அன்புள்ள செல்வி.ஜெயலலிதாவிற்கு

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

வரதன்


———————————————————-

அன்புள்ள செல்வி.ஜெயலலிதாவிற்கு

உங்களுக்கு எங்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நீங்கள் தமிழக மக்களுக்கு ஒரு புனிதமான ஆட்சி தரவில்லை. உங்களை ஒரு நல்ல முதல்வராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதே சமயத்தில் தி.மு,க-வின் கடந்த கால வரலாறு தெரிந்தவர்களுக்கு உங்கள் ஆட்சியின் ஊழல், தி.மு.க ஆட்சியின் ஊழலை விடக் கம்மி எனத் தெரியும்.

திரு.கருணாநிதியை விட நீங்கள் பல விஷயத்தில் உருப்படியாக ஆட்சி செய்யக் கூடியவர் என்பதும் அறிந்தவன்.

தமிழகத்தின் ஊழலின் ஊற்றுக்கண் தி.மு.க-வை விட உங்கள் தலைமையில் செயல்படும் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க தேவலை.

நாலு பேர் சேர்ந்து வந்தாலே, கூட்டம் போடும் திரு.கருணாநிதி போல் அல்லாமல் கும்பல்களின் தரத்தை இந்த தரணி அறியச் செய்தவர் நீங்கள்.

1. உங்களுக்கு திரு.கருணாநிதி & திரு.முரசொலி மாறன் போல் குள்ள நரித்தனம் தெரியாது. 1991-ல் ‘சோ ‘வையும், மூப்பனாரையும் அண்டிப் பிழைத்த கருணாநிதி, ஒரு தமிழன் பிரதமராகும் வாய்ப்பை நகைப்பிற்கிடமாக்கியதை நாடே அறியும்.

-அதே திரு.கருணாநிதி, மத்திய பதவிக்காய் ‘மாற ‘க் காரணம் இருந்ததால், இந்துத்துவா மறந்து மஞ்சள் துண்டு அணிந்து உறவு பூண்டது போலல்லாமல், நீங்கள் தைரியமாக நிலைப்பாடு எடுத்து, காங்கிரஸை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தீர்கள்.

– இராமகோபாலன் தேசத்துரோகி போலும், எஸ்ரா சற்குணம் புனித ஆத்மா போலும் திரு.கருணாநிதி போல் வேஷம் போடாமல் இருவருக்கும் ஒரே மரியாதை தருகிறீர்கள்.

2. பா.ஜா.கா-விற்கே இல்லாத தைரியத்துடன் ‘போப்பின் ‘ அதீத பட்ச தலையீட்டிற்கு கண்டனம் தெரிவீத்தீர்கள்.

இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும், மத நம்பிக்கையுள்ள இந்துக்கள் தான் பாதுகாப்புத் தர முடியும். மத நம்பிக்கையற்ற ( என்று வேஷம் போடும் ) திரு.கருணாநிதி தர முடியாது.

திரு.ஸ்டாலினின் வேளச்சேரி வீட்டில் இருக்கும் இந்து மத கடவுள்களிடம் யார் தினமும் தீபம் காட்டி தோப்புக்கரணம் போடுவது.. ?

திரு.கருணாநிதியின் கடவுள் பற்றிய நிலைப்பாடு, கவுண்டமணி – செந்தில் காமெடியைவிட தூள் பரத்துகிறது.

3. ஊழியர் சங்கத் தலைவர்களை தன் கட்சிகாரர்களாக மாற்றி, மக்கள் வரிப்பணத்தைக் கூட்டணி கொள்ளை அடிக்கும் சரித்திரம் மாற்றி, அரசு ஊழியர்களுக்கு நல்ல பாடம் கற்பித்தீர்கள்.

4. நடிகருக்கு 3கோடி சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள், மக்களின் பொது இடத்தை 1000 ரூபாய்க்கு உபயோக்கும் அயோக்கியத்தனம் மாற்றினீர்கள்.

ஊரில் இருக்கும் வீணாப் போனவர்களுக்கும் ‘கலைமாமணி ‘ பட்டம் கொடுத்து அவர்தம் வாய்மூடி தாம் அறிஞர் ஆகும் வித்தகம் உங்களுக்கு கிடையாது.

5. கண்ணகி சிலையின் கற்புக்கு கண்ணீர் வடித்து வேஷம் போடத் தெரியாமல், நிஜத்தில் பெண்கள் நிம்மதியாக வாழ வழி செய்தீர்கள்.

அதனால் தான் திரு.கருணாநிதிக்கு கொடிபிடித்த டைரக்டர்.செல்வமணி போன்றவர்கள் உங்கள் பக்கம் வந்தது.

அந்தக் காலத்திலோ, இலட்சிய நடிகர்.எஸ்.எஸ்.ஆர் தி.மு.க விட்டு வெளி வந்ததன் காரணம் நாடே அறியும்.

6. நாலு பேரை சேர்த்து லெட்டர் பேடுடன் கட்சி ஆரம்பித்த கட்டைப்பஞ்சாய்த்து காவாலிகளை துரத்தி அடித்தீர்கள்- அவர்கள் உங்கள் கட்சியினராக இருந்தாலும்.

7. ‘எம்.பி எனும் பொறுப்பையும் தேசத்தின் சட்டத்தையும் மதிக்க மாட்டேன் ‘ என்றவர்களுக்கு நல்ல பாடம் கற்பித்தீர்கள்

8. கிளைக்கு கிளைத் தாவி கனி பறிப்பது போல் தி.மு.க நிலைப்பாடு கொண்ட போது, காங்கிரஸையும் பா.ஜா.கா-விடமும் மண்டியிடாமல் அரசியல் செய்கிறீர்கள்.

9. மாறன், உடல்நிலை i.c.u என்ற போதிலும், பிற வசதிகளுக்காக மந்திரி பதவியைக் கெட்டியாக பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்து விட்டு, காங்கிரஸ் ஜெயிக்கும் என்ற நிலை வந்தவுடன் கிளை மாறும் தி.மு.க தலைமையின் சந்தர்ப்ப வாதத்தை மக்கள் அறிவர்.

பா.ஜா.க முதுகில் குத்திய தி.மு.க-தரம் திருமதி.சோனியா அறியாததல்ல.

10. பல இரவுகள் பல சாமானியன்களின் தூக்கத்தை கெடுத்தவர்களுக்கு ஒரு நல் பாடம் கற்பித்தீர்கள். சும்மா கையைப் பிடிக்கும் முன்னே, ‘ஐயோ கொல்றாங்களே.. ‘ என்று நடிகர் திலகம்.சிவாஜி அவர்களை மிஞ்சும் நடிப்புச் சக்ரவர்த்திகளைப் போல் அல்லாமல் தைரியமாக ஆண்மையுடன் தலைமை கொண்டுள்ளீர்கள்

11. பா.ஜா.க- ஆட்சி கூட்டணியிலிருந்து தி.மு.க விலகும் முடிவுக்கு ஒரே நீண்ட தொலை நோக்கு காரணம், தன் குடும்பம் சேராத, திரு.டி.ஆர்.பாலு முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது எனும் மூன்றாம் தர சுயநல நிலைப்பாட்டை திரு.கருணாநிதி குடும்பம் கொண்டதால் தான் என்பது ஊரறியும்.

திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கப்புறம், தி.மு.க அண்டிப் பிழைத்து தான் அரசியல் காண்கிறார்கள்.

திரு,எம்.ஜி.ஆர் படுத்தப் படுக்கையாய் இருந்த போது, தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று ‘தேனை எடுத்தவன் புறங்கையை நக்குவதில்லையா.. ? ‘ -என்ற திரு,கருணாநிதியின் பேச்சை நாங்கள் மறக்கவில்லை. மேலும் ‘எம்.ஜி.ஆர் உயிருடன் இல்லை. அப்படி உயிருடன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தால், அவரிடம் ஆட்சியைக் கொடுத்து விடுகிறேன் ‘- என்று மனித நேயத்துடன் பிராச்சாரம் செய்தவர் திரு.கருணாநிதி.

ஆனால் உயிருடன் தம் முன்னேயிருக்கும் திரு.கருணாநிதியை விட உயிரற்று போனாலும், திரு.எம்.ஜி.ஆர் சிறந்தவர் எனும் நிலை கண்டனர் தமிழக மக்கள்.

திரு.கருணாநிதி போல் தனக்குத் தானே உலக தமிழ் மக்களின் தலைவர் என்று நீங்கள் பட்டம் சூட்டிக் கொள்ளவில்லை.

இல்லை ஒளவையாருக்கு உரை எழுதுகிறேன் என்று பம்மாத்து பண்ணவில்லை.

திரு.எம்.ஜி.ஆர் மற்றும் உங்களுக்கு என்ன வெள்ளைக்காரனா தமிழகத்தில் வாக்களிக்கிறான்.. ? தமிழர் தானே..! பாவம் திரு,கருணாநிதி.

திரு.இராஜாஜி என்ற பார்ப்பணரால் முதலில் முதல்வராகி பின்

சோ- என்ற பார்ப்பணியர் மற்றும் லதா எனும் பார்ப்பணப் பெண்ணின் கணவர் திரு.ரஜினி தந்த வாய்ப்பில் தான் திரு.கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆனது.

‘இதுவரை நீங்கள் பார்த்த கருணாநிதி வேறு, இனி பார்க்கப் போகும் கருணாநிதி வேறு ‘ – என ரஜினி சொல்லி நாங்கள் ஓட்டுப் போட்டு திரு.மு.க-வை முதல்வர் ஆக்கினோம்.

திரு.மு.க-வும் சரி தி.மு.க-வும் சரி திருந்தும் எனும் நம்பிக்கை எங்களுக்கு இல்லவே இல்லை.

திரு.கருணாநிதிக்கு நீங்கள் எவ்வளோவோ மேல்.

திரு.முரசொலி மாறன் குடும்பத்திற்கு, திரு.நடராஜன் குடும்பம் மேல் மேல்.

எங்களுக்கோ, நாங்கள் தேடுவது போல் தலைவரும் இல்லை. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை என்பது போல் எங்களுக்கு உங்களை விட்டால் ஆளும் இல்லை.

திரு.கருணாநிதி எங்களைப் பயமுறுத்த, வேறு நல்ல தலைவர்களும் கிடைக்காத எங்களின் நிலை வரை, நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள்

அந்த வெற்றியை திரு.மாலன் திராவிடக் கலாச்சாரம் காக்கும் ‘சன் நீயூஸ் ‘ சேனல் ( முத்தமிழ் அறிஞருக்கு இதற்குத் தமிழ் பெயர் கிடைக்கவில்லை போலும் ) டி.வியில் அறிவிப்பார்.

தி.மு.க ஆட்சி வர ஆசைப்படுவது மெரினாவிற்காக… அதுவும் கண்ணகிக்கல்ல அண்ணா – எம்.ஜி.ஆர் இடைப்பட்ட இடத்திற்காக. ஆனால் நாங்களோ மறு வேலைச் சோற்றுக்காக ஆசைப்படுகீறோம்.

அது உணர்ந்து இன்னும் கொஞ்சம் நல்ல படியாக ஆட்சி நடத்துங்கள். நீங்கள் கொஞ்சம் நல் ஆட்சி தந்தால் தான், தி.மு.க- எனும் மக்களின் இரத்தம் உறிஞ்சும் அட்டையிடமிருந்து தப்பிப்போம்.

நீங்கள் கொஞ்சம் மாற வேண்டும். அதுவே எங்கள் ஆசை.

இந்த தேசத்தை தீர்மானமாக நடத்திச் செல்லும் பா.ஜா.கா-வுடன் நீங்கள் கூட்டு சேருங்கள்.

மதத்தின் பெயரால், திரு.நாகூர் ஹனிபா -வை தி.மு.க நிறுத்திய போது, மாற்று மதத்தினரை வேட்பாளராக அறிவித்து ஜெயித்துக் காட்டியவர் நீங்கள்.

சிங்கத்தின் குகையிலேயே சிலம்பம் ஆடும் உங்களுக்கு சிறு நரி கூட்டமா சவால் விடுவது.. ?

உங்களின் ராஜதந்திரம் முன்னே யார் நிற்பது… ?

கோட்டை என்று கொக்கரித்த இடத்தில் வெறும் 1000 ஓட்டு வித்தியாசத்தில் கூட ஜெயிக்க முடியாத மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட தமிழின் பெயரால் தமிழரை ஏமாற்றும் கும்பலா.. ?

தி.மு.க ஜெயிப்பதும் தோற்பதும் உங்கள் கைகளில் தான் உள்ளது.

ஆயிரம் கைகள் கொண்டு அல்ல தாமரையின் இரட்டை இலை கொண்டு சூரியனை தமிழக மக்கள் மறைத்துக் காண்பிப்பார்கள்.

அ.தி.மு.க தோன்றியதிலிருந்து தி.மு.க ஜெயித்ததெல்லாம், அ.தி.மு.க சொதப்பிய போது மட்டும் தான்.

அதனால், கொஞ்சம் புத்திசாலித்தனம் தேவை உங்களுக்கு ஆலோசனை சொல்பவர்களுக்கு.

அதற்கு வாழ்த்துக்களுடன்

பாவப்பட்ட தமிழன்.

—————————

varathan_rv@yahoo.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

வரதன்

வரதன்