வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 4

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

PS நரேந்திரன்


‘கற்றதும் பெற்றது ‘மில் சுஜாதா, ‘திருவதிகை ‘ கோவிலைப் பற்றி எழுதி இருந்தார். எனக்கு இவ்வளவு அருகில் இருக்கும் இந்தக் கோவிலுக்குப் போகாமல் இருக்கக் கூடாது என்று, ஒருநாள் திருவதிகைப் பக்கம் போயிருந்தேன். கடலூரிலிருந்து நெல்லிக்குப்பம் போகும் வழியில், வெள்ளை கேட்டில் (வெள்ளை பெயிண்ட் அடித்த ரயில்வே Gate, வெள்ளை கேட் என நாமகரணம் சூட்டப் பட்டிருக்கிறது) இடது பக்கம் திரும்பி, கிராமச் சாலையில் ஒரு நான்கு கி.மீ. தூரம் ‘குலுலுலுலுங்கி ‘க் கொண்டே பயணம் செய்தால், திருவதிகை வருகிறது.

‘கெடிலம் ‘ ஆற்றங்கரையில் அமைந்த பழமையான கோவில். அமைதியான சூழ்நிலை. சுவாமி தரிசனம் செய்துவிட்டு, எதிரிலிருக்கும் குன்றில் ஏறிப் பார்த்த போது, சுற்று வட்டாரக் கிராமங்கள் மிகப் பசுமையாக, அழகாகத் தெரிந்தன. வழக்கம் போல மரத்திற்கு மரம் காதலர்கள் கூட்டம். கண்டு கொள்ளாமல் ஒரு அமைதியான இடத்தில் உட்கார்ந்து ரசித்துவிட்டு வந்தேன்.

***

இந்தியாவில் இருந்த நேரத்தில் தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் தொடங்கியிருந்தது. அரசாங்கப் பள்ளிகள், அலுவலகங்கள் எல்லாம் மூடிக்கிடந்தன. வேலைகள் எதுவும் நடக்கவில்லை. எனினும், ஆச்சரியப் படத்தக்க வகையில் இந்தப் போராட்டத்திற்கு பொது மக்களிடமிருந்து எந்தவிதமான ஆதரவோ, எதிர்ப்போ இல்லை. மாறாக ஒருவகையான சலிப்பையும், கோபத்தையுமே எங்கும் காண முடிந்தது. தமிழ்நாட்டு அரசாங்க ஊழியர்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் இல்லை. காரணம் என்னவென்று அவர்களுக்கே தெரியும்.

போராட்டம் நடந்தது ஒரு பக்கம் இருக்கட்டும். இதைச் சாக்காக வைத்து அம்மா டி.வி.யும், அப்பா டி.வி.யும் நடத்தின குஸ்திதான் நல்ல வேடிக்கை.

‘போராட்டம் மிகப் பெரிய வெற்றி. அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. ஒருவரும் வேலைக்கு வரவில்லை ‘ என்று அப்பா டி.வி ஒரு காலியான அலுவலகத்தைக் காட்டும். அப்படியே சேனலை நகர்த்தி, அம்மா டி.வி. பக்கம் போனீர்கள் என்றால், ‘அரசு ஊழியர் போராட்டம் படு தோல்வி. அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வந்தனர் ‘ என்று கூட்டமான ஒரு அலுவலகத்தை திரும்பத் திரும்ப காட்டுவார்கள். பார்க்கிற பொதுஜனம், இந்த இரண்டில் எது உண்மை என்று புரியாமல் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருப்பார்.

எந்த ஒரு தமிழக அரசு அலுவலகத்திற்கும் போய், பத்து பைசா லஞ்சம் கொடுக்காமல், நிம்மதியாக வேலைகளை முடித்து சந்தோஷமாக வந்தவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். பெரிய இடத்து சிபாரிசில் போனவர்கள் வேண்டுமானால் சுலபமாக வேலைகளை முடித்து, சந்தோஷமாக வெளியே வரலாம். சாதாரண பொதுமக்களுக்கு அந்த பாக்கியம் கிட்டவே கிட்டாது. நமது பக்கத்து மாநிலங்களில் கூட இந்த அளவு பிடுங்கித் தின்கிறவர்கள் இல்லை.

கர்நாடக சட்ட சபைக்குள் எங்களை அழைத்துச் சென்றவர் சாதாரண ஒரு கடை நிலை ஊழியர் (Peon). ஒவ்வொரு இடத்திற்கும் எங்களைச் சந்தோஷமாக அழைத்துப் போய், விளக்கம் சொல்வதற்கு தமிழ் தெரிந்த ஒரு ஆளையும் கூட்டி வந்தார். வெளியில் வரும்போது பழக்க தோஷத்தில் அவருக்கு நூறு ரூபாய் ‘கைச் செலவிற்கு வைத்துக் கொள்ளுங்கள் ‘ எனக் கூறிக் கொடுத்தேன். தீயைத் தீண்டியது போல துடித்துவிட்டார் மனிதர். அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறன. ‘நீவு நம்ஹே கஸ்ட்டு மஹாராயா! (நீங்கள் எங்களின் விருந்தாளிகள் ஐயா). நான் உங்களுக்கு காபி வாங்கித்தர வேண்டும். Caffeteria மூன்று மணிக்கே மூடிவிட்டதால் அது முடியவில்லையே என்று வருந்திக் கொண்டிருக்கிறேன். இப்படிச் செய்து விட்டார்களே ? ‘ என்றார் உண்மையான வருத்தத்துடன்.

எனக்கு மிகுந்த அவமானமாகப் போய் விட்டது. ‘காமாலைக் கண்ணணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் ‘ என்பது போல, எல்லா மாநில அரசு ஊழியர்களையும் ஒரே தட்டில் எடை போட்டது என் தவறுதான். சங்கடத்துடன் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வந்தேன்.

மனித மனோபாவத்தில்தான் எத்தனை வித்தியாசங்கள் ?

***

போடிநாயக்கனூருக்குப் போய் ஒரே நாளில் திரும்ப வேண்டியதாகி விட்டது. எனது உறவினர்களில் பலர் அந்தப் பகுதியில்தான் இருக்கிறார்கள். ஓரளவு தண்ணீருக்குத் தட்டுப்பாடில்லாமல் இருந்து வந்த தேனி மாவட்டத்தில் கூடத் தென்னை மரங்கள் சில இடங்களில் கருகிக் கிடந்தன. கிணற்றுத் தண்ணீர் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டதால், விவசாயம் செய்து வந்த சொந்தங்களில் பலர் கேரள மூணார் பக்கம் சாந்தன்பாறைக்கோ, பூப்பாறைக்கோ ஏலத்தோட்டங்களில் கூலி வேலைக்குப் போய் விட்டார்கள். இப் பகுதி மக்கள் ஒன்று கூடி, இருக்கும் குளங்களை தூர் வாரி செம்மைப் படுத்தினால் நீர்ப் பிரச்சினையை ஓரளவு தவிர்க்கலாம். இதற்கான நடைமுறைச் சாத்தியங்கள் மிகக் குறைவு. சாதி மற்றும் திராவிட கட்சி அரசியல் காரணமாக பல துண்டுகளாகப் பிரிந்து கிடக்கும் இப்பகுதி மக்களை ஒன்று படுத்துவது எளிதில் இயலாத காரணமாகவே தோன்றுகிறது.

இருக்கும் நல்ல விளை நிலங்களையும் ‘பிளாட் ‘ போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் விவசாயம் செய்ய துண்டு நிலம் கூடக் கிடைக்காது போலிருக்கிறது. நிலமை இப்படியே போனால் கல்லையும், மண்ணையும்தான் தின்ன வேண்டியிதிருக்கும்.

முன்னேற்றப் பணிகள் மருந்துக்குக் கூட கண்ணில் தட்டுப் படவில்லை. சென்ற ஆட்சியிலாவது புதிதாக பாலங்கள், கிராமச் சாலைகள் என்று ஏதாவது செய்து கொண்டிருந்தார்கள். இப்போதைய ஆட்சியில் அதுபோன்ற பணிகள் எதுவும் நடப்பதை நான் பார்க்கவில்லை. மக்களின் வரிப்பணம் எங்கு போய் பதுங்குகிறதோ ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

சில நல்ல விஷயங்களையும் பார்க்க முடிந்தது. லாட்டரிச் சீட்டை ஒழித்திருக்கிறார்கள். மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வந்த கந்துவட்டியை தடை செய்திருக்கிறார்கள். பான் பராக் போன்ற போதை வஸ்துக்களையும் தடை செய்திருக்கிறார்கள். பாராட்டப் பட வேண்டிய நல்ல விஷயங்கள்தான். அது மட்டும் போதாதே….கூடவே பொருளாதார முன்னேற்றப் பணிகளும் அல்லவா வேண்டும் ?

***

தமிழ்நாட்டில் மது அருந்துவது ஒரு ஏற்கப்பட்ட சடங்காக மாறியிருக்கிறது. குடிப்பது தவறு என்ற எண்ணம் மிக, மிகக் குறைந்து விட்டது. முன்பெல்லாம் நண்பர்களையோ, உறவினர்களையோ சந்திக்கும் போது, அவர்கள் சக்திக்கேற்ப காபியோ, டாயோ வாங்கித் தந்து உபசரிப்பார்கள். இப்பொழுதெல்லாம் நேராக ஏதாவது ‘பார் ‘க்குத்தான் தள்ளிக் கொண்டு போகிறார்கள். நான் ‘சோமபான ‘ப் ப்ரியனில்லை எனினும், தவிர்க்க முடியாமல் ஒப்புக்காகவாவது அவர்களுடன் போக வேண்டியிருந்தது. தலையெழுத்தே என்று ஏதாவது குடிக்க வேண்டியதும் சில சமயம் நடந்தது.

அதிலும், Beer என்ற பெயரில், ‘பட்டை சாராயத்தை ‘ அடைத்து விற்கிறார்கள் தமிழ்நாட்டில். ஒரு பாட்டில் குடித்ததும் நாக்குழறி, ஒண்ணு, ரெண்டு கூட ஒழுங்காகச் சொல்ல முடிவதில்லை. வாயைத் திறந்தால், ‘ஒழ்ழேய்…ழெழ்ழேய்…ழூழேய்… ‘ என்று ஒரே ஃபிரெஞ்சுப் ஃபிரெஞ்சாய் வருகிறது. லேபிலில் 6% VV என்று போட்டிருக்கிறார்கள். அது என்னா VVயோ ? பாட்டிலில் அடைத்து விற்கிற பாவிக்குத்தானப்பா தெரியும் அதைப் பற்றி!

குடிக்கும் விஷயத்தில், கஞ்சன் என்று பெயரெடுத்தவர்கள் கூட தாராளமாகச் செலவு செய்கிறார்கள். நாளைய தேவைகளுக்குச் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் ‘மளார்…மளார் ‘ என்று சவட்டுகிறார்கள்.

வீட்டில் மனைவிமார்கள், ‘கள் ‘ ஆனாலும் கணவன் ‘Full ‘ ஆனாலும் புருஷன் என்று இருக்கும் வரை இவர்களை அசைத்துக் கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது.

***

நாகர்கோவிலில் வசிக்கும் ஒரு பிரபல எழுத்தாள நண்பரைச் சந்திக்க வருவதாக அவரிடம் appointment வாங்கி வைத்திருந்தேன். போகச் சந்தர்ப்பம் அமையவில்லை. அடுத்தமுறையாவது அவரைச் சந்திக்க வேண்டும். பெயரைச் சொன்னால், ‘இவன் அந்த எழுத்தாளரோட குரூப்புடோய்! ‘ என்று என்னையும் சுழலில் சிக்க வைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவரின் பெயரைக் குறிப்பிடவில்லை.

திண்ணையின் நீண்ட நாள் வாசகன் என்ற முறையில் ஒன்றைக் கூற விரும்புகின்றேன் (இந்தக் கட்டுரைக்குச் சம்பந்தமில்லாதது எனினும், எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை).

பல திறமையான, பிரபல எழுத்தாளர்கள் திண்ணையில் எழுதி வந்திருக்கிறார்கள். வருகிறார்கள். ஜெயமோகனாகட்டும், ஞாநியாகட்டும், முருகனாகட்டும், அரவிந்தனாகட்டும் அல்லது இங்கு குறிப்பிட மறந்த மற்ற எழுத்தாளர்களாகட்டும்….ஒருவருக்கொருவர் சளைக்காமல் மிகச் சிறப்பான முறையில் எழுதுகிறார்கள். நிறையப் படித்து, ஏராளமான விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் கையாளும் subjectகள் எனக்கு மிக மிக ஆச்சரியமளிப்பவை. சமயத்தில் கொஞ்சம் பொறாமையாகக் கூட….நமக்கு இதெல்லாம் தெரியவில்லையே என்று…

அதிருக்கட்டும். நான் சொல்ல வந்தது என்னவென்றால்…இவ்வளவு நல்ல, பல முனை அறிவுள்ள எழுத்தாளர்கள், தாங்கள் கண்டு, படித்து, அறிந்து, தெளிந்தவற்றை எழுதி திண்ணை வாசகர்களுக்கு விருந்து படைக்காமல், வெட்டிச் சண்டையில் தங்களின் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்களே என்ற மன வருத்தம் எனக்கு உண்டு. ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். திண்ணையின் ‘கடிதங்கள் ‘ பகுதியைப் பார்த்தாலே தெரிந்து போகும் இது. தேவையில்லாமல் பக்கம் பக்கமாக ஒருவரை ஒருவர் ஏசிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும், இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய சீனியர் எழுத்தாளர்களே கூட முண்டாவைத் தட்டிக் கொண்டு ‘கோதாவில் ‘ இறங்கிவிடுகிறார்கள் என்பதுதான் இன்னும் வருத்தமளிக்கக் கூடிய செய்தி.

‘நாவினாற் சுட்ட வடுவே ‘ ஆறாதென்றால், ‘எழுத்தாணியால் குத்திய வடு ‘ எப்படி ஆறும் ? புரையோடிச் சீழ் அல்லவா பிடித்துப் போகும் ?

இவர்கள் இப்போதுதான் இப்படியா ? அல்லது எப்போதுமே இப்படியா ? என்று எனக்குத் தெரியவில்லை. நல்லது. போனவை போகட்டும். இனிமேலாவது படைப்பாளிகள் நடந்தவற்றை மறந்து, நல்ல பல விஷயங்களை திண்ணை வாசகர்களுக்கு அளிக்க வேண்டும் எனப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எனவே,

‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்.

கலைச் செல்வங்கள் யாவும்

கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ‘

கூடவே,

‘குஸ்தி ‘ போடாமலும் இருப்பீர்!

***

பிறிதொரு சமயம் சந்திப்போம்.

narendranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்

வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 3

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

PS நரேந்திரன்


பெங்களூர் ‘ஜிலு ஜிலு ‘வென்று குளிர்ச்சியாக, அழகாக இருக்கிறது.

இந்தியாவின் பல பாகங்களில் நான் வசித்திருந்தாலும், இதுவரை கர்நாடக மாநிலத்தின் எந்தவொரு பகுதிக்கும் போனதில்லை. ரயிலில் ஹைதராபாதிலிருந்து, மும்பை போகும் வழியில் பலமுறை குல்பர்காவைக் கடந்திருக்கிறேன். அவ்வளவுதான் நான் கர்நாடக மாநிலத்தில் கண்டது. குல்பர்கா ஒரு பாலைவனம். வெறும் கல்லும், மண்ணுமாகக் கடவுளால் சபிக்கப் பட்ட பகுதி போல இருக்கும். தென் கர்நாடகா அதற்கு நேர் மாறாக, பசுமையாக இருக்கிறது.

இந்த முறை விடக்கூடாது. எப்படியும் கர்நாடகாவிற்கு ஒரு விசிட் அடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் இருந்தேன். பெங்களூரில் கம்ப்யூட்டர் இண்டஸ்ட்ரியின் அபரித வளர்ச்சியைக் கண்டு வர வேண்டும் என்பது ஒரு காரணம். எனது மனைவி வழிச் சொந்தக்காரர்கள் நிறையப் பேர் பெங்களூரில் இருக்கிறார்கள் என்பதும், தங்குவதற்கும், சுற்றிப் பார்ப்பதற்கும் பிரச்சினை எதுவும் இல்லை என்பதும் கூடுதல் காரணங்கள். ஒரு சுப யோக சுப தினத்தில் குடும்பத்தினருடன் வாடகைக் காரில் எனது பெங்களூர்ப் பயணம் துவங்கியது.

இந்த இடத்தில் வாடகைக் கார்கள் பற்றி உங்களூக்குச் சொல்லியாக வேண்டும்.

இப்போதெல்லாம் தழிழ்நாட்டில் எந்த ஊருக்கும் போனாலும் வாடகைக் கார்கள் கிடைக்கின்றன. சிறிய ஊர்களில் கூட ஒன்றிரண்டு கார்கள் நின்று கொண்டிருக்கும். பெரும்பாலும் அதே அரதப் பழசு அம்பாஸடர்கள்தான். பெரிய ஊர்களில் மற்ற ரகக் கார்கள் கிடைக்கின்றன என்று கேள்விப் பட்டேன். அது கிடக்கட்டும் ஒரு பக்கம்…நான் சொல்ல வருவது இந்த வாடகைக் காரோட்டிகளைப் பற்றி. இவர்களிடம் சிக்கி நான் பட்ட அவஸ்தைகளை எழுத வேண்டும் என்றால் தனி அத்தியாயமே வேண்டும். Professionalismமும் நேரந்தவறாமையும்…அடடா…என்னென்று சொல்வேன் ? அதிலும் எனக்குக் கிடைத்த டிரைவர் இருக்கிறானே…

‘ரங்கநாதா, விடியக் காலையில ஒரு இடத்துக்குப் போகணும்…ரொம்ப முக்கியமான வேலை…ஒரு அஞ்சு மணிக்கு வந்துடு. என்னா ? ‘

‘சரி சார்…அஞ்சுமணிக்கு ‘டாண் ‘ணு வந்திடறேன் சார் ‘

குழந்தைகள் முதற்கொண்டு எல்லோரும் காலை நான்கு மணிக்கு எழுந்து தயாராக இருப்பார்கள். ஐந்து மணியாகும்…ஐந்து ஆறாகும்…ஆறு ஏழாகும்…ஏழு, எட்டு கூட ஆகி விடும். ரங்கனைக் காணமுடியாது. எங்கு போய் பள்ளி கொண்டானோ ? என எல்லோரும் சபித்துக் கொண்டிருப்பார்கள். கோவிலில் பெருமாள் கூட இந்நேரம் எழுந்திருச்சிருப்பாரு…இந்தப் படுபாவியக் காணலியே…சரி…இன்னைக்கு வெளியே போக வேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, ரங்கநாத தரிசனம் கிடைக்கும்.

‘ஹி..ஹி….கொஞ்சம் லேட்டாயிடிச்சி சார்… ‘ என்பான் இளித்துக் கொண்டே. மூக்கு வரை வந்து நிற்கும் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். ஏதாவது சொன்னால் அடுத்த நாள் பதினொரு மணிக்குதான் வருவான்.

காசு கொடுத்து வாங்கிய முடிவில்லாத இம்சை அது…அதை விடுங்கள்…பெங்களூர் போனதைப் பற்றி பார்க்கலாம்.

***

தருமபுரி தாண்டி, கிருஷ்ணகிரி நெருங்கும் போதே சீதோஷ்ண நிலையில் மாற்றம் தெரிய ஆரம்பித்து விடுகிறது. கிருஷ்ணகிரியில் மிகப் பிரம்மாண்டமான இரண்டு பாலங்கள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான்கு வழிச் சாலை போடும் பணி மிக மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

‘பாரதப் பிரதமர் வாஜ்பாயின் கனவான தங்க நாற்கரச் சாலைத் திட்டம் ‘ எனப் பளிச்சென்று போர்டுகள் வைத்திருக்கிறார்கள். ஏராளமான செலவில், சர்வதேசத் தரத்திற்கு இணையான சாலைகள் தயாராகி வருவது மிகவும் பாரட்ட வேண்டிய விஷயம். பெங்களூர் – கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை, சென்னைவரை இணைக்கப்படும் என்று தெரிகிறது. இவ் வேலைகள் முடிந்த பிறகு சென்னையிலிருந்து பெங்களூரை மிக விரைவில் சென்றடைந்துவிடலாம்.

இந்தச் சாலைப் பணிகளில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கன ரக வாகனங்கள் உபயோகப் படுத்தப்படுவது. முன்பெல்லாம் எங்கேனும் சாலைப் பணிகள் நடக்கும் போது, காலில் சாக்கு கட்டிய ஆண்களும், முக்காடிட்டுக் கூடை சுமக்கும் பெண்களும், நான்கைந்து ஓட்டை உடைசல் வண்டிகளும், சாலையோர மரத்தில் கட்டித் தொங்க விடப்பட்ட தூளிகளூம், அதிலுறங்கும் குழந்தைகளும்தான் கண்ணில் படுவார்கள். புதிதாய் நடக்கும் சாலைப் பணிகளில் பெண்களையும், குழந்தைகளையும் நான் பார்க்காதது மனதிற்கு நிம்மதியாக இருந்தது. சாலை போட்டு முடிக்குமுன் வேறொரு ஆட்சி வந்து, பணிகளை நிறுத்திவிடாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

***

மாநிலம் விட்டு மாநிலம் போகையில் காருக்கு ‘பர்மிட் ‘ வாங்க வேண்டுமாதலால், ஹோசூரில் R.T.O ஆபிசை தேடி கர்நாடக எல்லைக்கருகில் கண்டுபிடித்தோம். அது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தது, தமிழ்நாட்டில்தான் ‘பர்மிட் ‘ வாங்க வேண்டும் எனத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடலூரிலேயே வாங்கி இருந்திருக்கலாம். தமிழ்நாட்டுக்காரனுக்கே உரிய அசட்டுத் துணிச்சலில் ஹோசூரில் வாங்கிக் கொள்ளலாம் என்று வந்தாயிற்று. பட்டுத்தானே ஆக வேண்டும் ? அப்படியே U டர்ன் அடித்து, தமிழ்நாட்டு R.T.O ஆபிசைக் கண்டுபிடிப்பதற்குள் மண்டை காய்ந்து விட்டது.

ஹோசூர் தொழிற்சாலைகள் நிறைந்த நகரம். சரக்கு ஏற்ற வரும் ஏராளமான சரக்கு லாரிகளும், கன்டெய்னர் லாரிகளும் சாலை முழுக்க நிறைந்து, நின்று கொண்டிருந்தன. அதையெல்லாம் தாண்டி, புகுந்து, புறப்பட்டுதான் தமிழ்நாட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். கர்நாடக ஆபிஸ் பக்கா பில்டிங்கில், போர்டுடன் இருந்தால் எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது. தமிழ்நாட்டு R.T.O ஆபிஸ் இருந்தது ஒரு ஓலைக்கூரை வேய்ந்த இடத்தில், சரியான போர்டு கூட இல்லாமல். தினமும் நூற்றுக் கணக்கான லாரிகளும், கார்களும் இந்த இடத்தில் வந்து பர்மிட் வாங்கிக் கொண்டு போகின்றன. தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு எவ்வளவு வருமானம் வரும் ? ஒரு சரியான கட்டடம் கூடவா இவர்களால் கட்ட முடியாது ? கேவலம்.

பர்மிட் வாங்குமிடத்தில், பேப்பர்களை ஒப்படைத்துவிட்டு ‘இருநூறு ரூபாய் ஆபிசர் கிட்ட கொடுங்க சார் ‘ என்றான் டிரைவர். பர்மிட்டை வாங்கும் போது அதில் கட்டணம் ரூ. 150 என்று போட்டிருந்தது. மீதி 50 ரூபாய் கேட்கலாம் என்று வாயைத் திறப்பதற்குள் டிரைவர் முழங்கையால் லேசாக இடித்து என்னை வெளியே தள்ளிக் கொண்டு வந்துவிட்டான்.

50 ரூபாய் அவர்களுக்குக் கமிஷனாம். லஞ்சத்திற்கு புதிய பெயர். கமிஷன்!!!. அதுவும் வாயால் கேட்பதில்லை இப்போதெல்லாம். அவர்களாகவே எடுத்துக் கொள்கிறார்கள். அரசாங்கம் இவர்களுக்குச் சம்பளமே கொடுப்பதில்லை போலிருக்கிறது. இதுமாதிரி ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். அதுவும் உட்கார்ந்த இடத்திலேயே! …நாதாரிப் பயல்கள்….யாரை நொந்து கொள்வது ? தமிழ்நாட்டு நடைமுறைக்கு இதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது…யாரும் இதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

ஐம்பது ரூபாய் எனக்குப் பெரிய பணமில்லைதான். நியாயமான செலவுகளுக்கு நான் என்றும் கவலைப் படுவதில்லை. இது அநியாயம். வழிப் பறிக் கொள்ளை. அதைத்தான் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. செய்யும் வேலைக்கு இவர்களுக்கு சம்பளம் தராமலா இருக்கிறார்கள் ?…

தமிழ்நாட்டு எல்லை முடியும் இடத்தில் மூத்திர நாற்றமும், கர்நாடக எல்லை துவங்குமிடத்தில் மிக அழகான ஒரு ஆர்ச்சும் இருந்தது.

***

பெங்களூர் மிகச் சுத்தமாக இருக்கிறது. குப்பைக் கூளங்களோ, கட்சிக் கொடிகளோ, பேனர்களோ, ஆபாச போஸ்டர்களோ, அம்மா வாழ்க, அய்யா வாழ்கவெல்லாம் இல்லாமல் அழகாக…தமிழ்நாட்டிற்கு இத்தனை அருகில் இருந்தும் திராவிடப் புற்றுநோய் அவர்களை அண்டாமல் இருப்பது மிக ஆச்சரியம்தான். கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது. நமக்குக் கொடுப்பனை அவ்வளவுதான். என்ன செய்வது ?

நான் போயிருந்த நேரத்தில் மழைக்காலம்….திடார் திடாரென்று சாரல் தூவி விட்டுப் போகும். மெலிதான குளிர். பெங்களூர்வாசிகள் கொடுத்து வைத்தவர்கள். சென்னையைப் போல தண்ணீர்ப் பஞ்சம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எப்படி வரும் தண்ணீர்ப் பஞ்சம் ? காவிரித் தண்ணீரல்லவா குடிக்கிறார்கள்!

பெங்களூரைச் சுற்றி நிறைய முன்னேற்றப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தினமும் ஒரு Call Center புதிதாக திறந்து கொண்டிருக்கிறார்கள் என்றார் எனது நண்பர். நிறைய மல்ட்டி நேஷனல் கம்பெனிகள். வேலை வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. இந்தியர்களுக்கு பெங்களூர் ஒரு பெரிய கதவைத் திறந்து விட்டிருக்கிறது. நேற்றுவரை வெறும் டூரிஸ்ட்கள் மட்டுமே சென்று வரும் இடமாக இருந்த நகரம், இன்று ஏராளமான முதலீடுகளால் கொழித்துக் கொண்டிருக்கிறது. சரியான தலைவர்களூம், சரியான நோக்கமும் கொண்ட சமுதாயம் முன்னேறும் என்பதற்கு கர்நாடகா ஒரு உதாரணம்.

நண்பர் ஒருவரின் சிபாரிசின் பேரில் கர்நாடக சட்ட சபைக்கு (விதான சொளதா) உள்ளே சென்று வர சந்தர்ப்பம் கிடைத்தது. மேற் கூறிய நண்பருக்கு வேண்டியவர் அங்கு பணியாற்றுகிறார். மிக செல்வாக்கானவர் போலிருக்கிறது. எங்களை அசெம்பளி ஹால் உள்ளேயே கூட்டிப் போனார். கூட்டம் எதுவும் அந்த நேரத்தில் நடக்கவில்லை. சபா நாயகர் இருக்கைக்கு அருகில் வரை போக முடிந்தது.

‘இதுதான் சீஃப் மினிஸ்டர் எஸ்.எம். கிருஷ்ணா அமருமிடம் ‘ என்றார் ஒரு சீட்டைக் காட்டி.

‘ஐயா கிருஷ்ணா அவர்களே, கொஞ்சம் காவிரியில் தண்ணீர் திறந்து விடுங்களய்யா. தமிழக விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் ‘ என்று மனதிற்குள் கேட்டு வைத்தேன். ஏதோ என்னால் முடிந்தது!

விதான சொளதாவில் நான் கண்ட இன்னொரு ஆச்சரியம், கட்சிக் கரை போட்ட வேட்டி கட்டினவர்கள் யாரையும் பார்க்காதது! அரசியல்வாதிகள் என்பதற்கு அடையாளமுள்ளவர்களை நான் பார்க்கவே இல்லை. பெரும்பாலும் அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் மட்டும்தான். நான் தமிழக ‘சத்த சபை ‘க்கும் போயிருக்கிறேன். அங்கு நடக்கும் கூத்துகள் பற்றி உங்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. அதையெல்லாம் எழுதினால் உங்களுக்குக் கோபம் வரலாம். எனவே இத்தோடு விடுகிறேன். ஒன்று மட்டும் நாம் நினைத்துப் பெருமை கொள்ளலாம். கர்நாடக சட்ட சபையும், உயர்நீதி மன்றமும் ஒரு தமிழ்நாட்டு பொறியாளரால் வடிவமைக்கப் பட்டுக் கட்டப்பட்டது என்பதுதான் அது.

மற்றபடி பெங்களூரைச் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள். கப்பன் பார்க், லால் பார்க், ISKON ஹரே கிருஷ்ணா கோயில்… என்று முடிந்தவரை ஒரு ரவுண்ட் அடித்தேன். பிரிகேடியர் ரோட்டில் ஏராளமான கடைகளூம், மால்களும்…காசுள்ளவனுக்கு சொர்க்கம்.

கர்நாடக மக்களுக்குத் தமிழர்களின் மீது ஒரு விதமான வெறுப்புணர்வு இருப்பதை உணர முடிகிறது. ஏன்….எதற்கு என்று ஆராய எனக்கு விருப்பமில்லை. அது ஒரு பெரிய சப்ஜெக்ட். காவிரிப் பிரச்சினை கூட ஒரு காரணமாக இருக்கலாம்…அல்லது வேறு எதாவதா ?

வந்தது வந்தோம், மைசூரையும் ஒரு நடை பார்த்து வரலாம் என்று புறப்பட்டுப் போனேன். வழியில், மண்டியாவில் ஒரு நாற்சந்திக்கருகில் காரை நிறுத்தி ஒரு கடையில் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சுற்றிலிருந்தவர்கள் எங்களையும், காரையும் ஒரு பார்வை பார்த்து ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன விஷயம் என்றேன் நண்பரிடம்.

‘ஒன்றுமில்லை. நமது கார் தமிழ்நாட்டில் ரிஜிஸ்டர் செய்யப் பட்டதல்லவா ? அதனால்தான் அப்படிப் பார்க்கிறார்கள் ‘ என்றார்.

‘அதனாலென்ன ? ‘ என்றேன்.

நண்பர் என்னைப் பார்த்து விஷமமாகச் சிரித்துக் கொண்டே ‘காவிரிப் பிரச்சினை உச்சத்தில் இருக்கும் போது இந்த இடத்தில்தான் தமிழ்நாட்டு ரிஜிஸ்ட்ரேசன் உள்ள வண்டிகளை அடித்து நொறுக்கினார்கள் ‘ என்றார் சாதாரணமாக.

‘தெரிந்து கொண்டேவா இந்த இடத்தில் நிறுத்தினீர்கள் ? குழந்தை குட்டிகளுடன் வந்திருக்கும் இந்த நேரத்தில் ஏதாவது கலாட்டா செய்து விடப்போகிறார்கள் ‘ என்று நண்பரைக் கடிந்து கொண்டே மண்டியாவைவிட்டுப் புறப்பட வேண்டியதாகி விட்டது.

***

மைசூர் போகும் வழியில், ஸ்ரீரெங்கப்பட்டணம் பார்க்க வேண்டிய இடம். திப்பு சுல்தான் தலைநகராகக் கொண்டு ஆண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். முன்பு சிறப்பாக இருந்ததற்கு அடையாளமாக, சிதைந்த கோட்டைகளும், கொத்தளங்களுமாகக் காட்சி அளிக்கிறது. திப்பு மற்றும் அவர் குடும்பத்தாரின் சமாதிகள் அங்குதான் இருக்கின்றன. ரெங்கநாதர் கோவில் மிகப் பிரசித்தம். மிகப் பழமையானது. பள்ளிகொண்ட நிலையில் இருக்கும் ரெங்கநாதரைப் பார்க்கவே ஒரு நடை ஸ்ரீரெங்கப்பட்ணம் போய் வரலாம்.

‘ரங்கநாதன் என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் படுத்துக் கொண்டே இருப்பார்கள் போலிருக்கிறது ‘ என்று எங்கள் டிரைவர் ரங்கநாதனை சதாய்த்துக் கொண்டிருந்தேன்.

திப்புவின் சமாதி இருக்கும் இடத்திற்கருகில், மூன்று நதிகள் (காவிரி, ஹேமாவதி, கபினி) சங்கமிக்கின்றன. மிக அழகான, ரம்மியமான இடம். காவிரி நீர் பளிங்கு போல இருக்கிறது. நாங்கள் போன நேரத்தில் விடாமல் மழை தூறிக் கொண்டிருந்ததால் அதிக நேரம் இருக்க முடியவில்லை.

மைசூரைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்குப் பிடித்து விட்டது. பச்சைப் பசேலென்ற ஊர். சாமுண்டி கோயிலும், அரண்மனையும், கண்ணம்பாடி அணையும் கண்ணை விட்டு அகலாதவை. ஒரே நாளில் பெங்களூர் திரும்பி விட்டதால் எதையும் சரிவரப் பார்க்க முடியவில்லை.

இன்னொரு முறை சாவகாசமாக கர்நாடகா சுற்றி வர வேண்டும்..

***

narendranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்

வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

PS நரேந்திரன்


சென்ற மாதம் இந்தியா போய் வந்தேன். இதோ, உங்களுடன் பகிர்ந்து கொள்ளச் சில நினைவுகள்…

****

911க்குப் பிறகு U.S ஏர் போர்ட் செக்யூரிட்டி மிக மிகக் கடுமையாக்கப் பட்டிருக்கிறது.

ஷூ வைக் கழற்று, ஹாண்ட் பேக்கைத் திற, அதைக் காட்டு இதைக் காட்டு என்று இம்சித்து எடுக்கிறார்கள். எல்லாவற்றையும் திறந்து காட்டி, எக்ஸ்ரே மிஷினைத் தாண்டும் போது ‘பிய்ங் ‘ என்கிறது. மீண்டும் பெல்ட்டைக் கழட்டு, சில்லறைக் காசைக் கொட்டு என்று அடுத்த ரவுண்டு ஆரம்பிக்கிறார்கள்.

கொஞ்சம் சந்தேகம் வந்தாலும், ஓரமாக ஒதுக்கிக் கூப்பிட்டுப் போய், உடம்பில் ஒட்டுத் துணிகூட விடாமல் அவிழ்க்கச் சொல்லி நோண்டி எடுக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். பொதுவாக இந்தியர்களை, அதுவும் குடும்ப சகிதம் வருபவர்களை அதிகம் தொல்லை செய்வதில்லை. அந்த வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள். யாராவது கிறுக்குப் பிடித்த இந்தியன் அதைக் கெடுத்து வைக்கும் வரை…

சிகாகோ ‘ஓ-ஹாரே ‘ இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் நின்றிருந்த இந்தியர்கள் கூட்டத்தைப் பார்த்து ஏறக்குறைய எனக்கு மயக்கமே வந்து விட்டது. நெருக்கியடித்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு, பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு…..ரெஸ்டாரண்ட்களில், காபி ஷாப்களில், நடை பாதைகளில் என நிற்க இடமில்லாமல், எங்கெங்கு நோக்கினும் இந்திய முகங்கள்….முக்கால்வாசிப் பேர் வழியனுப்ப வந்தவர்கள். எந்த உலகம் போனாலும் இந்தியன் இந்தியன்தான். மாறாதைய்யா மாறாது…மனமும் குணமும் மாறாது…

British Airways-ன் செக்யூரிட்டி மற்றும் டிக்கெட் செக்கிங் எல்லாம் முடிந்து, ‘அப்பாடா ‘ என்று விமான ஏறப் போனால், வாசலிலேயே நான்கைந்து கறுப்பு உடை போலிஸ்காரர்கள், துப்பாக்கிகளுடன் நின்று கொண்டிருந்தார்கள். U.S. Customs அதிகாரிகளாம். என்னைத் தனியாக அழைத்தார்கள். கொஞ்சம் உதறலுடன் போனேன்.

‘எத்தனை டாலர்கள் யு.எஸ்-ஐ விட்டு எடுத்துக் கொண்டு போகிறாய் ? ‘

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

‘ஒரு நானூறு டாலர் இருக்கும். ஏன் ? ‘

‘பத்தாயிரம் டாலர் இல்லையே ? ‘

எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.

‘ஆபிஸர்…என்னைப் பார்த்தால் பத்தாயிரம் டாலர் வைத்திருப்பவன் மாதிரியா இருக்கிறது ? ‘

அவரும் சிரித்துக் கொண்டே, ‘U.Sல் இந்தியர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள் தெரியுமோ ?…நீ போகலாம் ‘ என்று அடுத்த இந்தியனைத் தேடிப் போனார்.

எவனாவது சக இந்தியன் ஏதாவது ‘குல்மால் ‘ வேலை செய்து மாட்டி இருக்க வேண்டும். அதுதான் இப்படிச் செய்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன்.

நல்ல வேளையாக, லண்டன் ஹீத்ரூவில் விமானம் மாறிய போது அதிக தொல்லை எதுவும் இல்லை.

****

போன தடவையைப் போலல்லாமல் இந்த முறை இந்தியாவில் அதிக நாட்கள் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, ஒரு வழியாக என் மேனேஜரை சமாதானப்படுத்தி நாற்பது நாட்கள் லீவு வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது ( ‘மவனே, இந்த வருஷம் பூரா உனக்கு சிக் லீவு கூட கிடையாது ‘).

சென்னை விமான நிலையத்தை விட்டுக் காலை எட்டு மணிக்கு வெளியே வந்தவுடன், வியர்வை வழிய ஆரம்பித்துவிட்டது. அந்த நேரத்திலேயே அனல் தெரிந்தது. அது ஒரு ஆரம்பம்தான் என்று புரிய எனக்கு வெகு நேரம் ஆகவில்லை. Extended ‘கத்தரி ‘ வெயிலில் சிக்கித் தவிக்கப் போவதன் முன்னோட்டமாகவே அது தெரிந்தது.

உடனடியாக பாண்டிச்சேரி போய்விடுவது என்ற முடிவுடன் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தேன்.

சென்ற முறை பார்த்ததற்கும் இந்த முறை பார்த்தற்கும் இந்தியா கொஞ்சம் மாறி இருக்கிறது போலத்தான் தெரிந்தது. புதிதாக நான்கு வழிச்சாலைகள் போட்டுக் கொண்டிருந்தார்கள். இருக்கும் சாலைகளும், பரவாயில்லை என்ற ரகத்தில் இருந்தன. ஒருவழியாக இந்தியர்கள் நல்ல சாலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

****

சில சாமான்களை வாங்க வேண்டியிருந்ததால் சென்னைப் பக்கம் போயிருந்தேன். நீண்ட நாட்களூக்குப் பிறகு சென்னைக்குப் போனதால் ஆர்வத்துடன் கவனித்தேன். சென்னை நிறையவே மாறி இருந்தது. போஸ்டர்கள் எதுவும் கண்ணில் தென்படாதது பெரிய ஆச்சரியம். வாகனப் புகை மூச்சு முட்டியது. சினிமா ‘கட் அவுட் ‘கள் இன்னும் அப்படியே.

‘பிரிக்கவே முடியாதது ? ‘

‘தமிழனும். சினிமாவும். ‘

‘சேர்ந்தே இருப்பது ? ‘

‘சென்னையும். நாற்றமும் ‘

என அடுக்கிக் கொண்டே போகலாம்.

சென்னை ஒரு ‘நாற்ற நரகம் ‘. அன்றும். இன்றும். என்றும். மாறவே மாறாது. ‘கம கம ‘ என்று மணக்கும் கூவமும், அடையாறும்…. இன்னமும் அப்படியேதான் இருக்கிறது….எத்தனை ஆட்சி மாறினாலென்ன ? எத்தனை முதலமைச்சர்கள் வந்தாலென்ன ? சென்னையைப் பொருத்தவரை சில விஷயங்கள் என்றுமே மாறாது போலத்தான் இருக்கிறது….பேசாமல் கூவம்தான் தமிழ்நாட்டின் வற்றாத ஜீவ நதி என்று அறிவித்து விடலாம்….வெட்கம் கெட்டவர்கள் நமது ஆட்சியாளர்கள். அதைவிட சொரணை கெட்டவர்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்த சென்னைவாசிகள்…என்னத்தைச் சொல்ல ?

தி. நகர், ரங்கநாதன் தெருவில் கூட்டம் நெருக்கியது. பாண்டிச்சேரியிலேயே இந்தச் சாமான்களை வாங்கி இருக்கலாம். சென்னையில் வெரைட்டி அதிகம் இருக்கும் என்ற எண்ணத்தில் போயிருந்தேன். சரவணா ஸ்டோர், ரத்னா ஸ்டோர் போன்ற கடைகளில் உள்ளே நுழைவதற்கே போராட வேண்டியிருந்தது. அந்த அளவிற்கு ஜனங்கள் திரளாக முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். மற்றபடி எல்லாவிதமான சாமான்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கிறது. உள் நாட்டில் தயாராகும் பொருள்களின் தரமும், பாக்கிங் நேர்த்தியும் கொஞ்சம் கூடியிருக்கிறது. இன்னும் சர்வதேச தரத்தை எட்டவில்லை. எட்டி விடுவார்கள் என்றே நம்பத் தோன்றுகிறது.

‘ஒரே மாடல் வெட் கிரைண்டர், ரத்னாவைவிட சரவணாவில் ரூ. 500 குறைவு ‘ என்றாள் என் மனைவி. அது எப்படி சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய வேலை பணம் கொடுப்பதுடன் முடிந்து விடுகிறது. விலையைப் பற்றியெல்லாம் நான் அதிகம் கவலைப் படுவதில்லை. இருப்பினும் 120V உபயோகப் பொருட்கள், 220V பொருட்களை விட இரண்டு மடங்கு விலை சொல்கிறார்கள். வாங்கித்தான் ஆக வேண்டும். வேறு வழி ?

சிறு வயதில், 70 களின் ஆரம்பத்தில் கொஞ்ச நாள் மாம்பலம் கணபதி செட்டித் தெருவில் குடியிருந்த போது, மாலை நேரங்களில் அம்மாவுடன் ரங்கநாதன் தெருவிற்குப் போனது மங்கலாக நினைவிருக்கிறது. அந்த நாட்களில் இவ்வளவு கூட்டமெல்லாம் கிடையாது. இவ்வளவு கடைகளும் இல்லை. பொதுவாக காய், கறிகள்தான் விற்றுக் கொண்டிருப்பார்கள். அதுபோலத்தான் சென்னைக் கடற்கரையும். காலார நடந்து, ரசித்து வரலாம். இன்று அதெல்லாம் பழங்கனவாகப் போய்விட்டது. நினைத்துப் பார்க்கும் போது பெருமூச்சுதான் மிஞ்சுகிறது. 80களில்தான் ஜனங்கள் சென்னையை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தார்கள் என நினைக்கிறேன். இன்னும் நிற்கவில்லை அந்தப் படையெடுப்பு.

அப்போதெல்லாம் மாம்பலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வீடுகள் தென்படும். பெரும்பாலும் பிராமண சமூகத்தவர்கள்தான் பெரிய வீடுகளில் இருந்தார்கள். நிறைய புதர்களும், செடிகளூம் இருக்கும். இளவயது நண்பர்களூடன் சேர்ந்து கொண்டு ஓணான் பிடிக்கப் போனது நினைவிருக்கிறது. அட, தேன் சிட்டுக்கள் கூட இருந்தன மாம்பலம் பகுதியில் என்றால் நம்புவது கொஞ்சம் கடினம்தான்.

தேன் சிட்டு என்றதும் ஒன்று நினைவிற்கு வருகிறது. சமீபத்திய ‘இந்தியா டுடே ‘ பத்திரிகையில் நகர்ப்புறங்களில் சிட்டுக் குருவிகள் அருகி வருவது பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. உண்மைதான். பாண்டிச்சேரியில் இருந்த ஒரு மாதத்தில் ஒரு சிட்டுக் குருவிகூட என் கண்ணில் தென்படவில்லை. இந்தியாவில் நான் இருந்தவரை பார்த்த மொத்த சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை வெறும் 13 மட்டுமே. அதுவும் நெல்லிக்குப்பம் போன்ற சிறு நகர்ப் பகுதிகளில். மிகவும் வருந்தத் தக்க விஷயம் அது. முன்பெல்லாம் வீட்டு முற்றத்தில் நெல்லோ, அரிசியோ காயப் போடும்போது வந்து மொய்க்கும் குருவிகளை விரட்டுவதே பெரிய வேலையாக இருக்கும். பாட்டிகளுக்கான வேலை வாய்ப்பு அது. இப்போது சிட்டுக் குருவிகளோடு சேர்ந்து பாட்டிகளும் அரிதாகி வருகிறார்கள்.

என்னடா இவன் இதையெல்லாம் எழுதுகிறானே என்று நீங்கள் நினைக்கலாம். எந்தச் சூழலிலும் வாழும் சிட்டுக் குருவிகள் அழிந்து வருவது சுற்றுப் புற சூழல் மிகவும் மாசடைந்து வருகிறது என்பதைத்தான் காட்டுகிறது. பறவைகளைப் பாதிக்கும் மாசு, மனிதர்களைப் பாதிக்க எவ்வளவு நேரமாகும் ? யாரும் சிந்திப்பது மாதிரி தெரியவில்லை.

***

சென்னைத் தமிழைக் கேட்பது ஒரு சுகானுபவம்.

‘செவியிருந்தும் செவிடானோர், சென்னைத் தமிழ் கேளாதோர் ‘ என்பது புது மொழி.

சென்னைத் தமிழில் எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை எது என்று கேட்டால், கொஞ்சமும் யோசிக்காமல் ‘குன்ஸா ‘ என்று சொல்லுவேன். ‘குன்ஸா ‘ ஏறக்குறைய ‘நைசா ‘ என்பதற்கு சமமான வார்த்தையெனினும், ‘குன்ஸா ‘ குன்ஸாதான். அடித்துக் கொள்ளவே முடியாது.

உதாரணமாக, ‘நைசா அடிச்சிகினு போனான் ‘ என்பதை விட, ‘குன்ஸா அயுத்திகினு பூட்டான் ‘ தருகிற கிக்கே தனிதான். சொல்லும் போதே ‘ஒரு தின்சா ‘ இருக்கும் என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.

***

கேபிள் டி.வி.யின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். 24 மணி நேரமும் கால் காசு பெறாத புரோகிராம்கள். நான் பார்த்தவரை 90 சதவிகிதம் சினிமா சம்பந்தப் பட்ட நிகழ்ச்சிகள்தான். பெரும்பாலான தமிழர்கள் டி.வி.யை முறைத்துக் கொண்டே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எந்தச் சேனலைத் திருப்பினாலும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள்தான். ஒன்று ‘டிங்கிரி டிங்கிரி ‘ என்று ஏதாவது கூட்டம் ஆடிக் கொண்டிருக்கும். இல்லாவிட்டால் ஏதாவது அரதப் பழசான சினிமாப் படம். அதையும் விட்டால் இருக்கவே இருக்கிறது ‘மெகா சீரியல் ‘. சகிக்கவே முடியாதவை இந்த மெகா சீரியல்கள். காலை முதல் இரவு தூங்கும் வரை தொடர்ச்சியாக ஒரே புலம்பல். படு மட்டமான, அமெச்சூர்த்தனமான கதையமைப்பு. நடிப்பு என்ற பெயரில் ஊளையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சகித்துக் கொள்ள மிகவும் பொறுமை வேண்டும்.

எங்காவது அலைந்து திரிந்து களைத்து, இரவு பத்து மணி போல பசியுடன் வீட்டுக்கு வந்தால், வீட்டுப் பெண்கள் அனைவரும் ஏதாவது ஒரு ‘மெகா அறுவை ‘யை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்கள். சீரியல் முடியும் வரை சோறு கிடைக்காது. பொறுக்க முடியாமல் ஒருநாள் ‘நர்த்தனம் ‘ ஆடி வைத்தேன்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு எல்லாம் ஒழுங்காக நடந்தது. பிறகு மீண்டும் ‘பழைய குருடி கதவத் தெறடி ‘ கதைதான். இதற்கு மேல் ஏதாவது சொன்னால் ‘போடாங்க பேமானி…ஒம் மூஞ்சிலே எம் பீச்சாங் கைய வெக்கோ… ‘ ரேஞ்சுக்கு ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் வாயைத் திறக்கவில்லை.

சும்மா இருக்க மாட்டாமல் நான் ஏதாவது சொல்லி, அப்புறம் ‘உள்ளதும் போச்சிடா நொள்ளக் கண்ணா ‘ என்று ஆகிப் போனால் என்ன செய்வது என்ற பயம்தான். மனிதன் எது எதற்கெல்லாம் பயப்பட வேண்டியிருக்கிறது பாருங்கள் ?

‘மெகா சீரியல்கள் ஒழிக! ‘

‘ஆண்களை பட்டினி போட வைக்கும் மெகா சீரியல்கள் ஒழிக! ‘

***

சினிமா மோகம் கொஞ்சம் மட்டுப் பட்டிருப்பது போல எனக்குப் பட்டது. தியேட்டர்களில் கூட்டம் இல்லை. இருந்தாலும் தனி மனித துதிபாடல் இன்னும் ஒழியவில்லை. சினிமா நடிகர்களின் ரசிகர் மன்றங்களும், கொடிகளும் தோரணங்களும் கண்ணில் தட்டுப் படத்தான் செய்கின்றன. அவையெல்லாம் ஒழியும் வரை தமிழர்களுக்கு விமோசனம் இல்லை.

புது தமிழ் சினிமாப் பாட்டுக்களை ரசிக்கவே முடிவதில்லை. இசை என்கிற பெயரில் கர்ண கடூரமாக ‘நொட்டு நொட்டு ‘ என்று தட்டுகிறார்கள். ஜனங்களும் அதை ரசிக்கிறார்கள் போலத்தான் தெரிகிறது. என்ன ரசனையோ போங்கள்… பாடல் வரிகளில் அதிகமான ஆங்கிலக் கலப்பு. கேட்கவே எரிச்சலாக இருக்கிறது. அதை விடக் கொடுமை இப்படிப் பட்ட பாடல்களைப் பாடும் பாடகர்கள். பெரும்பாலான புதிய பாடகர்களுக்கு சரியான தமிழ் உச்சரிப்பு வருவதில்லை. ஒரு சிலர் வடக்கத்திக்காரர்கள். சொல்லவே வேண்டியதில்லை. தமிழ் சினிமாப் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தூவப் பட்டிருக்கும் தமிழ்ச் சொற்களைக் கடித்து, மென்று, காறித் துப்புகிறார்கள். நாராசமாக இருக்கிறது.

இந்த மாதிரியான பாடகர்களுக்கு வருடா வருடம் ‘சிறந்த தமிழ்க் கொலைஞன் ‘ பட்டம் தரலாமென்று இருக்கிறேன். பரிசா ? கொடுக்க வேண்டியதுதான். நன்கு பழுக்கக் காய்ச்சிய சூட்டுக் கோலால் நாக்கில் ‘இப்படியொரு இழுப்பு, அப்படியொரு இழுப்பு ‘. அப்புறம் எல்லாம் சரியாகப் போய்விடும்.

இந்த வருட ‘சிறந்த தமிழ்க் கொலைஞனாக ‘ நான் தேர்ந்தெடுத்திருப்பது உதித் நாரயணனை. எப்படியய்யா இந்த மாதிரியான ஆசாமிகளை தமிழில் பாட வைக்கிறீர்கள் ? தமிழ்நாட்டில் நல்ல குரல் வளமுடைய தமிழ்ப் பாடகர்களே இல்லையா ? எங்கோ டில்லியிலிருந்து வந்துதானா தமிழ் தலையில் மண்ணை அள்ளிப் போட வேண்டும் ?

இவர்களை எல்லாம் தமிழில் பாடவிடாமல் தடுப்பதற்கு எனக்குத் தெரிந்த ஒரே வழி, கொல்லங்குடி கருப்பாயியை இந்தியில் பாட வைப்பதுதான். ‘காரே பூரே, கக்கரே பிக்கரே ‘ என்று கருப்பாயி இந்தியில் போட்டுத் தாக்கினால் எல்லாப் பயல்களூம் வடக்குப் பக்கம் ஓடிப் போவார்கள். இந்தியைக் காப்பாற்ற. தமிழ் பிழைத்துக் கொள்ளும்.

ஒரு விஷயத்தை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். தமிழ் சினிமாவின் பிரபல பின்னனிப் பாடகர்களெல்லாம் வேற்று மொழிக்காரர்கள்தான். TM சொளந்திரராஜனிலிருந்து, SP பாலசுப்பிரமணியம், KJ யேசுதாஸ், P சுசீலா, S ஜானகி மற்றும் நேற்றைய சித்ரா, ஹரிஹரன் வரை வேற்று மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். எனினும் இந்தப் பாடகர்களின் தமிழ் உச்சரிப்பை நாம் குறை கூற முடியாது. காரணம் அவர்களிடம் சரியாக உச்சரிக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தது. அதற்காகச் சிரத்தை எடுத்துக் கொண்டு உழைத்தார்கள். நம்மால் ரசிக்க முடிந்தது. இன்றைய பாடகர்களிடம் அது இல்லை. ரசிக்க முடியவில்லை.

உதித் நாரயணும் நல்ல பாடகர்தான். இந்தியில் மிக அருமையாகப் பாடுவார். எனக்கு மிகவும் பிடித்த இந்திப் பாடகர்கள் வரிசையில் உ.நாராயணும் இருக்கிறார். இந்தியோடு நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தமிழில் பாடுகிறேன் பேர்வழி என்று இப்படி குதப்பித் தள்ளுகிறாரே என்றுதான்….

‘குல்வாலிலே முட்ம் மலர்ந்தல்லோ ‘ என்பதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் சிண்டைப் பிய்த்துக் கொண்டு அலைந்தது எனக்குத்தானே தெரியும் ?

***

வீட்டில் எல்லோரும் ‘கங்கை கொண்ட சோழபுரம் ‘ பார்க்க வேண்டும் என்றதால், ஒருநாள் நல்ல வெயில் நேரத்தில் புறப்பட்டுப் போனோம். போகும் வழியில், நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே….மறக்கவே முடியாது. ஈரேழு ஜென்மத்திற்கும் மறக்க முடியாத அவஸ்தைய்யா அது…

அதுபற்றி அடுத்த வாரம் சொல்கிறேனே…

***

psnarendran@hotmail.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்