குறிப்புகள் சில 14 ஆகஸ்ட் 2003 எம்.ஐ.டி பிரஸ் – வேனாவர் புஷ் – ஒரு கட்டுரையும், அதன் தாக்கமும் பன்னாட்டு நிதிக்கணக்காய்வு நிறுவ

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


M.I.T Press இதுவரை 7000 நூல்களுக்கு மேல் வெளியிட்டுள்ளது. 6000 மாவது நூல் 2000ல் வெளியானது, முதல் நூல் 1928ல்,7000 மாவது நூல் ஜூலை 2003 ல். அமெரிக்கா,கனாடா,ஐரோப்பாவில் உள்ள பல பல்கலைகழகங்களின் வெளியீட்டுப்பிரிவாக உள்ள பதிப்பகங்கள் ஆண்டுதோறும் வணிக நோக்கமற்ற விதத்தில் பல அற்புதமான நூல்களை வெளியிட்டுவருகின்றன. பல முக்கியமான ஜர்னல்களும் இவற்றால் வெளியடப்படுகின்றன. பல முனைவர் பட்ட ஆய்வேடுகள் நூல் வடிவம் பெறுவது இவை காரணமாகவே சாத்தியமாகியுள்ளது.

எனவே இன்றைய ஆய்வாளனுக்கு இவை தவிர்க்கமுடியாதவை. இணையத்தையும் இவை சிறப்பாக பயன்படுத்துக்கின்றன. நூற்களை வாங்குதல், சந்தா செலுத்துவது போன்றவை தவிர இணையம் மூலம் வேறு பல சேவைகளையும் இவை அறிமுகம் செய்துள்ளன. இப்பதிப்பகங்கள் உள்ளடக்கம் குறித்து தனிக்கவனம் செலுத்துவதால் நூற்களின் தரம் குறித்து வாசகர் சந்தேகப்படத் தேவையில்லை . வெளியாகும் முன் முறையான பதிப்பு முறை, வெளி நிபுணர்/அறிஞர் மதிப்பீடு போன்றவை காரணமாக தரம் காக்கப்படுகிறது..M.I.T Press வெளியிட்டுள்ள பல முக்கியமான நூல்களின் paperback edition, hardback edition வெளியான ஒரு சில ஆண்டுகளிலேயே வெளியாவதை கவனித்திருக்கிறேன். பல புத்தகங்கள் ஒரே நேரத்தில் இரண்டு விதத்திலும் வெளியாகின்றன. பல்கலைகழகங்களின் வெளியீட்டுப்பிரிவாக உள்ள பதிப்பகங்கள் சார்பாக வெளியாகும் பல நூல்களை வணிக ரீதியாக செயல்படும் பதிப்பகங்கள் வெளியிடுமா என்பது கேள்விக்குறி.

இலக்கிய படைப்புகள், குறிப்பாக கவிதை, நாடக நூல்களை பல்கலைகழக பதிப்பகங்கள் வெளியிடுவதன் மூலம் பல புதிய படைப்பாளிகள் வாசகர்/விமர்சகர் கவனத்திற்கு வருகின்றனர்.non fiction நூல்கள் பல வாசகர் எண்ணிக்கை குறைவு என்றாலும் இவற்றால் வெளியிடப்படுகின்றன.இந்தியப் பல்கலைகழகங்கள் நூல் வெளியீடு/பதிப்புத் துறையில், அமெரிக்கா,கனாடா,ஐரோப்பாவில் உள்ள பல்கலைகழகங்களுடன் ஒப்பிடுகையில் பின் தங்கியேயுள்ளன.நூல்களின் எண்ணிக்கையும் குறைவு, பதிப்பு/வெளியீட்டில் அவை காட்டும் அக்கறையும் குறைவு.

இதன் விளைவாக பல முனைவர் பட்டய ஏடுகள் சிறப்பான நூல்களாக வெளிவருவதில்லை.(பல சமயங்களில் முனைவர் பட்ட ஆய்வேட்டினை வெளியிட தரப்படும் தொகையைக் கொண்டு தில்லியில் உள்ள சில பதிப்பகங்கள் அவற்றை வெளியிடுகின்றன.ஆனால் அவை முறையான பதிப்பு, வெளி நிபுணர் மதிப்பீடு போன்றவை இல்லாததால் சிறப்பான நூற்களாக அமைவதிலலை.) பொது நூல்களும் பெரும் எண்ணிக்கையில் வெளியாவதில்லை.தமிழகத்தில் பல்கலைகழக வெளியீடுகளாக தமிழில் ஆண்டுதோறும் தரமான 300/400 நூல்கள் வெளிவந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும். மேல் நாட்டுப்பல்கலைகழகங்களிலிருந்து நாம் கற்க வேண்டியவை பல.நூல் பதிப்பு,வெளியீடு குறித்த அக்கறை அதில் ஒன்று.இதில் நாம் ஒரு அரை நூற்றாண்டு பின்னேயுள்ளோம்.


வேனாவர் புஷ் எழுதிய As We May Think என்ற கட்டுரையை ஒரு தொகுப்பில் மீண்டும் சமீபத்தில் படித்தேன்.இவர் எழுதிய Science The Endless Frontier என்ற அறிக்கை புகழ் பெற்றது. புஷ் அணுகுண்டு தயாரிப்பு திட்டமான Manhattan Project உட்பட பல திட்டங்களில் முக்கிய பங்காற்றியவர். ராணுவம்- தொழிற்துறை-பல்கலை/ஆராய்ச்சி மையங்கள் ஒருங்கிணைந்து ஆய்வுகள் செய்வது, செயல்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது போன்றவற்றை நடைமுறைப்படுத்தியதில் முன்னோடி. அறிவுப்பெருக்கத்தினை எப்படி கையாளுவது என்பது குறித்த கட்டுரை As We May Think, Atlantic Monthly July 1945 ல் வெளியானது.

புஷ் முன்வைத்த ஒரு தீர்வு மெமெக்ஸ்.சிந்தனைத்தடங்களையும் பதிவு செய்வது அவசியம் என்றார் அவர். அறிவியல் ஒரு எல்லையற்ற வெளி என்று சித்தரித்த புஷ் அறிவியல் அழிவிற்க்கும் இட்டுச் செல்லும் என்பதையும் அறிந்திருந்தார்.அறிவியலை ராணுவ பயன்பாட்டிற்கு வழிவகுக்கும்படி செய்வதில் அவர் பெரும்பங்காற்றியவர்.பின்னர் போருக்குப்பிந்திய அமெரிக்காவில் அறிவியல் ஆய்வுகளின் முக்கியத்துவம் குறித்து அக்கரை காட்டியவர் அவர்.புஷின் இக்கட்டுரை புகழ் பெற்ற கட்டுரை.டெட் நெல்சன்,டெளக் எங்கல்பாரட் இவர்கள் இருவரும் இக்கட்டுரையால் தாக்கம் பெற்றவர்கள்.hyperlink, hypertext இவற்றின் உருவாக்கத்தில் இவர்கள் முன்னோடிகள். இந்தக்கட்டுரை தமிழில் உள்ளதா என்று தெரியவில்லை.

மொழிபெயர்க்கப்பட வேண்டிய கட்டுரை.


பன்னாட்டு நிதிக்கணக்காய்வு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதிப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. சுவதேசி ஜகரன் மஞ்சை சேர்ந்த குருமூர்த்தி இவை தேவையில்லை என்கிறார்.இவற்றின் மீது பல குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைக்கிறார்.

ஆனால் இத்தகைய வாதங்கள் வலுவான ஆதாரங்கள் இன்றி முன்வைக்கப்படுகின்றன.கிட்டதட்ட அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடு, அந்நிய நிறுவனங்களை அனுமதித்துவிட்ட நிலையில் இத்துறைக்கு மட்டும் எதற்கு விதிவிலக்கு.மேலும் உலகமயமாதலை ஏற்றுக்கொண்டபின் சர்வதேச அளவிலான நிதிக்கணக்காய்வு தரங்களை இந்திய நிறுவனங்கள் பல ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இதற்கு தக்கபடி தங்கள் வரவு-செலவு,லாப-நட்ட கணக்கு அறிக்ககைளை அவை உலக பங்குசந்தைகளில் சமர்ப்பிற்கின்றன.பன்னாட்டு நிதிக்கணக்காய்வு நிறுவனங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

என்ரான் விவகாரம் ஒரு படிப்பினை, அத்தகைய முறைகேடுகள் நிகழாவண்ணம் கண்காணிப்பு இருக்க வேண்டும், நிதிக்கணக்காய்வு நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் கடுமையாக்கப்படவேண்டும்.அவற்றை நெறிப்படுத்த ஒரு அமைப்பினை உருவாக்கலாம். ஆனால் அவை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டியவை என்பது சரியல்ல. குருமூர்த்தி ஒரு CHARTED ACCOUNTANT, இப்பிரச்சினை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அது ஒரு மிகைப்படுத்தப்பட்ட தோற்றத்தையே தர முயல்வதாக தோன்றுகிறது.

இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு உலக சந்தை வேண்டும், BUSINESS PROCESS OUTSOURCING மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெருகவேண்டும், அந்நியச் செலாவணி வேண்டும் என்பது நியாயமெனில், பன்னாட்டு நிதிக்கணக்காய்வு நிறுவனங்கள் இங்கு தொழில் செய்யக்கூடாது என்பது மட்டும் எப்படி நியாயமாகும். இந்நிறுவனங்கள் பலருக்கு வேலைவாய்ப்பு தரும், பல இந்திய கணக்காயர்கள் சர்வதேச அனுபவம் பெறவும், சர்வதேச விதிமுறைகளில் பயிற்சி பெறவும் இவை உதவும்.

இவற்றால் ஏற்படும் பாதகங்களை விட நன்மைகளே அதிகம். இது நடைமுறையிலான முடிபு.

இது குறித்து Economic & Policitcal Weekly தலையங்கம் The Big against the Many http://www.epw.org.in/showArticles.php ?root=2003&leaf=08&filename=6091&filetype=html கூறும் கருத்துகளுடன் நான் பெருமளவு உடன்படுகிறேன்.சுதேசி என்ற பெயரில் ஒரு சிலர் பயன் பெற பல்லாயிரகணக்கானோர் வேலை வாய்ப்புகளை எதற்காக இழக்க வேண்டும்.

***

ravisrinivas@rediffmail.com

Series Navigation