பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -4

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

வின் டெலோரியா


கடவுள் சிவப்பானவர் – பழங்குடியினர் பார்வையில் மதம் – வின் டெலோரியா- ஜ்னியர் எழுதிய புத்தகத்திலிருந்து.

செவ்விந்தியர்கள் என வெள்ளையரால் அழைக்கப்படும் அமெரிக்கப் பழங்குடியினர்களின் தலையாய சிந்தனையாளர்களில் ஒருவராக வின் டெலோரியா இருக்கிறார். )

( Excerpt from the book: God Is Red – A Native View of Religion – by Vine Deloria, Jr.

இந்த நேரத்தில் மேற்கத்திய தொழில்மயமாக்கலுக்கும் இந்த கிரகத்தின் பழங்குடி மக்களுக்கும் இடையே நடக்கும் போரில் ‘உண்மையான கிரிஸ்துவர்களிடமிருந்து ‘ எந்தவிதமான குரலும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக வரவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அதற்கு பதிலாக, கிரிஸ்துவ கடவுள் வரலாற்றைக் கட்டுபடுத்துகிறார் என்றும், எல்லா மக்களுக்குமான தன்னுடைய புனித திட்டத்தை அவர் நிறைவேற்றி வருகிறார் என்றுமே நாம் கேட்கிறோம். உலக நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது மேற்கண்ட இந்த வார்த்தை பொய்யானதாகவும், மனித குலத்தின் அறிவை கேவலப்படுத்துவதாகவும் இருக்கிறது. கிரிஸ்துவ கருத்தோட்டத்தில் உருவாக்கப்பட்ட வரலாற்றையும் அதன் கேள்வி கேட்கப்படாத அனுமானங்களையும் நிறுத்தும்படி அறைகூவல் விடவேண்டிய நேரம் வந்துவிட்டது. இப்படிப்பட்ட கருத்தாக்கங்கள் கிரிஸ்துவத்தை தேசிய வாதமாக அணுகும் நாடுகளில் கூட உடைந்துகொண்டிருக்கின்றன.

ஐரோப்பாவின் மாதேச வாதத்தின் கீழ் நூறாண்டுகளுக்கு முன்னால், அடையாளம் அழிக்கப்பட்ட ஐரோப்பாவின் பல பழங்குடி மக்களே இன்று தொடரும் அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள். ஐரிஷ், வெல்ஷ், செல்ட்கள் ஆகியோர்கள் இன்று சுதந்திரத்தைக் கோருகிறார்கள். பிரான்ஸில் பெரிடொன் மக்கள் தேச இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். ஃப்லெமிஷ் இன மக்கள் தங்களது பழைய பாரம்பரிய பழக்க வழக்கங்களைப் புதுப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். அடக்குமுறை தேசிய வாதத்துக்கு எதிராக இத்தாலியின் பழங்குடி மக்கள் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். முந்தைய இரும்புத்திரை நாடுகளில் இன்று பொருளாதார மறும் அரசியல் அமைப்புக்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, அடக்குமுறைக்கு ஆளான இனங்கள் இன்று தங்களது அடையாளங்களை வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். செர்பியா மற்றும் குரோஷியாவில் இனங்களை நேர்மையான முறையில் தேச அரசு நடத்த முடியவில்லை என்பதைக் காட்டிக்கொண்டிருக்கிறது. கிரிஸ்துவ வரலாறு மட்டுமே இறுதியை நெருங்குகிறது என்றல்லாமல், ஐரோப்பியர்கள் உலகத்தை ஆள தேர்ந்தெடுத்துக்கொண்ட கடவுள் அமைத்த விதி என்னும் கருத்தாக்கமும் முடிவுக்கு வருவதையே பார்க்கிறோம்.

கிரிஸ்துவ மதத்தை இன்று பின்பற்றுபவர்கள் பழைய தவறுகளுக்கு மன்னிப்புக் கோருவதும், அதற்கான ஈட்டை செய்வதுமே இந்த வழிமுறையின் முதல் படியாக இருக்கமுடியும். டா புரெளன் இந்தியர்கள் (*) இறந்தபோது ஏராளமான கண்ணீர்துளிகள் சிந்தப்பட்டன. ஆனால், அமெரிக்க செவ்விந்தியர்களை நடத்தும் முறை மாறவில்லை என்பதை நாம் கண்டோம். ஏன் பழைய தவறுகளை மீண்டும் செய்யவேண்டும் என்ற வரலாற்றின் ஆதார கேள்வியை உதாசீனம் செய்துவிட்டு, வெறுமே பழைய பாவங்களை ஒப்புக்கொள்வது என்பது பிரயோசனமற்றது. எப்போதோ நடந்த தவறுகளுக்கு இன்று குற்ற உணர்வோடு இருப்பது என்பது எளிதானது. இன்றைய மற்றூம் எதிர்கால பாவங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வது என்பது கடினமானது. பழைய தவறுகளைச் சரி செய்கிறேன் என்று பேசுவதைவிட, இன்றைய பழங்குடி மக்களை நடத்தும் முறையை மாறுவது என்பது முக்கியமானதாக இருக்க வேண்டும்.

கிரிஸ்துவ வரலாற்றை ஆக்கிரமிக்கும் ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதை முதலில் விட வேண்டும். அவ்வாறு செய்தபின்னால், அவர்கள் பழங்குடி மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களது உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு ஆதரவு தரவேண்டும். பழங்குடி மக்களுக்கு புதிய அந்தஸ்து கொடுக்க அவர்கள் முன் வர வேண்டும். பழங்குடி மக்களையும் அவர்களது நிலங்களையும், அவர்களது கலாச்சாரங்களையும் அவர்கள்து மதங்களையும் பாதுகாக்க அவர்கள் கோர வேண்டும். மேற்கத்திய சமுதாயங்கள் இந்த உலகில் வாழ வேண்டுமென்றால், அவர்கள் சிறு குழுக்கள் வாழ்வதற்கான உரிமையையும், அவர்களது உரிமைகள் காலில் மிதிக்கப்படாமலிருக்கவும் வாக்குறுதி தர வேண்டும்.

பழங்குடியினரின் காட்டுமிராண்டித்தனமான பழக்க வழக்கங்களிலிருந்து அவர்களை மீட்டெடுத்து அவர்களது மத்தியில் ஒரு புதிய சிறந்த சமுகம் உருவாகவேண்டும் என்பதற்காக பைபிளின் அமைதி போதனையை அவர்களிடம் போதிப்பது என்ற அடிப்படையிலேயே பழங்குடி மக்கள் மீது முந்தைய சுரண்டல் நடந்ததற்கு சொல்லப்படும் சாக்கு.

மேற்கத்திய உலகிலேயே அப்படி சிறந்த சமூகத்தை விவிலியத்தின் அமைதி போதனை உருவாக்கவில்லை. இன்றைய தேதிக்கு இருக்கும் அழிவும், ஊழலும், சுரண்டலும் மேற்கத்திய கிரிஸ்துவ நாடுகள் மற்ற நாடுகளுக்குள் நுழைந்ததால், இவர்கள் வருவதற்கு முன்னால் இருந்த நிலையைவிட அதிகமா குறைவா என்பது கேள்விக்குறியது. பல பழங்குடிமக்கள் இன்று அழிவை நோக்கி இன்னும் ஒரு தலைமுறைக்குள் சுத்தமாக பூமியிலிருந்தே காணாமல் போகவும் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் இந்த நிலையில், பாரம்பரிய கிரிஸ்துவ வரலாற்றுப் பார்வையிலிருந்து வேறுபட்ட இன்னொரு பார்வையை இன்னொரு புரிதலை நாம் மனித குலத்தின் வாழ்க்கை வரலாற்றுக்காக தேடவேண்டிய நிலையில் இருக்கிறோம். நம்முடைய சில பிரச்னைகளை நாம் தீர்த்துக்கொள்ளவில்லை எனில், கடவுள்தான் உண்மையிலேயே இடையூறு செய்து நம்மைக் காப்பாற்ற வேண்டும்.

இன்றைய நிலையை எந்தக் காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. கிரிஸ்துவ மத ரீதியில் நிச்சயம் இதனை நியாயப்படுத்த முடியாது. கிரிஸ்துவ மதத்தைப் பொறுத்த மட்டில் மனித குலம் ஏமாற்றப்பட்டிருக்கிறது என்று வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம். எல்லா காலங்களிலும் மக்களுக்கு அமைதியையும் சமாதானத்தையும் கிரிஸ்துவ மதம் கொடுத்திருப்பதாக காணப்பட்டாலும், உலகம் முழுமைக்குமாக அதன் விளைவை பாதிப்பைப் பார்க்கும்போது அமைதியாகவோ சமாதானமாகவோ அல்லது உள்ளத்துக்கு சந்தோஷத்தைக் கொடுப்பதாகவோ இல்லை. அதனைப் பின்பற்றுபவர்களால் மிகவும் மோசமான செயல்களை நியாயப்படுத்த பயன்பட்டிருக்கிறது; நமது அனுபவங்கள் நமக்கு என்ன சொல்கின்றன என்பதை நாமே நம்ப மறுக்கும்படி நமது குறிக்கோளை பரலோக வாழ்வுக்கு திருப்பி விட்டுவிட்டது. நாம் நம்மைப் பற்றி ஒரு ஆழமான பரந்த புரிதலை ஏற்படுத்திக்கொள்ளவும், நாம் வாழும் இந்த பூமியைப் பற்றிய ஒரு பரந்த ஆழமான புரிதலை ஏற்படுத்திக்கொள்ளவும் நாம் முயலவேண்டும்.

நமது மதச்சார்பற்ற சமூகத்தில், ஓரளவுக்கு பூமி பற்றியும், மக்கள் பற்றியும், அதன் பிரச்னைகளைத் தீர்ப்பது பற்றியும் ஓரளவுக்கு இருக்கும் அக்கறையை பார்க்கும்போது இந்த உலகத்தைப் பற்றிய நமது புரிதலை மாற்றிக்கொள்ளக்கூடும் என்றே தோன்றுகிறது. இன்றைக்கு ஜெனஸிஸ் கதைகளை வரிக்கு வரி உண்மை என்று எடுத்துக்கொள்ள முடியாது என்று ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருக்கிறோம். எல்லாவற்றையும் அழிக்காமல், வளமையோடு பெருகிக்கொண்டே இருக்க முடியாது. (We simply cannot continue to be fruitful and multiply without destroying everything. ) ஓரளவுக்கு நமக்கு மக்கள் தொகைக் கட்டுப்பாடு தேவை. இருபது ஆண்டுகளுக்கு முன்னர், கருக்கலைப்பு சம்பந்தமான சட்ட விதிகளைத் திருத்தியதன் மூலம், பெண்களை மக்கள் தொகை உற்பத்திச் செய்யும் சாதனங்களாகப் பார்ப்பதிலிருந்து சற்றே விடுவித்தோம். புரோடஸ்டண்ட் மற்றும் கத்தோலிக்க கிரிஸ்துவர்களிடமிருந்து இதற்கு வரும் எதிர்ப்பு மன நிறைவைத் தரவில்லை. ரோ-vs- வேட் என்ற வழக்கில் வந்த தீர்ப்பை (கருக்கலைப்புக்கு பெண்ணுக்கு உரிமை உண்டு என்ற தீர்ப்பை) அழிக்க தீவிரவாதத்துடனும் உரத்த குரலோடும் கொண்ட அரசியல் குழுவாக ஆகியிருக்கிறார்கள். சமீபத்தில் ரொனால்ட் ரீகனாலும், ஜார்ஜ் புஷ் அவர்களாலும் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் அந்த வழக்கின் முடிவை வெகு விரைவில் அழித்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. லட்சக்கணக்கான குழந்தைகள் வறுமை, பசிப்பிணி, பாலுறவு பலாத்காரம், பொருளற்ற வாழ்க்கைக்குள் தள்ளப்படபோவதை நாம் தொடர்ந்து பார்க்கப்போகிறோம். விளக்கமுடியாத காரணங்களால், இந்த கிரிஸ்துவமதம் பிறக்காத குழந்தையை போற்றுகிறது; உயிரோடு இருக்கும் மனிதரை வெறுக்கிறது.

மரணதண்டனை என்பதும் இன்று அரசியல்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். முதலில் அமெரிக்க உச்சநீதிமன்றம் இதனை கொடூரமானதாகவும், அசாதாரணமான தண்டனையாகவும் வகைப்படுத்துகிறது. பிறகு அதனை தடுப்பதை மாற்றிவைக்கிறது. நமது சட்டங்களை மதிக்காதவர்களை ஒரு முதிர்ந்த சமூகம் நடத்துவது போல நடத்தவேண்டிய பொறுப்புணர்வை நாம் எதிர்கொள்கிறோம். ஏராளமான கிரிஸ்துவர்கள் மரணதண்டனையை நீக்குவதை ஆதரித்தாலும், இன்னும் ஏராளமான கிரிஸ்துவர்கள் இதே மரண தண்டனையை நீக்குவதை பைபிளின் வார்த்தைகள் பேரில் எதிர்க்கிறார்கள். ஒவ்வொரு உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு வருபவரும் வருவதன் முன்னர் தனக்கு மரண தண்டனை பற்றி என்ன கருத்து இருக்கிறது என்று தெளிவாகச் சொல்ல வேண்டி இருப்பதே நாம் இன்னும் காட்டுமிராண்டித்தனத்தை தாண்டவில்லை என்பதன் அத்தாட்சி. முதலாம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்ததுமே பழமைவாத கிரிஸ்துவர்கள் பொங்கி எழுந்து அந்த தீர்ப்பை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். 1972இல் பொதுவாக்கெடுப்பு மூலம் கலிபோர்னியாவில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் படி ஒரு சில குற்றங்களுக்கு எந்த வகையான காரணங்கள் இருந்திருந்தாலும், மரணதண்டனை மட்டுமே வழங்கும்படி இந்த சட்டம் சொல்கிறது.

சமீபத்தில், அமெரிக்க சட்டமன்றம், ஒரு சில வன்முறை குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈட்டுத்தொகை வழங்க முறைகளை ஆராய்ந்தது. இது ஆங்கிலோ-சாக்ஸன் சட்டம் திரும்பி வருவதையும், பழங்குடி சமூகங்களின் மதங்களின் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டதும் ஆகும். கிரிஸ்துவ மதத்தில் துன்பப்படுவதற்கு ஈடு சொர்க்கமாகவே இருந்திருக்கிறது. ஆகவே ஒரு மனிதன் துன்பப்படுவதிலிருந்து தடுப்பது என்பது சமூகக்கடமையாக கிரிஸ்துவ நாடுகளில் பார்க்கப்படவே இல்லை. ஆனால் அப்படிப்பட்ட சமூகக்கடமை செவ்விந்தியப் பழங்குடிகளில் இருந்துவந்திருக்கிறது. அதனையும் தாண்டி, இப்படிப்பட்ட சமூக ஈடு என்பது அமெரிக்கா என்பதை ஒரு ஒருங்கிணைந்த நாடாக மாற்றும் வழியில் ஒரு பெரும் படி. பிரச்னையில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

பழங்கால கிரிஸ்துவ மாயக்கதைகள் அறிவுப்பூர்வமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நமது இன்றைய சமூகத்தில் ஒவ்வொரு திசையிலும் நிராகரிக்கப்படுகின்றன. இப்படி நிராகரிப்பது எப்போதுமே நல்லதற்கு அல்ல. கிரிஸ்துவை வழிபடுவதிலிருந்து மாறி சாத்தான் வழிபாடுக்குச் செல்வது முன்னேற்றம் எனச் சொல்லவியலாது. ஆனால், ஆன்மீகத்தில் அறியாத சக்திகளை ஆராய்வதும் அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதும் முன்னேற்றம் என்று சொல்லலாம்.

கிரிஸ்துவ மதத்தில் இருக்கும் கருத்துருவங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே எடுத்து நிராகரிக்க முடியாது. கிரிஸ்துவ மதத்தின் கொள்கைகளில் ஒரு சில கீழிறங்குவது என்பது முழு மதமுமே ஆரம்பம் முதலே தவறான வழியில் சென்றுகொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. பெரும் எண்ணிக்கையுள்ள மக்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்ற மத்தியக்கிழக்கு நியமத்துக்குள் உருவான நம்பிக்கைகள் நியமங்கள் பழக்கவழக்கங்கள் ஆகியவை தோற்றுவித்ததே இந்த மதம். இறப்புக்குப்பின்னர் வாழ்வு என்ற கிரிஸ்துவ நம்பிக்கையை நிராகரிப்பது மட்டுமே அப்படி ஒரு வாழ்வு இருக்கிறதா என்று ஆராய்வதிலிருந்து நம்மை விடுவித்துவிடாது. உலகம் தோன்றியதன் காரணம் என்று கிரிஸ்துவ மதம் சொல்வதை நிராகரிப்பது மட்டுமே நமக்குப் போதாது. இந்த பூமியின் வாழ்வின் தோற்றம் பற்றிய நல்ல காரணத்தைக் காண நம் ஆன்மீகத்தில் தேடவேண்டும்.

மனித அனுபவத்துக்கு விளக்கம் என்று கிரிஸ்துவ புரிதலை நாம் மாற்றவோ அல்லது நிராகரிக்கவோ செய்தபின்னால், நாம் வரலாறு என்பது கட்டுப்படுத்தக்கூடிய அல்லது கட்டுப்பாடுக்குள் இருக்கக்கூடிய ஒரு முறைமை என்பதையும் நிராகரிக்கவேண்டும். நம்மால் வரலாற்றைக் கட்டுப்படுத்த முடியாது என்பது வியத்நாமில் நமக்கு ஏற்பட்ட அனுபவம் நம்மால் வரலாற்றைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை நிச்சயம் நமக்கு உணர்த்துகிறது. இதுதான் நடக்கும் என்று நாம் கருதுவது நமது விருப்புக்களின் எதிரொலியே என்பதும், அது ஒரு எதிர்கால நிகழ்ச்சி அல்ல என்பதும் நமக்கு உணர்த்துகிறது. இதுவரை மனித அனுபவம் என்பது எத்தகையது என்பதையும், இதுவரை நடந்தவற்றின் வரலாற்று நிகழ்ச்சிகளின் இயற்கை என்பது என்பதை ஆராயப்புகவேண்டும்.

எதிர்காலத்தில் சமூக ரீதியான சுரண்டல் நடக்காத அளவுக்கு சமூகத்தை நிலைப்படுத்துதலே, மனித குலத்துக்கு புதிய வரலாறு பற்றிய கருத்தாக்கதின் முதல் படி. போப்பாண்டவருக்கு இந்த உலகம் கொடுக்கப்படவில்லை என்பதும், அவர் மற்ற ஐரோப்பிய அரசர்களுக்கு பகிர்ந்து அளித்தது சட்டத்துக்குப் புரம்பானது என்பதை அடிப்படை ரீதியாக உணர்வதும் ஆகும். இன்றைக்கு, கிரிஸ்தவத்துக்குப் பிந்திய நாடு கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் உலகத்தின் மக்களையும் நிலங்களையும் சுரண்டுவது, மேற்கத்திய வரலாற்றின் ஏரணப்பூர்வமான விளைவாக இருக்கலாம். ஆனால் அதுவே அதன் இறுதி விளைவாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

மனித வாழ்வின் உண்மையான பொருளுக்கான உண்மையான தேடல் மூலம் ஒருவேளை கிரிஸ்தவம் தன்னை இன்னும் இந்த பூமியில் நிலை நிறுத்திக்கொள்ள வலிமையைப் பெறலாம். மதத்தையும் ஆன்மீக உணர்வையும் புரிந்து கொள்ள மாபெரும் தேடல் வழியாக, உலக நிகழ்ச்சிகளை ஒரு கடவுள் நடத்திக்கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையை விட்டுவிடுவதன் மூலமும் சாத்தியமாகலாம். கடவுள்தன்மை என்பது (ஒருவேளை இருந்தால் அது) கொள்கைகளாலும் நம்பிக்கைகளாலும் கட்டுப்படுத்த முடியாதது என்பதையும் அறியவேண்டும். ஒருவரது கடவுளை ஒரு குறிப்பிட்ட வகையறைக்குள் அடைப்பது என்பதும், ஒரு குறிப்பிட்ட உருவத்துக்குள்ளும், ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறைக்குள்ளும், ஒரு குறிப்பிட்ட கருத்துருவாக்கத்துக்குள்ளும் அடைப்பது என்பது மிகப்பெரிய முட்டாள்த்தனம்.

***

முற்றும்

***

This excerpt was taken from the book: God is Red a Native View of Religion – by Vine Deloria, Jr.

Mr. Deloria ‘s bibliography was very extensive pulling sources for his research from the political and cultural writings of countries around the world.

Back Native American Studies- SOPHIAGROUP

http://sophiagroup.org/excerptvine.html

Series Navigation

வின் டெலோரியா

வின் டெலோரியா

பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -3

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

வின் டெலோரியா


( Excerpt from the book: God Is Red – A Native View of Religion – by Vine Deloria, Jr.

கடவுள் சிவப்பானவர் – பழங்குடியினர் பார்வையில் மதம் – வின் டெலோரியா- ஜ்னியர் எழுதிய புத்தகத்திலிருந்து.

செவ்விந்தியர்கள் என வெள்ளையரால் அழைக்கப்படும் அமெரிக்கப் பழங்குடியினர்களின் தலையாய சிந்தனையாளர்களில் ஒருவராக வின் டெலோரியா இருக்கிறார். )

இந்தக் கதை வெறும் அமெரிக்க இந்தியர்களின் (செவ்விந்தியர்களின் ) கதை மட்டுமல்ல. கிரிஸ்துவ நாடுகள் உலகமெங்கும் செய்தவை இதைவிட மோசமானவை. இங்கிலாந்தும் பிரான்சும் இந்தியாவை ஆக்கிரமிக்கவும் ஆப்பிரிக்காவை கைப்பற்றவும், வட ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் வியாபார உரிமைகளுக்காக பெரும் போர்களை நிகழ்த்தின. முதலாம் உலகப்போரின் போது கூட தேசங்கள் சக்திவாய்ந்த ஐரோப்பிய தேசங்களுக்கு அடிமைகளாகவும், லீக் ஆஃப் நேஷன்ஸ் கூட்டமைப்பு ‘ ‘mandates ‘ and ‘protectorates. ‘ ஆகியவற்றை அங்கீகரித்தும் இருந்தது. காலனியாதிக்கம் காணாமல் போகவில்லை. அதே விஷயம், இன்றூ அமெரிக்காவின் அரசியல் புனிதப்போராக ஒரு புது உலக நெறிமுறை (நியூ வோர்ல்ட் ஆர்டர்) நோக்கி, உண்மையில் வெள்ளையர்களுக்குச் சொந்தமான பன்னாட்டு தொழில்நிறுவனங்களின் வியாபாரசந்தைக்காக நடத்தப்படுகிறது. மேற்கத்திய தொழில்நிறுவன ஏகாதிபத்தியம் என்பது உலக காட்சியை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும்போது ஜப்பான் சில தீவுகளில் சுயாட்சி அடைவதை கண்டும்காணாமல் இருந்துவிடலாம்.

கனடாவும் ஆஸ்திரேலியாவும் பிரிட்டிஷ் கிரீடத்திடமிருந்து சுதந்திரம் அடைந்ததும், அவை உடனே எலிசபெத் மகாராணி 2இன் செருப்புக்களை அணிந்து கொண்டு பழங்குடியினரின் நிலங்களை தொடர்ந்து அபகரித்துக்கொண்டே வந்தன. கனடாவில் செவ்விந்தியர் நிலங்களுக்கு ராணி தன்னைத்தானே டிரஸ்டியாக நியமித்துக்கொண்டு, பழங்குடி செவ்விந்தியர் நிலங்களை ராணி தன் பெயரில் வைத்துக்கொண்டார். ப்ரிட்டிஷ் நார்த் அமெரிக்கன் சட்டம் உருவானபின்னால், பழங்குடி நில உரிமைகளை கனடா அரசு அங்கீகரிக்கவும், பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் மறுத்துவிட்டது. இன்றும், கனடா பழங்குடி மக்களின் நில உரிமைகளை அங்கீகரிக்க மறுத்தே வருகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தில் இருக்கும் ஒரு முகமூடித்தனமான சட்டம் கொடுக்கும் உரிமைகள் அளவுக்குக்கூட இல்லாமல், கனடாவின் பழங்குடி மக்கள் தங்கள் நிலங்கள் பற்றிய உரிமைகளை இழந்து வாழ்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் இன்னும் மோசமான நிலையில் வாழ்கிறார்கள். சட்டப்படியே கூட அவர்களுக்கு உரிமைகள் ஏதுமில்லை. ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்துவந்த நிலங்களை சொந்தம் கொண்டாடி அவர்கள் அந்த நாட்டு நீதிமன்றம் கூட ஏறமுடியாது. பிரிட்டனிலிருந்து பாரம்பரியமாகப் பெற்றதாக முழு ஆஸ்திரேலிய நிலத்தையும் ஆஸ்திரேலிய அரசு சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், ஆஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து நிலச்சொந்தக்கார பாதுகாப்பை ஆஸ்திரேலியப் பழங்குடியினர் கேட்பதற்கு உரிமைகள் கூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

தெற்கு அமெரிக்க நாடுகள் அந்த நாடுகளில் வாழும் பழங்குடியினரை அழிப்பதைப் பற்றி பூசி மெழுகுவதுகூட கிடையாது. பிரேசில் அரசு, பல வருடங்களாக காட்டுக்குள் வாழும் பழங்குடியினரை அமைப்பு ரீதியாக இனப்படுகொலை செய்து வருகிறது. பல குழுக்களாலும் பல அமைப்புகளாலும் இந்த இனப்படுகொலை ஆவணப்படுத்தப்பட்டு வந்தாலும், பிரேசில் அதிகாரிகள் வழக்கம்போல மறுத்துவிடுகிறார்கள். இந்த நாடுகளில் வாழும் பழங்குடியினருக்கு உரிமைகள் இருக்கின்றன என்ற பம்மாத்து கூட கிடையாது. எல்லா தெற்கு அமெரிக்க நாடுகளும் கத்தோலிக்க நாடுகளே. செபுல்வேடா அவர்கள் முன்னால் சொன்ன கருத்துக்களை அடியொற்றியே இந்த நாடுகள் நடந்து கொள்கின்றன. அதாவது இந்த நாடுகளில் இருக்கும் பழங்குடியினர்கள் அடிமைகள் என்றும், அவர்களை அடிமைகளாவதற்கென்றே கடவுள் படைத்திருக்கிறார் என்றும், அவர்கள் அடிமைகளாகாமல் எதிர்ப்பது ஒழுக்க ரீதியின் தவறானது என்றும் செபுல்வேடா சொன்னதை இவர்கள் கூறுகிறார்கள்.

நிலங்களும் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டிருக்கும் சிறு நாடுகள் கூட இந்த விஷயத்தில் பேச்சு எழுப்ப வலிமையின்றி கிடக்கின்றன. ஸ்வீடன் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் லாப்லாந்து நாட்டுக்குள் நுழைந்தது. இன்று லாப் மக்களுக்கு எந்தவிதமான உரிமையும் லாப்லாந்து நாட்டில் இல்லை என்று நிர்தாட்சண்யமாக மறுக்கிறது. கனடாவில் இருக்கும் நிலைமை போலவே, ஸ்வீடிஷ் தேசிய சட்டம் லாப் மக்களுக்கு எந்த உரிமை இருப்பதையும் நில உரிமை இருப்பதையும் அங்கீகரிப்பதில்லை. இன்றைய தேதிக்கு லாப் மக்களின் மீது ஒரு இனப்படுகொலையை நடத்திக்கொண்டிருக்கிறது ஸ்வீடிஷ் அரசாங்கம். இதனை நீதிமன்றம் மூலமாகவே வெற்றிகரமாகச் செய்துவருகிறது.

அழிவின் இறுதி களம் இன்று ‘Trust Territories of the Pacific ‘ என்று அறியப்படும் இடம். முதலாம் உலகப்போருக்குப்பின்னால், இந்த பசிபிக் தீவுகளை ஜப்பான் தன் கட்டுப்பாட்டின் கீழ், இரண்டாம் உலகப்போர் வரை வைத்திருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா இந்தத் தீவுகளின் மீது படையெடுத்தது. படையெடுத்த சில தீவுகளே ஜப்பானின் வசம் இருந்தன. பெரும்பாலும் ஜப்பானின் வசம் இல்லை. போர் தொடர்ந்து நடக்க நடக்க, இந்த அமைதியான தீவுகள் இரண்டு பெரும் சக்திகளுக்கு இடையே பந்தாடப்பட்டன. அமைதியான பசிபிக் வெகு விரைவிலேயே ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பிரிக்கப்பட்டது.

ஜப்பானின் சரணாகதிக்குப் பின்னர், எல்லா பசிபிக் தீவுகளும், இடக்கரடக்கலாக ‘அமெரிக்கா டிரஸ்ட் ‘ கீழ் வந்தன. அதாவது அமெரிக்காவின் கீழ் இவை இருக்கும். எப்போது அமெரிக்கா இவற்றை உதறி எறியலாம் என்று நினைக்கிறதோ அப்போது எறியலாம். இவைகளுக்கு அரசியல் சுதந்திரம் தரும் எண்ணமே அமெரிக்காவுக்குக் கிடையாது. அமெரிக்க டூரிஸ்டுகளுக்கு தடவிவிடும் இடங்களாக இவை ஆக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. இந்த நாடுகளின் குடிமக்கள் அமெரிக்க டூரிஸ்டுகளுக்கு வேலையாட்களாக ஆகி விட்டார்கள். இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் அவர்களிடம் இருந்த அரசியல் சுதந்திரம் இனி அவர்கள் கனவிலும் எதிர்பார்க்க முடியாதது. இதைவிட மோசமான விஷயம், இந்த தீவுகள் ஊழல் மிகுந்த, அக்கறையற்ற அமெரிக்க உள்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட நிலைக்கு கிரிஸ்துவத்தின் பொறுப்பு மிகவும் அதிகம். மற்ற நாடுகள் மீது ஆக்கிரமிப்பு செய்ய கிரிஸ்துவத்தின் கொள்கைகள் மேற்கத்திய நாடுகளுக்கு கொடுத்த உரிமைகள் இல்லாமல் இருந்தால், இப்படிப்பட்ட சுரண்டல் நடந்திருக்காது. இல்லையெனில், மக்களால் மேற்கத்திய பேராசையையும் , மதத் தீவிரவாதத்தையும் இணைத்துக்கொண்டு நடந்த சுரண்டல் இவ்வாறு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்காது. இன்றும் கூட கிரிஸ்தவ மிஷனரிகள் அமேசான் காடுகளில் மதமாற்றம் செய்ய ஏதாவது செவ்விந்திய பழங்குடியினர் கிடைப்பார்களா என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பின்னாலேயே, இந்த பழங்குடியினரை அழித்தொழிக்க தொழில்முறை கொலைகாரர்கள் வந்துவிடுகிறார்கள். இந்த தொழில்முறை கொலைகாரர்கள் பின்னே அரசாங்க அதிகாரிகளும், சாலை போடுபவர்களும், நிலத்தில் கட்டடம் கட்டவும் அந்த நிலங்களை உலக வியாபாரத்துக்கு உபயோகப்படுத்த வந்துவிடுகிறார்கள்.

ஒவ்வொரு தலைமுறையிலும், வியாபாரமும் மதமாற்றமும் கை கோர்த்துக்கொண்டு மேற்கத்திய நாடுகளின் வியாபாரத்துக்காகவும், கிரிஸ்துவத்துக்காகவும் மற்ற நாடுகளை அழிக்க முனைந்திருக்கின்றன. எங்கெல்லாம் சிலுவை செல்கிறதோ அங்கெல்லாம், இறப்பும், அழிவும், இறுதியில் நம்பிக்கைத் துரோகமுமே கொட்டிக்கிடக்கின்றன. மற்ற நாடுகளையும் பார்த்தால், அமெரிக்க ஐக்கிய நாடுகளே பழங்குடி மக்களை கொஞ்சமாவது சிறப்பாக நடத்தியிருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் சுதந்திரம், மதச்சார்பற்ற நீதித்துறை ஆகியவை சுரண்டலை குறைத்திருக்கின்றன. அமெரிக்க பழங்குடி மக்களுக்கு நிலம் மீதான உரிமை ஓரளவுக்குச் சட்டப்படிஆகியிருக்கிறது. கிளைம்ஸ் கமிஷன் என்ற கோரிக்கை கமிஷன் மூலமாக பழைய ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளை நீக்கவும், அதற்காக ஈட்டுத்தொகை வழங்கவும் முனைந்திருக்கிறது. கனடா அப்படிப்பட்ட ஒரு கமிஷனை உருவாக்குவதை எதிர்க்கிறது. ஆஸ்திரேலியா அப்படி ஒரு கருத்தாக்கத்தையே வெறுக்கிறது.

பழங்குடி மக்கள் மீது நடந்த இப்படிப்பட்ட மோசடிகளையும் அழிவுகளையும் நடத்திய தங்கள் மதம் பற்றியும், அப்படிப்பட்ட கிரிஸ்துவர்களையும் பற்றி கேள்விப்படும் சராசரி கிரிஸ்துவர்கள் உடனே, ‘ஆனால் இப்படிப்பட்ட விஷயங்களைச் செய்தவர்கள் உண்மையான கிரிஸ்துவர்கள் அல்லர் ‘ என்று கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால், அவர்கள் உண்மையான கிரிஸ்துவர்கள். அவர்கள் இருந்த அந்த நாட்களில் அவர்கள் கிரிஸ்துவத்தில் இருப்பதன் அனைத்து வசதிகளையும் கெளரவத்தையும் அனுபவித்தார்கள். மதத்தின் ஹீரோக்களாக போற்றப்பட்டார்கள். பாகன் pagan கிராமங்களை அழித்து கிருஸ்துவ சமூகம் வளர்வதற்காக பல கஷ்டங்களை அனுபவித்தவர்கள் தியாகம் புரிந்தவர்கள் என போற்றப்பட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடங்களிலும், மற்றும் கிரிஸ்துவ சர்ச்சிலும் புனிதர்களாகவும் (செயிண்ட்) போற்றப்பட்டார்கள். அவர்களது பெயர்கள் நகரங்களுக்கும் ஆறுகளுக்கும் மலைகளுக்கும் கடல்களுக்கும் வைக்கப்பட்டன.

முன்பு பழங்குடியினரை சுரண்டி அழித்தவர்கள் உண்மையிலேயே கிரிஸ்துவர்களாக இல்லையென்றால், ஏன் அன்றைய உண்மையான கிரிஸ்துவர்கள் தங்களுடைய கிரிஸ்துவ மதத்தையும் பாரம்பரியத்தையும் கெடுத்ததற்காக இவர்களுக்கு எதிராக கொதித்து எழவில்லை ? இன்றைய கனடா பிரதமர் உண்மையான கிரிஸ்துவராக இல்லையென்றால், ஏன் கனடாவின் உண்மையான கிரிஸ்துவர்கள் தங்களது பிரதமருக்கு எதிராக கொதித்து எழவில்லை ? பிரேசில் நாட்டின் தலைவர்கள் உண்மையான கிரிஸ்துவர்கள் இல்லையென்றால், உண்மையான கிரிஸ்துவர்கள் தங்களது தலைவர்களுக்கு எதிராக ஏன் போராடவில்லை ? அமெரிக்க கார்ப்பரேஷன்கள் அமேசான் காடுகளை அழித்து வியாபாரத்துக்காக பயன்படுத்தும்போது, உண்மையான கிரிஸ்துவர்கள் ஏன் தங்களது அமெரிக்கக் கார்ப்பரேஷன்களின் தலைவர்கள் பதவி விலகவேண்டும் என்று கேட்கவில்லை ?

(அடுத்த இதழில் முடியும்)

http://sophiagroup.org/excerptvine.html

Series Navigation

வின் டெலோரியா

வின் டெலோரியா

பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -2

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

வின் டெலோரியா


( Excerpt from the book: God Is Red – A Native View of Religion – by Vine Deloria, Jr.

கடவுள் சிவப்பானவர் – பழங்குடி பார்வையில் மதம் – வின் டெலோரியா- ஜ்னியர் எழுதிய புத்தகத்திலிருந்து (A Native View of Religion – by Vine Deloria, Jr.) செவ்விந்தியர்கள் என வெள்ளையரால் அழைக்கப்படும் அமெரிக்கப் பழங்குடியினர்களின் தலையாய சிந்தனையாளர்களில் ஒருவராக வின் டெலோரியா இருக்கிறார். )

உலகத்தில் பழங்குடியினரின் நிலை கிரிஸ்துவத்தின் இடையூறால், நிரந்தரமாக காலனியாதிக்கத்தின் கீழ் நிலைப்படுத்தப்பட்டது. இந்தப் பழங்குடியினர் தங்கள் நிலத்துக்கு உரிமையாளர்களாகப் பார்க்கப்படவில்லை. மாறாக, கிரிஸ்துவக் கடவுளின் சந்தோஷத்தின் பொருட்டு இதுவரை அனுபவித்துவந்ததாகவும், இப்போது ஐரோப்பிய நாடுகளுக்குக் கொடுக்கப்படுவதாகவும் பார்க்கப்பட்டது. ஏதேனும் ஒரு நாட்டுக்குள் புகுந்த அல்லது ஏதேனும் ஒரு பழங்குடியினரைச் சந்தித்த ஸ்பானியர்கள், Requirement என்ற ஒன்றைப் படித்தார்கள். அது அடிப்படையில் கிரிஸ்துவ பார்வையில் இருக்கும் வரலாறான, ஆதாம் ஏவாள் ஏடன் தோட்டத்திலிருந்து ஆரம்பித்து, போப்பாண்டவர் ரோமில் ஆட்சி செய்வது வரை ஒப்பிப்பது. அதன் பிறகு இந்தப் பழங்குடியினர்கள் போப்பாண்டவருக்கு விசுவாசமாக ஆகும்படியும், ஸ்பெயின் அரசருக்கு விசுவாசமாக ஆகும்படியும் கோரப்பட்டார்கள். கிரிஸ்துவத்துக்கு அடிபணிய மறுப்பதும், ஸ்பானியப் பேரரசுக்கு அடிபணிய மறுப்பதும், இந்த மக்களிடமிருந்து நிலத்தை ‘மீட்க ‘ அவர்கள் மீது போர் தொடுப்பது ஐரோப்பியர்களுக்கு சட்டப்பூர்வமான ஆன்மீக தொண்டாக ஆகிறது.

மீண்டும் மீண்டும், கிரிஸ்துவ மதக்கொள்கைகள் கிரிஸ்துவ நாடுகளின் செயல்களை நியாயப்படுத்தப் பயன்பட்டன. ‘Just war ‘ என்னும் நேர்மையான போரின் கொள்கைகளை நிர்ணயிக்க பல நூற்றாண்டுகள் விவாதித்தனர். அமெரிக்கா ருஷ்யாவின் அணு ஆயுதத்தாக்குதல்களுக்கு பயப்பிராந்தி அடைந்து கிடந்த நாட்களில், உங்கள் வீட்டு குண்டு பாதுகாப்பு அறைக்குள் நுழைய முயற்சி செய்யும் வேற்று மனிதர்களைக் கொல்வது நியாயமானதா நியாயமற்றதா என்று புரோட்டஸ்டண்ட் கிரிஸ்தவ மத தத்துவவாதிகள் விவாதம் செய்து கொண்டிருந்தது போன்றதே இதுவும். கிரிஸ்துவ கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த பழங்குடியினர்கள் இந்த நேர்மையான கிரிஸ்துவ போரை சந்திக்க நேர்ந்தது, ஏனெனில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்பட்ட உண்மையை இன்று அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்ததே.

இப்படிப்பட்ட வேற்றுநில ஆய்வுகளும், காலனியாதிக்கமும் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே, பழங்குடிகளின் உரிமைகள் பற்றிய விவாதங்களும் விரிவடைந்தன. அன்றைய தேதிக்கு உலகத்தை விளக்க கிடைத்த ஒரே தத்துவ அடிப்படை அரிஸ்டாட்டிலின் தத்துவமே. அவரோ மனித குலத்தை மனிதர்கள் என்றும் அடிமைகள் என்றும் இரண்டாகப் பிரித்துவைத்திருந்தார். பழங்குடியினர் எதிர்ப்பு மதத் தத்துவவாதிகள் அரிஸ்டாட்டிலின் மீது தாவி ஏறிக்கொண்டு பழங்குடியினர்கள் அடிமைப்படுத்தப்படலாம் என்ற தங்களது சிந்தனையை நிரூபிக்க முனைந்தார்கள். பழங்குடியினருக்கு ஆதரவாக இருந்த கிரிஸ்தவ மதத்தத்துவ வாதிகளும், இந்தப் பழங்குடியினர்கள் உண்மையான மத நம்பிக்கைக்குள் வரும் வரைக்கும் இவர்கள் மீது வன்முறையைச் செலுத்ததலாம் என்றே ஒப்புக்கொண்டார்கள்.

சாலமங்கா இடத்தில் 1526இல் பிரான்ஸிஸ்கோ டெ விட்டோரியா அவர்கள் அரிஸ்டாட்டிலை உபயோகப்படுத்திக்கொண்டு பழங்குடியினருக்கு சொத்துரிமை மற்றும் சுதந்திரத்தை மறுக்கும் போக்கை தாக்கினார். மதமாற்றத்துக்கு உட்படாத பழங்குடியினர்கள் மீது வன்முறை நடப்பதையும், அவர்கள் கேவலமாக நடத்தப்படுவதையும் கண்ட விட்டோரியா, கிரிஸ்தவர்கள் பழங்குடியினரை கட்டாய மதமாற்றம் செய்வதை தடை செய்தார். ஆனால், அவரும் கிரிஸ்தவ வியாபார உரிமைகள் பேரில் பழங்குடியினர் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை நியாயப்படுத்தினார். ஏனெனில் கடவுள் எல்லா தேசங்களும் ஒன்றோடு ஒன்று வியாபாரம் செய்யவேண்டும் என்று நிர்ணயித்துள்ளதாக கூறினார். எந்த நாடும் எந்த குழுவும் வியாபாரத்தைத் தடுத்தால், அவர்களை வெற்றிகொள்வது என்பது வியாபார உரிமைகளைப் பாதுகாப்பது என்றும் கூறினார். இந்த அடிப்படையிலேயே ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுக்கீசியர்கள் ‘புதிய ‘ நிலங்களையும் அந்த ‘புதிய ‘ மக்களையும் ஆக்கிரமித்தார்கள்.

1550இல் இரண்டுவிதமான கிரிஸ்துவ மத தத்துவவாதிகள் தோன்றினார்கள். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் புரிந்து கொள்ளல் படி ‘புதிய உலகத்தின் ‘ மக்களுக்கு இருக்கும் சட்டப்பூர்வமான உரிமைகள் பற்றி விவாதித்தார்கள். இந்த இரண்டு புரிதல்களுமே புதிய உலகத்தை சுரண்டுவதையும் அந்த மக்களை அடிமைப்படுத்துவதையும் நியாயப்படுத்தின. பாதிரியார் பார்த்தாலமோ டெ லஸ் காஸஸ், பழங்குடியினர் பக்கத்தை எடுத்துக்கொண்டார். ஜ்உவான் டெ செபுல்வேடா எதிர்நிலைப்பாட்டை எடுத்து, இந்த பழங்குடியினர் பூண்டோடு அழிக்கப்படுவதையும், அடிமைப்படுத்தப்படுவதையும் ஆதரித்தார். 1493இல் எழுதப்பட்ட போப்பாண்டவர் கட்டளையை, ஸ்பெயின் அமைதியான முறையில் பழங்குடியினரிடம் கிரிஸ்துவ மதம் போதிக்கப்படவேண்டும், அவர்களது சொத்துரிமை மதிக்கப்படவேண்டும் என்றும் சொல்வதாக பார்த்தலமோ டெ லஸ் காஸஸ் விளக்கமளித்தார்.

செபுல்வேடா, அரிஸ்டாட்டிலிய தத்துவ நிலைப்பாட்டிலிருந்து, பழங்குடியினர்கள் தெளிவாக அடிமைப்படுத்தப்பட வேண்டிய கூட்டம் என்று வரையறுத்தார். ஸ்பெயின் பழங்குடியினரை அடிமைப்படுத்துவதை பழங்குடியினர் எதிர்ப்பது என்பது ஒழுக்கரீதியில் தவறானது என்றும், கடவுள் அவர்களை அடிமைகளாக நிர்ணயித்திருக்கும்போது, பழங்குடியினர் அடிமைகளாக ஆகாமல் ஸ்பெயினை எதிர்ப்பது என்பது கடவுளை எதிர்ப்பதற்கு ஒப்பானது என்றும் அவர் வாதிட்டார். செபுல்வேடாவைப் பொறுத்தமட்டில் தூய கிரிஸ்துவ வெறியே ‘பழைய உலகம் ‘ (ஐரோப்பா) ‘புதிய உலகத்தை ‘ (பழங்குடியினர்) சந்திப்பதால் உருவாகும் பிரச்னைகளைத் தீர்க்க வழி. அவர் விவாதத்தில் முழுக்க முழுக்க வெற்றிகொள்ளாவிட்டாலும், அவரது கருத்துக்களை பழங்குடியினர் உலகத்துக்குச் சென்ற ஐரோப்பியர்கள் முழுவதும் ஒப்புக்கொண்டார்கள். அவருக்குப்பின்னால் நடந்தவைகள் மூலம் அவர் விவாதத்தில் வெற்றிகொண்டார் என்றே கூறலாம்.

மற்ற ஐரோப்பிய நாடுகளும் இது போன்ற புதிய நிலங்களைக் கண்டுபிடிக்கவும் புதிய மக்களை அடிமைப்படுத்தவும் தீவிரமாக இறங்க ஆரம்பிக்க, பழங்குடியினரின் சட்டப்பூர்வமான சொத்துரிமை மற்றும் இதர உரிமைகள் பற்றிய விவாதங்கள் மற்றும் அந்த உரிமைகளுக்கான போராட்டங்கள், நடைமுறையைப் பொறுத்த மட்டில் சுத்தமாக காணாமல் போய்விட்டன. தூர தேசங்களில் இருந்த நிலங்களின் மீது யாருக்கு உரிமை என்பதுதான் இந்த ஐரோப்பிய தேசங்களுக்கு முக்கியமானதாக இருந்ததே ஒழிய, இவர்கள் ஆக்கிரமித்த அந்த நிலங்களில் வாழ்பவர்களின் உரிமைகள் முக்கியமானதாக இல்லை. இந்த கிரகத்தை போப்பாண்டவரிடம் நிர்வகிக்க கடவுள் விட்டுச்சென்றிருக்கிறார் என்ற கிரிஸ்தவக் கொள்கை வெகு விரைவிலேயே மதச்சார்பற்றதாக ஆக்கப்பட்டு, ஐரோப்பிய தேசங்கள் முக்கியமாக கிரிஸ்தவ தேசங்கள், நுழைந்த இடங்களில் இருக்கும் மக்களை அடிமைப்படுத்தி வெற்றிகொள்ள தேவையான நியாயமாக ஆக்கப்பட்டது. இந்த மதக்கொள்கை மதச்சார்பற்றதாக ஆக்கப்பட்டதுடன், இதன் நியாயத்தை யாராலும் கேள்வி கேட்கமுடியாமல் போய்விட்டது. இதன் பாதிப்பு வெளிப்படையானது. இதன் விளைவுகள் ஐரோப்பிய அரசியல் தலைவர்களுக்கு திருப்திகரமானவையாக இருந்தன.

படிப்படியாக, காலனியாதிக்க ஐரோப்பிய சக்திகள் கிரிஸ்துவமற்ற மற்ற தேசங்களின் உரிமைகளோடு இணைத்து தங்களது உரிமைகளை வகுத்துக்குள்ள முனைந்தன. ஐரோப்பியர்கள் படையெடுத்துவந்து நிலங்களை ஆக்கிரமிக்கும் வரைக்கும், பாரம்பரியமாக பழங்குடியினர் வாழ்ந்துவந்த நிலங்கள் பழங்குடியினருக்கே உரியவை. அப்போது, ஐரோப்பிய நாடுகள் அந்த நிலங்களை வாங்கியோ வெற்றிகொண்டோ அடையலாம். ஆனால், மற்ற ஐரோப்பிய தேசங்களைப் பொறுத்த மட்டில், இன்னொரு ஐரோப்பிய தேசத்தைப் பொறுத்த மட்டில், எது முதன் முதலில் ஒரு புதிய நாட்டை ஆக்கிரமித்ததோ அல்லது எதனிடம் அதிகமான ராணுவ பலம் இருக்கிறதோ அவைகளின் நிலச் சொந்தம் கொண்டாடுவது ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்த நிலங்களில் உண்மையிலேயே வாழ்ந்துவந்த பழங்குடியினர்களின் உரிமைகளோ முழுக்க முழுக்க அவர்களை ஆக்கிரமிக்கும் கிரிஸ்துவ நாட்டின் தயவிலேயே இருந்தன.

வட அமெரிக்க கண்டத்தை யார் கட்டுப்படுத்துவது என்ற போரில், பல ஐரோப்பிய நாடுகளின் நிலம் சொந்த கொண்டாடும் கோரிக்கைகள் மெல்ல மெல்ல அழியக்காரணம் இங்கிலாந்து தொடர்ந்து பல தேசங்களை வெற்றிகொண்டதும், அமைதி ஒப்பந்தத்தின் காரணமாக பல நாடுகள் தங்களது நிலக் கோரிக்கைகளை விட்டுக்கொடுத்ததும் ஆகும். ஐரோப்பிய போர்கள் இங்கிலாந்துக்கும், ப்ரான்சுக்கும், ஸ்பெயினுக்கும் ஹாலந்துக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே நடந்துகொண்டிருக்கும்போது, பழங்குடியினரின் சட்டப்பூர்வமான உரிமைகளைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை. இங்கிலாந்து போர்களில் வெற்றி பெற்றதும், காலனிஸ்டுகள் (அமெரிக்காவில் வாழ வந்த வெள்ளையர்கள்) தங்களது தாய் நாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்திடம் தோல்வியுற்றதால் ப்ரான்ஸ் இந்த காலனிஸ்டுகளுக்கு உதவ முன்வந்தது, இவற்றால் இந்த காலனிஸ்டுகள் தங்களை இங்கிலாந்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவித்துக்கொண்டார்கள்.

புதிய நாடு என்ற தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டதும் இந்த புதிய நாடு செய்த முதல் வேலை தங்கள் தாய்நாடு, இங்கிலாந்து, எந்த கொள்கைகளின் அடிப்படையில் (கண்டுபிடித்தவர்களே உரிமை Doctrine of Discovery) அமெரிக்காவை ஆண்டதோ அதன் கொள்கைகளுக்கு வாரிசாக, அந்த கோரிக்கைகளுக்கு வாரிசாக தன்னை அறிவித்துக்கொண்டதுதான். ஆகவே அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு இந்த கண்டத்தின் பழங்குடியினரிடம் நியாயமாக நடந்துகொள்ள எந்த விதமான கட்டுப்பாடும் கிடையாது. மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவை கொள்ளையடித்துவிட்டு இந்தியாவையும் ஆப்பிரிக்காவையும் கொள்ளையடிக்கக் கிளம்பிய கிரிஸ்துவ நாடுகளின் வாரிசாக தன்னையும் அதே பாரம்பரியத்தில் நிறுத்திக்கொண்டது. அமெரிக்க நாட்டின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு, இந்த நிலங்களை எந்த நேரம் வேண்டுமானாலும் மத்திய அரசாங்கம் எடுத்துக்கொள்ள முடியும் என்ற அடிப்படையிலேயே ஆனது.

1787இல் நார்த்வெஸ்ட் ஆர்டினஸ் என்ற சட்டத்தின் மூலமே பழங்குடியினரின் நிலச்சொத்துரிமை பற்றிய முதல் சட்டப்பூர்வமான கிரிஸ்துவ வெளிப்பாடு வெளியானது. இதில் அமெரிக்கக் காங்கிரஸ் (சட்டமன்றம்) ஜஸ்ட் வார்ஸ் எனப்படும் நேர்மையான போர்களைத் தவிர வேறொன்றிலும் பழங்குடியினர் நிலம் கைப்பற்றப்படமாட்டாது என்று கூறியது. எதிர்பார்த்ததுபோலவே, ஜஸ்ட் வார்ஸ் என்று ஏதும் இல்லை. பழங்குடியினர் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டன. நூறு வருடங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டபின்னர், இன்று ரிஸர்வேஷன் எனப்படும் சில சிதிலமான நிலங்களில் உயிர் தப்பிப்பிழைத்த பழங்குடியினர் வாழ்வது அதிர்ஷ்டமே.

*********************************************************************************************

Series Navigation

வின் டெலோரியா

வின் டெலோரியா

பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -1

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

வின் டெலோரியா


இந்த உலகம் மூன்று அடுக்கு கொண்ட மாடிக்கட்டடமாக இருந்திருந்தால், வரலாறு பற்றிய கிறிஸ்தவ கொள்கை உண்மையாக இருந்திருக்கும். நவீன மக்கள் நம்பியும் இருந்திருக்கலாம். மனித குலம், ஏடன் தோட்டத்திலிருந்து வளர்ந்து இந்த உலகத்தில் நிரம்பியது எல்லா மக்களுக்கும் எல்லாக் காலங்களுக்கும் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், மூதாதைய தீர்க்கதரிசிகள் சொன்னது போல உலகம் அப்படியே இருந்துவிடவில்லை. அலெக்ஸாண்டர் 300 b.c இல் இந்தியாவின் அற்புதங்களை ஐரோப்பாவின் கிழக்குப்பக்கத்தில் இருந்தவர்களிடம் காண்பித்தார். அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகளில் ஐரோப்பியர்கள் செய்த உலகத்தைச் சுற்றிய பிரயாணங்கள் விவிலியத்தின் ஜெனஸிஸ் எழுதியவர் கற்பனை செய்த அளவைவிட உலகம் மிகமிகப்பெரியது என்பதை காட்டியது. கொலம்பஸ் உண்மையிலேயே உலகம் ஒரு உருண்டை என்பதை காட்டினார்.

புதிய உலகம் (அமெரிக்கா) கண்டுபிடிப்பு, கிரிஸ்துவ கொள்கையாளர்களுக்கு கொடுத்த வேதனை மிகப்பெரியது. சொல்லப்போனால் அதனை முழுமையாக புரிந்துகொள்ளக்கூட இல்லை. கோடிக்கணக்கான மக்கள் ஐரோப்பாவை விட பெரிய நிலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை எப்படி புரிந்து கொண்டார்கள் ? ‘ஒரே உண்மையான மதமான கிரிஸ்துவத்தின்படி ‘ இவர்களின் நிலை என்ன ? கடவுள் இவர்களுக்கென என்ன குறிக்கோளை வைத்திருந்தார் ? இத்தனை மக்களுக்கும் விவிலியம் சொல்லித்தரப்பட்டு முடியும் வரைக்கும் யேசு வராமல் இருப்பாரா ? ஏராளமான மக்களைக் கண்டறிந்த இந்த சமயத்தில், கடவுளின் தேர்ந்தெடுத்த தேசங்களின் பொறுப்பு என்ன ?

ஆனால், இந்த புது உலகத்தைக் கண்டறிந்ததும்,அதன் ஏராளமான செல்வங்களைக் கேள்விப்பட்டதும், கிரிஸ்துவ நாடுகளிடமிருந்து வந்த ஒரே எதிர்வினை, அளப்பறிய பேராசை மட்டுமே. மத்தியக்கிழக்கில் முஸ்லீம்களை அடக்கமுடியாமல் துரத்தப்பட்டபின்னர், முடியரசுகளின் தெய்வீகத்தை நிலைநிறுத்த பெரும்போர்களில் ஈடுபட்டு வலுவிழந்த பின்னால், தங்களை தொடர்ந்து காப்பாற்றிக்கொள்ள ஐரோப்பிய அரசர்களுக்கு, தீராத ஒரு வருமானம் தேவைப்பட்டது. முடியரசுக்கு பணஉதவி செய்வதன் காரணமாக அரசியல் உரிமைகளையும் பொருளாதார பயன்களையும் கோரும் வளர்ந்து வரும் வியாபார வர்க்கங்களுக்கு தொடர்ந்து உரிமைகளை மறுக்க, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘இந்தியா ‘விடமிருந்து தொடர்ந்த ஆறு போல வரும் வருமானத்தை கனவுகண்டன ஐரோப்பிய முடியரசுகள். கிரிஸ்துவ சர்ச்சும், இந்த புதிய நிலங்களை சுரண்ட ஆர்வமாக இருந்தது. கிரிஸ்துவ சர்ச்சின் அரசியல் சக்தி, வலிமையான ஐரோப்பிய அரசியல்வாதிகளால் குறைந்துகொண்டே வந்தது. ஆகவே, கிரிஸ்துவ சர்ச், இந்த புதிய நிலங்களைச் சுரண்ட தெய்வீக அனுமதி அளிப்பதன் மூலம், இந்த சுரண்டலில் ஒரு பங்கை அபகரிக்க இதனை ஒரு சாதனமாகவும் கண்டது. 1493இல் போப் அலெக்ஸாண்டர் VI, புதிய உலகத்தை எந்த கிரிஸ்துவ அணுகுமுறையோடு அணுகவேண்டும் என்பதை குறிக்க இண்டர் காடேரா புல் என்னும் அறிவிப்பை வெளியிட்டார். ‘ நமது கத்தோலிக்க மதமும், கிரிஸ்துவ நம்பிக்கையும், எல்லா இடங்கலிலும் கொண்டாடப்படவேண்டும் என்பதும், அது இன்னும் பரவவேண்டும் என்பதும், ஆத்மாக்களின் ஆரோக்கியம் கவனிக்கப்படவேண்டும் என்பதும், காட்டுமிராண்டி நாடுகள் தூக்கி எறியப்பட்டு அவை நம் கடவுள் நம்பிக்கை கீழ் கொண்டுவரப்படவேண்டும் என்பதும், தெய்வீக மேன்மை தங்கியவரும், நம் இதயத்தில் கொண்டாடப்படுபவருமான கடவுளுக்கு மிகவும் பிடித்தமான செயல்களில் ஒன்று – அதிலும் அவரது ஆசைகளில் முதலாவதாக இருப்பது, ‘

இஇந்த ஆன்மீக மொழிக்கு நடைமுறை பொருள் என்னவென்றால், செவ்விந்தியர்களின் நிலங்களைக் கைப்பற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு அனுமதி அளிப்பதுதான். போப் மேற்கண்டவற்றை இன்னும் நடைமுறை வார்த்தைகளில், ‘உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும், அவரது வம்சாவளியினருக்கும், கேஸ்டில் மற்றும் லியோன் அரசர்களுக்கும், மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கும், தீவுகளுக்கும், இன்னும் கண்டுபிடிக்கப்படும் நாடுகளுக்கும், அதன் கீழ் இருக்கும் நகரங்களுக்கும், இடங்களுக்கும், கிராமங்களுக்கும் எல்லா உரிமைகளும் பாத்தியதைகளும் கொடுக்கப்படுவதாக ‘ கூறினார்.

உங்களுக்குத் தெரிந்ததுபோலவே, செவ்விந்தியர்களின் நிலங்களையும், கிராமங்களையும் கொடுக்க – அகிலம், வரலாறு மற்றும் நம் கிரகத்தின் வரலாறு பற்றி கிரிஸ்துவ மதம் சொல்லுபவை உண்மையாக இருந்தால் ஒழிய – போப்புக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. அப்படி ஒரு நிலை இருந்தால், இந்த முழு பூமியும் பரலோகத்தில் இருக்கும் பிதா, போப்புக்கு ஃப்ராண்ஸைஸாக கொடுத்துவிட்டுப் போனதை இவர் நினைக்கும் ஆட்களுக்கு வினியோகிக்கலாம். மதச்சார்பற்ற ஐரோப்பிய நாடுகள், செவ்விந்தர்களையும் அவரது நிலங்களையும் மதச்சார்பின்றி ஆக்கிரமித்துச் சுரண்டியதையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும், 1493இன், இந்த போப்பாண்டவர் அறிக்கை, இதுவரை இருந்ததாகக் கருதப்படாத மக்களை எப்படி கிரிஸ்துவ மதம் அதிகாரப்பூர்வமாக அணுகியது என்பதை அறியலாம்.

இவ்வாறு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மக்களைப் பற்றிய கிரிஸ்துவ நிலைபாடு சம்பந்தமான விவாதம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும்போதே, மேலும் மேலும் இந்த புது உலகம் பற்றிய செய்திகள் ஐரோப்பிய மக்களைச் சென்றடைந்தன. ஆனால், டோர்டெஸில்லாஸ் ஒப்பந்தம் Treaty of Tordesillas தெளிவாக தென்னமெரிக்காவை ஸ்பெயினுக்கும் போர்ச்சுகலுக்கும் இடையே பிரித்துக்கொடுத்தது. இந்த கண்டத்துக்கு பிரயாணமோ அல்லது அங்கிருக்கும் மக்களை வெற்றிகொள்ளவோ கூட செய்யவில்லை இவர்கள். அதற்குள்ளாகவே பிரித்துக்கொடுக்கும் ஒப்பந்தம். போப்பாண்டவர் ஒரு தெய்வீக ஒழுங்குடன் உலகத்தில் நிலங்களைப் பிரித்துக்கொடுக்கவில்லை. இது உண்மையில் கற்பழிப்புக்கும், கொள்ளைக்கும் தேசிய வேட்டையாடும் லைஸன்ஸ்.

Series Navigation

வின் டெலோரியா

வின் டெலோரியா