இந்த வாரம் இப்படி – ஜூலை 7, 2002 (திருச்சி பஸ், காவிரி,வைகோ, ஆப்கானிஸ்தான் கல்யாணம்)

This entry is part [part not set] of 22 in the series 20020707_Issue

மஞ்சுளா நவநீதன்


பஸ் பயணம்

திருச்சியில் அரசுப்பேருந்து இருக்கிறது. தனியார் பேருந்தும் இருக்கிறது. தனியார் பேருந்தில் எல்லாம் ஒழுங்காக இருக்கிறது. அரசுப்பேருந்தில் எல்லாம் கண்றாவியாக இருக்கிறது. இருப்பினும் அரசுப்பேருந்து நஷ்டத்தில் இயங்குகிறது எனச் சொல்கிறார்கள். ஒரே ஒரு பஸ் ஓட்டும் ஒரு பஸ் முதலாளி மூன்று வீடு வாங்குகிறார். அதிமுகவின் தொழில்சங்கத்தில் இருக்கும் நபரைக் கேட்டால், நாங்கள் தனியார் பேருந்து போகாத இடத்துக்கெல்லாம் போகிறோமே, என்று சொல்கிறார். அந்த ரூட்டுகளை முதலில் தனியாரிடம் கொடுத்துப்பாருங்களேன் என்று சொன்னேன். ஆளைக்காணோம். என் சாதாரண புத்திக்கு எங்கோ ஊழல் நடக்கிறது என்று தெரிகிறது. மெத்தப்படித்த மேதாவிகளான சப்பைக்கட்டு கம்யூனிஸ்டுகளுக்குத் தான் இதில் தொழிலாளர் புரட்சி தெரிகிறது. எனக்குப் புரட்டுதான் தெரிகிறது.

எனக்கே ஒரு குறிப்பு: பிறகு விரிவாக இது பற்றி எழுத வேண்டும்.

***

காவிரியில் தண்ணீர் இல்லையா ?

வடக்கே பீகாரில் கங்கை நதி பெருக்கெடுத்து ஓடி சுமார் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீருக்குள். பல பாதுகாப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டும், இதுவரை 20க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள்.

காவிரியின் நீர் சேர்க்கும் பகுதிகளில் சரியாக மழை பெய்யாததால், ஹேமவதி, ஹாரங்கி போன்ற அணைகளில் தண்ணீர் இல்லை என கர்னாடகம் கூறியிருக்கிறது. (இந்த அணைகள் ஒப்பந்தத்துக்குப் புறம்பாகக் கட்டப்பட்டவை என நெடுமாறன் கூறுகிறார் தன்னுடைய புத்தகத்தில். அதே போல இந்த அணைகள் யார் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது கட்டப்பட்டவை என அறிந்தால் பலருக்கு அதிர்ச்சி வரலாம்)

கங்கை காவிரி இணைப்புத்திட்டம் இன்றைய இந்தியாவின் தேவை. அது ஒரு புறம் வெள்ளத்தையும், மறுபுறம் பஞ்சத்தையும் குறைக்கும் ஒரே வேளையில். இல்லையேல், வெறும் பிராந்தியச் சண்டைகளில் மூழ்கி, வெட்டி அரசியல் பேசி அழிவோம்.

***

போடோ சட்டம் வரும்போது, பலரும் எதிர்த்த முதல் காரணம், இது அதிகாரத்தில் உள்ளவர்களின் கையில் எதிர்க்கட்சியினரை துன்புறுத்தப் பயன்படுத்தப்படும் என்பதுதான். அப்படியெல்லாம் நடக்க விடமாட்டோம் என மத்திய அரசு பேசி, வைகோ ஆதரித்து, சட்டம் நிறைவேறியது.

இது இப்போது வைகோவுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும் சூழ்நிலை.

***

ஆஃப்கானிஸ்தான கல்யாணத்தில் அமெரிக்கா குண்டுவீச்சு; ஆப்கானிஸ்தானத்தில் துணை ஜனாதிபதி படுகொலை.

இன்னும் ரொம்ப காலத்துக்கு இது போன்ற விஷயங்களைக் கேட்டுக்கொண்டிருப்போம். தாலிபானும் சாகவில்லை, இன்னும் இதர உதிரிகளும் சாகவில்லை என்பதையும், இன்னும் ரொம்பகாலத்துக்கு, ஆப்கானிஸ்தானத்து கல்யாணக்கும்பல்கள் மீது அமெரிக்கா போடும் குண்டுகளையும், ஆப்கானிஸ்தானத்து உள்நாட்டுக்கலவர அடிதடிகளையும் கேட்டுக்கொண்டிருப்போம்.

ஆப்கானிஸ்தானியர்கள் இரண்டு உலக சக்திகளை தோல்வியுறச் செய்தவர்கள் எனப் பெருமைப் பட்டுக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். (இங்கிலாந்த்து, சோவியத் யூனியன்). அமெரிக்கா உள்ளே வரும்போது, அடுத்து தோல்வியுறப்போவது அமெரிக்கா எனப்பேசியது தாலிபான். வெட்டி பந்தாவில் அடுத்தவர்கள் இவர்களை உபயோகப்படுத்திக்கொண்டதில் மீந்தது இந்த வெட்டிப்பந்தாவும், சிதிலமாகிக் கிடக்கும் சாதாரண மக்களின் வாழ்க்கையும் தான்.

ஒரு சோம்பேறியான மாலை நேரத்து தேனீர் பேச்சு என்பது பொய்யாய் பழங்கதையாய் மெல்லப்போனது.

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்