காமராசர் கலந்து கொண்ட போராட்டங்கள்

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

கலைமணி


பெருந்தலைவர் காமராசர் தமது பதினாறாம் வயதில் முழுநேரக் காங்கிரஸ் தொண்டர் ஆனார். அப்போது முதல் அவரது எழுபத்திரண்டாம் வயதுவரை அவரது அரசியல் வாழ்க்கையில் அவர் பல போராட்டங்களைச் சந்தித்தார். அந்தப் போராட்டங்கள் அனைத்தும் நாட்டு நலனை மட்டும் அடிப்படையாகக் கொண்டவை. அந்தப் போராட்ட நாயகனின் தொடர் போராட்டங்கள் ஆங்கிலேயர் அரசுக்குப் பெருஞ்சவாலாக இருந்தன. இந்தியர்கள் நடுவே அவரது பெருமையையும் புகழையும் எடுத்துக் காட்டின. தன்னலங்கருதாத அந்தப் போராட்டங்களால் காமராசர் பின்னாளில் பெருந்தலைவர் ஆனார்.

வேல்ஸ் இளவரசருக்கு எதிர்ப்பு

1920ஆம் ஆண்டு புதிய சட்ட மன்றங்களைத் தொடங்கி வைப்பதற்காக இங்கிலாந்தின் இளவரசர் வேல்ஸ், இந்தியாவுக்கு வந்தார். முதலில் அவர் மும்பைக்கு வந்தார். அவரது வருகையைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குக் காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. அதன்படி காங்கிரஸ் கட்சியினர் மும்பையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணல் காந்தியடிகளும் கலந்து கொண்டார்.

சென்னைக்க வர இருந்த வேல்ஸ் இளவரசரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு டி.எஸ்.எஸ். இராசன் ஏற்பாடு செய்தார். அந்த ஆர்ப்பாட்டத்தில கலந்து கொள்வதற்காகக் காமராசரும் சென்னைக்குச் சென்றார். அவருடன் அவரது நண்பர் சண்முகமும் சென்றிருந்தார். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காமராசரின் விடுதலைப் போராட்ட உணர்வு தீவிரமானது.

ஒத்துழையாமை இயக்கம்.

1920ஆம் ஆண்டு அண்ணல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். அதன்படி சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட மன்றத்தையும், வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தையும், மாணவர்கள் கல்லூரியையும் புறக்கணிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஒத்துழையாமை இயக்கத்தைத் தமிழ்நாட்டுத் தலைவர்களில் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, சி.ஆர்.தாஸ், சத்தியமூர்த்தி போன்றோர் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்க மறுத்து விட்டனர். ஆனால் 1920ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மாநாடு ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு அளித்தது.

ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவதற்கென்று ஒவ்வோர் ஊரிலும் குழு அமைக்கப்பட்டது. விருது நகரிலும் காமராசர் ஒரு குழு அமைத்தார். ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றி இளைஞராக இருந்த காமராசர் அனைவரிடமும் விளக்கினார். பெரும்பாலான இளைஞர்களை அதில் பங்கேற்கச் செய்தார்.

வைக்கம் போராட்டம்

விருதுநகரில் காங்கிரஸ் கூட்டங்கள் நடத்துவதும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வெளியூரில் நடைபெறும் கூட்டங்களுக்குச் செல்வதும் காமராசருக்கு வழக்கமாகி விட்டது. இதைக் கண்ட காமராசரின் தாயார் சிவகாமி அம்மையார் மிகவும் வருந்தினார். ஆங்கிலேயருக்கு எதிராக இப்படிக் வட்டம் நடத்தினால் தமது ஒரே மகன் துன்பப்பட நேரிடும் என்று எண்ணினார். எனவே, எங்காவது வெளியூருக்கு அனுப்பிவிட வேண்டும் என்று முடிவு செய்தார். அப்போது காமராசரின் தாய்மாமன் ஒருவர் திருவனந்தபுரத்தில் கடை வைத்திருந்தார். அவரது பெயர் காசிநாடார். அவரிடம் அனுப்பினால் காமராசர் அரசியலில் ஈடுபடமாட்டார் என்று திருவனந்தபுரத்திற்கு அனுப்பினார்.

திருவனந்தபுரத்திற்கு அருகே வைக்கம் என்னும் ஊரில் கோயில் இருக்கும் தெருவில் தாழ்த்தப்பட்டவர்களும் செல்ல அனுமதிக்க வே¢ணடும் என்று தந்தை பெரியார் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்ட விளக்கக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்குக் காமராசரும் நாள் தோறும் சென்றார். வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார். வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரத்திலும் கடை வேலையைச் செய்யாமல் காமராசர் அரசியலில் ஈடுபட்டதால் அவரது தாய்மாமன், அவரை விருதுநகருக்கு அனுப்பி விட்டார்.

கள்ளுக்கடை மறியல் போராட்டம்

ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் பலர் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர். செளரி செளரா என்ற இடத்தில் காந்தியடிகளின் கட்டளையை மீறி, தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டது. திடாரென்று காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதைப் பல தலைவர்கள் எதிர்த்தனர்.

தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடர்ந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. தமிழ் நாட்டில் கள்ளுக்கடைகளை மூட வேண்டும் என்று கள்ளுக்கடை மறியல் போராட்டம் 1923ஆம் ஆண்டு நடைபெற்றது.

மதுரையில் உள்ள கள்ளுக்கடைகளின் முன் மறியல் செய்வதற்குக் காமராசர் ஏற்பாடுகள் செய்தார். மதுரையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தமது நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தார். பின்னர் வெளியே சென்றார்.

அந்த வேளையில் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்த போலீசார் காமராசரின் நண்பர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். காமராசர் அங்கே இல்லாததால் அவரைக் கைது செய்யவில்லை.

வெளியே சென்றிருந்த காமராசர் திரும்பி வந்து பார்த்தபோது காங்கிரஸ், அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. தமது நண்பர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்தார். தம் நண்பர்கள் சிறையில் வாடும் போது தாம் மட்டும் வெளியே இருந்ததை எண்ணி வருந்தினார்.

கொடிப் போராட்டம்

நாகபுரியில் அரசு அலுவலர்கள் குடியிருக்கும் பகுதியில் காங்கிரஸ் கொடியுடன் செல்லக்கூடாது என்று ஆங்கிலேயே அரசு 1923ஆம் ஆண்டில் தடை உத்தரவு பிறப்பித்தது. இதைக் காங்கிரஸ் கட்சி எதிர்த்தது. தடையை மீறி, கொடியுடன் ஊர்வலம் செல்லப் போவதாகக் காங்கிரஸ் அறிவித்தது. நாடு முழுவதும் இருந்து கொடிப் போராட்டத்தில் கலந்துகொள்ள நாகபுரியில் காங்கிரஸ் தொண்டர்கள் கூடினர்.

கொடிப் போராட்டத்திற்கு வல்லபாய் பட்டேல் தலைமை தாங்கினார். தமிழ்நாட்டிலிருந்து தொண்டர்களைக் காமராசர் நாகபுரிக்கு அனுப்பிவைத்தார். காமராசரும் நாகபுரிக்குச் செல்வதற்கு ஏற்பாடு செய்தார்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் ஆங்கிலேயே அரசு ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தது; அனுமதி பெற்றவர்கள் மட்டும் கொடியுடன் செல்லலாம் என்றும் அறிவித்தது. காமராசர் நாகபுரிக்குச் செல்வதற்கு முன் கொடிப் போராட்டம் முடிந்து விட்டது.

நீல் சிலையை அகற்றிய போராட்டம்

ஷேம்ஸ் நீல் என்பவர் சென்னை மாநிலப் படைத் தளபதியாக இருந்தவர். சிப்பாய்க் கலகம் நடைபெற்றபோது கல்கத்தாவிற்குச் சென்று இந்தியச் சிப்பாய்களைச் சுட்டுக் கொன்றவர். அவரது சிலையை ஆங்கிலேய அரசு சென்னையில் உள்ள அண்ணாசாலையில் நிறுவியிருந்தது.

அந்தச் சிலையை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தின் முதல் கட்டமாகக் குடியாத்தத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரும் நெல்லையைச் சேர்ந்த சோமயாஷுலு என்பவரும் கலந்து கொண்டு சிறை சென்றனர்.

1927ஆம் ஆண்டு காந்தியடிகள் சென்னைக்கு வந்திருந்தார். அவரிடம் நீல் சிலையை அகற்றுவதற்கான போராட்டத்தை நடத்துவதற்குக் காமராசர் அனுமதியும் ஆலோசனையும் கேட்டார். அதற்குக் காந்தியடிகள் அனுமதி கொடுத்தார். ‘சிறு களிமண் உருண்டைகளை ஷேம்ஸ் நீல் சிலையின் மீது எறிந்து போராடுங்கள்’ என்று ஆலோசனையும் வழங்கினார்.

விருது நகரில் இந்தியக் குடியரசு காங்கிரஸ் மாநாடு நடத்துவதற்குக் காமராசர் ஏற்பாடு செய்திருந்தார். அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நேருவைக் காமராசரும் சத்தியமூர்த்தியும் அழைத்தனர். நேருவும் அதற்கு ஒப்புக் கொண்டார். அந்த மாநாட்டில் சென்ைனையிலிருக்கும் ஷேம்ஸ் நீல் சிலையை அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

காமராசர் தலைமையில் நீல் சிலை அகற்றும் போராட்டம் நடைபெறப் போவதை அறிந்து ஆங்கிலேய அரசு, நில் சிலையை அகற்றியது.

சைமன் குழுவிற்கு எதிர்ப்பு

ஆங்கிலேய அரசின் கொள்கையில் மாற்றம் இல்லாமல், காங்கிரஸ் இயக்கத்தின் கோரிக்கைகளில் எவற்றை ஏற்கலாம், மக்களின் கருத்து என்ன ? என்பதை அறிவதற்கு ஆங்கிலேய அரசு ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவுக்குச் சைமன் என்னும் ஆங்கிலேயர் தலைமை தாங்கினார்.

சைமன் குழுவில் இந்தியாவின் சார்பில் இந்தியர் யாருமே இல்லை. இந்தியர் யாருமே இல்லாத ஆங்கிலேயக் குழுவால் இந்தியர்க்கு எந்த நன்மையும் கிடைக்காது என்று காங்கிரஸ் கட்சி உணர்ந்தது. சைமன் குழுவை எதிர்த்துப் போராடுவதற்குக் காங்கிரஸ் கட்சி தீர்மானித்து.

1928ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் நாளை சைமன் குழு மும்பைக்கு வந்தது. அன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

லாகூரில் சைமன் குழுவை எதிர்த்து லாலா லஷபதிராய் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். லஷபதிராய் தடியடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் ஷவகர்லால் நேரு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. சென்னையிலும் சைமன் குழுவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நீதிக் கட்சியின் ஆட்சி நடைபெற்றதால் போராட்டம் வலுப்படவில்லை.

சைமன் குழு மதுரைக்கு வந்தபோது போராட்டம் காமராசர் தலைமையில் நடைபெற்றது. மதுரைக்கு வந்த சைமன் குழுவினர் திருமலை மன்னர் மகாலில் தங்கியிருந்தனர். மகாலைச் சுற்றிப் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். காங்கிரஸ் தொண்டர்களை மகாலுக்கு அருகில் வரமுடியாதபடி நூறு அடிக்கு முன்பே தடுத்து நிறுத்தி விட்டனர்.

காமராசர் அங்கு வந்தார். மன்னர் மகாலுக்கு முன்பு கூட்டமாக நிற்பதற்குத்தானே தடை விதித்திருந்தார்கள். நடந்து செல்வதற்குத் தடை இல்லை அல்லவா ? ‘வாருங்கள்’ என்று தொண்டர்களை அழைத்துக் கொண்டு காங்கிரஸ் கொடியைப் பிடித்தபடி முன்னார் நடந்தார். தொண்டர்கள் அனைவரும் தலைவரின் பின்னால் நடந்து சென்றார்கள். மன்னர் மகாலைக் கடந்து சென்றதும் மீண்டும் அதே வழியில் திரும்பி வந்தார்கள். இவ்வாறு மீண்டும் மீண்டும் அணிவகுத்துச் சென்று சைமன் குழுவிற்குக் காமராசரும் ஆயிரக் கணக்கான தொண்டர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

உப்புச் சத்தியாக்கிரகம்

1930ஆம் ஆண்டு ஏப்ரல் பதின்மூன்றாம் நாள் வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாக்கிரகம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

காமராசரும் உப்புச் சத்தியாக்கிரகத்தில் கைது செய்யப்பட்டார். அவர் உப்புச் சத்தியாக்கிரகத்திற்குத் தொண்டர் படையைத் திரட்டி அனுப்பியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஏறத்தாழ 100 பேர் பலியானார்கள். நானூறு பேர் காயம் அடைந்தனர். அப்போது வைசிராயாக இருந்த இர்வின், காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

எரவாடாச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காந்தியடிகளுடன் இர்வின் பேச்சு நடத்தினார். அந்தப் பேச்சின் அடிப்படையில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதம் முப்பதாம் நாள் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அந்த உடன்படிக்கையின்படி காங்கிரஸ் தலைவர்கள் மீதும் தொண்டர்கள் மீதும் தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப் பெற்றன. சிறையிலிருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

காமராசரும் விடுதுலை செய்யப்பட்டார். விடுதலையாகி, விருதுநகருக்கு வந்த காமராசருக்கு மாபெரும் வரவேற்பை மக்கள் வழங்கினார்கள். இரயில் நிலையத்தில் புறப்பட்ட வரவேற்பு ஊர்வலம் காமராசரின் இல்லத்தில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் உற்சாகமாக வந்த தொண்டர்கள் நடுவே காமராசர் பேசினார். அந்தப் பேச்சால் தொண்டரகள் மேலும் உற்சாகம் அடைந்தனர்.

காமராசர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார் என்று தெரிந்ததும் அவரது பாட்டியார் பார்வதி அம்மையார் மிகவும் வருந்தினார். அவர் நோய்வாய்ப்பட்டார். பாட்டியாரின் உடல்நிலை சிறையிலிருந்த காமராசருக்குத் தெரிவிக்கப்பட்டது. பரோலில் சென்று பாட்டியைப் பார்த்து வரும்படி தொண்டர்கள் கூறினார்கள். ஆனால் பரோலில் செல்வதற்குக் காமராசர் மறுத்து விட்டார்.

காமராசர் விடுதலை அடைந்தார் என்ற செய்தியை அறிந்த பார்வதி அம்மாள் மகிழ்ச்சி அடைந்தார். என்றாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. திரும்பி வந்த காமராசரைப் பார்த்த மகிழ்ச்சியில் சில நாட்களில் அவர் மறைந்தார்.

தனிநபர் சத்தியாக்கிரகம்

1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஓர் அணியிலும் ஷப்பான், ஷெர்மனி, இத்தாலி ஆகியவை எதிர் அணியிலும் திரண்டன.

இந்தியர்களைக் கலந்து ஆலோசிக்காமல் இந்தியாவையும் போரில் ஈடுபடுத்தியது இங்கிலாந்து அரசு. இதைக் காங்கிரஸ் கட்சி எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியது. தனிநபர் சத்தியாக்கிரகத்தை நாடு முழுவதும் நடத்துவதற்குக் காங்கிரஸ் கட்சி திட்டம் வகுத்தது.

தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடுபவர்கள் காங்கிரஸ் கட்சியின் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதன்படி தமிழ்நாட்டில் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடுவோரின் பட்டியலைக் காமராசர் தயாரித்தார். அதைக் காந்தியடிகளிடம் கொடுப்பதற்கு வார்தாவுக்கப் புறப்பட்டார் காமராசர். வழியில் குண்டூரில் காமராசர் கைது செய்யப்பட்டார்.

வெள்ளையனே வெளியேறு

இங்கிலாந்து நாட்டுடன் போருக்கு ஒத்துழைக்க இந்தியர்கள் மறுத்தனர். இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த விரும்பிய தலைவர்கள் மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘வெள்ளையனே வெளியே’ என்று முழங்கினார்கள். அந்த மாநாட்டில் கலந்து கொள்ள, காமராசர் தலைமையில் தலைவர்களும் தொண்டர்களும் மும்பைக்குச் சென்றிருந்தனர். மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள் வெளியாவதற்கு முன்பே தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். காமராசர் அங்கிருந்து தப்பி, தமிழ்நாட்டுக்கு வந்தார். தமிழ்நாடு முழுவதும் மாநாட்டுத் தீர்மானங்களைப் பரப்பினார்.

தேசியத் தலைவர் காமராஷர்

ஆசிரியர் : கலைமணி

Series Navigation

கலைமணி

கலைமணி