குறிப்புகள் சில-ஜீலை 3 2003 (நதிகள் இணைப்புத் திட்டம்-உயிரியல் தொழில்நுட்பமும்,வேளாண்மையும்,எதிர்ப்பும்-செம்மொழி-அறிவின் எல்லைகள

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து பலவகைக் கருத்துக்கள் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளன.

சில வாரங்கள் முன்பு ரீடிப் இணையதளத்தில் அஸ்வின் மகேஷ் இரண்டு கட்டுரைகள் எழுதியிருந்தார்.

பல அறிவுஜீவிகள் இத்திட்டம் குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். தங்கள் ஐயங்களையும், கேள்விகளையும் அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். Dams, Rivers And People Update (www.janmanch.org) ல் இதனைப் படிக்கலாம்.

கிட்டதட்ட ஐம்பதாண்டுகள் முன்பு பெரும்திட்டங்களை வழிபாட்டுத்தலங்களுடன் ஒப்பிட்ட நேருவே ஒரு உரையில் தன் கருத்தினை ஒரு எச்சரிக்கையாக வெளிப்படுத்தினார்.பிரம்மாண்டம் என்ற பெயரில் நாம் திசைமாறிச் செல்கிறோமோ என்ற கவலை அதிலிருந்தது.கடந்த இருபதாண்டுகளில் பெரிய அளவிலான நீர் திட்டங்கள் குறித்து பல கேள்விகள் எழுப்பட்டுள்ளன.இதன் ஒரு விளைவு பெரும் அணைகளும், வளர்ச்சியும் குறித்த கமிஷனும், அதன் அறிக்கையும். இந்த கமிஷனின் அறிக்கை ஒரு முக்கியமான ஆவணம். இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் நடந்த விவாதங்களும், செய்யப்பட்ட ஆய்வுகளும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளன.திட்ட குழுவில் முக்கிய பங்கு வகித்த மூத்த அதிகாரியான N.C.சாக்சேனா இத்திட்டங்களால் இடம் பெயர்தப்பட்டோர், பாதிக்கப்படோர் குறித்த ஒரு ஆய்வினை செய்தார். இப்படி பல சான்றுகள் இன்று உள்ளன.இவற்றிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியவை பல. தாமேதர் பள்ளதாக்கு திட்டம் முன்வைக்கப்பட்ட போது ஒரு பொறியாளர் அதில் உள்ள குறைபாடுகளை தெரிவித்தார்.ஆனால் அவை கணக்கில் கொள்ளப்படவில்லை.ஆனால் அவரது அச்சங்கள் உண்மையாயின. இன்று இவை குறித்து ஒரு பரவலான விழிப்புணர்வு உருவாகிவருகிறது.இது நல்லது.இதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்தியாவின் பல பகுதிகளில் சிறு திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறியிருப்பது. இது தவிர இப்பெரும்திட்டங்கள் தனியார்மயமாக்கதிற்கு இட்டு செல்லும் என்ற அச்சமும் ஒரு காரணம்.


கடந்த வாரத் திண்ணையில் டாம் ஹேடன் கட்டுரையில் உயிரியல் தொழில்நுட்பமும், வேளாண்மையும்

குறித்து சில தகவல்கள் தரப்பட்டிருந்தன. வேளாணமையில் உயிரியல்தொழில்நுட்பம் வளர்ந்துவரும்

நாடுகளுக்கு மிகவும் அவசியம் என சமீபத்தில் வெளியான இரண்டு ஆய்வறிக்க்கைகள் தெரிவிக்கின்றன்,

ஆனால் இதற்கு எதிர்மறையான கருத்துகள் ACTION AID என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள

அறிக்கையில் காணப்படுகின்றன. சில பிரசினைகள் இருந்தாலும் உயிரியல்தொழில்நுட்பம் தவிர்க்க

முடியாதது என்ற கருத்தினையே பல நாடுகளின் தேசிய அறிவியல் அமைப்புகள் கொண்டுள்ளன.ஆனால் எதிர்ப்பு என்பது அறிவியல் குறித்த தவறான/போதாத புரிதலால் ஏற்படவில்லை. மாறாக எதிர்ப்பவர்கள்

பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.மாற்றுகள் குறித்தும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே

இந்த எதிர்ப்பினை வெறும் உணர்ச்சிபூர்வமான எதிர்ப்பாக குறைக்க முடியாது. இது அறிவியல்-தொழில்நுட்பம்-சமூகம் குறித்த சிக்கலும் கூட. ஐரோப்பாவில் மருத்துவதுறையில் உயிரியல்தொழில்நுட்பம்

பயன்படுத்தப்படுவதை பெரும்பாலோர் ஆதரிக்கின்றனர், ஆனால் வேளாண்மையில் பயன்படுத்துவதற்கு

அதைவிட குறைவான ஆதரவே உள்ளது. உயிரியல்தொழில்நுட்பம் குறித்த விமர்சன கட்டுரைகளின்

தொகுப்பு நூல் ஒன்றினை வாசகர்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். Redesigning Life ?

(Ed)Brian Tokar Zed Books. ஜூன் 21, 2003 Economic&Political Weekly(www.epw.org.in) ல்

வெளியாகியுள்ள நான் இந்நூலிற்கு எழுதியுள்ள மதிப்புரையினைக் காண்க.


தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்ட்டால் அது ஊடகங்களில் குறிப்பாக தொலைக்காட்சி

அலைவரிசைகளில் தமிழ் பயன்படுதப்படுவதில் ஏதாவது மாறுதலைக் கொண்டுவருமா ? இவற்றில் செம்மொழி படும்பாடு சொல்லி மாளாது. மத்திய அரசு அப்படி அறிவித்தால் அதனால் பெரிய பயன் ஏற்படுமா என்பது

கேள்விக்குறி. அது குறித்த பரஸ்பர பாரட்டுவிழாக்கள் நடக்கலாம்.ஒரு சிலர் பெயர் முன் செம்மொழி

குறித்த ஒரு அடைமொழி சேர்க்கப்படலாம். ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு இவை எவ்வாறு உதவும்.

செம்மொழி புதிய சிந்தனைகளை, கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளதா ?

21ம் நூற்றாண்டில் தமிழில் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து யோசிப்பதும், செயலாற்றுவதும்

முன்னுரிமை பெறவேண்டும்.


சில அறிவியலாளர்கள்,சில சிந்தனையாளர்கள், ஒரு உலகப்புகழ் பெற்ற ஆய்வு மையம், ஒரு அறிஞரின்

பதவி உயர்வு, ஒரு கணினிக்கான திட்டம் – இந்தப் பிண்ணனியில் எழுதப்பட்டுள்ள நூல் The One True

Platonic Haven .John Casti எழுதியது. இலக்கிய புனைவு என்பதால் சில வரலாற்று நிகழ்ச்சிகளில்

சிறு மாறுதல்களை செய்திருக்கிறார். ஐன்ஸ்டான், கோடால், வான் நுமேன், ஒப்பன்ஹீமர் போன்ற

மேதைகள் ஆய்வு மேற்கொண்ட பிரின்ஸ்டனில் உள்ள உயர் ஆய்விற்கான நிறுவனத்தில்(Institute For

Advanced Study) நடந்த சில நிகழ்ச்சிகள், சில முக்கியமான அறிவியல் நிகழ்வுகள்/கண்டுபிடிப்புகள்

இவற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புனைவு நூல் அறிவியலின் தத்துவம் குறித்த ஒரு நூல் என்றும் சொல்ல முடியும். அறிவின் எல்லைகள் என்ன ? கணிதம் காட்டும் உலகம் பெளதிகம் காட்டும் உலகிலிருந்து வேறுபட்டதா ? சிந்தனையில் உருவாகும் பிரபஞ்சத்தின் தன்மை என்ன ? போன்ற கேள்விகள் இதில் எழுப்பட்டுள்ளன. இதன் கதாபாத்திரங்கள் முன்வைத்த கோட்பாடுகளை மையமாக்கொண்ட உரையாடல்கள் உள்ளன.160 பக்கமே உள்ள இதனை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலாம்.


வரவிருக்கும் குறிப்புகளில் – ஹெபர்மாஸ்-தெரிதா, சூசன் சொண்டாக்,அறம்,தத்துவமும் நடைமுறைக் கேள்விகளும்,ஸ்டான்பெய்க் ஒரு வித்தியாசமான கோணத்தில்

***

ravisrinivas@rediffmail.com

Series Navigation