குறிப்புகள் சில 17 ஜூலை 2003 (தாஜ்மஹால்-காங்கிரஸ்-இடஒதுக்கீடு-இரண்டு புத்தகங்கள் பற்றி ஒரு குறிப்பு)

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


தாஜ் மாஹாலைக் காப்பாற்ற உச்ச நீதிமன்றம் எடுத்துள்ள நடவடிக்கைகள் உதவும்.முன்பும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணைகள் காரணமாகவே மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தாஜ்மஹால் காக்கப்பட்டது. ஆக்ரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில் மயமாதல், வாகனப்புகை போன்ற பல காரணங்களால் காற்று மாசுபடுதல் மிக அதிகமாகி தாஜ்மஹால் அழிந்துவிடுமோ என்று அஞ்சும் நிலை ஏற்பட்டது. எனவே உச்சநீதிமன்றம் ஆணையிட்டு காற்று மாசுபடுதல் குறைக்கப்பட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இந்த முறை மத்திய அமைச்சரே நேரில் சென்று நடப்பதை தெரிந்து கொண்டபின் திட்டம் குறித்து தன் ஆட்சேபத்தை தெரிவித்து நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. பத்திரிகைகள் இதை பெரிதுபடுத்தாமல் விட்டிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். CBI விசாரணையில் உண்மை வெளிவரும் என்று நம்புவோமாக.நல்ல வேளை தாஜ்மஹாலை இன்னும் விலை பேசி விற்கவில்லை.வலது கை செயவது இடது கைக்கு தெரியாது என்பது போல் பொதுத்துறை நிறுவனம் ஒன்று இத்திட்டப்பணிகளில் ஈடுபட்டிருப்பது வேதனை தரும் வேடிக்கை.


கூட்டணி அரசியலுக்கு தேசிய அளவில் காங்கிரஸ் தயாராகி வருவது தெளிவாகிவிட்டது. சோனியா காந்தி அன்னியர் என்ற வாதம் எடுபடாது. இந்திரா 1970களில் தான் தலைமை வகித்த காங்கிரசை கவர்ச்சிக்கரமான கோஷங்கள், சோசலிசம் குறித்த பிரச்சாரம் மூலம் மக்களிடையே பிரபலமாக்கி எதிர்ப்புகளை முறியடித்தார். சோனியாவும் அது போன்ற உத்திகளை பயன்படுத்தக் கூடும்.தலித் ஒட்டுவங்கியை குறி வைத்து சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன்.காங்கிரஸ் தன்னை மீள் கண்டுபிடிப்பு செய்துகொள்ளுமா ?கருத்தியல் ரீதியாக அது எத்தகைய நிலைப்பாட்டை முன்வைக்கும் ? போன்ற கேள்விகள் எழுகின்றன.

.காங்கிரஸின் பலம் பாரதிய ஜனாதாவிற்கு உள்ள மிக வலுவான எதிர்கட்சியாக,மாற்றாக அது இருப்பதும், பல அரசியல் கட்சிகளுடன் அது கூட்டு சேர்ந்தால் பாரதிய ஜனதாவிற்கு எதிரான ஒட்டுக்களை அதால் திரட்டமுடியும் என்பதே. எனவே கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பல கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டு சேர்வது பரஸ்பர நலனுக்காக என்றாலும் சரியான உத்திதான். மேலும் இன்று உள்ள நிலையில் காங்கிரஸ் வலுப்பெறுவதும், அதன் தலைமையில் கூட்டணி அமைவதும் காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம்.ஆனால் காங்கிரஸ் எதிர்ப்புவாதம் என்பதை எத்தனை கட்சிகள் கைவிடும் என்பது போகபோகத்தான் தெரியும். ஒரு சில மாநிலங்களில் கூட்டணி ஆட்சியை காங்கிரஸ் ஏற்க வேண்டிய நிலையே இன்று உள்ளது.

மத்தியிலும் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.காங்கிரஸ் குறித்து ஜூன் மாத செமினார் இதழில் பல கட்டுரைகள் உள்ளன.http://www.india-seminar.com


இடஒதுக்கீட்டு அரசியலில் அடுத்த கட்டம் ஆரம்பமாகிவிட்டது.பொருளாதார ரீதியாக பிற்பட்டுள்ள இடஒதுக்கீட்டனால் இதுவரை பயன் பெறாத ஜாதிகளின் கோரிக்கைகளை ஆராய ஒரு கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிகிறது. மண்டல் கமிஷனின் பல பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை என்று அதன் செயலாளராக இருந்த கில் தெரிவித்துள்ளார்.அவர் இந்துவில் எழுதிய கட்டுரை இடஒதுக்கீடு அரசியலின் இன்னொரு முகத்தை தெளிவாகக் காட்டுகிறது. சுதந்திரம் பெற்று 55 ஆண்டுகளாகியும் மேலும் பல ஜாதிகள் தங்களை பிற்பட்ட ஜாதிகளாக கருதவேண்டும் என்று கோருவதும், சில ஜாதிகள் தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளாக அறிவிக்க கோருவதும், பல மாநிலங்களில் பிற்பட்டோரை இரண்டு விதமாக பிரிக்ககோருவதும் இடஒதுக்கீடு என்பது ஒரு உரிமையாகக் கருதப்படுவதையே காட்டுகிறது. இதன் விளைவு காலப்போக்கில் அனைத்து ஜாதிகளும் பிற்பட்ட ஜாதிகள் என்று தங்களை அறிவித்துக் கொள்ளும் நிலை ஏற்படும். மேலும் பல ஜாதிகள் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படுவதும் தொடர்கிறது. ராஜஸ்தானில் மொத்தம் உள்ள ஜாதிகளின் எண்ணிக்கை 316, இதில் இட ஒதுக்கீட்டின் கீழ் வராத ஜாதிகளின் எண்ணிக்கை 11 மட்டுமே (EPW Editorial July 5 2003).இப்போது சமூக நீதி முண்ணணி ராஜஸ்தானில் கோரும் இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்தால் அனைத்து ஜாதிகளும் ஏதோ ஒரு வகையில் இட ஒதுக்கீட்டின் பயனைப் பெறும் என்றே தோன்றுகிறது.அப்புறம் சிறுபான்மையோருக்கும்

இடஒதுக்கீடு பற்றிய கேள்வி எழுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும். ஆனால் இட ஒதுக்கீடு எல்லாக்கட்சிகளுக்கும் புனிதப்பசுதான்.எனவே இந்தியாவில் இடஒதுக்கீட்டின் பெயரில் இன்னும் குழப்பம் அதிகரிக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன.


பல சமயங்களில் சுவாரஸ்யமான, முக்கியமான புத்தகங்கள் கிடைத்தாலும் படிக்க முடியாத நிலைதான் ஏற்படும். இருந்தாலும் அத்தகைய புத்தகங்களை ஒருமுறையாவது புரட்டிப்பார்த்தவிட்டு, பல பக்கங்களை படித்தால்தான் திருப்தி ஏற்படும். இப்படி சமீபத்தில் வெளியான ஒரு நூல்(*) கைவசம் இருந்தாலும் அதை முழுவதுமாகப் படிக்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது. வாசகர்கள் அந்நூல் கிடைத்தால் வாசிக்க முயலுமாறு கேட்டுக்கொள்கிறேன்.அடுத்து நான் வாசிக்க காத்திருப்பது மீரா நந்தா எழுதிய Prophets facing backward : postmodern critiques of science and Hindu nationalism in India .

மீரா EPW ல் சில முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். சமீபத்தில் வெளியான OUTLOOK இதழிலும் இவர் கட்டுரை உள்ளது. அம்பேத்கார், பெளத்தம், ஜான் டூவி என்ற அமெரிக்க தத்துவவாதி குறித்து இவர் எழுதிய கட்டுரை மிக முக்கியமானது என்று கருதுகிறேன்.அது ஆராய்ச்சி வட்டாரங்களில் வெகுவாக அறியப்பட்டாத ஒரு சஞ்சிகையில் வெளியானது.எனவே பரவலான கவனிப்பை அது பெறவில்லை.

அது இந்நூலில் இடம் பெற்றிருக்கும் என நினைக்கிறேன். மீரா இந்தியாவின் முக்கியமான சமூக அறிவியலாளர்கள் மீது சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நவீன அறிவியல் மீதான பெண்ணிய விமர்சங்களையும் எதிர்க்கிறார், அதே சமயம் இந்த்துவா அரசியலின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார். எனவே இவரது கட்டுரைகள் பின் நவீனத்துவப் போக்குகளை இந்தியச் சூழலில் கேள்விக்குள்ளாகுவதில் வியப்பில்லை.

(*) Beyond Appearences: Visual Practice and Ideologies in Modern India

(Ed) Sumathi Ramasawmay , Contributions to Indian Sociology, Occassional Studies No 10,

Sage Publications,Pp xxx+ 412

சுமதி ராமஸ்வாமி எழுதிய நூல்கள்

Passions of the Tongue:Language Devotion in Tamil India 1891-1970

Berkely: University of California Press, 1997

The Land of Lemuria: Fablous Geographies,Catastrophic Histories

Berkely: University of California Press (Forthcoming)

ravisrinivas@rediffmail.com

Series Navigation