இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 29 2002

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue

மஞ்சுளா நவநீதன்


ஜெயலலிதா- உலக வங்கியின் அடிமையா ?

மீண்டும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் துயரமடையச் செய்யும் ஒரு முடிவை ஜெயலலிதா எடுத்திருக்கிறார். ரேஷன் அரிசியின் விலை இரு மடங்காகி விட்டது. காரணம் இப்படிப் பட்ட மானியங்களை நிறுத்தும்படி உலக வங்கி கேட்டுக் கொண்டது தானாம். காவிரி நீர் இல்லை. நெசவாளிகள் தெருவில். அரசுக் கல்லூரி மாணவர்கள் கட்டணம் உயரும் என்று அச்சம் கொண்டுள்ளார்கள். பஞ்ச நிலை உருவாகியுள்ளது. ஏழை மக்களின் அரிசிவிலையையும் ஏற்றினால் அவர்கள் எங்கே போவார்கள் ?

ஒரிஸ்ஸாவில் ஏற்கனவே தண்ணீர்க் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமெ ன்று உலகவங்கி அழுத்தம் கொடுத்தது. வெறும் கடன் தரும் ஓர் அமைப்பாக இல்லாமல், உள்நாட்டுக் கொள்கைகளில் தலையிட்டு, பிரசினைகளை உருவாக்குவதன் மூலம் , அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கான பிரசினையை உணராத ஓர் அமைப்பாக உலக வங்கி உருவாகி வருகிறது.

கடன் வாங்கி – அதுவும் உலக வங்கி போன்ற அமைப்புகளிடன் கடன் வாங்கி – நாம் முன்னேற முடியாது.

********

குஜராத் கோயிலில் கொலைகள்

காஷ்மீருக்கு வெளியே ஒரு கோயிலின் உள்ளே புகுந்து கொலைகள் நடந்தேறியுள்ளன. காஷ்மீரில் கோயில்கள் தாக்கப் படுவது வழக்கமான விஷயமாகிவிட்டது. சோனியா காந்தியும், அத்வானி போன்ற தலைவர்களும் உடனடியாய்ப் போய்ப் பார்த்தது பலனளிக்கக் கூடும். இதற்கு எதிர்வினை, எதிர்வினைக்கு எதிர்வினை என்று இந்தப் போக்கு வளராமல் இருக்க வேண்டும். ஏற்கனவே விஸ்வ இந்து பரிஷத் திருப்பூரில் தன் வெறியாட்டத்தைத் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானின் கை இந்தத் தாக்குதலில் உள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. இது உண்மையானால் இது தொடராமல் இருக்க இந்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பது கேள்வி.

*********

வெளிநாட்டுச் செலாவணி – 60 பில்லியன் டாலர்கள்

வெளிநாட்டுச் செலாவணி இந்தியாவின் கையிருப்பு 60 பில்லியன் டாலர்களை எட்டியிருக்கிறது. இதுவரையிலான கையிருப்புகளில் இது தான் அதிகபட்சமானது. இந்தக் கையிருப்பு இரண்டு பகுதிகளை உடையது. ஒன்று வெளிநாட்டு இந்தியர்கள் செலுத்தும் அன்னிய நாணய முதலீடு. இரண்டாவது பகுதி ஏற்றுமதியினால் அடையப் படும் அன்னியச் செலாவணி. முதல் பகுதி இந்தியாவின் ‘நம்பகத் தன்மையாலும் ‘ இரண்டாவது பகுதி இந்தியாவின் தொழில் முனைவர்கள் மற்றும் தொழிலாளர்களாலும் உருவாவது.

இரண்டாவது பகுதியைப் பற்றித்தான் அதிகம் பேச வேண்டும். வளர்ந்த நாட்டின் தொழிலாளியின் உழைப்புக்குப் பெறும் ஊதியத்தில் மிகச் சொற்பமே வளரும் நாடுகளில் உள்ள உழைப்பாளி பெறுகிறான். இந்தச் சமச்சீரற்ற தன்மையைத் தொடர்ந்து தக்க வைக்கும்படி தான் உலக வர்த்தகமும் செயல்படுகிறது. எனவே இந்த அன்னியச் செலாவணி இருப்பை எப்படி இந்தியா பயன் படுத்தப் போகிறது என்பதில் தான் அதன் பயன் இருக்க முடியும். மீண்டும் இது யுத்த தளவாடங்கள் வாங்கச் செலவு செய்யப் பட்டால் , இந்தக் கையிருப்பு மிக விரைவாக வளர்ந்த நாடுகளையே மீண்டும் சென்றடைய வழி வகுக்கும். ஏற்கனவே பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளேர் தில்லி வருகை தந்து யுத்த தளவாடங்களை விற்பதற்கு அடிகோலிவிட்டுப் போயிருக்கிறார்.

எனவே இந்தச் செலாவணிக் கையிருப்பு இரண்டு வழிகளில் பயன்படுத்தப் படவேண்டும். ஒன்று : இந்திய அடிப்படைக் கல்வி எல்லோருக்கும் அடையுமாறும், உயர்கல்வியின் பண அடிப்படையை நீக்கி பெரும்பாலோர் உயர் கல்வி மிகச் சொற்பச் செலவில் பெறுவதற்கு வழை வகுக்க வேண்டும். இன்னொன்று , உயர் தொழில் நுட்பத் தொழிற்சாலைகள் தொடங்க வழிவகைகள் செய்ய வேண்டும். வெறும் சட்டை, துண்டு ஏற்றுமதி செய்வதென்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த சற்றும் உதவாது. ஆனால் அப்படிப் பட்ட தொலைநோக்கு யாருக்கும் இருப்பதாய்த் தெரியவில்லை.

*********

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 21 2002

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue

மஞ்சுளா நவநீதன்


காவிரி அனைத்துக் கட்சிக் கூட்டம்-தி மு கவின் தவறு

ஜெயலலிதா கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை தி மு க புறக்கணித்திருக்கிறது. ஜெயலலிதாவின் எதேச்சாதிகாரப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக என்று காரணம் சொல்லப் பட்டிருக்கிறது. ந்தக் காரணம் பொருத்தமானது தான் என்றாலும், காவிரிக் கூட்டத்தைப் புறக்கணிக்க இது ஒரு காரணமாய்ச் சொல்லப் பட்டிருப்பது தவறு. பொறுப்பற்ற செயல்.

ஜெயலலிதா மற்ற கட்சிகளை எதிர்க்கட்சி என்று மட்டும் பார்க்காமல் தமிழ் நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள அமைப்புகளாய்ப் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டின் நலம் என்று வரும்போது அவற்றைத் தோழமைக் கட்சிகளாய்க் காண வேண்டும்.

காவிரிப் பிரசினையைப் பொறுத்தவரையில் தமிழ் நாட்டின் எல்லாக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் செயல்படுவதான ஒரு தோற்றம் இருந்தால் தான் தமிழ் நாட்டின் அரசுக்கு வெளியே மதிப்பு இருக்கும். இங்கே நடக்கும் அடிதடிகள் வரம்பு மீறியவை மட்டுமல்ல அநாகரிகமானதும் கூட. அதில்லாமல் புதிய தமிழகம் போன்ற கட்சிகளையும் அழைக்கவில்லை.

தி மு க தமிழ் நாட்டின் நலனைக் கருதியேனும் கட்சிக் குழாயடிச் சண்டைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இனி வரும் கூட்டங்களில் கலந்து கொள்வது நல்லது.

********

காஷ்மீர் தேர்தல்கள்

காஷ்மீர் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. காஷ்மீர் மக்களின் தேர்வு வெளியில் தெரியக் கூடாது என்று பயங்கரவாதிகள் எடுத்த முயற்சிகளால் நிகழ்ந்த கொடூரங்களையும் தாண்டி தம்முடைய தேர்வைத் தெரிவிக்க காஷ்மீர மக்கள் முன்வந்தது பாராட்டத்தக்கது. இனியேனும் பாகிஸ்தான் தன் விஷக்கரங்களை காஷ்மீர் பக்கம் நீட்டாமல் இருக்க வேண்டும்.

ஆங்காங்கே சில குளறுபடிகள் இருப்பினும், திருப்திகரமான முறையில் தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையமும், தேர்தலில் பங்கு பெற்ற காஷ்மீர் மக்களும் பாராட்டத்தக்கவர்களே.

********

இந்திய தேர்தலும் ஜனநாயகமும்

இந்தியாவின் ஜனநாயகம் பற்றி வெளியுலகிலும் சரி நம் அருமை அறிவு ஜீவிகளிடையேயும் சரி சரியான பாராட்டுணர்வோ, அதன் இருப்பு எப்படி இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காப்பாற்றுவதிலும் அதிகாரப் பகிர்வையும் பரவலையும் முன்னெடுத்துச் செல்வதிலும் பெரும் பங்கு வகித்திருக்கிறது என்ற உணர்வோ இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டமானது. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு எல்லோருக்கும் வாக்குரிமை என்ற கருத்தாக்கம் சட்டபூர்வமாய் உறுதி செய்யப் பட்டது. இது எவ்வளவு புரட்சிகரமானது, எளிமையான இந்தக் கருத்து கூட சுற்றிலும் உள்ள நாடுகளில் இல்லை என்பது யாருக்கும் நினைவில் வருவதில்லை. 1965 வரையில் கூட இன்று ஜனநாயகம் பற்றி வாய் கிழியப் பேசும் அமெரிக்காவில் கறுப்பர்கள் சம உரிமை , சமமாய் வெள்ளையர்களுடன் பொது வாழ்வில் பங்கு பெறுதல் நடைமுறைக்கு வரவில்லை. அதுவும் பல போராட்டங்களுக்குப் பின்னால் தான் சாத்தியமாயிற்று. ஆனால் நேரு, காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் வழி காட்டுதலில் எந்தச் சிக்கலும் இல்லாமல் எந்த மறுப்பும் இல்லாமல் இது சட்டமாயிற்று.

இதற்கு நடைமுறையில் பல தடைகள் உள்ளன என்பதும் உண்மைதான். கீரிப்பட்டி பாப்பாபட்டி போன்ற பகுதிகளில் தேர்தல்களில் தலித்கள் நிற்க முடியாமல் சமூகத் தடைகள் ஏற்படுவதே இந்த சட்ட பூர்வமான ஆக்கங்கள் எப்படி சமூகச் சிந்தனையைப் புரட்டிவிடாமல் இருக்கின்றன என்பதன் உதாரணங்கள். ஆனால் இவை சட்டபூர்வமாய் எதிர்கொள்ளக் கூடிய வழிமுறைகள் இருப்பதே பாதுகாப்பு.

***

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்