பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் – இஸ்ரேல் பற்றி ஜனவரி 31, 1970இல் எழுதியது

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue


மத்தியக்கிழக்கில் நடந்துவரும் அறிவிக்கப்படாத போரின் கடைசிப்பகுதி, மிகவும் மோசமான தவறின் அடிப்ப்டையில் நடந்து வருகிறது. எகிப்திய பிரதேசங்களின் உள்ளே ஆழமாக நடந்துவரும் குண்டுவீச்சுகளால் சாதாரண மக்கள் சரணடைந்துவிட மாட்டார்கள், மேலாக, எதிர்க்கும் வைராக்கியம்தான் உறுதிப்படும். இதுதான் எல்லா வான் வழி குண்டுவீச்சுக்களுக்கும் கிடைத்த பாடம். பல வருடங்களாக வியத்நாமிய மக்கள் அமெரிக்காவின் குண்டுவீச்சுக்களை தாங்கிக்கொண்டாலும், சரணடையாமல், மேலும் அதிகமான எதிரி விமானங்களைத்தான் சுட்டு வீழ்த்தினார்கள். 1940இல் என்னுடைய நாட்டு மக்கள் ஹிட்லரின் குண்டு வீச்சுக்களை, ஒற்றுமையோடும் வைராக்கியத்தோடும் எதிர்கொண்டார்கள். இந்த காரணத்தினாலேயே, இஸ்ரேலின் தாக்குதல்கள் அதன் முக்கிய நோக்கத்தை (சரணடைவின் எதிர்பார்ப்பை- மொ பெ) தோற்கடிக்கும். ஆனால் அதே நேரத்தில், இந்தத் தாக்குதல்களை உலகம் முழுவதும் தீவிரமாகக் கண்டிக்க வேண்டும்.

மத்தியக்கிழக்குச் சிக்கல் வளர்ந்த முறைகள் ஆபத்தானவை. அவை நமக்கெல்லாம் ஒரு பாடம். சென்ற 20 வருடங்களில் இஸ்ரேல் தன்னை போர்த்தடவாளங்களால் விஸ்தரித்துக்கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் தன்னை விஸ்தரிக்கும்போது, அது ‘பகுத்தறிவுக்கு ‘ அழைப்பு விடுத்தும், ‘பேச்சுவார்த்தைகள் ‘ மூலம் தீர்க்கலாம் என்றும் கூறி வந்துள்ளது. இது ஏகாதிபத்திய சக்தியின் வழக்கமான பாணி. ஏற்கெனவே போர் வலிமையால் அபகரித்ததை உறுதிப்படுத்திக்கொள்ள பேச்சு வார்த்தையை நாடுவது. ஒவ்வொரு புதிய ஆக்கிரமிப்பும், புதிய பேச்சு வார்த்தைகளுக்கு அடித்தளமாக, போர் வலிமைமீது உட்கார்ந்து கொண்டு, வாருங்கள் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று அழைப்பு விடுப்பது. , இப்படிப்பட்ட அழைப்பு, இதுவரை நடந்த ஆக்கிரமிப்புகளின் அநீதியை உதாசீனம் செய்து வந்திருக்கிறது. இஸ்ரேல் செய்திருக்கும் ஆக்கிரமிப்பும் தாக்குதலும் கண்டிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்க எந்த வித உரிமையும் இல்லை என்பதால் மட்டுமல்ல : ஒவ்வொரு ஆக்கிரமிப்பும், எந்த அளவு ஆக்கிரமிப்பை உலகம் பொறுத்துக் கொள்ளும் என்று ஆழம் பார்க்கும் சோதனை முயற்சி என்பதால்,

சமீபத்தில் வாஷிங்டன் பத்திரிக்கையாளரான ஐ.எஃப். ஸ்டோன் அவர்கள் பாலஸ்தீனத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட நூற்றாயிரக்கணக்கான அகதிகளை ‘உலக யூத மக்களின் கழுத்தில் தொங்கும் பாறாங்கல் ‘ என்று குறிப்பிட்டார். பெரும்பாலான அகதிகள் இன்று 30 வருடங்களாக சொந்த இடம் மறந்து, தற்காலிக இடங்களில் ஆபத்தான வாழ்க்கையை வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். தங்களது நாடு இன்னொரு மக்களுக்கு சொந்த நாடாக , தொடர்பே இல்லாமல் மற்றொரு நாட்டால் தாரை வார்க்கப்பட்டதுதான் பாலஸ்தீனர்களின் சோகக்கதை. இதன் விளைவு பல லட்சக்கணக்கான மக்கள் நிரந்தரமாக வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு புதிய ஆக்கிரமிப்பும் இந்த அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இன்னும் எவ்வளவு நாள் இப்படிப்பட்ட கொடூரத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது ? அகதிகள் தங்களது தாய்நாட்டுக்குத் திரும்பும் உரிமை நிச்சயமாக அவர்களுக்கு இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவான விஷயம். இவர்களுக்கு அப்படிப்பட்ட உரிமையை மறுப்பதுதான் இந்த தொடரும் பிரச்னையின் ஊற்றுக்கண். உலகத்தின் எந்த மக்களும் தங்களது நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்படுவதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மற்றவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளாத ஒரு தண்டனையை பாலஸ்தீன மக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோருவது எப்படி நியாயமாக இருக்க முடியும் ? மத்தியக்கிழக்கில் ஒரு உண்மையான தீர்வு வர வேண்டுமென்றால், வெளியேற்றப்பட்ட அகதிகள் தங்கள் இடங்களுக்குச் செல்வதற்கு நிரந்தர அனுமதி வேண்டும் என்பதுதான் அதன் அடிப்படையாக இருக்க வேண்டும்.

நாஜிகளால் யூதர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதால் நாம் இஸ்ரேலுக்கு பரிந்து பேச வேண்டும் என்று நம்மிடம் அடிக்கடிச் சொல்லி வருகிறார்கள். இந்த காரணத்தால் இன்னும் ஒரு துன்புறுத்தலை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று ஒரு காரணத்தையும் இந்த அறிவுரையில் என்னால் பார்க்க முடியவில்லை. இப்போது இஸ்ரேல் செய்வது நிச்சயம் மன்னிக்க முடியாதது. கடந்த காலத்தின் கொடுமைகளின் காரணமாக நிகழ்காலத்தின் கொடுமைகளை நியாயப்படுத்த முடியாது. இது குரூரமான போலித்தனம். இஸ்ரேலின் நடத்தையால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் அகதிகளாக்கப் பட்டது மட்டுமல்ல, அராபிய நாடுகளில் ராணுவ ஆட்சி தொடர்வதற்கான காரணமாய் இது இருப்பது மட்டுமல்ல, காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் வளர்ச்சித் திட்டங்களுக்குச் செலவிடாமல் , வறுமை ஒழிப்புக்குச் செலவிடாமல், ராணுவக் கட்டமைப்புக்குச் செலவிடச் சபிக்கப்பட்டு விடுகிறார்கள்.

மத்தியகிழக்குப் பகுதியில் ஏதும் உடன்படிக்கை ஏற்பட்டால், அதன் அடிப்படைகள் எதிர்காலப் பிரசினைக்கும் வழி வகுக்காமல் இருக்க வேண்டும் என்பது நோக்கமாய் இருக்க வேண்டும். சூன் 1967-இல் இஸ்ரேல் ஆக்கிரமித்த எல்லாப் பகுதிகளிலிருந்தும் வெளியேற வேண்டும் என்பது முதல் படியாய் இருக்க வேண்டும். நெடுங்காலமாய் துயருற்ற மத்திய கிழக்குப் பகுதி மக்களுக்கு நீதி கிடைக்க உலகமுழுவதிலும் இயக்கம் ஏற்படவேண்டியது அவசியம்.

*******

Series Navigation

செய்தி

செய்தி