இந்தவாரம் இப்படி பெப்ரவரி 16 (காதலர் தினம், உலகமயமாகும் அரசியல் )

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

சின்னக்கருப்பன்


காதலர் தின கூத்துக்கள்

இந்தியாவில் காதலர் தினம் என்று ஒன்று உண்டால் அது வசந்த உற்சவம் தான் என்று நினைக்கிறேன். மணிமேகலையிலும், நைடதத்திலும் வரும் வசந்த உற்சவ கொண்டாட்டங்களைப் பார்த்தால், இன்று நடக்கும் காதலர் தின கொண்டாட்டங்கள் பல் குத்தக் கூட போதுமானவை அல்ல. வடக்கே ஹோலியாக மருவிய வசந்த உற்சவம், ‘பசந்த் ‘ஆக இன்னும் கொண்டாடப்படுகிறது. அது இன்னும் சொல்லப்போனால், வாலண்டைன் நாள் அருகாமையிலேயே இந்த வசந்த உற்சவமும் வருவது இன்னும் யோசிக்கத்தகுந்தது.

சிவசேனையும் இன்ன பிறரும் தினசரி செய்திக்குள் வர அங்கங்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தினாலும், இது யாருடைய அனுமதியும் இன்றி, அமெரிக்க ஐரோப்பிய கூட்டுஸ்தாபனத்தின் இன்னொரு கலாச்சார பங்காக இந்தியாவுக்குள் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிட்டது என்பது ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். இது இந்திய கலாச்சாரமல்ல என்று பேசுவதை விட்டு, இந்தியாவின் காதலர் தினம் என்று பண்டைய தமிழ்நாட்டின் வசந்த உற்சவ நாளையும் வடக்கத்தி ஹோலியையும் ஒப்புக்கொண்டு அதனை முன்னெடுப்பதுதான் சரியான மாற்றாக இருக்க முடியும். (மாற்று என்று வேண்டினால்.) சந்தோஷிக்க சாக்கு தேடும் காதலர்களிடம் சென்று ‘கொண்டாடாதே ‘ என்று சொன்னால், ‘போங்கடா ‘ என்று போய்விடுவார்கள். அங்கங்கு இருக்கும் சின்னச்சின்ன சந்தோஷங்களை ஒழிக்கவென்று ஒரு கூட்டமே கையில் கொள்கைகளை எடுத்துக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறது.

நண்பர்களுக்கு காதலர்தின, வசந்த் உற்சவ, ஹோலி, பஸந்த் வாழ்த்துக்கள்.

***

உலகமயமாகும் ஈராக் போர் எதிர்ப்பு.

Globalization உலகமயமாதல் என்று ஆயிரம் குற்றச்சாட்டுகளுக்கு இடையே உலகமயமாகும் போர்ப்பிரகடன எதிர்ப்பு போராட்டங்கள் நம்பிக்கை ஊட்டுகின்றன்.

வியத்நாம் போரின் போதோ, அல்லது முந்தைய ஈராக் போரின் போதோ இல்லாத ஒரு உலகளாவிய எதிர்ப்புக்குரல் இன்று பாரிஸ், லிஸ்பன், வாஷிங்டன், நியூயார்க், மாட்ரிட், பெர்ன், லண்டன், இந்தோனேஷியா, இந்தியா, ஆப்பிரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் ஆகிய அனைத்திலும் ஒரே நாளில் நடந்த ஒரு எதிர்ப்புக்குரல் போர்வெறி பிடித்த அமெரிக்க ஆட்சியாளர்களை சற்று சிந்திக்க வைத்திருக்கும் எனக் கருதினேன். எனக்கு போரிலேயே குறி என்பதாக, புஷ்ஷின் கண்ணெல்லாம் ஈராக் போரிலேயே பதிந்திருக்கிறது.

இந்தியா, ஃப்ரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அரசியல் ரீதியாக தெளிவான முறையில் போருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகள் சென்ற ஈராக் போருக்குப்பின்னர், ஈராக் நாட்டுடன் வியாபார உறவுகளை வலுப்படுத்தியிருக்கின்றன என்பது ஒரு காரணமென்றாலும் அந்தந்த நாடுகளுக்கு உள்ளேயே இருக்கும் போருக்கான எதிர்ப்பைத்தான் இவை சர்வநாட்டு ரீதியில் ஜனநாயக முறைப்படி வெளிப்படுத்துகின்றன எனக்கூறலாம்.

ஈரான் நாட்டு ஜனாதிபதி இந்த குடியரசு நாளின் போது சிறப்பு விருந்தினராக பங்கெடுத்தது கூட இப்படிப்பட்ட ஒரு எதிர்கால போரை தடுத்துநிறுத்தும் முயற்சிதான் என்று நான் கருதுகிறேன். சென்ற ஸ்டேட் ஆஃப் த யூனியன் பேச்சின் போது புஷ் ஈராக், வட கொரியா ஈரான் ஆகிய மூன்று நாடுகளையும் ஆக்ஸிஸ் ஆஃப் ஈவில் என்று கூட்டணி போட்டு அழைத்தார். ஈராக்குக்குப்பின்னர் வட கொரியா என்பது ஏறத்தாழ முடிவான நேரத்தில், ஈரானை கூப்பிட்டு சிறப்பு விருந்தினராகவும், ராணுவ ரீதியில் உறவுகளை வலுப்படுத்தவும் இந்தியா முனைந்திருப்பது ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும் மறுபக்கம் அமெரிக்காவுடனும் ஈரானுடனும் ஒரே நேரத்தில் ராணுவ உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் இந்தியாவின் எதிர்காலத்திட்டம் என்ன என்பது சிந்திக்க வேண்டியதாகவும் இருக்கிறது. இந்தியா ஒருவேளை ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் பாலம் போல இருந்து வரக்கூடிய ஒரு போரைத் தவிர்த்தால் அதன் மூலம் நல்லதே நடக்கும் என்றே கருதுகிறேன்.

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்