குறிப்புகள் சில- நவம்பர் 20,2003

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


மார்த்தா நுஸ்பாம்-அரசு ஊழியர்-உரிமங்கள், எய்ட்ஸ்,ஏகபோகம்,தென்னாப்பிரிக்கவில் ஒரு தீர்ப்பும்,

வழக்கும்

சமீபத்தில் மார்த்தா நுஸ்பாம்(Martha Nussbaum)ஆற்றிய உரை ஒன்றைக் கேட்டேன்.சிகாகோ பல்கலைகழத்தில் ஆராய்ச்சி செய்து வரும் இவர் அங்கு மூன்று துறைகளில் ஆராய்சி செய்கிறார்/கற்பிக்கிறார். மற்றும் Ernst Freund Distinguished Service Professor of Law and Ethics ஆக சட்டப் புலத்தில் பேராசிரியராக

உள்ளார்.அமெர்த்தியா சென்னுடன் கூட்டாக ஆராய்ச்சி செய்கிறார்.மானுட வளர்ச்சி குறித்து இவர் விரிவாக எழுதியுள்ளார்.அன்று நிகழ்த்திய உரையில் ஜான் ரால்ஸ் முன்வைத்த நீதி குறித்த த்ததுவம்,மானுட வளர்ச்சியும் அதை எட்டுவதும், உலக அளவில் நீதி குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இவர் மனித உரிமைகள்,வளர்ச்சி,பெண்கள் நிலை குறித்து விரிவாக எழுதியுள்ளார். ஒரு நல்லாட்சி தரும் சர்வாதிகாரியை ஏற்க முடியுமா என்று ஒருவர் கேட்டத்தற்கு மனித உரிமைகள் மிக முக்கியம், அது இல்லாமல் நல்லாட்சி என்பது முரண் என்றார்.உரை முடிந்த பின் அவரை சந்தித்து உரையாட முடிந்தது. இந்திய அரசியல்,அரசியல் சட்டம்,பெண்களும் இந்தியாவில் உள்ள சட்டங்களும் என பலவற்றை சுருக்கமாக விவாதிக்க முடிந்தது. இஸ்லாம் பெண்களுக்கும், நவீன சிந்தனைகளுக்கும், மனித உரிமைகளுக்கும் விரோதமானது என்பது தவறான கருத்து என்பதை உரையிலும், பின்னரும் வலியுறுத்திய மார்த்தா தெற்காசியாவில் உள்ள பெண்கள் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளார், பலமுறை இப்பகுதியில் ஆய்வுகள் செய்துள்ளார். தன் வரவிருக்கும் புத்தகம் குறித்தும் சொன்னார். அவரது எழுத்துக்கள் பல நூல்களாக வெளிவந்துள்ளன. இணையத்திலும் பல கட்டுரைகள் உள்ளன. The Little magazine ல் அவர் பங்கேற்ற ஒரு விவாதம் வெளியாகியுள்ளது. இது அச்சில் கிடைக்கிறது, இணையத்தில் அப்பத்திரிகையின் தளத்தில் இல்லை.வேறொரு கட்டுரை அப்பத்திரிகையின் தளத்தில் உள்ளது. http://www.littlemag.com/2000/martha.htm

Sex,Laws and Inequality:What India can Teach the United States என்ற கட்டுரை

http://www.amacad.org/publications/winter2002/Nussbaum.pdf என்ற இணைய முகவரியில் உள்ளது.

இவர் எழுதிய கட்டுரைகளில் ஒரு சிலவேனும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும்.

——————————————————————————————————————————

அரசு ஊழியர்களுக்குத் தேவை நீதி, பிச்சை அல்ல.ஆனால் யார் ஈவு இரக்கமற்று நடந்து கொண்டாரோ அவர் கருணைக்காட்ட வேண்டும் என்று கோருவது நாம் ராஜா-ராணி காலத்தில் இருக்கிறோமா என்ற

சந்தேகத்தை எழுப்புகிறது.பணி நீக்கம் செய்யப்பட்டவர்களும், பிற தண்டனைகள் தரப்பட்டவர்களும்

வன்முறையில் ஈடுபடவில்லை, பொது சொத்திற்கு சேதம் விளைவிக்கவில்லை, மக்கள் பணத்தை கையாடல் செய்யவில்லை.இது போன்ற குற்றங்கள் ஏதும் செய்யாமல் ஆனால் வேலை நிறுத்தம் செய்ததற்கு இந்த

தண்டனை என்றால் இந்த அமைப்பின் மீது நம்பிக்கை எப்படி ஏற்படும். தமிழக அரசு அவசரச் சட்டம் மூலம் திருத்திய ESMA செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் வாதாடுவதுடன் இத்தகைய சட்டங்களை

நீக்கக் கோரி அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக போராட வேண்டும். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திலிருந்து அரசு ஊழியர்கள் கற்க வேண்டியவை சில. ஆனால் சோர்வடையாமல் அவர்கள் இந்த

அநீதியை எதிர்த்து செயல்பட வேண்டும். ஆட்சி மாறும், அப்போது இந்த அநீதிகளுக்கு துணை போனவர்கள், அதை ஆதரித்துவிட்டு இன்று கருணைக் காட்டுங்கள் என்று கூறுபவர்கள் -இவர்களுக்கு உரிய

பாடம் கற்பிக்கப்படவேண்டும்.

——————————————————————————————————————————

ஐரோப்பாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான கிளாக்சோஸ்மித்கிளைன்(GSK) மீது ஒரு கூட்டுநடவடிக்கை வழக்கு (class action suit) ஒன்றை தென்னாப்பிரிக்கவில் தொடரப்பபோவதாக அமெரிக்காவில் உள்ள AIDS Healthcare Foundation (AHF), அமைப்பு கூறியுள்ளது. தெ.ஆப்பிரிக்காவில் AIDS சிகிச்சைக்கென ஒரு பில்லியன் ராண்ட் அதாவது $150 மில்லியன் தொகையை ஒதுக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது.கடந்த மாதம் தெ.ஆப்பிரிக்காவின் Competition Commission, GSK மற்றும் Boehringer Ingelheim, என்ற இரு நிறுவனங்களும் AIDS சிகிச்சைக்கு தேவையான மருந்துகளின் மீதான உரிமத்தை பொது நலனுக்கு விரோதமாக பயன்படுத்தின,அவை Competition Act க்கு முரணாக நடந்து கொண்டுள்ளன என்பதால் அவற்றின் அம்மருந்துகளின் ஆண்டு விற்பனைத்தொகையில் 10% அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த இரண்டு நிறுவனங்களும் ஜெனரிக் தயாரிப்பாளர்கள் இந்த மருந்துகளை தயாரிக்க அனுமதி தரவில்லை, அனுமத்திது ராயல்டி கோரியிருக்க வேண்டும் என்றும் கூறியது. அவ்வாறு செய்யாததால் பலர் மருந்துக்ளை வாங்க முடியாமல் உயிரிழந்தனர்,எனவே இந்த நிதியை ஒதுக்க் வேண்டும் என்கிறது AHF. வறிய நாடுகளில் பயன்படுத்த தன் Combivir எய்ட்ஸ் சிகிச்சையை தினசரி 90 செண்ட்களிலிருந்து 65 செண்டாக குறைக்க கடந்த மாதம் GSK முன்வந்த்து.இந்த வழக்கு தொடரப்படுமா இல்லை நிதியை ஒதுக்க GSK ஒப்புக் கொள்ளுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

தெ.ஆப்பிரிக்காவின் மொத்த மக்கள் தொகை 45 மில்லியன், இதில் 5.3 மில்லியன் பேர், அதாவது மொத்த மக்கள் தொகையில் சுமார் 12% HIV/AIDS யுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.வேறெந்த நாட்டையும் விட இது அதிகம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் இம்மருந்து நிறுவனங்கள் நடந்து கொண்ட முறையால்

உயிரிழந்தோர் குடும்பத்தினரையும் இந்த கூட்டு நடவடிக்கை வழக்கில் பங்கேற்க்குமாறு AHF கோரியுள்ளது.

அறிவுசார் சொத்துரிமைகளை ஏகபோகமாக பயன்படுத்துவது புதிதல்ல.அமெரிக்காவில் இது குறித்து பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் உரிமங்கள் பரந்த உரிமைகளை தருவதால் பல சமயங்களில்

போட்டிகள் குறித்த சட்டமும், உரிமங்கள் சட்டமும் முரணாக உள்ள நிலை ஏற்படுகிறது. உதாரணமாக

பிரிண்டர் தயாரிக்கும் ஒரு நிறுவனம், அதனிடமிருந்து catridge கள் பெற்ற நிறுவனம் catridge ல் உள்ள மையை

கொட்டிவிட்டு புதிய மையை நிரப்பி விற்பது உரிமத்தை மீறுவதாகும் என்றது. நீதிமன்றம் இதை ஏற்கவில்லை.

ஆனால் உரிமத்தைக் காரணம் காட்டி xerox, பிரிண்டர்களுக்கான உதிரி பாகங்களை பிரிண்டர்களை பழுதுபார்க்கும்,பராமரிக்கும் நிறுவனத்திற்கு விற்க மறுத்தது.அதை நீதிமன்றம் அனுமதித்தது. சந்தையில் போட்டி அவசியம், ஒரு நிறுவனம் அல்லது ஒரு சில நிறுவனங்கள் கூட்டாக செயல்பட்டு நுகர்வோர்,பயன்படுத்துவோர் தங்களையே சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலை ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்யவே ஏகபோகங்கள் தடுப்பு, போட்டி குறித்த சட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அறிவு சார் சொத்துரிமைகளுக்கும் இந்த சட்டங்களுக்கும் உள்ள முரண் குறித்து அச்சம் நிலவுகிறது.வளர்முக நாடுகளில் சில துறைகளில், குறிப்பாக மருந்துத்துறையில்,அறிவுசார் சொத்துரிமைகள்,ஏகபோகங்களை தடுக்கும் வலுவான சட்டங்கள் இல்லாத போது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

ravisrinivas@rediffmail.com

Series Navigation