ஜின்னாவும் இஸ்லாமும்

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

குதுபுதீன் அஜீஸ்


காய்தே-இ-ஆஸம் (தேசத் தந்தை ) முகம்மது அலி ஜின்னா (1876-1948) முஸ்லீமாகப் பிறந்தார்; முஸ்லீமாக தன் பெற்றோரால் வளர்க்கப்பட்டார்; தன் வாழ்நாள் முழுவதும் நல்ல முஸ்லீமாக வாழ்ந்தார்; ஆகஸ்ட் 14, 1947ஆம் வருடம் அன்றைய தினத்தின் மிகப்பெரிய இஸ்லாமிய நாட்டை உருவாக்கிய பின்னர் இஸ்லாமிய வரலாற்றிலேயே மிகச்சிறந்த முஸ்லீம்களில் ஒருவராக மறைந்தார். அவரது பெற்றோர், ஜின்னாபாய் பூஞ்சா அவர்களும், மிதி பாய் அவர்களுமாவர். இவர்கள் இஸ்னா அஹாரி (கோஜா முஸ்லீம்)-இன் வழியாளர்கள். இவர்களும் நல்ல முஸ்லீம்களாக இருந்தனர். இஸ்லாமிய நெறிகளையும் இன்னும் மற்ற பாடங்களையும் தங்கள் பிள்ளைகளுக்கு, முக்கியமாக மூத்த மகனான ஜின்னாவுக்கு கற்றுத்தந்தனர். தாயான மித்தி பாய், சிந்துமாகாணத்தில் இருந்த முஸ்லீம் கோவில்களுக்கு தன் குழந்தைகளையும் அழைத்துச் சென்று கடவுளின் அருளை இறைஞ்சினார்.

புகழ்பெற்ற புரவலரும், கல்வியை பரப்பியவருமான ஹசன் அலி இஃபிண்டி தலைமையில் இயங்கிய சிந்தி மொஹம்மதன் அஸ்ஸோஷியேஷன் நடத்திய சிந்து மதரஸாவில்தான் முதன் முதலில் கராச்சியில் முகம்மது அலி ஜின்னா அனுமதிக்கப்பட்டார். ஹசன் இந்த பள்ளியை ஆரம்பிப்பதன் முன்னர், அவர் அலிகாரில் இருக்கும் எம்.ஏ.ஓ கல்லூரிக்குச் சென்று அங்கு சர் சையது அஹ்மத் கான் அவர்களுடன் பேசினார். சிந்தி மதரஸாவின் பாடத்திட்டங்களில் இஸ்லாமிய படிப்புகளும், குரான் படிப்பும் சேர்க்கப்பட்டது. இங்கு ஜின்னா அவர்கள் இஸ்லாமை நன்கு கற்றுத் தேர்ந்தார். அவரது பிள்ளைப்பிராயத்தில், ஜின்னா அவர்கள் பம்பாய் சென்று அங்கு அவரது அன்பான அத்தை மாமா அவர்களுடன் 6 மாதங்கள் தங்கியிருந்தார். அங்கு அவர்கள் ஜின்னாவை அன்சுமான்-ஈ-இஸ்லாம் பள்ளியில் சேர்த்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் இஸ்லாம் பாடத்திட்டத்தில் ஒரு பகுதி. அவர் ஜனவரி 1893இல் அவர் இங்கிலாந்த்துக்குப் புறப்படும் வரை, ஜின்னா அவர்கள் கராச்சியில் இருக்கும் சர்ச் மிஷன் பள்ளியில் படித்தாலும், தொடர்ந்து அவர் இஸ்லாமை கற்று வந்தார். ஜின்னாவுக்கு அவரது 16 வயதில் 14 வயது நிரம்பிய எமிபாய் அவர்களுடன் கத்தியவாரில் இருக்கும் கனேலியில் முஸ்லீம் சம்பிரதாயங்களுடன் திருமணம் நடந்தேறியது. அவரது தாயார், தன்னுடைய மகன் இங்கிலாந்து செல்வதால் அங்கு எந்த இங்கிலாந்து பெண்ணின் வசமும் சென்று விடாமல் இருப்பதற்காக இந்த திருமணத்தை அவசர அவசரமாக நடத்தினார். முஸ்லீம் சம்பிரதாயத்தின் படி செய்யப்பட்ட பல தாயத்துக்களை அணிந்து கொண்டு அவர் கராச்சியிலிருந்து இங்கிலாந்து சென்றார். கராச்சியில் அவரது பிள்ளைப்பிராயம் முழுவதும் ஜின்னாவின் பெற்றோர் அவரது இஸ்லாமிய அடையாளத்தையும் இஸ்லாமிய நம்பிக்கைகளையும் அவர் நன்கு உணருமாறு செய்தனர்.

லண்டனில் இருக்கும் லண்டன் விடுதியில் அவர் 3 வருடம் சட்டப்படிப்பு படிக்கும் காலம் முழுவதும் (ஏப்ரல் 1893- ஜூலை 1986), ஜின்னா தன் இனமான முஸ்லீம்களுடன் இணைந்து ஈத் திருநாளை கொண்டாடினார். பல வேளைகளில் அவர் கிழக்கு லண்டனில் இருந்த சிறு மசூதிக்கும் சென்று வந்தார். பல மதங்கள் இருக்கும் இந்தியாவில் சட்டத்தொழில் செய்வதற்காக, தன்னுடைய சட்டப் படிப்பின் பகுதியாக இஸ்லாமிய சட்டத்தையும் கற்றுத்தேர்ந்தார். அவர் ஏற்கெனவே சர்ச் மிஷன் பள்ளியில் கராச்சியில் படிக்கும்போது கிரிஸ்தவ மதத்தைப் பற்றி கற்றிருந்தார். அவருக்கு இந்து மற்றும் பார்ஸி நண்பர்களும் இருந்தார்கள். அவர்களிடமிருந்து அவர்களது மதங்களையும் அறிய ஆர்வமுள்ளராக இருந்தார். இங்கிலாந்தில் அவருக்கு அறிமுகமான மேற்கத்திய படிப்பும், மேற்கத்திய அமைப்பும் அவரை தாராளமனதுடையவராகவும், பரந்த மனதுடையவராகவும், மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மீது சகிப்புத்தன்மை கொண்டவராகவும் ஆக்கியது. அவரது சகோதரி பாத்திமா ஜின்னா கூறுவதுபோல, இளம்வயதில் ஜின்னா மதுவையோ பன்றிக்கறியையோ தொட்டதேயில்லை. இங்கிலாந்திலும் அவற்றைத் தொடமாட்டேன் என்று தன் பெற்றோரிடம் உறுதி கூறிவிட்டே அவர் இங்கிலாந்து சென்றார். ஸ்டான்லி வோல்பர்ட் எழுதிய ‘பாகிஸ்தானின் ஜின்னா ‘ என்ற புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சி அவரது குணவலிமைக்கும் ஒழுக்கத்துக்கும் சாட்சி சொல்வதாகும். லண்டனில் அவர் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்கார அம்மாள் கிரிஸ்துமஸ் விருந்துக்கு அவரை அழைத்திருந்தார். அந்த வீட்டுச் சொந்தக்கார அம்மாளின் அழகான பெண் அன்றைய இளம் வயது ஜின்னாவுடன் நட்புறவு கொள்ள விரும்பினாள். அந்த கொண்டாட்டத்தின் போது, இங்கிலாந்து பழக்கத்தின்படி கூரையிலிருந்து தொங்கும் மிஸ்ல்டோவின் கீழ் முத்தமிடலாம் என்று அழைத்தாள் அந்த அழகிய பெண். அப்படிப்பட்ட பழக்கம், தான் வளர்ந்து வந்த ஒழுக்கக் கோட்பாட்டின்படி தவறானதென்றும், தன் தாயாரும், தன் 15 வயது மனைவியும் நிச்சயம் ஆட்சேபிப்பார்கள் என்றும் ஜின்னா அந்தப் பெண்ணிடம் கூறினார்.

லண்டனில் ஜின்னா அங்கிருக்கும் பிரிட்டிஷ் மியூஸியத்துக்கு அடிக்கடி விஜயம் செய்தார். மத்தியக்கிழக்கு, அரபு, இஸ்லாமிய சமுதாயம், சிந்து பள்ளத்தாக்கு போன்றவற்றைப் பற்றிய காட்சிகளில் மிகுந்த ஆர்வம் செலுத்தினார். இங்கிலாந்திலிருந்து கராச்சிக்கு வரும் வழியில், சூயஸ் கால்வாயில் இருக்கும் சையது துறைமுகத்தில் கப்பல் நின்றபோது, எகிப்தை ஒரு நாள் சுற்றிப்பார்த்தார். பிரிட்டிஷ் மியூஸியத்தில் இருந்த பழங்கால, மற்றும் மத்திமக்கால எகிப்து காட்சிகள் அவரை பெரிதும் கவர்ந்திருந்தன.

ஜின்னா இந்தியாவுக்கு 1896இல் திரும்பி வந்து பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பதிவு செய்து கொண்டபின்னர், இந்தியாவில் இருக்கும் சட்டங்களை,முக்கியமாக இஸ்லாமிய மதச்சட்டத்தையும், இஸ்லாமிய தனிச்சட்டத்தையும் பற்றி ஆழமாக கற்க முயன்றார். நவம்பர் 19இலிருந்து அவர் பம்பாயில் பிரஸிடென்ஸி மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தபோது இது வெகுவாக அவருக்கு உதவியது. அவர் எடுத்துக்கொண்ட பல வழக்குகள் முஸ்லீம்களைப் பற்றியவை. இந்த வழக்குகள் பல இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய பல்வேறு முக்கிய வேறுபட்ட புரிவிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளும் தேவையை அவருக்கு உண்டாக்கின. பம்பாயில் அவர் அன்சுமான்-ஈ-இஸ்லாமியாவுக்குச் சென்று அதற்கு நிதியுதவி அளித்தார். 1901இல் அவர் வழக்குரைஞராக ஆனபோது, அவருடைய நண்பர் குழாம் விரிவடைந்து பல முஸ்லீம்களையும், இந்துக்களையும் பார்ஸிகளையும் கிரிஸ்தவர்களையும் ஐரோப்பியர்களையும் கொண்டதாக ஆனது. அவர் அவர்தம் நண்பர்களது மத உணர்வுகளையும் பழக்க வழக்கங்களையும் மதித்தார்.

கல்கத்தாவில் 1906இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் போது அவர் இஸ்லாமிய வக்ஃப் சட்டங்கள் பற்றிப் பேசிய பேச்சு அவர் எவ்வளவு ஆழமாக இஸ்லாமிய சட்டத்தையும் குரானையும் பற்றி அறிந்து வைத்திருந்தார் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இந்த விஷயம் சம்பந்தமாக அவர் தெளிவாக இஸ்லாமிய மக்களின் பார்வையை வெளிக்காட்டியதற்காக அவரை பல இஸ்லாமிய அமைப்புக்களும், படிப்பாளிகளும் பாராட்டினார்கள். அவர் முதன்முதலில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முஸ்லீம்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியிலிருந்தே. அந்தத் தொகுதி மக்கள் அவர் சிறந்த முஸ்லீம் என்று நம்பியிராவிட்டால், அவரை அந்த கடினமான தேர்தலில் தேர்ந்தெடுத்திருக்கமாட்டார்கள். இஸ்லாமிய எண்டோவ்மண்ட்ஸ் பற்றிய தனிநபர் மசோதாவை அவர் பிரேரணை செய்வதையே எல்லோரும் விரும்பினார்கள்.இந்தச் சட்டத்தில் ஜின்னவின் உழைப்பால், இஸ்லாமிய அமைப்புக்களும், அந்த இஸ்லாமிய அமைப்புக்கள் மூலம் பயனடைவோர்களும் சிறப்பான நன்மை எய்தினார்கள். இந்தச் சட்டத்தின் சார்பாக ஜின்னா பேசிய பேச்சுக்கள், அவருக்கு இந்தியா முழுவதிலும் இருக்கும் முஸ்லீம்களிடையே புகழை பெற்றுத்தந்தது. முஸ்லீம்களுக்கான அவரது சேவையைப் பாராட்டி பல முஸ்லீம் அமைப்புக்கள் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தன. மெளலான ஷாபிர் அஹ்மத் உஸ்மானி, மெளலானா ஹூஸ்ஸெய்ன் அஹ்மத் மதானி போன்றவர்களும் அவரைப் பாராட்டினார்கள். அவர் ஒரு முஸ்லீம் சட்டசபை அங்கத்தினர் என்ற முறையில் பல முஸ்லீம் கொண்டாட்டங்களிலும், ஈத் திருநாள், நபிகள் பிறந்தநாள் ஆகியவற்றிலும் கலந்துகொண்டார். அவர் முஸ்லீம்களின் அதிலும் முக்கியமாக முஸ்லீம் பெண்களின் அரசியல், பொருளாதார, கல்வி விடுதலையை வலியுறுத்தினார்.

1913இல் ஆல் இந்தியா முஸ்லீம் லீக் அமைப்பு தன் குறிக்கோளைத் திருத்தி அதில் இந்தியா சுயாட்சி பெறுவதை நோக்கமாக இணைத்ததும் அதில் உறுப்பினராக லண்டனில் இணைந்தார். ஆனால் அவர் அதே வேளையில், அவர் 1903இல் தான் இணைந்த காங்கிரஸில் தொடர்ந்து உறுப்பினராக இருப்பேன் என்றும் தெளிவாக்கினார். பம்பாயின் முஸ்லீம் மக்கள் அவரது சேவையில் மகிழ்ந்ததால், அந்தத் தொகுதிக்கு மீண்டும் பிரதிநிதியாக 1916இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசுக்குள் அவர் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக உழைத்ததாலும், புகழ்பெற்ற லக்னெள ஒப்பந்தத்தில் இந்து முஸ்லிம் மக்கள் சேர்ந்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு உழைக்க ஏற்பாடு செய்தமையாலும் அவர் இந்து முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என அழைக்கப்பட்டார்.

1918இல் பார்ஸிப் பெண்ணாகப் பிறந்த ருட்டி பெட்டி அவர்கள் 18 வயது நிறைந்து இஸ்லாமை தழுவிய பின்னர் திருமணம் செய்து கொள்ள இசைந்தார். இஸ்னா அஹாரியின் தலைமை மதகுருவின் முன்னிலையில் மரியம் என்ற இஸ்லாமியப் பெயரை ருட்டிக்கு சூட்டியதன் பிறகு, அடுத்த நாள் ஜின்னா அவரை பல முஸ்லீம் படிப்பாளிகள் முன்னிலையில் முஸ்லீம் நண்பர்கள் முன்னிலையில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்தார். அந்த சிறப்பான குழுவில் மஹ்மூதாபாத் அரசரும் இருந்தார். 1929இல் ருட்டி இறந்ததும், அவரை இஸ்லாமிய முறைப்படி, இஸ்லாமிய கல்லறையில் முஸ்லீம் இமாம் தலைமையில் அடக்கம் செய்தார். அவர் பம்பாயிலும் பல இடங்களிலும் இருக்கும் இஸ்லாமிய சேவை நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்தார். ஈத் திருநாளன்று அவரது தொகுதி மக்களும் அவரது நண்பர்களும் அவர் வீட்டுக்கு வந்து அவரை கவுரவித்தார்கள். லண்டனில் இருந்தபோதும் (1931-35) அவர் கிழக்கு லண்டனில் இருக்கும் சிறிய மசூதியில் ஈத் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டார். ப்ராட்பரியில் அவர் இருந்தபோது ஈத் திருநாளன்று பல முஸ்லீம் பிரமுகர்கள் அவர் வீட்டுக்கு வந்து வாழ்த்துக்களை வழங்கினார்கள் என அவரது வண்டி ஓட்டுனர் கூறுகிறார். 1918 முதல் 1922 வரை இந்தியாவில் நடந்த கிலாஃபத் இயக்கத்தில், ஜின்னா ஓட்டோமான் பேரரசின் நோக்கத்தை ஆதரித்து, கான்ஸ்டான்டினோபிள் மையமாக இருந்த காலிபத்தை ஆதரித்தார். இங்கிலிஷ் டில்லி, பாம்பே குரோனிகிள் ஆகிய பத்திரிக்கைகளை நடத்திய நிறுவனத்தின் சொந்தக்காரர் என்ற முறையில் அந்த பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த பி.ஜி.ஹாரிமன் அவர்களை கிலாபத் இயக்கத்துக்கும், அதன் தலைவர்களாக இருந்த மெளலானா மொஹம்மது அலி, அவரது அண்ணன் மெளலானா ஷவுகத் அலி மற்றும் காந்திஜி ஆகியோருக்கு தேவையான முக்கியத்துவத்தை கொடுக்கத் தூண்டினார். 1920களில், லண்டனில் பாராளுமன்ற கமிட்டியின் முன்னர், இந்தியாவின் முஸ்லீம்கள் ஒட்டோமான் பேரரசு மற்றும் காலிபத் ஆகியவற்றைக் கலைப்பதற்கு எதிரானவர்கள் என்ற பார்வையை பிரபலப்படுத்தினார்.

1935க்குப் பின்னர், இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்ததன் பின்னர், ஆல் இந்திய முஸ்லீம் லீக் தலைவராக ஆனார். அதன் பின்னர் பல முஸ்லீம் கூட்டங்களில் கலந்து கொண்டு, நபிகள் வாழ்க்கையைப் பற்றியும், இந்தியாவிலும் வெளியிலும் முஸ்லீம்களின் நோக்கத்தைப் பற்றியும் பேசினார். அவரது பேச்சுக்களில் எல்லாம், இஸ்லாமின் இறைதூதரரின் பெருங்குணங்களைப் பற்றியும், இஸ்லாமின் உலக மயமான போதனைகளைப் பற்றியும் பேசினார். அல்லாமா இக்பால் அவர்களின் இஸ்லாமிய மறுமலர்ச்சியை வேண்டி நின்ற கட்டுரைகளாலும், அவரது உணர்ச்சி மயமான கவிதைகளாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜின்னா, இஸ்லாம் பற்றி நிறையப் புத்தகங்கள் படித்தார். மேலும் ஜின்னா அவர்கள் ஷாபிர் அஹ்மத் உஸ்மானி அவர்களின் ஆலோசனையை விரும்பிக் கேட்டார். லாகூர் ஷாஹீத்கஞ்ச் மசூதி வழக்கிலும், கான்பூர் மசூதி வழக்கிலும் முஸ்லீம் பார்வையை வழக்குரைத்தார்.

1926இல் ஜின்னா மீண்டும் இந்தியாவின் மத்திய சட்டசபைக்கு பம்பாய் முஸ்லீம் தொகுதி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது முஸ்லீம்கள் அவர் மீது கொண்டிருந்த மாபெரும் நம்பிக்கையை வெளிக்காட்டியது.

ஜின்னா தன் மகளான டினா அவர்களின் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தார். ஆனால் அவர் பார்ஸியாகப் பிறந்த நெவில்லி வாடியாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது, வாடியா முஸ்லீமாக மாறினால் மட்டுமே தான் அனுமதி தரப்போவதாகச் சொன்னார். வாடியா மறுத்துவிட்டபோதும், டினா அவர்கள் வாடியாவை திருமணம் செய்தபோது, ஜின்னா தன் மகள் மீது கொண்டிருந்த மகள்-தந்தை உறவை அறுத்துவிட்டார்.

கராச்சியில் ஆல் இந்தியா முஸ்லீம் லீக் மாநாட்டில் டிஸம்பர் 26, 1943 அன்று இந்த சக்தி வாய்ந்த வார்த்தைகளைப் பேசியபோது, இஸ்லாம் பற்றிய தன் புரிதலை பிரதிபலித்தார். ‘எது எல்லா முஸ்லீம்களையும் ஒரே மனிதனாக இணைக்கிறது ? எது இஸ்லாமிய சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது ? அது இஸ்லாம். இது மாபெரும் புத்தகம் – திருக்குரான் – இதுவே இந்திய முஸ்லீம்களின் அடித்தளம். நாம் போகும் வழியெங்கும் இதுவே. ஒரே கடவுள், ஒரே புத்தகம், ஒரே இறைதூதர், ஒரே தேசம். ‘ தனது ஈத் திருநாள் வாழ்த்து செப்டம்பர் 1945 இல், ‘இஸ்லாமில் வெறும் ஆன்மீக விஷயங்களும், சடங்குகளும், ஆன்மீக கோட்பாடுகளும் இல்லை. இது எல்லா முஸ்லீம் சமூகத்தையும் எல்லா வகைகளிலும் நெறிப்படுத்தும் முழுமையான வழிமுறைகள். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும், சமூகம் முழுமைக்கும், தனிமனிதருக்கும் முழுமையான நெறிமுறைகளை வகுத்துத்தந்திருக்கிறது ‘. டில்லியில் ஏப்ரல் 24, 1943 ஆல் இந்திய முஸ்லீம் லீக் மாநாட்டில் முகம்மது அலி ஜின்னா சொன்னார், ‘மனிதனின் சமத்துவம் இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாது. சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என்பன இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்று… இறைதூதர் உலகம் சந்தித்த மக்களிலேயே மிகச்சிறந்தவர்… 13 நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவர் ஜனநாயகத்தின் அடித்தளத்தை நிறுவினார் ‘. ஜின்னா மற்ற மதங்களைப்பின்பற்றுபவர்களிடம் சகிப்புத்தன்மையை காட்டினார். ஆகஸ்ட் 11, 1947இல் அவர் பாகிஸ்தான் சட்ட அமைப்பு அஸெம்பிளியில் பேசிய பேச்சு இதற்கு உதாரணம். ஜின்னா மத ஆட்சிக்கும், மதப்பிரிவு வாதத்துக்கும் (theocracy and sectarianism) எதிரானவராக இருந்தார்.

1948 பெப்ரவரியில் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையில், கவர்னர் ஜெனரல் ஜின்னா அவர்கள், பாகிஸ்தானின் புதிய அரசியலமைப்புச் சட்டம் ஜனநாயக அமைப்பாக, இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகள் பொதிந்ததாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகச் சொன்னார். இஸ்லாம் முஸ்லீம்களுக்கு மனிதனின் சமத்துவத்தையும், நீதியையும், எல்லோருக்கும் சம வாய்ப்பையும் கொடுக்கச் சொல்லி போதித்திருக்கிறது என்று குறிப்பிட்டுக்காட்டினார். 1947, ஆகஸ்ட் 18ஆம் தேதி, அவர் பாகிஸ்தானிய முஸ்லீம்களுக்கும், இன்னும் உலக முஸ்லீம்களுக்கும் சொன்ன உரையில், ஈத் திருநாளன்று, புதிய விடியலுக்கான ஜின்னாவின் நம்பிக்கையை, ‘ வளமையான புதிய யுகம் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கும், அதன் குறிக்கோள்களுக்குமான புதிய குறியீடாக இருக்கும் ‘ என்று சொன்னார். அன்றைய கொண்டாட்டத்தில், கராச்சியில் ஈத்கா மைதானத்தில் வெளிர்நிற ஷெர்வானி அணிந்து ஜின்னா தொப்பி அணிந்து ஈத் பிரார்த்தனை செய்து, எல்லா முஸ்லீம்களோடும் வாழ்த்துக்களைப் பறிமாறிக்கொண்டு, பாகிஸ்தான் என்ற பரிசைக் கொடுத்ததற்காக அல்லாவுக்கு நன்றி செலுத்தினார்.

***

http://www.jang.com.pk/thenews/spedition/14aug2002/#5

Series Navigation

குதுபுதீன் அஜீஸ்

குதுபுதீன் அஜீஸ்