மனித நல்லிணக்கம்.

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

PS நரேந்திரன்


வீட்டில் பைபிள் ஒன்று இருக்கிறது. பழைய ஏற்பாடு. கடலூர் டேனிஷ் மிஷன் பள்ளியிலிருந்து என் மனைவியுடன் ஒட்டிக் கொண்டு அமெரிக்கா வரை வந்து விட்டது. தமிழில் ஏதாவது படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் போதோ அல்லது மன சஞ்சலம் ஏற்படும் போதோ திறந்து படித்துப் பார்ப்பேன். உண்மையிலேயே ஆறுதலாயிருக்கும்.

அமெரிக்க வாழ்க்கை வெறுமையானது. மேடு பள்ளங்களூம், மன அழுத்தங்களும் நிறைந்தது. எவ்வளவுதான் படித்திருந்தாலும், கை நிறைய சம்பாதித்தாலும் ஒரு விதமான insecure feeling தொடர்ந்து கொண்டேயிருக்கும். அனேகமாக, அமெரிக்காவில் வசிப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இதை அனுபவித்திருப்பார்கள். வெள்ளையன், கருப்பன், பழுப்பன், மஞ்சளன் என்ற வித்தியாசமில்லாமல், எல்லோரும்.

இந்தியாவில் வசிப்பவர்களுக்கு இம்மாதிரியான நேரங்களில், பிரச்சினைகளின் தீவிரத்தைக் குறைக்க வடிகால்கள் அதிகம். பெற்றோரும், உறவினர்களும், நண்பர்களூம் உறுதுணையாக இருப்பார்கள். குறைந்த பட்சம் ஆறுதலாவது சொல்வார்கள் என்று நம்பலாம். அமெரிக்காவில் ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித் தீவு. அவரவர் பிரச்சினைகள் அவர்களோடே. பேசித் தீர்க்கவோ, அரவணைக்கவோ, ஆறுதல் சொல்லவோ இங்கு ஆட்களில்லை. மிகக் கடுமையான வாழ்க்கை முறை இங்கே.

எனக்கும் அம்மாதிரியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு. பைபிளே எனது நண்பன், அந்நேரங்களில். கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது ஒரு பக்கத்தைத் திறந்து வைத்து படித்துக் கொண்டிருப்பேன். மன சஞ்சலம் தீர்ந்தது போலிருக்கும்.

ஏதேது ? கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்தில் இறங்கி விட்டாய் போலிருக்கிறதே என நினைக்காதீர்கள். மன ஒழுக்கத்தையும், அன்பையும், சகோதரத்துவத்தையும் போதிக்கும் கருத்துக்கள் எந்த மதத்திலிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்வது என் இயல்பு. அது இந்து மதத்திலிருந்தா, இஸ்லாமிய மதத்திலிருந்தா அல்லது கிறிஸ்தவ மதத்திலிருந்தா என்றெல்லாம் பார்ப்பதில்லை. வளர்ந்த விதம் அப்படியானது.

நான் வளர்ந்த, சென்னை மண்ணடி பகுதியில், எனது இளமைக்கால நண்பர்களில் அறுபது சதவீதத்திற்கும் மேலானவர்கள் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். எனது மிக நெருங்கிய நண்பர்களூம் இதில் அடக்கம். மத ரீதியான சண்டைகள் எங்களுக்குள் வந்ததில்லை. என்ன ? இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது மட்டும் கொஞ்சம் வெறுப்பேற்றுவார்கள். இம்ரான்கானுக்கும், மியான்தத்திற்கும் கை தட்டுகிற அதே நேரத்தில், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்திற்கும் கை தட்டுவார்கள். என்னால் புரிந்து கொள்ள முடியாத விஷயம் அது. அன்று மட்டுமல்ல. இன்றும்….

அதை விடுங்கள். Controversy எதற்கு ?

*******

1993களின் ஆரம்பத்தில் சவூதி அரேபியாவில், Riyadh municipality-இன் உபயோகத்திற்கென தயாரிக்கப் பட்ட ஒரு mega software project-இல் வேலை செய்து கொண்டிருந்தேன். ஏறக்குறைய இரண்டு வருடங்களூக்கும் மேலாக ப்ராஜெக்ட் நடந்து கொண்டிருந்தது. சித்தீன் ஸ்ட்ரீட்டில், Saudi Military Hosiptal பக்கத்தில் ஒரு பெரிய அப்பார்ட்மென்ட்டில் தங்கி இருந்தேன். பேச்சுலராக இருந்ததால், நான்கைந்து பேர் வாடகையைப் பகிர்ந்து கொண்டு என்னுடன் தங்கி இருந்தார்கள். அவர்களில் நானும், சையத் பாஷாவும் மட்டுமே தமிழ்நாட்டுக்காரர்கள். மற்றவர்களெல்லாம் மலையாளிகள்.

பாஷா ஒரு இன்டரெஸ்டிங் காரெக்டர். வல்லவரையன் வந்தியத்தேவனுக்கு மூக்குக் கண்ணாடி மாட்டியது போன்ற உருவம். என்னை விட பத்துப் பதினைந்து வயது கூடியவர். ‘ஜாம்பஜார் ஜக்கு ‘ என்று பெயர் வைத்திருந்தேன் அவருக்கு. எனது நல்ல நண்பர்.

உர்து மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பாஷா ஒரு தீவிர தேசாபிமானி. இந்தியாவைப் பற்றி யாராவது குறை சொன்னால் கடித்துக் குதறி விடுவார் குதறி. பாகிஸ்தானிகளிடமும், பங்களாதேசிகளிடமும் சரிக்குச் சரி சண்டை போடுவார். அவருடன் எங்காவது வெளியே போக வேண்டுமென்றாலே எனக்குக் கொஞ்சம் உதறலாகத்தான் இருக்கும்.

வார விடுமுறை நாளான ஒவ்வொரு வெள்ளிக் கிழமை மாலையும் சாமான்கள் வாங்க ‘அல்-பத்தா ‘ என்றழைக்கப்படும் நகர மையத்திற்கு நானும், பாஷாவும் போய் வருவது வழக்கம். சித்தீன் ஸ்ட்ரீட்டிலிருந்து, ஆளுக்கு ‘இத்னேன் (இரண்டு) ரியால் ‘ கொடுத்தால், share taxiயில் அல்-பத்தா போய்விடலாம் (அப்போது). ரியாத் நகரத்தின் பெரும்பாலான டாக்ஸி டிரைவர்கள் பாகிஸ்தானிகள். கல்வியறிவே சிறிதும் அற்ற (பெரும்பாலான) பாகிஸ்தானி டாக்ஸி டிரைவர்கள் இந்தியர்களை அடியோடு வெறுப்பவர்கள். இந்துவாக இருந்தாலும் சரி, இந்திய முஸ்லிமாக இருந்தாலும் சரி. அவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான். அப்போது ‘பாப்ரி மஸ்ஜித் ‘ இடிக்கப் பட்டு ஆறு, ஏழு மாதங்களே ஆன சமயம் என்பதை நினைவில் கொள்க.

அப்படியாகப் பட்ட ஒரு வெள்ளிக் கிழமையிலே, நானும் நண்பர் பாஷாவும் ஒரு டாக்ஸியில் ஏறினோம். அல்-பத்தா போவதற்காக. பாஷாவிற்கு ஒரு பழக்கம். எப்போதும் முன் சீட்டில், டிரைவருக்கு அருகில்தான் உட்காருவார். அன்றைக்கும் முன் சீட்டிலேதான் உட்கார்ந்தார். பாகிஸ்தானியன் எங்களை ஏற, இறங்கப் பார்த்துவிட்டு,

‘கஹாங்காஹே ஆப் லோக் ? (எந்த நாட்டுக்காரர்கள் நீங்கள் ?) ‘ என்றான்.

‘இந்துஸ்தான்கான்கா! (இந்தியாவிலிருந்து) ‘ – பாஷா.

‘இந்தியாவாலே சப் ஹராமிஹே!….(இந்தியர்களெல்லாம் அயோக்கியர்கள்) ‘ என்று ஆரம்பித்தான் பாகிஸ்தானி.

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. ‘அரே தேவுடா! இட்ல ஆயிந்தே! ‘ என்று நினைத்துக் கொண்டேன்.

காதுகளூக்குள் ‘டம! டம! ‘ என்று முரசு சத்தம் ஆரம்பித்து, ‘பப்பர பப்பர பாய்ங்! ‘ என துந்துபி முழங்கி, ‘ஆரம்பம்!…ஆரம்பம்!… ‘ என யாரோ கட்டியம் கூறினார்கள்.

சித்தீன் ஸ்ட்ரீட்டிலிருந்து அல்-பத்தா போய்ச் சேரும் வரை, காருக்குள் நடந்த சொற்போர், மற்போர், விற்போரை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அந்த மாதிரி நேரங்களில், ஏதாவது ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு, அந்த இடத்திலேயே நான் இல்லாதது மாதிரி நினைத்துக் கொள்வேன்.

‘அந்தி மயங்கும் நேரத்திலே, மலைகளூம், வனாந்திரங்களும், தெள்ளிய நீரோடைகளூம் சூழ்ந்த இடத்திலே, நான் வெண் புரவியில் வீற்றுச் செல்லுகையில், சகல யொளவனமும், சொளந்தர்யமும், ப்ரேமையும் பொருந்திய ஒரு அதி ரூப குஸும சுந்தரியானவள் என்னைக் கண்டு, காதல் கொண்டு, என் அருகிலே வந்து, என்னை ஆரத்தழுவி, என் இதழ்களிலே….ஆ!…அதோ…அல்-பத்தா வந்து விட்டதே!…வந்தே விட்டதே!….அப்பாடா!…நான் தப்பித்தேன்!… ‘

திரும்பி, அப்பார்ட்மென்டிற்குள் நுழைந்தும் நுழையாமல், ஒரு கட்சியின் பெயரைச் சொல்லி ‘….காரன்களெல்லாம் ….பயல்கள்! தேசத்தைக் குட்டிச் சுவராக்கப் போகிறான்கள்! ‘ என்று ஒரு எகிறு எகிறுவார் நமது ‘ஜாம்பஜார் ஜக்கு ‘.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் அந்த பாகிஸ்தானியை நார் நாராக்கினீர்கள் ? இப்போது எதற்கு இப்படி பேசுகிறீர்கள் ? ‘

‘நம்ம சண்டை நம்மோடே மாப்ளே! அந்த ‘பச்சை ‘ (பாகிஸ்தானியர்களைக் குறிக்கும் சொல்)க்கு என்னா தெரியும் இந்தியாவைப் பற்றி ? ‘ என்பார்.

பார்த்து நிறைய வருடங்களாகி விட்டது. அடுத்தமுறை சென்னைப் பக்கம் போகும் போது ‘ஜாம்பஜார் ஜக்கு ‘வைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

*********

தமிழ்நாட்டில் ஒரு தலைவர் இருக்கிறார். கொஞ்சம் வயதான மனிதர். தொண்டு கிழம் என்று கூடச் சொல்லலாம் அவரை.

ஒரு பக்கம் மதவாதக் கட்சிகளூடன் கூட்டணி வைத்துக் கொள்வார். இன்னொரு பக்கம் தன்னை minorityகளின் தோழன் எனக் காட்டிக் கொள்வார். இதில் தெரியும் வெளிப்படையான இரட்டை வேடம் எதைப் பற்றியும் கவலையில்லை அவருக்கு.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்! என்பது அவரின் business policy.

ரம்ஜான் நோன்பு திறக்கும் இடத்திற்குப் போய், நோன்புக் கஞ்சி குடிப்பார். என்னமோ இவர்தான் கஷ்டப்பட்டு நோன்பு இருந்தது மாதிரி! கஞ்சி கொடுத்தார்களே, குடித்தோமா வேலையைப் பார்த்துக் கொண்டு வந்தோமா என்று வரமாட்டார். இந்துக்களைத் தாக்கி அறிக்கை விடுவார் இந்த மஞ்சள் துண்டு மகான்!

என்னமோ இந்துக்களெல்லாம் முஸ்லிம்களின் விரோதி என்பது மாதிரியும், முஸ்லிம்களெல்லாம் இவரை இந்துக்களைத் தாக்கி அறிக்கை விடும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டது மாதிரியும் உளறிக் கொட்டிவிட்டு வருவார். இந்தியாவின் ஒற்றுமையைக் குலைக்க இவர் மாதிரி பத்து பேர் இருந்தால் போதும். அவர் வீட்டுப் பெண்களெல்லாம் ‘அடையாறு சிக்னல் மாதிரி ‘ (வர்ணனை என்னுடையதல்ல) நெற்றி நிறைய பொட்டு வைத்துக் கொள்வார்கள். சாமி கும்பிடுவார்கள். அதையெல்லாம் யாரும் கேட்கக் கூடாது. ஊருக்குதான் உபதேசம். அவருக்கில்லை.

தேர்தல் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் minorityகளை ரோமத்திற்குச் சமமாகக் கூட மதிக்க மாட்டார். என்ன செய்வது ? அவர்களின் ஓட்டு வேண்டுமே!

கேட்டால் ‘மதச் சார்பின்மை ‘ என்பார். ஒரு மதத்திரை ஆதரித்து இன்னொரு மதத்தினரைத் தாக்கிப் பேசுவதா மதச்சார்பின்மை ? மதவாதக் கட்சிகளின் கூட்டணியில் இருக்கும் இவர், தன் சுயநலத்திற்காக நாளையே minorityகளைத் தாக்கி அறிக்கை விடமாட்டார் என்பது என்ன நிச்சயம் ?

இம்மாதிரியான போலி மதச்சார்பின்மை வாதிகளைத் தமிழ்நாட்டு minorityகள் கண்டு ஒதுக்கி வைப்பதுதான் அவர்களுக்கும், அமைதியை விரும்பும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்லது.

ஒரு விஷயத்தை உங்களுக்குத் தெளிவு படுத்தியாக வேண்டும் இங்கு. நான் எந்த ஒரு கட்சியையோ, மத இயக்கத்தையோ சார்ந்தவனில்லை. என் கருத்துக்கள் பொதுவானவை. தவறாயிருப்பின் திருத்திக் கொள்ள நான் தயங்குவதில்லை.

எல்லா மதங்களும் அடிப்படையில் அன்பையும், சகோதரத்துவத்தையும், அமைதியையும் போதிக்கின்றன. அது இந்து மதமாக இருந்தாலும் சரி, இஸ்லாம் மதமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவ மதமாக இருந்தாலும் சரி. அடிப்படை ஒன்றே. கொளதம புத்தரும், நபிகள் நாயகமும், இயேசுபிரானும், இன்ன பிற பெரியோர்களும் அன்பைத்தான் போதித்தார்கள். ‘வெறுப்பு ‘ எனும் ‘நெருப்பை ‘ அல்ல.

‘யே சலாம் ‘ என்ற அரபி வார்த்தைக்குப் பொருள் ‘இதுவே அமைதி ‘ என்பதாகும். ‘யே சலாம் ‘ மருவி ‘இஸ்லாம் ‘ என்பதாயிற்று என்பார் நண்பர் சையது பாஷா.

என்னைப் பொருத்தவரை மத நல்லிணக்கத்தை விட, மனித நல்லிணக்கமே முக்கியம். மனிதர்கள் ஒருவரை ஒருவர் மதித்து நடந்தால் மத நல்லிணக்கம் தானாகவே வந்துவிடும். ‘சந்தில் சிந்து பாடும் ‘ அரசியல் வியாபாரிகளின் போலி மதச்சார்பின்மை நாடகங்களும் தானாகவே முடிவுக்கு வந்துவிடும்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ‘ என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

***********

narenthiranps@yahoo.com

(சில வார்த்தைகள் நீக்கப் பட்டுள்ளன.)

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்