இந்த வாரம் இப்படி – பிப்ரவரி 9 2003. (பங்களாதேஷ், சாத்தான்குளம், தூதரக சர்க்கஸ்)

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

மஞ்சுளா நவநீதன்


பங்களாதேஷ் மக்கள் – பங்களா தேஷ் ஏற்றுக் கொண்டது.

நல்ல வேளையாக பங்களாதேஷ் மக்களை பங்களா தேஷ் திரும்பப் பெற்றதினால் இந்தப் பிரசினை முடிவுக்கு வந்திருக்கிறது. இது இந்த அளவிற்கு வளர விடாமல் பங்களா தேஷ் அரசாங்கம் பிரசினையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

இந்தப் பிரசினையை இந்தியா கையாண்ட விதமும் பாராட்டத் தக்கது. உறுதியாக அவர்களைத் திரும்ப அனுப்பியதன் மூலம் இது போன்ற நிகழ்ச்சிகள் பின்னால் தவிர்க்கப் படலாம்.

இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அறிவு ஜீவிகள் இந்தியா இன்னும் தாராளவாத மனப்பான்மையுடன் நடந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள் எப்படி என்று விவரமாய்ச் சொல்வதில்லை. ஒரு நாடு மற்ற நாட்டுக் குடிமக்களை இஷ்டத்திற்குத் தன் எல்லைக்குள் வரவும் குடியேறவும் அனுமதிக்க முடியாது. அதில்லாமல் பங்களா தேஷ் ‘ வாழும் இடம் ‘ என்ற ஒரு ஹிட்லரின் கோட்பாட்டை முன்னிறுத்தி பங்களா தேஷ் மக்கள் இந்தியாவிற்குள் ஊடுருவுவதை நியாயப் படுத்தி வருகிறது. பங்களா தேஷ் மக்களை இந்தியாவை நோக்கித் துரத்துவதிலும் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானுடன் பங்களா தேஷ் கொண்டுள்ள புதிய உறவையும், இந்தியா எதிர்ப்பாளர்கள் பங்களா தேஷில் ஆட்சியில் இருப்பதையும் முன்வைத்துப் பார்க்கையில் இது தற்செயலான ஊடுருவல் என்று தோன்றவில்லை.

பங்களாதேஷ், பர்மா, ஸ்ரீலங்கா முதலிய நாட்டிலிருந்து வந்த அகதிகளை இந்தியா நல்ல முறையில் தான் நடத்தி வந்திருக்கிறது. பங்களா தேஷ் , ஸ்ரீலங்கா போன்ற நாடுகள் பொறுப்பின்றி நடந்த போது கூட அவர்களை இந்தியா ஏற்றுக் கொண்டு , பராமரித்துத் தான் உள்ளது.

********

சாத்தான் குளம் சர்க்கஸ்

சாத்தான் குளம் சர்கக்ஸ் ஆரம்பமாகிவிட்டது. தினத்தந்தி , தினமலர் போன்ற Pulp விற்க இந்த தேர்தல் உதவும் என்பது தவிர வேறு எந்த நிஜமான பயனும் இந்தத் தேர்தலில் விளையப் போவதில்லை. விடுதலைச் சிறுத்தைகள் தனித்து போட்டியிட, தி மு க தேர்தலைப் புறக்கணிக்க, அமைச்சர்கள் தொகுதியில் முகாம் இட்டு வளைத்துப் போட முயற்சிக்க, அவசர அவசரமாய் ஆங்காங்கே ஒப்புக்கு சில வேலைகள் நடக்க, நீண்ட காலப் பயன் எதுவுமில்லாத ஆடு புலி ஆட்டம். இப்படி இடைத் தேர்தலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் ? இந்த தேர்தலில் தோற்றால் அ தி மு க என்ன பதவி விலகப் போகிறதா ? அல்லது காங்கிரஸ் ஜெயித்தால் பிறகு வரும் தேர்தலில் ஜெயிக்கும் என்று ஏதும் உத்தரவாதம் இருக்கிறதா ? ஏன் இப்படி எல்லோரும் அடித்துக் கொள்கிறார்கள் ?

*********

பாகிஸ்தான்-இந்தியா தூதுவரக சர்க்கஸ்.

பாகிஸ்தான் ஆரம்பித்து வைத்த இந்த விளையாட்டு கன ஜோராக, தூதுவரக டென்னிஸ் ஆகிவிட்டது. நான் உன் தூதுவர் பின்னால் நிழல் போல் துரத்தி அவமானப் படுத்துவேன் என்றால், நீ உன் பங்குக்கு எங்களைத் துரத்துவாய். நான் வெளியேற்றினால் நீ வெளியேற்றுவாய். நான் குற்றம் சாட்டினால், நீ குற்றம் சாட்டுவாய், என்று தொடர்ந்து சிக்கல்கள், பின்னல்கள். பாவம் தூதுவரக அதிகாரிகள். அமெரிக்கா, ஜெர்மனி , ஃபிரான்ஸ் போகலாம் என்று ஐ எஃப் எஸ் படித்தவர்கள் தண்ணியில்லாக் காட்டுக்குக் ஒப்பான பாகிஸ்தான் தூதுவரக வேலைக்குப் போக நேர்ந்தால் எப்படி நொந்து கொள்வார்கள் என்பது வெளிப்படை.

பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள தூதுவரகம் மட்டுமல்லாமல், நேபாளம் போன்ற நாடுகளில் உள்ள தூதுவரகத்தையும் தன்னுடைய இந்திய எதிர்ப்பைப் பரப்ப ஓர் ஆயுதமாய்ப் பயன் படுத்தி வருகிறது. இந்தியாவை எதிர்த்துக் கலவரங்களைத் தூண்டிவிடுவதும், இந்தியா ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது வரையில் தூதுவரகங்கள் செய்து வருகின்றன என்று செய்திகள் வருகின்றன. காஷ்மீர் தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் தூதுவரகம் வெளிப்படையாகவே உறவு பூண்டு வருகிறது. இருந்தும் இந்தியா ஒன்றும் செய்வதிற்கில்லை.

*****

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – பிப்ரவரி 3- 2002

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

மஞ்சுளா நவநீதன்


அமெரிக்காவும் சவூதி அரேபியாவும்.

அமெரிக்காவுடன் சவூதி அரேபியா கொண்டுள்ள உறவை முறித்துக் கொள்ளலாம் என்று ஒரு செய்திக் குறிப்பு வந்தது. உடனேயே இல்லை அப்படி எதுவும் இல்லை என்று சவூதி அரேபியா மறுத்துவிட்டு, ஆனால் அமெரிக்கா பாலஸ்தீன் பிரசினையில் கொண்டுள்ள கொள்கையை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று கோரியிருக்கிறது. இந்தக் கோரிக்கைக்கு என்னவிதமான அழுத்தம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். சவூதி அரேபியா தன்னுடைய நாட்டின் பாதுகாப்பு முழுவதையுமே அமெரிக்காவிடம் ஒப்புவித்திருக்கிறது. அங்கே உள்ள அமெரிக்கப் படைகள் பல முஸ்லீம்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணியிருக்கிறது. ஒசமாவின் ஜிகாத் அழைப்பில் , அமெரிக்காவிற்கு எதிரான உணர்வின் ஒரு காரணமாக அரேபியாவின் புனித இடங்களில் ‘காஃபிர் ‘ தேசமான அமெரிக்கா சென்று அமர்ந்திருப்பது தான்.

அமெரிக்காவிற்கு இது லாபகரமான ஒரு ஏற்பாடு. இந்தப் பாதுகாப்பிற்காக பில்லியன் கணக்கில் அமெரிக்கா பெறுகிறது என்பது மட்டுமல்லாமல். எண்ணெய் விலையையும் கட்டுப் படுத்த ஒரு வாய்ப்பு. சவூதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு சேவகம் செய்யக் காத்திருக்கிறோம் ஆனால் இஸ்ரேலை எதிர்க்கிறோம் என்று இரட்டை வேடம் போடுவதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இந்த இரட்டை வேடம் தான் பாகிஸ்தானில் அமெரிக்க எதிர்ப்பு உணர்வாகவும், அரேபியாவில் இருந்த அராபியர்கள் ஒசாமாவுடன் இணைந்து அமெரிக்கவிற்கு எதிரான போராகவும் உருப்பெற்றது.

சவூதி அரேபியாவில் உள்ளே இருந்து கொண்டு இப்படிப்பட்ட எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாது. சவூதி அரேபியா மிக மோசமான சர்வாதிகார ஆட்சியைக் கொண்டது என்பதால், இவர்கள் அரேபியாவை விட்டு வெளியேறி ஆஃப்கானிஸ்தானத்தில் போர் புரிந்தனர். ஜனநாயகம் , மனித உரிமைகள் , சுதந்திரம் என்று பேசும் அமெரிக்காவும் சவூதி அரேபியாவைப் பொறுத்து வாயே திறப்பதில்லை.

********

சிதம்பரத்தின் நான்கு யோசனைகள்

சிதம்பரம் அரசாங்கத்திற்கு நான்கு யோசனைகள் தெரிவித்துள்ளார். கள்ளச் சாராய ஒழிப்பு, பெண்களுக்கு வேலை வாய்ப்பு, அத்தியாவசியப்பண்டங்களின் விலை கட்டுப்பாடு, மகளிருக்கான சுய உதவித் திட்டத்தின் மூலம் வருவாய்ப்பெருக்குதல்.

கள்ளச்சாராய ஒழிப்பு காவல்துறைக்கே மனம் வருமா என்பது சந்தேகம் தான். இது காவல் துறையினருக்குப் பொன் முட்டையிடும் வாத்து என்கிறார்கள். ஆனால் சிறு கிராமங்களில் உள்ளூர்க்காரர்கள் மனது வைத்தால் இதைத் தடுக்க முடியும். மகளிருக்கான சுய உதவித்திட்டம், மற்றும் வேலை வாய்ப்பு மிக நல்ல யோசனைகள். உலகில் எந்த நாடுகளெல்லாம் சற்று முன்னேறியுள்ளன என்று பார்த்தால் அவை மகளிருக்கு எல்லா வாய்ப்புகளையும் அளிக்கும் நாடுகள் தான். தமிழ் நாட்டில் பெண்கள் வேலைக்குப் போவது பற்றிய மனத்தடைகள் மிகவும் குறைந்து விட்டன என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயம். இது பற்றி அரசு கவனம் செலுத்த வேண்டும்.

***********

சீனாவுடன் உறவு

இந்தியா சீனாவுடன் உறவை வலுப்படுத்தவேண்டி எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் பாராட்டத் தக்கவை. சீனப் பிரதமர் வருகையைத் தொடர்ந்து, சீனாவிற்கு நேரடியான விமானப் போக்குவரத்து தொடங்கவிருக்கிறது. சீனா பாகிஸ்தான் மீது கொண்டுள்ள அபிமானம் இதனால் குறையவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே சீனப் பொருள்கள் இந்தியாவில் வரத் தொடங்கியுள்ளன. சீனாவும், அமெரிக்கா போலவே சந்தையில் தம் பொருட்களை விற்க முடிந்தால் அந்த நாட்டுடன் நல்லுறவு கொள்ளவே விரும்புகிறது என்பதால், இறுக்கங்கள் தளர வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்த நட்புக்குக் காரணமாய் உள்ளவர்களைப் பாராட்டுவோம்.

***********

பாகிஸ்தானில் பத்திரிகையாளர் கடத்தல்

வால் ஸ்ட்ரீட் ஜர்னலைச் சேர்ந்த டானியல் பேர்ல் கடத்தப்பட்டு என்னவானார் என்று இன்னமும் தெரியவில்லை. இது பற்றி சிறுபிள்ளைத்தனமாக இந்தியாவைக் குற்றம் சாட்டியதல்லாமல் வேறு என்ன நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்துள்ளது என்றும் புரியவில்லை. இந்தப் பத்திரிகையாளர் , பாகிஸ்தான் தடை செய்த பயங்கரவாத அமைப்புகள் பற்றி ஆய்வு செய்து செய்திகள் வெளியிட்டார். தடை செய்யப்பட்ட போதிலும் அதன் முக்கிய தலைவர்கள் யாரும் கதி செய்யப்படவில்லை என்றும், அதனால் இந்தத் தடையெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம் தான் என்று நிரூபணங்களை வெளியிட்டார். இது பாகிஸ்தான் அரசிற்குக் கசப்பான விஷயம்.

பேர்லைக் கடத்தியவர்கள் யார் என்று இன்னமும் தெரியவில்லை. அவர்களுடைய முக்கிய கோரிக்கை வெளிநாட்டு நிருபர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான். உண்மைச் செய்திகள் வெளியே செல்லலாகாது என்பதில் குறியாய் இருப்பது, கடத்தல்காரர்களா அல்லது பாகிஸ்தான் அரசாங்கமா ?

************

உலக பொருளாதார சம்மேளனமும் , உலக சமூகச் சம்மேளனமும்

நியூயார்க்கில் உலக பொருளாதார சம்மேளனம் நடைபெற்ற அதே நேரத்தில் உலக சமூகச் சம்மேளனம் நடைபெற்றது. பிரேசிலில். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பலரும் பொருளாதாரக் கொள்கைகளால் ஏழை நாடுகள் ஏழை நாடுகளகவே இருப்பதைக் குறிப்பாய்ச் சொல்கிறார்கள். பொருளாதாரத்தை மக்கள் வாழ்க்கைத் தரம் மற்றும், சமச்சீரற்ற வளர்ச்சி பற்றிய கவனம் செலுத்தாமல் தனிமைப் படுத்திப் பேச முடியாது. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு உலகத்தைத் தாரை வார்த்துக் கொடுப்பது போன்ற முயற்சிகள் தாம் உலக பொருளாதாரச் சம்மேளனத்தின் வேலையாக இருப்பது வருத்தத்திற்குரியது.

***********

ஆண்டிப்பட்டி தேர்தலால் அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கிறதா ?

ஆண்டிப்பட்டி தேர்தல் தினமும் நாளேட்டின் பக்கங்களை அடைத்துக் கொள்வதைப் பார்க்கிறோம். வேறு செய்திகள் வருவதில்லை என்ற உண்மை , அரசு நிர்வாகம் முழுக்க எந்த வளர்ச்சித் திட்டங்களிலும் ஈடுபடாமல், ஆண்டிப்பட்டி தேர்தலிலேயே முழுக் கவனமும் செலுத்தி வருகிறது என்ற உண்மையை யாரும் சொல்வதில்லை. சொல்லப்படாத செய்தியாய் இது உறுத்தி நிற்கிறது. இது வெறும் இடைத் தேர்தல் தான். ஜெயலலிதா வென்றாலும் தோற்றாலும் அரசின் கொள்கைகளில் ஏதும் பெரும் மாறுதல்கள் வரப்போவதில்லை. ஜெயித்தால் பொம்மை அரசு இருக்காது என்பது தவிர.

*********

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்