மக்களை முட்டாளாக்கும் சினிமாக்காரர்கள் – பித்தனின் கோபங்கள்.

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

பித்தன்


‘பாய்ஸ் ‘ படம் வெளிவந்து மோசமான படம் என்றாகி, ஷங்கரும் ‘பாய்ஸும் ‘ மோசம் (bad) என்று பெயரெடுத்துள்ள நிலையில் டைரக்டர் செல்வராகவன் பேட்டி அளித்துள்ளார். என்ன சமூக சிந்தனையுள்ள பேட்டி! பல வருடங்களாக சினிமாக்காரர்கள் கூறும் வாதத்தையே இவரும் கூறுகிறார், ‘நடப்பதைத்தானே காட்டுகிறோம் ‘ என்று. இன்னும் எத்தனை நாட்களுக்கு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்களோ தெரியவில்லை. ‘நீலப்படமா எடுக்கிறோம் ? ‘ என்று வேறு கேட்கிறார்! (அந்த ஆசை வேறு இருக்கிறதா ?). நீலப்படங்களில் என்ன உடலுறவுக் காட்சிகள் தானே இருக்கும். தமிழ் நாட்டில் அது நடப்பதில்லையா ? நடப்பதைத்தானே காட்டுகிறோம் என்று அவற்றையும் காட்ட முடியுமா ? எது நடப்பதில்லை ? சிலவற்றை வீட்டுக்குள்ளேயே வைக்க வேண்டும்; சிலவற்றை பொதுவில் செய்யக்கூடாது என்பதுதான் சமூகமும் அதற்கான விதிகளும். உங்களுக்கு ஒரு கோடி கும்பிடு, இனியாவது ‘நடப்பதைத்தான் காட்டுகிறோம் ‘ என்ற கிறுக்குத்தனமான வாதத்தை நிறுத்துங்கள். காது புளித்துவிட்டது.

சமீபகாலமாக இன்னொன்று, எதற்கெடுத்தாலும், ‘அமெரிக்கா போன்ற நாடுகளில் இது சகஜம் ‘ என்று கூறுவது! இருக்கட்டுமே, அது அவர்கள் கலாச்சாரம். அதை ஏன் இங்கு புகுத்தவேண்டும் ? அவ்வளவு அவசரமாக நம் குழந்தைகளையும், மக்களையும் அந்த கலாச்சாரத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன ? நம் கலாச்சாரத்திற்கு திடாரென என்ன குறைந்துவிட்டது ? போதை மருந்துப் பழக்கங்களும் கூட அமெரிக்கா போன்ற நாடுகளில் சகஜம். அதற்காக அவற்றை நம் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தலாமா என்ன ? பிற நாடுகளில் உள்ள நல்ல விசயங்களை மட்டும் எடுத்துக்கொள்வதுதான் அழகு. புடவையை உதறிவிட்டு தங்கள் வசதிக்காக பெண்கள் சுடிதாரும், ஜீன்ஸும் அணிவது கலாச்சார மாற்றம். புடவை, புற ஆடைகளை உருவிவிட்டு உள்ளாடைகளுக்கு வர்ணம் பூசி வெளியாடைகள் போலக் காட்டி குலுக்கி ஆடச் சொல்வது கலாச்சாரச் சீரழிவு. சமூக மாற்றத்தைத் தடுக்க முடியாது. தடுக்கவும் தேவையில்லை. ஆனால் மாற்றத்தை நல்ல முறையில் கொண்டு செல்லும் கடமை-பொறுப்பு அனைவருக்கும் தேவை. மாற்றம் என்ற பெயரில் சீரழிவு செய்யாதீர்கள் என்பதே வெகுஜன வேண்டுகோள்.

முன்பின் அறிமுகமில்லாத பெண்ணைப்பார்த்து ‘ஓடிப்போயிடலாமா ? ‘ எனக் கேட்பது, பட்டம் வாங்கும் போது பட்டம் வழங்கும் பெண்மணியைப்பார்த்து ‘ஐ லவ் யு ‘ சொல்வது, ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நடுநிசியில் நடுத்தெருவில் பெண்களோடு சேர்ந்து ஆடிவிட்டு காவல் நிலயம் செல்வது, நம் சமூக நம்பிக்கையின் ஆணிவேரான தாலியைக்கழட்டி ஆணியில் மாட்டுவது, அப்பாவை, ‘டேய் சேகர் ‘ என பெயர் சொல்லி மரியாதையாக( ?!) அழைப்பது, 4 வயது பிள்ளைகள் கூட 40 வயது ஆட்களை விட மோசமாக பேசுவது; இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் பெரிய டைரக்டர் என பெயர் வாங்கிய மணிரத்னம் படங்களின் சமூக அன்பளிப்புகள். இப்போது ஷங்கரும் சேருகிறார். சேரன், லிங்குசாமி போன்ற புதுமுக இயக்குனர்களை விட பெரிய டைரக்டர்கள் எனப் புகழ் பெற்றுவிட்டவர்களின் படங்களில் தான் இந்தக் கேவலங்கள் அதிகமாக இருக்கிறது. இப்படித்தான் பெரிய இயக்குனராவதோ என்னவோ ? செல்வராகவனும் சீக்கிரம் பெரிய டைரக்டர் ஆகிவிடுவார்! இந்தப்படங்களைப் பார்த்துவிட்டு, மாணவர்கள் ஆசிரியைகளை ஓடிப்போக அழைத்தக் கூத்துக்களும் நடந்தது. எங்கோ மாநரப்பகுதிகளில் ஒரு சில சம்பவங்கள் நடக்கலாம்; ஒரு சில வாயாடிக் குழந்தைகள் அப்பாவை பெயர் சொல்லி அழைக்கலாம். இது போன்ற காட்சிகளைக் காட்டுவதால் அதனுடைய நீட்சி கிராமப்புறங்களிலும் எதிரொளித்து, ஒழுக்கமான குழந்தைகளும் கெட்டுப்போக வாய்ப்பளிக்கும்.

ஒரு நகரப் பேருந்து நிலயத்தில் கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாகக்கூறி ஒரு காதல் ஜோடியை போலீஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பொதுவிடங்களில் இப்படி நடக்கக்கூடாதென்று எச்சரித்து அனுப்பியுள்ளது, செய்தி. முத்தம் கூடாதென்பதாலோ, போலீஸிற்கு பிடிக்கதென்பதாலோ அல்ல. பல வயதினரும், பலதரப்பட்ட மக்களும் இருக்கும் பொது இடமென்பதால்தான்.1000 பேர் வரக்கூடிய பேருந்து நிலையத்திற்கே இப்படி. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் படங்களில் பல வருடங்களாகக் கிட்டதட்ட அனைத்துப்படங்களிலும் முத்தக்காட்சியை வைத்துவருகிறார் கமல்! இதை யார் கண்டிப்பது ? சென்சார் எப்படி அனுமதிக்கிறது ? நகைச்சுவை என்ற பெயரில் அப்பட்டமான ‘ஈவ் டாஸிங் ‘ காட்சிகள். நடந்துபோகும் பெண்ணைப்பார்த்து ‘நீ என்ன, உலக அழகிக்கு தங்கையா ? ‘ என்று கேட்கிறார் ஒரு சிரிப்பு நடிகர்! (இவர் ஏதோ ஆணழகனுக்கு அண்ணன் போல!) இதைப்பார்த்து விட்டு ‘ஈவ் டாஸிங் ‘ செய்யும் மாணவர்களை போலீஸ் கைது செய்கிறது. இது போன்ற காட்சிகளுக்கு சென்சார் ஏன் அனுமதியளிக்கிறது ? கொலை செய்வதை விட அதை தூண்டுவதற்கே தண்டனை அதிகம் எனில், பெண்களை கிண்டல் செய்வது குற்றமாகிவிட்ட நிலையில், அதை தூண்டுவது போல அமையப்பெற்ற இக்காட்சிகளை எடுப்போரையும், நடிப்போரையும் போலிஸ் கைது செய்யுமா ?

கேட்டால் கதைக்குத் தேவையானதென்பதாலேயே இக்காட்சிகள் இடம்பெறுவதாக, அதரப்பழைய வாதத்தையே வைக்கிறார்கள். இது அடுத்த முட்டாள்தனம். கதையை அமைப்பதே இவர்கள் தானே. கதைக்குத் தேவையெனில் கவர்ச்சிக் காட்டுவேன் என்று நாயகிகள் கூறுவதுபோல! கதைக்கும் கவர்ச்சிக்கும் என்ன சம்பந்தம் ? ஆள் மயக்கியாகவோ, விலைமாதாகவோ நடிப்பதானால் சிறு கவர்ச்சி வைக்கலாம். (அதையும் கவர்சி இல்லாமல் எடுக்க முடியுமென்பதே உண்மை!) இவர்களோ, கதாநாயகிகள். கல்லூரியில் படிக்கும் ஒரு சாதாரணப் பெண், ஹீரோவைக் காதலிக்கப் போகிறார். அவ்வளவுதான் கதையும் அவர்கள் கதாப்பாத்திரமும். இதில் கதைக்கு ஏற்ப கவர்ச்சிக்காட்டுவேன் என்பது என்ன ஏமாற்றுவேலை! ‘எல்லாவற்றையும் மறைத்து வைத்துதான் மாணவர்களை கெடுத்து வைத்திருக்கிறோம் ‘ என்றுவேறு கவலைப்படுகிறார். என்ன கரிசனம் ? ஆடும் ஓநாயும் உள்ள பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஷங்கரும், கமலும், மணிரத்னமும், செல்வராகவனும், சுஜாதாவும் வந்துதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என மாணவர்கள் ஒன்றும் அழவில்லை. நல்ல வழிக்காட்ட முடியாவிட்டாலும் பரவாயில்லை, தீயவழிகளைக் காட்டாமலிருந்தாலே போதும்.

‘நான் படித்தபோது பார்த்தவைகளை படமாக எடுக்கவேண்டும் என நினைத்ததையே எடுத்திருக்கிறேன் ‘ என்கிறார் ஷங்கர். எங்கு, மனநோய் காப்பகத்தில் படித்திருப்பாரோ ?! நானும் கூட இரண்டு கல்லூரிகளில் படித்திருக்கிறேன். எந்த மாணவரும் அம்மணமாகத்திரிந்து நான் பார்க்கவில்லை. எங்காவது பைத்தியம் பிடித்து, அழுக்கேறி, தலைவிரி கோலத்துடன் அப்படி நடப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். காதலுக்காக துணியைக்கழட்டி அம்மணமாகத் திரிபவர்கள் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட வேண்டியவர்கள். ஹீரோவாக்கப்படவேண்டியவர்களல்ல. (அல்லது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்). வயது அதிகமாக ஆக ஒரு சிலருக்கு மூளை குழம்பிவிடும் என்பதற்கு சுஜாதா ஒரு உதாரணம்.

நூறு இளைஞர்களைக் கொடுங்கள் இந்த உலகத்தையே மாற்றிக்காட்டுகிறேன் என்று சொன்ன விவேகானந்தர் பிறந்த நாட்டில், ஒருக் கோடி இளைஞர்களைக் கொடுங்கள், ஒரே படம் எடுத்து அவர்களை சீரழித்துக் காட்டுகிறோம் (அதற்கு பணமும் பெற்றுக்கொண்டு!) என்று திரிபவர்களை என்ன சொல்ல ? இது போன்ற படங்களை தணிக்கையல்ல தடையே செய்யவேண்டும். அதீத நடவடக்கையாக தோன்றினாலும் பரவாயில்லை என்று டாக்டர் ராமதாஸ் சொல்வதுபோல ஒரு 5 வருடங்களுக்கு சினிமாவையே தடை செய்தால் தான் நாடு உருப்படும் போல தெரிகிறது.

[சாட்டையடி கொடுத்திருக்கும் ‘இந்தியா டுடே ‘ இதழுக்கும், ‘சீ ‘ என விமர்சனம் கூறியுள்ள விகடனுக்கும் மற்றும் கண்டனம் தெரிவிக்கும் அனைவருக்கும் என் வணக்கங்கள்.]

-பித்தன்

piththaa@yahoo.com

Series Navigation

பித்தன்

பித்தன்