இப்புத்தகம் பெருமளவும் கறாரான வரலாற்றுப் பார்வையுடன் எழுதப்பட்டதாக முன் மொழியப் படுகிறது. அந்த வலை இடத்துக்குச் சுட்டி இதோ:

http://www.palestineremembered.com/Acre/Books/Story818.html

இதே வலைக் களத்தின் இன்னொரு இடத்தில் ஜயானிசம் பற்றிய பாலஸ்தினியரின் பார்வை விரிவாகக் கொடுக்கப் படுகிறது. அதையும் படிக்க முடிந்தால் நல்லது.

http://www.palestineremembered.com/Acre/Palestine-Remembered/Story452.html

எல்லாத் தரப்பினரின் வாதங்களையும் கேட்டுக் கொள்ளுதல் உதவும்.

லெக்கரின் வேறு சில புத்தகங்கள் பற்றிய தகவல்கள்:

http://www.nybooks.com/authors/670

http://www.nybooks.com/articles/11987

பயங்கரவாதம் பற்றிய லெக்கரின் சமீபத்திய மூன்று புத்தகங்கள் இவை:

1) A History of Terrorism /by Walter Laqueur /Transaction Books/ March 2001

2) The New Terrorism- Fanaticism and the Arms of Mass Destruction / by Walter Laqueur /Oxford University Press /Published: September 2000

3) No End to War-Terrorism in the Twenty-First Century/ by Walter Laqueur/ Continuum Publishing /Published: May 2003

இவற்றில் இரண்டாவது புத்தகம் பயங்கரவாதம் வெல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் இடுவதாகத் தெரிகிறது. அவையாவன- கவனமான திட்டமிடுதல், திடார் திருப்பங்களுக்கேற்ப அவசர மாற்றுகளைத் தயாரிக்க முடியும் திறமை, சிறு குழுக்களாக இயங்குவது, பெரு நகரங்களின் கூட்டத்தில் கிட்டும் அடையாளமற்ற தன்மை, மேலும் வற்றாது ஊறிக் கொட்டும் பண வசதி.

17. இது பழம் சரக்கு போல இருக்கிறது. மாஒ போன்ற தொலை நோக்குத் திட்டம் தீட்டும் போராளிகள் சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்பே இதையெல்லாம் தமது போர்க்கள உத்திகளில் எழுதிப் போகவில்லை ? முதலாளிய நாட்டில் சிலதெல்லாம் காலம் தாழ்த்தித்தான் சரக்காக மாறும் போலும்!

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்

பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 1

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

ஜேம்ஸ் வில்ஸன்(தமிழில்: ஆசாரகீனன்)


[மொழி-பெயர்ப்பாளரின் குறிப்புகள் [..] என்ற வகை அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. தவிர, எண்ணிக்கையிட்ட அடிக் குறிப்புகளும் விவர விளக்கம் தருகின்றன. கட்டுரை ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பும் கீழே தரப்பட்டுள்ளது]

19-ஆம் நூற்றாண்டு வரை, பயங்கரவாதத்தை நியாயப்படுத்தக் கூடிய வழக்கமான காரணமாக மதம் மட்டுமே ஒப்புக் கொள்ளப்பட்டது. அது ஏன் என்று புரிந்து கொள்வது கடினமல்ல: மதம் உண்மையாக நம்புபவர்களுக்கு நல் வாழ்வு பற்றியும், தீமையை அடையாளம் கண்டுகொள்வதற்கும் வழி சொல்கிறது; தவறான நம்பிக்கைகள் மற்றும் தவறான பழக்க வழக்கங்களின் வடிவில் உள்ள தீமை கடவுள் வரையறுத்திருக்கும் வாழ்க்கையை நலிவடையச் செய்கிறது அல்லது ஊழலாக்குகிறது என்று நீங்கள் நம்பினால், அத் தீமையை எதிர்த்துப் போராட வேண்டியது உங்களது இன்றியமையாத கடமையாகிறது. ஒத்த கருத்துடைய நம்பிக்கையாளர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் வன்முறையை, தற்கொலைத் தாக்குதல்களைக் கூட மேற்கொண்டு அத் தீமையை எதிர்ப்பது அவசியம்.

இந்தியாவில் தக்கர்கள் கூட்டம், அவர்கள் இயங்கிய பல நூற்றாண்டுகளில் இந்து மதப் பெண் தெய்வமான காளிக்குப் பலியாக 10 லட்சம் பேர்களைக் கழுத்தை மெதுவாக நெரித்துக் கொன்றிருக்கக் கூடும். தக்கர்களுக்கு அரசியல் நோக்கங்கள் எதுவும் இல்லாததால், தாம் பிடிபட்டால் கிட்டும் மரண தண்டனையைச் சொர்க்கத்திற்குச் செல்லும் விரைவான பாதை என ஆவலுடன் எதிர் நோக்கினர்[1].

முஸ்லிம் உலகத்தில், முகமது நபி இறந்த சில ஆண்டுகளிலிருந்தே அரசியல் கொலை (assasination) என்ற வகை பயங்கரவாதம் இருந்துவருகிறது. நபிக்குப் பின் தலைமைப் பொறுப்பேற்றவர்களில், மூன்று பேர்கள் குறுவாளால் குத்திக் கொல்லப் பட்டனர். ‘அஸாஸின் ‘ [இனி இவர்களை அரசியல் கொலைகாரர் என்றும் குறிப்பிடுவோம்] என்ற ஆங்கில வார்த்தையே ஹஸன் இபின் அல்-ஸப்பாஹ் என்பவரால் தொடங்கப்பட்ட குழுவினரிடமிருந்தே வருகிறது. இவரது சீடர்களால் 11-ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயங்கரவாதம், இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னால் இவர்கள் முற்றிலும் துடைத்து அழிக்கப்படும் வரை, முஸ்லிம் உலகம் முழுவதும் பரவி இருந்தது. இவர்கள் தங்கள் எதிரியரான சுன்னி முஸ்லிம்களைப் பெருமளவில் கொன்று குவித்தனர். ஒருவேளை, மொத்த முஸ்லிம் கலிஃபாக்களில் மூன்றில் ஒரு பங்கினர் கொல்லப்பட்டே இருக்கலாம்.

‘அஸாஸின் ‘ என்ற கூட்டத்தாரை இரண்டு விதங்களில் உலகின் முதல் பயங்கரவாதிகளாகக் கருதலாம்[2]. கொலை செய்வதன் மூலம் வெறுமே ஆட்சியாளர்களை மாற்றுவதை மட்டுமே அவர்கள் விரும்பவில்லை. நெறி தவறி களங்கப்பட்டவர்களாக அவர்களால் கருதப்பட்ட சுன்னி பிரிவின் ஆட்சியை மாற்றி, ஓர் ஆதர்ச ஷியா (பிரிவினரின்) ஆட்சியை ஏற்படுத்துவதே அவர்களது நோக்கமாக இருந்தது. மேலும், அஸாஸின்கள் குறுவாட்களை மட்டுமே தாக்கப் பயன்படுத்தியதால், அவர்கள் பிடிபடுவதும், பெரும்பாலும் கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் கொலை செய்யப்படுவதும் தவிர்க்க முடியாததாக இருந்தது. பெர்னார்ட் லூயிஸ்[3] கருதுவதைப் போல, கொலை செய்வதென்பது ஓர் இறைப் பற்றுள்ள செயலாகவும், அம் முயற்சிக்குப் பிறகு பிழைத்து உயிர் வாழ்வது அவமானமாகவும் கருதப்பட்டது.

நவீன காலத்தில், கொலைகாரர்கள் ஸிரியா மற்றும் இலங்கை அதிபர்களின் உயிரைப் பறித்திருக்கிறார்கள்; இரான் மற்றும் இந்தியாவில் தலா இரண்டு பிரதமர்களைக் கொன்றிருக்கிறார்கள்; ஏடன், ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கு யேமன் அதிபர்கள், லெபனானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மற்றும் எகிப்தின் அதிபர், எண்ணற்ற நீதிபதிகள், மேலும் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால், மதம் சார்ந்த வன்முறை என்பது இஸ்லாத்துக்கு மட்டும் உரியதல்ல. அமெரிக்காவில், கருச்சிதைவு செய்யும் மருத்துவமனைகளின் மீது குண்டு வீசுவது, அந்த மருத்துவர்களைச் சுடுவது போன்றவற்றைச் செய்பவர்கள் கிருஸ்தவ விவிலியமே அப்படிக் கட்டளை இடுவதாகக் கருதுகிறார்கள். கயானாவில் ஜிம் ஜோன்ஸ் தன்னுடைய முகாமில் இருந்து தன்னைப் பின்பற்றுபவர்களைக் கொன்றார் அல்லது தற்கொலை செய்து கொள்ளச் செய்தார் . மேலும், வாகோ [அமெரிக்கா, டெக்ஸாஸ் மாநிலம்]-வில் டேவிட் கொரெஷ் தன்னைப் பின்பற்றுபவர்களின் ஒட்டுமொத்தமான மரணத்தைத் தடுக்க ஒன்றும் செய்யவில்லை [4]. ப்ளெய்ஸெ பாஸ்கல் சொல்வதைப் போல, ‘மத நம்பிக்கையின் பொருட்டு செய்யும் போது தவிர வேறு எப்போதும் மனிதர்கள் வெளிப்படையாகவும், திருப்தியுடனும் கொடுமை இழைப்பதில்லை. ‘ ரேண்ட் (RAND) நிறுவனத்தில் தீவிரவாதம் பற்றிய நிபுணரான இருக்கும் ப்ரூஸ் ஹாஃப்மன் பிற பயங்கரவாத வடிவங்களை விட தற்கொலைத் தாக்குதல்கள் நான்கு மடங்கு அதிகமான மக்களைக் கொல்கின்றன என்று கண்டுள்ளார்; செப்டம்பர் 2000-த்திலிருந்து இத்தகைய தாக்குதல்கள் 750 உயிர்களைப் பலி கொண்டுள்ளன – 11 செப்டம்பர் தற்கொலைத் தாக்குதலில் இறந்த 3000 பேர் இதில் சேர்க்கப்படவில்லை. மத வழி செல்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உண்மை தான். உதாரணமாக, ஜப்பானியர் அமெரிக்க போர்க் கப்பல்களுக்கு எதிராக அனுப்பிய காமிகாஜி விமானங்களுக்குப் பின்னே எந்த மதவழி உந்துதலும் இல்லை. இலங்கையில் உள்ள பயங்கரவாதிகள் மதத்தால் உந்தப்படுபவர்கள் அல்ல. ஆனால் இன்று, பயங்கரவாதிகளைப் பொறுக்கி எடுக்கும் இயக்கங்களை மத அடிப்படையிலான குறிக்கோள்கள் எதுவும் வழி நடத்தாத நிலையிலும், மத நம்பிக்கைகள் மற்றும் குறிப்பாக, இஸ்லாத்தைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட விளக்கம் ஆகியன தற்கொலை வழி பயங்கரவாதிகளின் உள்நோக்கங்களில் பெரும் இடத்தைப் பிடிக்கின்றன. மத்திய கிழக்கில் [மேற்கு ஆசியாவில்] உள்ள ஃபாடா போன்ற பயங்கரவாத குழுக்கள் மத சார்பற்றவை. மேலும், மத சார்பற்ற காரணங்களுக்காகவும் சிலர் அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்களில் சேர்கிறார்கள்.

பயங்கரவாதம் என்பது என்னதான் குறிக்கோளுடன் கூடியதாக இருந்தாலும், மக்களைக் குழப்பம் அடையச் செய்கிறது, ஏனெனில், மக்களால் தாம் இப்படிச் செய்ய முடியும் என்று கற்பனை கூடச் செய்ய முடிவதில்லை. இத்தகைய குழப்பம், பயங்கரவாதிகள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அமைதியற்ற சுற்றுச் சூழலின் காரணமாக உருவாக்கப்பட்டவர்கள் என்று பெரும்பாலும் நம்மைக் கருத வைக்கிறது.

வலுவான கட்டுரை ஒன்றில், ஸிந்தியா ஓஜிக்[5] தங்களைத் தாங்களே வெடித்துச் சிதறடித்துக் கொள்ளும் பணியில் குழந்தைகளை அமர்த்துவது என்ற ‘காட்டுத்தனமான பாலஸ்தீன சமூகக் கண்டுபிடிப்பை ‘ விவரிக்கிறார்: இத்தகைய செயல்கள் ‘உள்ளுணர்வுக்கு எதிரானவை ‘, ஏனென்றால் இவை வாழும் உந்துதலுக்கு எதிரானவை, ஒரு பண்பாட்டின் வக்கிரமான கருதுகோளினால் (லட்சியத்தால்) உற்பத்தியானவை என்பது அவர் வாதம். இத்தகைய ஆள் சேர்ப்பு மனப்பிறழ்வு அல்ல என்று அவர் சொல்வது சரி என்றாலும் இது மனித உள்ளுணர்வை எதிர்த்தல் என்று சொல்வது முழுவதும் சரியல்ல. இது சில உள்ளுணர்வுகளை மீறுகிறது என்றாலும், வேறு உள்ளுணர்வுகளுடன் இசைவதாகவே இருக்கிறது.

மக்கள் இத்தகைய குழுக்களில் ஏன் சேர்கிறார்கள் என்பதை விளக்க, நான் சில மாறுபாடுகளை இனம் காட்ட வேண்டும். ஜியார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜெரால்ட் போஸ்ட்[6] குறிப்பிடும் ஒரு மாறுபாடு, கலகக் கொள்கையாளர்களுக்கும் தேசியவாதிகளுக்கும் இடையிலானது.

கலகக்காரர்கள் (anarchist) அல்லது கொள்கையாளர்கள் (ideological) குழுக்களுள் ஜெர்மனியிலிருந்த செம்படைக் குழு (பாதெர்-மையின்ஹாஃப் குழு என்று பிரபலமாக அறியப்படுவது), இத்தாலியின் செஞ்சேனை, அமெரிக்காவின் தட்பவெப்பர்கள் (weathermen) ஆகியவை அடங்கும். 1980-களின் தொடக்கத்தில் ஜெர்மன் அரசு செம்படைக் குழு மற்றும் வலதுசாரி பயங்கரவாத குழுக்கள் பற்றி பெரிய அளவிலான விசாரணை ஒன்றை நடத்தியது. (இது நடந்தது ஜெர்மனியில் என்பதால், இது பற்றிய விவரங்கள் நான்கு புத்தகத் தொகுதிகளாக வெளியிடப்பட்டன என்று அறிந்து நீங்கள் வியப்படையப் போவதில்லை.) செம்படை உறுப்பினர்கள் நடுத்தர வர்க்கத்தினராகவும், இவர்களுள் சுமார் 25 சதவீதத்தினர் உடைந்து போன குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். நான்கில் மூன்று பங்கினர் தங்கள் பெற்றோர்களுடன் தங்களுக்கு தீவிரமான பிரச்சினை இருந்ததாகவும் தெரிவித்தனர். சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் இளம் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் பொதுவாக ‘ நிலைத்த அமைப்பையும் ‘ (establishment), முதலாளித்துவ சமூகத்தையும் கண்டனத்துக்கு உள்ளாக்க விரும்பி ஒத்த கருத்துள்ளவர்களின் குழுக்களில் சேரவும், அக் குழுக்களால் நாளாவட்டத்தில் தம் வாழ்வையே முழுமையாகப் பறித்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபடுத்தப் படுகின்றனர். இத்தாலிய செஞ்சேனையினரும் இத்தகைய பின்னணி கொண்டவர்களே.

கொள்கை அடிப்படையிலான பயங்கரவாதிகள் தாங்கள் உருவாக்க விரும்பும் உலகம் பற்றிய தெளிவான கண்ணோட்டம் எதையும் தருவதில்லை. மக்களைத் தம்மிடையே ஒரு புது வகை உறவு கொள்ள வைக்கப் போவதாகத் தெளிவில்லாத ஒரு கருத்தை முன் வைத்தாலும், அந்த உறவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைப் பற்றி ஒருபோதும் சொல்வதில்லை. அழிப்புதான் அவர்களது இலக்கு, படைப்பு அல்ல. அவர்கள் மார்க்ஸியராக இருக்கும் பட்சத்தில், இத்தகைய தெளிவின்மை சற்றும் வியப்பு தருவதற்கில்லை, ஏனெனில் மார்க்ஸே கூடத் தான் படைக்க விரும்பும் உலகு எத்தகையது என்பதை விவரிக்கவில்லை, ஒரு சில பளபளப்பான, ஆனால் உள்ளீடு இல்லாத வெற்றுப் பொதுமைப்படுத்தல்களை மட்டும் தந்தார்[7].

மற்றொரு முக்கியமான வேறுபாடு: ஜெர்மனியில் செம்படைக் குழு போன்ற இடதுசாரி பயங்கரவாதிகள் நல்ல உயர் கல்வி கற்றவர்கள், உறுப்பினரில் பெரும் பகுதி பெண்களாகக் கொண்டவர்கள். மேலும், வலதுசாரி பயங்கரவாதிகளை விட நன்கு கட்டமைக்கப்பட்டவர்கள். இதே போல அமெரிக்காவிலும் – வெதர் தலைமறைவு இயக்கம் [இடதுசாரி] மற்றும் ஆரிய நாடு [வலதுசாரி] ஆகிய இரண்டுக்கும் இடையில் இத்தகைய வேறுபாடுகள் இருந்தன[8]. இடதுசாரி பயங்கரவாதிகளுக்கு நன்கு செப்பனிடப்பட்ட கொள்கைக் கட்டுமானம் உண்டு; வலதுசாரி பயங்கரவாதம் பெரும்பாலும் நோய் போன்ற, வழக்கப் பிறழ்வாகத்தான் இருக்கும்.

இத்தகைய வேறுபாடு இருக்கக் காரணம் என்ன என்று எனக்கு முழுவதும் தெளிவாகவில்லை. வலதுசாரி பயங்கரவாத இயக்கங்கள், இழக்கப்பட்டதாகத் தாம் கருதும் ஓர் உலகத்தை நோக்கிப் பின்னால் பார்ப்பதும், இடதுசாரியினர் தாம் அவாவுகிற ஓர் உலகம் வர இருப்பதாகக் கருதி முன்புறம் நோக்குவதும் (இவ் வேறுபாடு எழ) ஒரு காரணமாய் இருக்கலாம். ஓர் எதிர்காலத்தைக் கற்பனை செய்ய விரும்புபவர்களுக்கு வேண்டுமானால் உயர் கல்வி பயனுடையதாக இருக்கும். ஆனால், கடந்த காலம் பற்றித் தங்களுக்குத் தெரியும் என்று நினைப்பவர்களுக்கு உயர் கல்வியால் அவ்வளவு பயனில்லை. இடதுசாரியினர் புத்தகங்களிலிருந்தும், பேராசிரியர்களிடமிருந்தும் எதிர்காலம் பற்றிய ஒரு சிறு கீற்றைக் காணப் பெற்று, அதையே படைத்துவிடப் போராடுகிறார்கள்.

வலதுசாரியினரின் அதிருப்தி கடந்த காலம் பற்றிய உணர்வை அடிப்படையாகக் கொண்டது, எனவே, அதை மீட்டு விட அவர்கள் போராடுகிறார்கள். ‘கு க்ளக்ஸ் க்ளான் ‘ (Ku Klux Clan) அல்லது ஆரிய நாடு (Aryan nation) ஆகிய அமைப்புகளில் உறுப்பினராவதற்கு கருப்பர்கள் அல்லது கத்தோலிக்கர்கள் அல்லது யூதர்களை ஒடுக்குவது நல்லதுதான் என்று கருதுவதே போதுமானதாக இருந்தது [இவை வலதுசாரி என்பது கட்டுரையாளர் கருத்து]. வெதர் தலைமறைவு இயக்கத்தில் சேர, பூர்ஷ்வாக்களின் சமூகம் நசித்து வருவதும் ஒடுக்குவதும் என்று புது உறுப்பினருக்கு யாரேனும் சொல்லித் தர வேண்டியிருந்தது [இது இடதுசாரி இயக்கம்].

இதற்கு மாறாக, தேசியவாத மற்றும் மதவாத பயங்கரவாதிகள் என்பவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள். இவர்களைப் பற்றிய இன்னமும் கட்டமைக்கப்படாத உதிரி ஆய்வுகள், பெரும்பாலும் இவர்களுக்குத் தம் பெற்றோருடன் எந்த மோதலும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன; மாறாக, இவர்கள் தங்கள் வீடுகளில் கற்ற கருத்துகளைச் செயல்படுத்த அதி தீவிரமான வழிகளைக் கையாள முயல்கிறார்கள். இதற்கும் மேலாக, இவர்களுக்குப் பெரும்பாலும் தாங்கள் உருவாக்க விரும்பும் உலகம் பற்றி தெளிவும் இருக்கிறது: மத அல்லது தேசியத் தலைவர்களால் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உலகம் இது. இத் தலைவர்களோ தாங்கள் பிரசாரம் செய்யும் கருத்தாக்கங்களை முற்றிலும் திரித்துக் காட்டக் கூடும் என்பது சாத்தியம்தான், ஆனால் இத்தகைய திரிப்புகள் மக்களை அடக்கி ஆளும் சக்தியைப் பெற்று விடுகின்றன.

பென்ஸில்வேனியா பல்கலைக் கழகத்தில் உள்ள மார்க் ஸேஜ்மன்[9], அல்-கய்தா பற்றி இதுவரை நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களை ஆராய்ந்திருக்கிறார். கொள்கை அடிப்படையிலான பயங்கரவாதிகளைப் போல் அல்லாமல், இவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு நெருக்கமானவர்களாக உணர்வதோடு, தங்களை முழுமையானவர்களாகவும், அக்கறை உள்ளவர்களாகவும் கருதுபவர்கள். பெரும்பாலும், இவர்கள் எந்தக் குற்றத்திலும் ஈடுபடாமல் இருந்ததோடு, இறையுணர்வு மிக்க முஸ்லிம்களாகவும் இருப்பவர்கள். பெரும்பாலானோர் திருமணம் ஆனவர்கள்; பலருக்குக் குழந்தைகள் உண்டு. மன நோய்க்கான வெளிப்படையான அறிகுறிகள் ஒருவரிடமும் காணப்படவில்லை. இவர்களிடையே அல்-கய்தா பிரபலமடையக் காரணம் அது ஒரு சமூகக் கூட்டமைவாக இருந்து, மேலை நாகரிகத்தின் சீரழிந்த மதிப்பீடுகளை இனம் காணவும், எதிர்க்கவும் உதவியதே. மேலை நாடுகளுக்குப் படிக்க வந்து, தனிமைப்பட்டுப் போனவர்களும், தம் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காதவர்களும் இந்த அமைப்பால் மிகவும் வலுவாகக் கவரப்பட்டனர்.

பிரபலமான தேசிய பயங்கரவாதியான ஸப்ரி அல்-பனா (அபு நிதால் என்றும் அறியப்படுபவர்), ஜாஃபாவில் ஒரு வசதியுள்ள தந்தைக்குப் பிறந்தவர். இவர் தனது அமைப்பான, அபு நிதால் அமைப்பு என்றும் அறியப்படும் ஃபாடா புரட்சிக் குழுவின் மூலம் இஸ்ரேலை அழிக்கவும், அரசியல் ரீதியிலான தீர்வை ஆதரிக்கும் பாலஸ்தீனத் தலைவர்களைத் தாக்கவும் முயல்பவர். இவர் ஒருக்காலும் பரிதாபத்துக்குரிய ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்லர்.

ஆலன் பி. க்ரூவ்கர்[10] மேலும் ஜிட்கா மலெச்கோவா ஆகியோர், இரானின் ஆதரவு பெற்ற ஷியாக்களின் படைக் குழுவான ஹெஸ்புல்லாவின் சார்பில் லெபனானில் சண்டை போட்டு மடிந்த படையினரைப் பற்றி ஆராய்ந்து இதையொத்த முடிவுக்கே வந்துள்ளனர். லெபனானின் சாதாரண மக்களோடு ஒப்பிடுகையில், ஹெஸ்புல்லா படையினர் வசதியான, நன்கு கல்வி கற்ற இளம் ஆண்களாகவே இருக்கிறார்கள். ஏழைகளாகவோ, கல்வியறிவு அற்றவர்களாகவோ இல்லாத இவர்கள், ஜெருஸேலத்திலுள்ள பாறை மசூதியின் விதானத்தைத் தகர்க்க முயன்ற ‘விசுவாசிகளின் குழு ‘ (bloc of the faithful)-வைச் சார்ந்த இஸ்ரேலிய யூதர்களைப் போன்றே நல்ல கல்வி, நல்ல சம்பளம் பெற்றவர்கள் என்பதோடு ஆழ்ந்த மதப் பிடிப்பு உடையவர்களும் ஆவர்.

சிங்கப்பூரில் இருக்கும் ஒரு முக்கியமான பயங்கரவாதிகள் அமைப்பு ‘ஜெமா இஸ்லாமியா ‘ ஆகும். இந்த அமைப்பின் 31 உறுப்பினர்களை ஆராய்ந்த சிங்கப்பூர் உளவியல் நிபுணர்கள், இவர்கள் பல அம்சங்களிலும் சாதாரணமானவர்களாக இருப்பதைக் கண்டனர். இவர்கள் அனைவரும் ஆண்கள், சராசரியிலிருந்து சராசரிக்கு அதிகமான அறிவுத் திறன் பெற்றவர்கள், வாடகைக் கார் (Taxi) ஓட்டுவது முதல் பொறியியல் வரை உள்ள பல வகை வேலைகளையும் இவர்கள் செய்து வந்தனர். அல்-கய்தா மற்றும் ஹெஸ்புல்லா உறுப்பினர்களைப் போலவே இவர்களும் நிலையற்ற குடும்பங்களிலிருந்து வராதவர்கள் என்பதோடு, தற்கொலை நாடும் நடத்தை மீது எந்த வினோத விருப்பையும் காட்டவில்லை. இவர்கள் மத சார்பற்ற கல்வி நிறுவனங்களில் பயன்றவர்கள் என்றாலும், மதத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருந்தனர்.

அண்மையில், வழக்கமாகப் பெண்களுக்குக் கீழ்மட்டப் பணிகளையே கொடுக்கும் இஸ்லாமிய உலகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளதைச் சுட்டுவது போல – பயங்கரச் செயல்களில் ஈடுபட பெண்களையும் சேர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். மிகச் சரியாகச் சொல்வதானால், தங்கள் பாரம்பரிய உடை காரணமாக, பெண் தற்கொலைப் படையினர் தங்கள் அடையாளத்தை எளிதில் மறைத்துக் கொள்ள முடியும் என்பதோடு மேற்கத்திய முறையில் இறுக்கமான ஆடைகளை அணிந்து தங்களை இஸ்ரேலியர்கள் போலவும் காட்டிக் கொள்ள முடியும். தங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட ஏதோ களங்கத்தைப் போக்கிக் கொள்ளவே இப் பெண்கள் தற்கொலைப் படையினராக மாறுவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் கருதுகின்றன. விவாகரத்து, மலடாக இருத்தல் அல்லது கள்ள உறவு போன்ற அவமானங்களை, ஒரு புனிதமான காரணத்துக்காக உயிர் விடுவதன் மூலம் துடைத்தெறிய முடியும். சில பெண்கள் திட்டமிட்டுக் கவரப்பட்டு கெடுக்கப்பட்ட பின்னர் வெளிப்படுத்தப்படுவர் என அச்சுறுத்தப்பட்டு, அதனால் தற்கொலைப் படையினராக ஆக்கப்பட்ட நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.

ஏழ்மை மற்றும் அறியாமையே பயங்கரவாதத்தின் ஊற்றாக இருக்கிறது என்ற வாதம் தவறானது என்பதை, பயங்கரவாதிகள் வசதியாக வாழ்பவர்கள் என்பது மட்டுமே நிரூபித்து விடாது. பயங்கரவாதிகள் என்பவர்கள் தங்கள் பாதையைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்ட மேல் தட்டினராக இருந்தாலும், வறுமையில் ஆழ்ந்த மற்றும் மனம் சலித்துப் போன மக்களின் தேவைகளை நிறைவேற்ற உழைக்க விரும்புபவர்கள் என்ற பட்சத்தில், மக்கள் கூட்டத்துக்கு பணமும், கல்வியும் அளிப்பது என்பது பயங்கரவாதத்தைத் தடுக்கும் சிறந்த வழியாக இருக்கும்.

இப்போது நமக்கு தெரியும் விவரங்களிலிருந்து, இத் தேற்றம் தவறானது என்று தோன்றுகிறது. க்ரூவ்கரும் (Krueger) மலெச்கொவாவும் (Maleckova), மத்திய கிழக்கின் பயங்கரவாதச் செயல்களையும், அப் பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் ஒப்பிட்டு, பொருளாதார நிலை மேம்பட மேம்பட பயங்கரவாதச் செயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததைக் கண்டறிந்தனர். 2000-ஆம் ஆண்டில் இஸ்ரேலியருக்கு எதிரான பாலஸ்தீனிய வன்முறைப் போராட்டமான இன்டிஃபாடா (intifada) தொடங்குவதற்குச் சற்று முந்தைய கால கட்டத்தில், மேற்குக் கரையிலும் (West Bank) காஜா (Gaza) பகுதியிலும் வசிக்கும் பாலஸ்தீனியர்களிடையே நிலவிய வேலையின்மை விகிதம் குறைய ஆரம்பித்து, பாலஸ்தீனியர்கள் தமது பொருளாதாரம் முன்னேறுவதாக நினைக்கத் தொடங்கினர். 1988-ஆம் ஆண்டு இன்டிஃபாடாவின் போதும் இதே போன்ற பொருளாதார நிலை காணப்பட்டது. பொருளாதார நிலை மோசமடைந்த போது பயங்கரவாதம் பரவவில்லை. ஆனால், பொருளாதாரம் முன்னேறிய போது பயங்கரவாதம் அதிகரித்தது.

இந்த ஆய்வு, புராதன காலத்திலிருந்து 1980-கள் வரை நடைபெற்ற பயங்கரவாதச் செயல்களை விவரிக்கும் ‘அரசியல் கொலை ‘ என்ற புத்தகத்தை எழுதிய ஃப்ராங்க்ளின் எல். ஃபோர்ட்-இன் கருத்துகளோடு ஒத்துப் போகிறது[11].

ஐந்தாவது நூற்றாண்டின் ஆதன்ஸ் நகரம், ரோமானியக் குடியரசு காலம், மேலும் 18- வது நூற்றாண்டின் ஐரோப்பா – ஆகியவற்றில் அரசியல் படுகொலைகள் நடைபெறுவது மிக அரிதாக இருந்தது. இக் கால கட்டங்களில் அதிகாரமும் பொறுமையான விட்டுப் பிடிக்கும் தன்மையும் ஒரு வித சமநிலையை எட்டியிருந்தன. கூடவே, மக்களின் வழக்கமான உரிமைகளைப் பாதுகாப்பதில் அப்போது இருந்த கட்டுப்பாடு மிக்க ஈடுபாடும் இந்த சமநிலையை உறுதி செய்தது. பயங்கரவாதம் என்பது பெருமளவிலான அடக்குமுறையுடனோ, சமூக அநீதியுடனோ அல்லது அதிக அளவிலான சாதாரணக் குற்றங்களுடனோ தொடர்பு உடையதாகத் தெரியவில்லை. அரைகுறை சீர்திருத்தம் நடக்கும் காலங்களில், மக்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு, எதிர்பார்ப்புகள் அதிகரித்து, பொறுமை அற்றுப் போய், துரிதமான மாற்றங்களுக்கான குரல்கள் எழும் கால கட்டங்களில் பயங்கரவாதம் எழுவதாக ஃபோர்ட் கருதுகிறார்.

பயங்கரவாத-தற்கொலைப் படையின் வெடிகுண்டு வைப்பவரும், மேலும், அப்பாவிகளான சாதாரண மக்களைக் கொல்லும் பிற கொலைகாரர்களும் – அவர்கள் இப்படி நெருக்கடியான நிலையில் எழும் வெறியில் இல்லாத காலத்தில், ஒரு வேளை மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கலாம். ஆனால், இதைப் பற்றி ஆராய்ந்து அத்தகைய மனப்பிறழ்வு எதையும் கண்ட எந்தத் தேர்ந்த ஆய்வாளரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பயங்கரவாதிகள் நிச்சயம் பயங்கரவாதிகளாக இல்லாதவர்களிடமிருந்து வேறுபட்டவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், இதற்குக் காரணம் எந்த வெளிப்படையான நோயும் அல்ல.

சுருக்கமாகச் சொன்னால், மத உணர்வின் அடிப்படையிலோ அல்லது தேசியம் சார்ந்தோ பயங்கரவாதிகளை உருவாக்குவதில், தனிநபரின் மனப் பிறழ்ச்சி, வசதியற்ற வறுமை அல்லது குடும்பத்தினரின் புறக்கணிப்பு ஆகியவை சிறிதும் காரணிகள் அல்ல. பிரபலமான, பெரும் தலைவர்களுக்கும் கூட இதில் அதிகம் பங்கு இல்லை எனத் தெரிகிறது. உதாரணமாக, சமீபத்தில் ஜூன் 2003 வாக்கில் கூட மூன்றில் ஒரு பங்கு பாலஸ்தீனரே யாஸிர் அராஃபத்[12] நன்கு செயல் படுவதாக நம்பிக்கை தெரிவித்தனர். இருந்த போதிலும், மேற்குக் கரை மற்றும் காஜா பகுதி பாலஸ்தீனர்களிடையே தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பெரும் ஆதரவு இருந்ததோடு, பாலஸ்தீன நலன்களுக்கு வன்முறை பெரிதும் உதவியது என்ற பரவலான நம்பிக்கையும் இருக்கிறது. சொல்லப் போனால் இன்டிஃபாடாவின் வன்முறை தொடங்கியதிலிருந்து அராஃபத்தின் செல்வாக்கு சரிந்து விட்டது.

[தொடரும்]

நன்றி: ஸிட்டி ஜர்னல் Winter 2004 இதழ்

பின் குறிப்புகள் – மொ.பெ.

1. 1356-ஆம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்ட ஃபிரோஸ் ஷா வின் சரிதையில் உள்ள தக்கர்கள் (Thugs) பற்றிய குறிப்பு, முதலில் கிட்டிய குறிப்பாக இருக்கலாம். இதன்படி, 1290ல் தில்லி சுல்தான் ஜலால்-உல்-தீன் கில்ஜியின் அரசு சுமார் 1000 தக்கர்களைக் கைப்பற்றி அவர்களைக் கொல்லாமல் ‘லக்னாவுடி ‘க்கு அருகில் கொண்டு சென்று விட்டுவிட்டதாகக் குறிப்பு தெரிவிக்கிறது. 1835 வரை பல்லாயிரம் பயணிகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற இவர்களின் மூலம் தெளிவாக இல்லை. முஸ்லிம்களும் இந்துக்களும் கலந்த கூட்டமான இது துர்க்கை அல்லது காளியைத் தெய்வமாகக் கொண்டதாகத் தெரிகிறது. தக்கர்கள் பரம்பரையாக வந்த கூட்டம். 1833-ல் இந்திய கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்ற வில்லியம் பென்டிங்க், தன் தலைமை ஏஜண்ட் வில்லியம் ஸீமேன் என்பவரின் உதவியைக் கொண்டு இந்த ரகசியக் கொலைகாரர் கூட்டத்தை அழித்து ஒழித்ததாக வரலாறு சொல்லுகிறது. சமீபத்தில் பின்-காலனித்துவ வரலாற்றியல் தலை தூக்கி இருக்கிறது. முன்னாள் காலனிகளாக இருந்த நாடுகளின் வரலாறு எனத் தற்போது பரவலாகக் கிட்டுவது மேலை காலனியாதிக்க நாடுகளின் பார்வையில் எழுதப்பட்ட வரலாறு, அதை மறு பரிசீலனை செய்து எழுத வேண்டும் என்ற மாற்றுப் பார்வையை முன் வைப்பது இது. ஒரு பதிவில் சப்-ஆல்டர்ன் வரலாற்றாசிரியர்கள் தக்கர்களை காலனி ஆட்சி எதிர்ப்பாளர்கள் என்று காட்ட முயல்வதாக ஒரு தகவல் கிட்டியது. இது குறித்து முழுத் தகவல் கைவசம் இல்லை. ஆனால், தேடியதில் ஒரு விமர்சனம் கிட்டியது. வேண்டுவோர் பார்க்க வேண்டிய ஒரு சுட்டி:

http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl ?file=20030411000707300.htm&date=fl2007/&prd=fline&

இங்கு விமர்சனம் செய்யப்பட்ட புத்தகம் – ஒரு ஐரோப்பிய வரலாற்றாசிரியர் எழுதியது. வழக்கம்போல நமது இடதுசாரி விமர்சகர் ஒருவர் விமர்சிக்கிறார். புத்தகமே இடதுசாரி புத்தகமாக இருக்கலாம். படித்துப் பார்த்து யாராவது அது பற்றி இங்கு எழுதுவீர்கள் என்று பார்க்கிறேன்!

The Strangled Traveler: Colonial Imaginings and the Thugs of India by Martine van Woerkens (translated from the French by Catherine Tihanyi); The University of Chicago Press, Chicago and London, 2002; pages xvi + 360, $24.

2. இது சரியான கருத்தல்ல. இஸ்லாம் துவங்குவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே கிரேக்க ரோமானிய சாம்ராஜ்யங்களிலும், மெளரியர், குப்த சாம்ராஜ்யங்களிலும், சீன அரசுகளிலும் அரசியல் கொலைகள் நடந்திருக்கின்றன. கெளடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் எப்படி எதிரி அரசரை தந்திரமாகக் கொல்வது என்பது பற்றியும், அத்தகைய கொலைகளுக்கு ஆளாகாமல் தாம் எப்படித் தற்காப்பது என்றும் ஓர் அரசருக்கு புத்திமதிகள் சொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஜூலியஸ் சீசர் போன்ற புகழ் பெற்ற ஆட்சியாளர்கள் கொல்லப்பட்டது இந்தக் கட்டுரையாளருக்கு எப்படி மறந்தது என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்படாதது ஒரு காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் அரசியல் லாபம் கிட்டும் என்று கருதுபவர்களே இக்கொலைகளைச் செய்திருக்கலாம். ஆனால், தாம் நேரில் இருந்து கொல்லாமல் மூன்றாம் நபர் மூலம் தானே இக்கொலைகளைச் செய்திருக்க முடியும். ஸீசர் கொலை செய்யப்பட்டது வேண்டுமானால் பகிரங்கமான கொலையாக இருக்கலாம், மற்றவை அப்படி அல்லவே ? ஆகவே அரசியல் கொலை என்பதை ‘அஸாஸின்கள் ‘ முதலில் கண்டு பிடித்தனர் என்று கூறமுடியாது என்பதே நமது வாதம். மற்றபடி, அஸாஸின்கள் என்னும் கூட்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள நிறைய புத்தகங்கள் உள்ளன என்று தெரிகிறது. சுலபமாகப் படிக்க, இந்த வலைக் களத்துக்குச் செல்லலாம். துவக்கப் படிப்பாக இதை வைத்துக் கொள்வது சரியாக இருக்கும்:

http://homepage.ntlworld.com/anthony.campbell1/assassins/hasan.html

சுருக்கமாகச் சொன்னால் முகமது நபியின் மகள், ஃபாத்திமாவின் வழி வந்தவர்களாகத் தம்மைக் கருதிய ஓர் இஸ்லாமியப் பிரிவினரான இஸ்மாயிலிகள், இரு பிரிவாக உடைந்த போது ஒரு பிரிவைச் சார்ந்த ஹாஸன்-இ-ஸப்பாஹ் என்னும் பிரசாரகர், அலமுட் என்னும் இடத்தில் உள்ள ஒரு மலைக் கோட்டையைக் கைப்பற்றி இந்த அரசியல் கொலைகார்களின் பயிற்சிக் கூடமாக அதைப் பயன்படுத்தினார். சுமார் 1090-லிருந்து 1124 வரை ஆண்ட அவர் காலமான பின், இஸ்மாயிலிகளின் வரலாறு மிகவும் சுவாரசியமானது. மங்கோலியர்கள் இரானையும் அரேபியாவையும் கைப்பற்றிய போது அஸாஸின்களின் ரகசியக் கூட்டத்தை அறவே ஒழித்தனர். ஆனால் தப்பி ஓடிய சிலர் இந்தியா, ஸிரியா போன்ற நாடுகளில் ஒளிந்தனர். இந்தியாவில் கோஜா என்று அழைக்கப்படும் பிரிவாக இருந்த இவர்கள் பம்பாயில் பெரும் வணிகர்களாக இருந்ததாக வரலாறு இருக்கிறது. தற்காலத்து ஆகா கான் இந்தப் பிரிவின் தலைவர். இஸ்மாயிலிகள் ஷியா பிரிவின் ஒரு பகுதியினர். சுன்னி பிரிவினர் பெரும்பான்மையினராக இருக்கும் பாகிஸ்தானில் இவர்கள் அவதிப்படுகிறார்கள் என்றும் சொல்லப் படுகிறது.

3. Bernard Lewis பெயர் பெற்ற வரலாற்றாசிரியர். அரபு நாடுகள், இஸ்லாமிய சமுகங்களின் வரலாறு பற்றி முக்கியமான புத்தகங்கள் எழுதியவர். இவர் எழுதிய புத்தகங்களில் சில:

The Arabs in History, London 1950;

The Assassins, London 1967

Race and Slavery in the Middle East: an Historical Enquiry, New York 1990

Islam and the West, New York, 1993

Islam in History (2nd edition), Chicago, 1993

The Future of the Middle East, London, 1997

What Went Wrong: Western Impact and Middle Eastern Response, OUP (December 2001)

The Crisis of Islam: Holy War and Unholy Terror: Modern Library; (March 25, 2003)

ஆனால் சமீபத்தில், எட்வர்ட் சய்யீது எழுதிய ‘ஓரியண்டலிசம் ‘ என்ற புத்தகம் பெயர் பெற்ற புத்தகமாகவும், மிகவும் தெரிய வந்துள்ள ஒரு கருத்தாக்கமாகவும் ஆன பின், லூயிஸ் போன்ற பழைய வரலாற்றாசிரியர்கள் ஓரளவு பின் தள்ளப்பட்டிருந்தார்கள். இவர்கள் மேலை நாகரிகத்தின் புகழ் பாடிகள், வஞ்சகமாக எழுதி இதர பண்பாடுகள், நாகரிகங்கள் மேலும் வரலாறுகளை குறையாக்குகிறார்கள் என்பது போன்ற சய்யிதின் வாதங்கள், அதே நேரத்தில் மேலை நாட்டுப் பல்கலைக் கழகங்களில் பிரபலமாகி வந்த பின்-நவீனத்துவக் கருத்துகளுடன் இசையவே, லூயிஸின் வரலாற்றுப் பணி கவனம் பெறாமல் போக ஆரம்பித்தது. ஆனால் செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின், லூயிஸ் போன்ற வரலாற்றாசிரியர்களின் ‘இஸ்லாத்தில் என்ன கோளாறாகிப் போயிற்று ? ‘ என்ற வகைக் கேள்விகள் மறுபடி உலக அரங்கில் உரக்கக் கேட்க ஆரம்பித்தன. ஆனால், இஸ்லாம் இன்று மேலை நாடுகளில் நிறைய இடங்களில் ஆதரவாளர்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இடதுசாரியினர் ஐரோப்பா முழுவதும் மற்றும் அமெரிக்காவிலும் இஸ்லாம் மீது ஏதேனும் விமர்சனம் எழுந்தால் கண்டனம் தெரிவிக்கவும், முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் தொடங்கி இருக்கிறார்கள். இந்த விதத்தில் இந்திய இடதுசாரியினர் வெகு காலமாகவே இதைத்தான் செய்து வந்திருக்கின்றனர் என்பது கவனிக்கத் தக்கது.

லூயிஸின் சமீபத்திய புத்தகங்களுக்கு மறுப்பும் கண்டனமும் தெரிவித்து ஒரு முஸ்லிம் பேராசிரியர், அமெரிக்காவில் வடகிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரிபவர், எழுதிய காட்டமான கட்டுரை ஒன்றின் வலை முகவரி இதோ: http://www.counterpunch.org/alam06282003.html

கெளண்டர்பஞ்ச் என்னும் இந்த வலைப் பத்திரிகை ஓர் இடதுசாரிப் பத்திரிகை. இதில் யூதர்கள், முஸ்லிம்கள், கிருஸ்தவர் என்று பலவகை இடதுசாரியினரும், இடதுசாரியின் தற்காலிக நண்பர்களும் எழுதுகிறார். மேலே கண்ட கட்டுரையை எழுதிய சாஹித் ஆலம் என்பவரும் இடது சாரிப் பார்வையைப் பயன்படுத்தித் தன் வாதங்களை முன் வைக்கிறார் என்பது நிலப் பிரபுத்துவம், விவசாய சமுகம், முதலாளிய-தொழில்மய சமுதாயம் என்ற பதங்கள் இவர் கட்டுரையில் பயன்படுத்தப் பட்டிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஆனால், இஸ்லாமிய சமுதாயங்களை உயர்த்த வேண்டும் என்பது இவரது ஆதங்கம் என்பதும் கட்டுரையில் தெரிய வருகிறது. இவர் மார்ஷல் ஹாட்க்ஸன் என்னும் இஸ்லாமிய வரலாற்றாசிரியரைப் புகழ்ந்து தள்ளுகிறார். ஆனால் வேறு இடங்களில் ஹாட்க்ஸன் போன்ற வரலாற்றாசிரியர்கள் இஸ்லாமிய சமுகங்களின் அடிவருடி என்று கேலி செய்கிறார்கள். எது உண்மை ? தீரப் படித்தால் ஓரளவு நமக்குப் புரியலாம்.

4. Jim Jones மற்றும் David Koresh ஆகிய இருவரும் தீவிர வகைக் கிருஸ்தவர்கள். இருவருமே தம் ஆளுமை வசீகரத்தால் பல நூறு பேர்களைத் தம் சீடர்களாகப் பின்பற்றச் செய்ய முடிந்தவர்கள். ஜிம் ஜோன்ஸ் ஒன்றும் ஏதோ விளிம்பு நிலைக் கிருஸ்தவ மத போதகர் அல்ல. கிருஸ்துவின் சீடர்கள் என்ற ஒரு பிரிவில் முறையான போதகராக அமர்த்தப்பட்டிருந்தார். இது கிருஸ்தவ மதத்தின் மைய நீரோட்ட அமைப்புதான். ஒரு கட்டத்தில் இவருடைய அமைப்பில் கிட்டத்தட்ட 8000 பேர் இருந்ததாக செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன (பார்க்க SFchronicle, Nov 12, 1998 Michael Taylor). ஒரு முற்போக்குப் பிரசாரகராகக் கருதப்பட்ட இவரது சர்ச்(Church)-ல் பெருவாரியினர் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள். நவம்பர் 18, 1978 அன்று சுமார் ஆயிரம் பேர் கொண்ட தனது அமைப்பு உறுப்பினர்களை சயனைட் மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொள்ள இவர் கட்டளை இடுகிறார். மறுத்தவர்கள் கொல்லப் படுகிறார்கள். 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டன. மொத்தம் 914 சடலங்கள் கயானாவில் இவரது முகாமில் கண்டெடுக்கப் பட்டன. இறுதி வருடங்களில் ஜிம் ஜோன்ஸ் மன நோய் கொண்டவராக இருந்தார் என்று பின்னர் வெளி வந்த விவரங்கள் தெரிவிக்கின்றன. அதை மறுத்து இந்தத் தற்கொலை உளவு அமைப்புகளின் மோதலில் நடந்த சதி வேலை என்றும் சொல்லப்படுகின்றன. ஜிம் ஜோன்ஸ் ஒன்றும் பெரிய போதகர் அல்ல, பெரிய இடதுசாரி புரட்சிவாதியும் அல்ல. அவர் இருந்த கயானாவில் இருந்து ஓர் ஆயிரம் நபர்களை வைத்து, அதுவும் ஆயுதங்கள் எதுவும் இல்லாத ஒரு சமுகக் குழுவை வைத்து அவர் அமெரிக்காவையோ அல்லது சோவியத் ரஷ்யாவையோ கலக்கி இருக்க முடியாது. இதனால் உளவு நிறுவனங்கள் இதில் கை வைத்து ஆயிரம் பேரைக் கொன்றன என்பது ஒரு பீதிக் கதையாகவே தெரிகிறது. இந்தியாவில், சி.ஐ.ஏ.-தான் உலகத்தின் எல்லா நாச வேலைகளுக்கும் காரணம் என்றோ, பின் லாடன் அல்லது பாகிஸ்தான்தான் எல்லா குளறுபடிக்கும் காரணம் என்ற வகைக் கட்டி-தட்டிய சிந்தனைதான் நம்மிடையே நிறைய இருக்கிறதே. அதன் இன்னொரு வடிவம்தான் மேற்படி பீதிக் கதை.

டேவிட் கொரெஷ் என்பவர் ஏழாவது நாள் அட்வென்டிஸ்ட் சர்ச்சில் ஏற்பட்ட பிளவில், ஒரு பிரிவான டேவிடியன் கிளையினர் என்ற அமைப்பை வன்முறையால் கைப்பற்றினார். ஒரு கட்டத்தில் சுமார் 1400 பேர் பின்பற்றிய இந்த சர்ச் நாளாவட்டத்தில் சரிந்து வந்தது. இறுதியில் ஏப்ரல் 19,1993 அன்று அமெரிக்க அரசின் எஃப்.பி.ஐ, அனுமதி இல்லாத கள்ள ஆயுதங்கள் குவித்திருந்ததற்கான குற்றச்சாட்டை உறுதி செய்ய வந்த போது ஏற்பட்ட மோதலில், மொத்த முகாமும் எரிந்தது. சுமார் 80 நபர்கள் எரியும் முகாமை விட்டு நீங்காமல் உள்ளேயே இருந்து இறந்தனர். கொரேஷ் தலையில் ஒரு ரைஃபிள் தோட்டா பாய்ந்து இறந்தார். அவரது சீடர் ஒருவரின் அருகே இந்த வகை ரைஃபிள் கண்டெடுக்கப்பட்டது.

5. Cynthia Ozick (பி. 1928) ஓர் அமெரிக்க யூதர். மிகக் கூர்மையான அறிவும், எழுத்தாளரின் எழுத்தாளர் என்றும், ஏராளமான படிப்பறிவும், சிக்கலான பொருள்களைக் கூட லாவகமாகக் கையாண்டு நுட்பங்களை விரிக்கக் கூடிய பெண்ணிய எழுத்தாளர் என்றும் அறியப் படுகிறார். மேல் விவரங்களுக்கான சுட்டி:

http://www.complete-review.com/authors/ozickc.htm

6. Jerrold Post ஜியார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் மனநோய் துறையில் (Psychiatry) பேராசிரியராகப் பணி புரிகிறார். கூடவே அரசியல்-உளவியல், பன்னாட்டு உறவு ஆகிய துறைகளிலும் பேராசிரியர். தலைமை வகித்தல், முடிவுகள் எடுத்தல், அரசியல் வன்முறை, பயங்கரவாதம் ஆகிய தலைப்புகளில் வகுப்புகள் நடத்துகிறார், பயங்கரவாதம் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்கிறார். இரு புத்தகங்கள்- தலைவரை நோய் பீடிக்கும்போது (When Illness Strikes the Leader); ‘அரசியல் மன-உளைச்சல்: வெறுப்பை ஒட்டிய மனநோய் அரசியல் ‘ (Political Paranoia: The Psycho Politics of Hatred) எழுதியுள்ளார். மேலதிக விவரங்களுக்கு:

http://www.gwu.edu/~elliott/facultystaff/post.cfm

7. கடந்த நூற்றாண்டுகளில் பெரும் கலகக்காரர்களாகக் கருதப்பட்ட மார்க்ஸ், லெனின், மாஒ இத்தியாதியினர் எதிர்கால சமுகம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்று கறாராகச் சொல்வது அவர்களது கடமை அல்ல என்றே கூடக் கருதினர் என்பது கவனிக்கப்பட வேண்டும். இதற்கு இரு விதமாகப் பொருள் கொள்ளலாம். Teleology என்று சொல்லப்படும் வாத முறையை மார்க்ஸ் தவிர்க்கிறார் என்பது மார்க்ஸியரின் ஐதீகம். என்றும் இளமையான கருத்தியல் எங்களது என்று மார்க்ஸியர் உரத்துச் சொல்வது இதனால்தான். அவ்வப்போதைய கால நெருக்கடிகளை ஒத்து அரசியலையும், இலக்குகளையும், அமைப்புகளையும், மதிப்பீடுகளையும், ஏன் சிந்தனை முறைகளையுமே மாற்றிக் கொண்டே இருப்பது தமது தனிப்பெரும் சாதனை என்று உரத்துப் பேசுவார்கள். வழக்கம் போல இதில் தற்காலிக இலக்கு, நெடு நாளைய இலக்கு என்றெல்லாம் முடி பிளக்கும் வாதங்கள் ஒரு சிறு குழுவுக்குள் நடக்கும் – உயர்மட்டக் குழுவுக்குள்தான், வேறென்ன. முடிவுகள் மட்டுமே சாமானியருக்கு. அவருக்குதான் வேறு என்ன வேலை ? வெந்ததைத் தின்று, உழைப்பிற்கு ஆட்களைப் பெருக்கி, இதர நேரம் மடாதிபதிகளான பொலிட்பிரோ சொல்வதைக் கேட்டு ஊர்வலம் போவதைத் தவிர வேறு பங்கெடுத்தல் என்ன தேவை ? அது போகட்டும், என்றும் இளமையான கருத்தாக்கம் என்பது ? பாதி உண்மை, பாதி பொய். எதார்த்தத்தில் எல்லா கூட்டமைப்புகளையும் போலவே, சுத்தப் பஞ்சாங்கங்களும், மாறாக எதையும் ஏற்காத கலகச் சண்டிகளும், ஆபத்தைத் தவிர்த்து பாதுகாப்பான வழிமுறைகளில் செல்வாரும், பிறரைச் சுமை தூக்க வைத்துத் தாம் காலாட்டி ஓய்வெடுப்பவரும் என்று பல தரத்தவரும் மார்க்ஸியக் கூட்டங்களில் வாழ்கிறார்கள், அப் பாதையில் பயணிக்கிறார்கள். மொத்தத்தில் மனிதர் போல இருக்கிறார்கள். சாதாரணத்தைக் கடந்து கடவுள்களாக ஆகிய பிரமை அவர்களுக்கு நிறையவே உண்டு. என்றாலும், அதிலும் அவர்கள் மற்ற பல மனிதர் போலவேதான் என்பதுதான் வருத்தம் தரக்கூடியது. சாதாரணம் என்பதுதான் எத்தனை பரவலாக இருக்கிறது! தவிர்க்க முடியாத பொருள் (சரக்கு ?) உற்பத்திக்கான உழைப்பைப் போலவே!

தொலை(க் காட்சி!) இலக்கு சமுதாயத்துக்கு ஒரு தூல வடிவைக் கற்பிப்பதோ அல்லது அதன் அமைப்பு குறித்த ஊக வடிவுக்கு ஏற்ப தற்காலக் கருத்தாக்கத்தையும், செயல்பாட்டையும் கூட அமைப்பதைத் தவிர்ப்பதன் உள் பொருள் என்னவென்றால், எதிர்காலத்தில் அமையப் போகும் முழு மக்கள் மையச் சமுதாயத்தில் என்ன ஆட்சி அமைப்பு நிலவ வேண்டும், மனிதர் குழுக்களுள் என்ன உறவுகள் இருக்க வேண்டும் என்பதெல்லாம் தீர்மானிக்க அவர்களுக்குத் தான் உரிமை உண்டு. கடும் பயணத்துக்குப் பிறகு அப்படி ஒரு சமுதாயத்தை அடையப் போகும் மனிதருக்குத்தான் எவை சாத்தியம், எவை முன்வைக்கப் பட வேண்டும், எவை எதிர்காலத்துக்கு என்று ஒத்திப் போடப்படவேண்டும் என்றெல்லாம் தீர்மானிக்க உரிமையும் ஞானமும் உண்டு என்று மார்க்ஸ் கருதுகிறார் என்பது ஒரு பாடம். அதாவது உண்மையாக மக்கள் கையில் தத்துவம், செயல்பாடு ஆகிய இரண்டிலும் மேலாண்மையை விட்டு வைக்க முயல்கிறார் மார்க்ஸ் என்பது அவரை சற்று பரிவாகப் படிப்போர் கருதுவது. இதிலும் பல தத்துவக் கோளாறுகள் உண்டு. அது கொடுக்கப்பட்ட சட்டகங்களில் இருந்து விலகி யோசித்தால்தான் தெளிவாகும். அது பற்றிப் பிற்பாடு பார்க்கலாம். இங்கு வில்சன் சொல்வது ஓரளவுதான் சரி, தமது பார்வையை முற்படுத்த சில எளிமைப் படுத்தல்களைப் பயன்படுத்துகிறார் வில்சன். அதிலும் தவறுகள் இருப்பதைத் தெரிந்து கொண்டு நாம் மேலே செல்வது அவசியம்.

8. தமிழ் அறிவு ஜீவி என்று தம்மைக் கருதும் எவருக்கும் தலையாய கடமை – தினம் ஒரு முறையாவது பார்ப்பனியம் ஒழிக என்று முழங்குவது. இது நமக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும் இங்கு சொல்லப்படும் ஆரிய நாடு என்ற அமைப்புக்கும் பார்ப்பனருக்கும் தொடர்பு ஏதும் இல்லை என்று தெரிவித்து நமது ஆதர்ச பார்ப்பனிய எதிர்ப்பாளரான வாசகருக்குச் சிறிது சங்கடத்தை அளிக்க நேர்கிறது. இந்த அமைப்பு ஒரு கிருஸ்தவத் தீவிரவாத வெள்ளையரின் இனவெறி பிடித்த அமைப்பு. அமெரிக்கா, அமெரிக்காக்கள், ஐரோப்பா, பிறகு முடிந்தால் உலகின் இதர பகுதிகளில் இருந்து வெள்ளை-கிருஸ்தவர் அல்லாத மற்ற மக்களை எல்லாம் விரட்டி விட்டு ஒரு பெரும் ஆரிய சாம்ராஜ்யத்தை, தவறு – எம்பயரை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் ஆழ்ந்த விருப்பம். எத்தனை நூற்றாண்டு ஆகுமென்றாலும் காத்திருந்து இதைச் சாதிக்க என்று அமெரிக்காவின் ஆட்கள் அதிகம் இல்லாத சில சிறு நகரங்களில், மலைப் பிரதேச கிராமங்களில் சில நூறு பேர்கள் இருக்கிற அமைப்பு இது. கிருஸ்தவத்தின் மையக் கருத்தையே புரட்டிப் போட்டிருக்கிறோம் என்று சிறிதும் பிரக்ஞை இல்லாத விசித்திரப் பிறவிகள்.

9. Marc Sageman பென்ஸில்வேனியா பல்கலைக் கழகத்தில், சமுக இனங்களிடையே அரசியல் மோதல்களைப் பற்றி ஆராயும் கூடம் ஒன்றில் பேராசிரியர். இவரைப் பற்றிய தகவல்களுக்கு:

http://www.nixoncenter.org/publications/Program%20Briefs/PBrief%202003/Vol%209%20no%2031%20Gunaratna-Sageman.htm

இவரும், குணரத்னே என்பவரும் ‘அல்-கய்தா: தற்கால நிலை மேலும் எதிர்கால வாய்ப்புகள் ‘ என்ற தலைப்பில் பேசியவை இந்த முகவரியில் கிடைக்கும்.

10. Alan Krueger, Jitka Maleckova. இணையம்தான் எவ்வளவு வசதி தருகிறது. கூகிளில் கேள்வியைப் போட்டதும் இங்கு சொல்லப்படும் கட்டுரையே கிட்டியது – சில வினாடிகளில்.

http://www.wws.princeton.edu/~rpds/downloads/paxson_krueger_comment.pdf

11. Franklin L. Ford ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் வரலாற்றாசிரியராக இருந்தவர். 2003 ஆம் வருடம் தனது 82 ஆவது வயதில் இறந்தார். அவரது கடைசி புத்தகம், ‘அரசியல் கொலை: கொடுங்கோலர் ஒழிப்பு முதல் பயங்கரவாதம் வரை (Political Murder: From Tyrannicide to Terrorism) என்பது. இவர் ஐரோப்பிய வரலாறு பற்றிய பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.

12. மொகம்மது யாசிர் அப்துல் – ராவுஃப் கித்வா அல்-ஹுஸைனி என்னும் யாசிர் அரஃபாத் 1929 ம் வருடம் பிறந்தவர். 1951 இல் எகிப்தில் அரசர் ஃபெளத் பல்கலைக் கழகத்தில் கட்டிடக் கலைப் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தற்போது பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் தலைவர். 1996-லிருந்து பாலஸ்தீனர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள தற்காலிக அரசுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றுகிறார். 2003ல் பாலஸ்தீனியருக்கு இவருடைய செயல்பாட்டின் மீது நம்பிக்கை அற்றுப் போகவும், இவரது அதிகாரங்கள் மிகக் குறைக்கப்பட்டு விட்டன. என்றாலும் இஸ்ரேல் – பாலஸ்தினியர் இடையே எந்த உடன்படிக்கையும் இவர் கையொப்பம் இடாமல் நிகழாது என்பது வெளிப்படை.

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்