ஒரு பேனா முனை (துன்ப்)உறுத்துகிறது

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue

பொன் முத்துக்குமார்


திரையுலகில் தற்போது பரபரபாகப் பேசப்படும் கமல்-சரிகா மணமுறிவு விஷயம் பற்றி யாவரும் அறிந்திருப்பீர்கள். அது தொடர்பான பத்திரிகை மனப்போக்கு பற்றின ஒரு எண்ணப்பரிமாறல்.

தேசத்தையே சமீபத்தில் உலுக்கி எடுத்த குஜராத் கலவரம் பற்றி யிரண்டு பக்கத்திலும் மேற்படி விஷயத்தை எட்டு பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறது குமுதம் இதழ். அதுகுறித்து கேள்வி கேட்ட வாசகருக்கு அம்பலம் இணைய இதழில் ‘நான் ஆசிரியராக இருந்தால் அந்த டைவர்ஸ் விஷயத்தை நீக்கியிருப்பேன். நடிகர்களின் நடிப்புத்தான் முக்கியமே தவிர அவர்கள் சொந்த வாழ்க்கை அல்ல. Invasion of Privacy என்பது மூன்றாந்தர ஜர்னலிஸம். இதை தமிழ்நாட்டில் எல்லா பத்திரிகைகளும் பயன்படுத்துவது சோகமே (விகடன் தவிர) ‘ என்று சுஜாதா பதிலளிக்க, அதுகுறித்து கேள்வி கேட்ட வாசகருக்கு ‘சுஜாதா-வுக்கு எப்போதுமே நகைச்சுவை உணர்ச்சி அதிகம் ‘ என்று அரசு பதில்களில் நக்கலடித்திருக்கிறது குமுதம்.

தெரிந்தோ தெரியாமலோ குமுதம் வெளியிட்டுவிட்ட இரண்டு செய்திகளை மட்டும் குமுதத்திற்கு நினைவூட்டிவிட்டு குமுதத்தை விட்டு வெளியே போகலாம். முதல் வாரத்தில் கமல்-சரிகா உறவு முறிகிறது ‘ என்று முரசறிவித்து, அடுத்த இதழில் கமலின் முதல் மனைவி வாணி கணபதி அவர்களின் பேட்டி என்று தொடர்ந்த குமுதம் இந்த இதழில் சிம்ரனின் தங்கை மோனலின் பேட்டி வெளியிட்டிருக்கிறது. அதில் வெகு அருமையாய் குமுதத்திற்காகவே சொல்லப்பட்ட பதிலாய் நச்சென்று ஒரு பதில் சொல்லியிருக்கிறார் மோனல்.

கே : ‘சிம்ரனுடன் சண்டையா ? ‘ (என்னவோ இது இஸ்ரேல்-பாலஸ்தீன் ப்ரச்சினை போலவும், அவர் ஆமென்று சொல்லியிருந்தால் சவுதி இளவரசர் போல மத்தியஸ்தம் செய்ய கிளம்பிவிட தயாராயிருப்பது போலவும்)

ப : ‘……இது எங்களுடைய பர்சனல் லைஃப். இதில் யாரும் நுழையவும் முடியாது. நுழையவும் கூடாது ‘

நகைச்சுவை உணர்ச்சி என்று நக்கலடிக்கும் குமுதம் தனது 10-03-2002 தேதியிட்ட ‘குமுதம் ரிப்போர்ட்டர் ‘ இதழை சற்றே புரட்டி நடிகை மும்தாஜின் பேட்டி க்குமுறலை படிக்க வேண்டுகிறேன்.

இப்படிப்பட்ட மூன்றாந்தர ஜர்னலிசம் தன் எல்லை மீறும்போது என்ன ஆகிறது என்பதற்கும் மேற்படி மும்தாஜின் பேட்டி பக்கத்தில் உள்ள ‘ஒழியுமா கவர் ? ‘ என்ற பகுதியில் இருக்கிறது.

இப்படிப்பட்ட கவர் வாங்குவதற்கு காரணம் கூறிய ஒரு நிருபர் ‘நான் வாங்கும் இரண்டாயிரம் சம்பளத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும் ? பத்திரிகைகாரங்க நியாயமா சம்பளம் குடுத்தா நா ஏன் கவர் வாங்க போறேன் ? ‘ என்கிறார்.

ஆக, நடிக நடிகைகளை அணுகும்போது சுய மரியாதையோடும், நிருபர் பணியில் கம்பீரமோடும் இயங்க வாய்ப்பளிக்காத பத்திரிகைகள்தான், (குமுதம் இதழின் சினிமா நிருபரின் சம்பள விபரம் தெரியாததால் அதை ஒரேயடியாக இந்த பட்டியலில் சேர்க்க விரும்பவில்லை) தாம் வெளியிடும் செய்திகளால் சம்பந்தப்பட்ட நடிகையை தற்கொலைக்குக்கூட துரத்தும் இது போன்ற குரூரங்களுக்கு காரணமாகிவிடுகின்றன. (மூன்றாந்தர ஜர்னலிஸம் என்று கண்டனம் தெரிவிக்கும்போது மட்டும் நக்கலடிக்க முன்வருவது எப்படி ?)

கிசுகிசு என்பதே திரை கலைஞர்களின் அந்தரத்தை அம்பலமாக்கும் அசிங்கம்தான். ‘எப்போது நடிக நடிகையர் பொது வாழ்க்கைக்கு வந்து விட்டார்களோ அப்போதே நடிக-நடிகையரின் அந்தரங்கத்தைக்கூட அறிந்துகொள்வதற்கு ரசிகனுக்கு முழு உரிமை உண்டு ‘ என்று ரசிகன் தலைக்கு கிரீடமும், ‘அவர்களைப்பற்றி என்னவும் எழுத எங்களுக்கு முழு உரிமை உண்டு ‘ என்று தமக்குத்தாமே உரிமமும் வழங்கிக்கொண்ட பத்திரிகைகளின் அகம்பாவமே இந்த கிசுகிசு மனப்பான்மை.

இந்த லட்சணத்தில், ‘தம்மைப்பற்றி கிசுகிசு எழுதக்கேட்டு சிலர் தூண்டிவிடுவது உண்டு ‘, ‘வெளியான கிசுகிசு பற்றி எங்களிடமே யார் என்றெல்லாம் நடிக நடிகையர் விசாரித்ததுண்டு ‘ என்றெல்லாம் சில பத்திரிகைகள் சப்பை கட்டு கட்டுவது நல்ல வேடிக்கை. ஒரு பத்திரிகை கேள்வி-பதிலில், ‘இப்படிப்பட்ட கிசுகிசு எழுதும் எங்கள் நிருபரின் ‘புத்திசாலித்தனத் ‘தை சம்பந்த்தப்பட்ட நடிக நடிகையர் ஆச்சர்யப்பட்டுப்போய் மெச்சி மகிழ்வர் ‘ என்று சொன்னதுதான் உச்சகட்ட தமாஷ் (நல்ல வேளை, ‘உச்சி முகர்ந்து ஆசீர்வதிப்பர் ‘ என்றெல்லாம் சொல்லவில்லை)

ஒரு வாதத்திற்காக, அப்படியே வைத்துக்கொள்வோம். அவர்கள் பொது வாழ்க்கைக்கு வந்திருப்பது ஒரு கலைஞனாக அங்கீகாரம் தேடி. அதை வழங்குவது அல்லது மறுப்பது என்ற அளவில் மட்டும் நமது பொறுப்பு நின்றிருக்க வேண்டும். அதை விட்டு அவர்களது அந்தரங்கத்தை முகர்ந்து பார்ப்பது வக்கிர மனப்பான்மையல்லவா ? நடிக நடிகையரின் நடிப்புத்திறமையை விமர்சித்து சாட்டை சொடுக்கலாம்; அதை விட்டு அவர்கள் படுக்கை அறையிலா நுழைவது ?

‘வாசகர்கள் விரும்புகிறார்கள் ‘ என்ற விவாதம் வரலாம். மஞ்சள் பத்திரிகையில் பச்சை பச்சையாய் வரும் நீல விஷயங்களை விரும்பும் கணக்கற்ற வாசகர்களும் இருக்கிறார்களே ! அந்த விஷயங்களையும் இவர்கள் தங்கள் பத்திரிகையில் அச்சேற்றலாமே ? ‘வாசகர்கள் விருப்பத்தை ‘ நிறைவேற்றி ஜென்ம சாபல்யம் அடையலாமே ?

எந்த பத்திரிகையும் நடிக நடிகையரின் அந்தரங்கத்தை இனி எழுதப்போவதில்லை என்று உறுதி செய்துகொள்வதாக வைத்துக்கொள்வோம். (இந்த உடோபிய மனோபாவம் சற்று அதிகம்தான். மன்னிக்கவும்) அப்போது வாசகன் என்ன செய்வான் ? பத்திரிகை அலுவலகம் முன்பு தீக்குளிப்பானா ? அல்லது தாமே அப்படி ஒரு செய்தியை அச்சிட்டு படித்து மகிழ்வானா ?

வியாபாரப்பத்திரிகைகளிடம் இதுபோன்ற நளினத்தை எதிர்பார்த்தல் தவறுதான். ஆனாலும் ஒரு எல்லை உண்டல்லவா ? இப்படித்தான் நடிகை ரோஜாவிற்கு எய்ட்ஸ் என்று ஏதோ ஒரு பத்திரிகை உலக புண்ணியவான் கிளப்பிவிட்டான். சில வருடங்களுக்குமுன் பற்ற வைக்கப்பட்ட இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர் இன்றைய நிலையில் உருக்குலைந்தல்லவா போயிருக்க வேண்டும் ?

‘எப்போது பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டார்களோ அப்போதே இதெல்லாம் சகஜம் என்று தயாராக இருக்க வேண்டும். சகித்துக்கொள்ளத்தான் வேண்டும் ‘ என்பது ‘கக்கத்தில் இடுக்கின துண்டும், நெஞ்சோடு கட்டின கைகளும், தாழ்த்தின தலையுமாய் தம் முன் நிற்கவேண்டும் ‘ என்று எதிர்பார்க்கும் அருவருக்கத்தக்க ஆண்டை மனப்பான்மை.

சரி, அங்ஙனமாயின் பத்திரிகைகாரர்களும் பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள்தானே ? அவர்களது அந்தரங்கத்தை கடை விரித்து விலை பேசினால் இளித்துக்கொண்டே ‘அப்படியே ஐயா ! ‘ என்றா ஒப்புதல் தருவார்கள் ? ‘வார இறுதி மலரில் புளுகு மூட்டையை அவிழ்த்துவிடும் திரை கன்னையா, ‘தன் பத்திரிகையில் தாறுமாறாக எழுதிவிடுவேன் ‘ என்று மிரட்டியே பல்வேறு துணை நடிகைகளையும், புதுமுக நடிகைகளையும் பணிய வைத்து தன் ஆசைக்கு இணங்க வைத்துவிடுகிறாராம். தற்போது கொடிகட்டிப் பறக்கும் ஓரெழுத்து நடிகையும் ஆரம்ப காலத்தில் இவர் வலைக்கு தப்பவில்லை ‘ என்று கிசு கிசு எழுத தாங்குவார்களா ?

பாலகுமாரன் எழுதின சிறுகதைவரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

‘தன் அந்தரங்கத்தின் மென்மையும் மேன்மையும் தெரியாதவனே அடுத்தவன் அந்தரங்கத்தைப்பற்றி பேசுகிறான் ‘ (அந்தரங்கம்)

Series Navigation

பொன் முத்துக்குமார்

பொன் முத்துக்குமார்