இந்த வாரம் இப்படி – டிசம்பர் 31, 2001

This entry is part [part not set] of 21 in the series 20011229_Issue

மஞ்சுளா நவநீதன்


பைத்தியக் காரத்தனத்திற்கு பதில் : அதைவிடப் பைத்தியக்காரத்தனம்

கண்ணகி சிலை உடைத்தது பைத்தியக்காரத்தனம் என்றால் அதைவிடப் பைத்தியக்காரத்தனம் தமிழகமெங்கும் 100 கண்ணகி சிலைகளை நிறுவச் ‘சான்றோர் பேரவை ‘ முடிவு செய்திருப்பது. தமக்குத்தாமே சான்றோர்களாய்ப் பெயர் சூட்டிக் கொண்ட இவர்களை அடியொட்டி நானும் ‘துணைக்கோள் பயணிகள் பேரவை ‘ ஒன்று ஆரம்பிக்கலாம் என்று யோசனை.

கண்ணகி சிலை அதே இடத்தில் நிறுவப்படவேண்டும் , இந்தப் பிரசினை இதோடு மூடப்பட வேண்டும் என்பது தான் கோரிக்கையாய் இருக்க முடியும்.

*********

போர் மேகங்கள் : இந்தியா பாகிஸ்தான்

போர் மூள்வது என்பது அரசாளுவோருக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம். இதைச் சாக்கிட்டாவது மக்கள் தம் எதிர்ப்புணர்வை மூட்டை கட்டிப் போட்டுவிட்டு , அரசாங்கத்தின் ஆதரவாளர்களாய் மாறுவார்கள். விரைவில் வரும் உத்தரப் பிரதேசத் தேர்தலுக்கும் , போர் அச்சுறுத்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று நம்புவோம்.

பாகிஸ்தானுக்குப் போர் என்பது மக்களை மட்டுமல்ல, ராணுவத்தையும் திசை திருப்ப உதவும். ஆஃப்கானிஸ்தானில் தாலிபனை உருவாக்கிக் கட்டுப்படுத்திய பாகிஸ்தான் ராணுவம் இப்போது மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது. பாகிஸ்தானே முதன்மையானது என்று முஷரஃப் அறிவித்து அவருடைய அமெரிக்க ஆதரவிற்கு நியாயம் தேட முயன்றாலும், முஸ்லீம் தீவிரத்தலைவர்கள் இதற்கு உடன்படவில்லை. இது மட்டுமல்லாமல் , ஆஃப்கானிஸ்தானிலிருந்து வரும் பாகிஸ்தான்-தாலிபன் ஆட்களுக்கு பாகிஸ்தானில் இடமளிக்க, ராணுவத்தை இந்திய எல்லைக்கு அனுப்புவது என்பது சரியான காரணமாய் இருக்கும்.

ஏற்கனவே அமெரிக்கா செய்தது போல , பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க இந்தியா முன்வர வேண்டும். இது பெரும்போர் ஏற்படுவதைத் தவிர்க்கும்.

***********

ஜெயலலிதா : இன்னொரு வழக்கில் விடுதலை

நிலக்கரி இறக்குமதி வழக்கில் அரசு சரியாகக் குற்றத்தை நிரூபணம் செய்யவில்லை என்று ஜெயலலிதா விடுதலை பெற்றிருக்கிறார். இது ஜெயலலிதாவிற்கு மிகத் தெம்பு தரும் ஒரு விஷயம். இது எதிர்பார்த்ததே. அரசு வழக்கறிஞர், ஜெயலலிதா மீது குற்றச்சாட்டை நிருபிக்கப் பாடுபடுவார் என்று எதிர்பார்க்க முடியுமா ?

லோக் பால், லோக் ஆயுக்த சட்டம் இயற்றி தனிப்பட்ட , சுதந்திரமான ஓர் அமைப்பின் கீழ் பொதுவாழ்வில் பதவி வகிப்பவர்கள் மீது போடப்படும் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்ற விவாதம் பல ஆண்டுகளாய் நடந்து வருகிறது. ஆனால் இதன் கதி என்னாயிற்று என்று தெரியவில்லை.

**********

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி : டிசம்பர் 21 2001

This entry is part [part not set] of 25 in the series 20011222_Issue

மஞ்சுளா நவநீதன்


கண்ணகி சிலை உடைப்பு

சில விஷயங்கள் நடக்கும் வரை அப்படி நடக்கலாம் என்று யாரும் சொன்னால் கூட நம்பமுடியாது. கண்ணகி சிலை திட்டமிட்டு அகற்றப் பட்டிருப்பதாய்த் தான் இது வரை வந்திருக்கும் எல்லா செய்திகளும் உணர்த்துகின்றன. சோதிடர் சொன்னார் என்பதற்காக ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் இது அகற்றப் பட்டிருக்கிறது என்பது வதந்தி போல பரவி வருகிறது என்றாலும் நம்பத் தகுந்த வதந்தி. தன் பெயர் ஆங்கிலத்தில் எப்படி எழுதப் படவேண்டும் என்று மாற்றியமைத்துக் கொண்டவர் ஜெயலலிதா. சோதிடர்களிடமும், குறி சொல்பவர்களிடமும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்று பல வருடங்கள் முன்பே அவர் மாநிலங்களவை உறுப்பினராய் இருந்த போது குஷ்வந்த் சிங் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அதன் எல்லை பொதுச் சொத்தை சேதப்படுத்தும் அளவிற்குப் போகும் என்பது எல்லோரையும் எரிச்சல் படுத்த வேண்டும்.

கண்ணகி என்ற கதாபாத்திரம் ஒருவிதத்தில் தமிழ்ப் பெண்களின் குறியீடு என்றும் சொல்லலாம். இன்று பெண்ணியக்குரலாகவும், அநீதிக்கு எதிரான குரலாகவும் கண்ணகியின் கதை இனம் காணப் படுகிறது.. அரசனுக்கு எதிரான ஒரு குரலின் பதிவு என்ற முறையிலும் கூட பல விதங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்தது சிலப்பதிகாரமும் அதன் நாயகி கண்ணகியும்.

சிலை என்ற முறையில் கண்ணகியின் சிலை சிறப்பான வடிப்பு என்று கூற முடியாது. சற்றே விஜயகுமாரியை நினைவுபடுத்தும் சினிமாத்தனம் அந்தச் சிலையில் உண்டு என்பது ஓர் உறுத்தல். எனினும் தமிழ்க் கலாசாரத்தின் ஓர் அடையாளம் என்ற அளவில் சிலை நிறுவுதல் செய்யப் பட்டது. அது கருணாநிதியையும், அவர் எழுதிய பூம்புகாரையும் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதும் ஒரு வேளை இது இடிக்கப்படக் காரணமாய் இருக்கலாம். அதே இடத்தில் சிலை நிறுவப்படவேண்டும் என்று போராட்டம் நடக்கவிருப்பதாய் அறிகிறேன்.

இந்தச் சிலை விவகாரம் கடும் விலைவாசி உயர்வு, அரசு ஊழியர்களுக்கு வேலைப் பாதுகாப்பு பற்றிய அச்சம் இவற்றையெல்லாம் பின் தள்ளிவிட்டதைப் பார்க்கிறோம். ஒரு வேளை இதுவும் ஜெயலலிதாவின் ஒரு நோக்கமோ என்னவோ ? உக்கிரம் கொண்டுள்ள பெண்சிலை வாஸ்துப்படி சரியல்ல என்றால், கிராமங்களில் கோவில்களில் உள்ள துர்க்கையம்மன், மாரியம்மன் கோவில் சிலைகளை ஜெயலலிதா என்ன செய்வார் ?

***********

ஜெயலலிதாவிற்கு எதிராக யாரை நிறுத்துவது ?

ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட தயாராகிவருகிறார். எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்தலாமா என்று யோசித்து வருகின்றன.

வை கோபால்சாமி, ப சிதம்பரம், கோவிந்தவாசன் போன்றோர் பெயர்களை நான் சிபாரிசு செய்வேன். ஆனால் ஒன்றுபட்ட ஒரு அணி உருவாகும் என்றால், தி மு க தவிர்த்த மற்ற கட்சி வேட்பாளருக்கு தி மு க ஆதரவு அ:ளிக்குமா என்பது சந்தேகமே. அதில்லாமல், நிச்சயம் சாதி பற்றியெல்லாம் யோசிப்பார்கள். ஆனால் உண்மையில் ஜெயலலிதாவின் பணபலத்திற்கும், ஆள்பலத்திற்கும் எதிராக நிஜமான ஒர் ஆள் நிறுத்தப்பட வேண்டும் என்றால் நான் முன்னே தந்த பட்டியல் தான் சரி. யார் காதிலாவது விழுகிறதா ?

**********

நாடாளுமன்றத் தாக்குதல் : ஏன் இன்னும் தயக்கம் ?

பாகிஸ்தான் இந்தியாவிடம் நிரூபணம் கேட்கிறது. தாவூத் இப்ராகிம் என்ற பயங்கரவாதி எப்படி பாகிஸ்தானில் வெளிப்படையாகவே ஆடம்பர வாழ்க்கை நடத்துகிறான் என்று பாகிஸ்தான் பத்திரிகைகளே செய்திகள் வெளியிட்டுள்ளன.

செப்டம்பர்11 தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கு உதவி புரிவதற்கு முன்பு, பாகிஸ்தான் நிரூபணம் கேட்டதா ? இப்போது தாலிபன் பிடியிலிருந்து மக்கள் விடுவிக்கப் பட்டபின்பு தெருக்களில் இசை ஒலிக்கிறது. மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் கிட்டத்தட்ட தாலிபன் ஆட்சியின் கீழ் இருந்த ஆஃப்கானிஸ்தான் போன்றது தான். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒழுங்கான தேர்தல்கள் கூட நடந்ததில்லை. பாகிஸ்தாவில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழிப்பதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதும் இந்திய அரசின் கடமை. முன்பு பங்களா தேஷில் இருந்தது போலவே காஷ்மீரி மொழிக்கு உரிய இடம் , பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கிடையாது. இந்த விடுதலைப் போர் நடந்தால் நிச்சயம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவை வாழ்த்துவார்கள்.

இப்படி இந்தியாவுடன் பிரசினையை ஏற்படுத்திவிட்டு சீனாவிற்கு முஷரஃப் போவதும் தற்செயலானதல்ல. ஆஃப்கானிஸ்தானின் முக்கிய தாலிபன் தலைவர்களை ஏற்கனவே தப்ப விட்டாயிற்று. அதில்லாமல், பெரும்பாலான தாலிபன் ஆட்கள் தப்பி பாகிஸ்தானுக்கு வருகிறார்கள். ஆஃப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானை வெறுக்கிறார்கள். தாலிபன் அரசின் அத்தனை அலங்கோலங்களுக்கும் பாகிஸ்தான் காரணம் என்று அவர்கள் அறிவார்கள். இப்படி தப்பி வந்த பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் தள்ளத்தான் பாகிஸ்தான் முயற்சி செய்யும்.. இனியும் சரியானபடி இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பிரசினைகளும், வெடிகுண்டுகளும் தொடரத்தான் செய்யும்.

********

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – டிசம்பர் 17, 2001

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue

மஞ்சுளா நவநீதன்


நாடாளுமன்றத்தில் பயங்கர வாதத் தாக்குதல்

முன்பு காஷ்மீர் சட்டசபை . இப்போது நாடாளுமன்றம். யார் இதன் பின்னணியில் இருப்பார்கள் என்று ஊகிப்பதும் ஊர்ஜிதம் செய்து கொள்வதும் சுலபமான வேலை தான். ஆஃப்கானிஸ்தானின் இலட்சியத்தை நிறைவேற்ற தன்னுடைய உதவி தேவை என்பதால், அமெரிக்கா தன் அத்துமீறல்களைப் பொறுத்துக் கொள்ளும் என்பதும், அதனால் இந்தியா மீதான வெறிச் செயல்களை அச்சமின்றித் தொடரலாம் என்பதும் பாகிஸ்தான் ராணுவத்தின் கணக்கு.

பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் பலரை, இந்தியாவிற்கு அனுப்பிக் கலவரம் செய்யச் செய்வதாகவும், இப்படி அனுப்பப்படும் கைதியின் குடும்பத்தினருக்கு உதவித் தொகை வழங்குவதாகவும் ஒரு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இவர்களில் பலர் கொடூரமான குற்றங்களைப் புரிந்தவர்கள். மனித உயிரின் மதிப்பை அறியாதவர்கள். பாகிஸ்தான் ராணுவமும் உளவுத் துறையும் தான் இந்தத் தாக்குதலின் பின்னணியில் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்.

சட்டசபையையும், நாடாளுமன்றத்தையும் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கக் காரணம் இல்லாமல் இல்லை. இந்தியாவின் ஜனநாயகத்தின் குறியீடுகளாய் விளங்கும் இவை பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்களுக்கு ஜீரணிக்க முடியாத விஷயம். ஆஃப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுக்க என்ன காரணங்கள் உண்டோ அதை விடவும் அதிகமான காரணங்கள் இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்க உண்டு. அமைதி வழி, பேச்சு வார்த்தை என்று உபதேசிப்பதில் பயனில்லை. ஓர் அரசாங்கம் அதன் குடிமக்களையும், ஜன நாயகத்தையும் காப்பற்ற வேண்டிய கடமை கொண்டது. லஷ்கர் ஏ தொபா போன்ற அமைப்புகள் பாகிஸ்தானின் நேரடி பாதுகாப்பிலும், போஷணையிலும் உள்ளவை. அவற்றைத் தடை செய்யவோ , அவற்றின் செயல்பாடுகளை ஒடுக்கவோ பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்யாது. இனியும் இந்தியா சும்மா இருந்தால் இந்திய அரசின் மீதும் , பாதுகாப்பு சக்திகள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து போவார்கள்.

இதில்லாமல் இந்திய அரசே இதைச் செய்தது என்று விஷமத்தனமான விஷப் பிரசாரத்திலும் பாகிஸ்தான் ஈடுபடுகிறது. செப்டம்பர் 11 அமெரிக்காவில் நடந்த படுகொலையின் போதும் கிட்டத்தட்ட இதே போன்று ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டது. யூதர்கள் பெருமளவு அலுவலகம் செல்லவில்லை என்று பொய்ப் பிரசாரம் செய்து இந்தப் படுகொலைகளின் பொறுப்பை அவர்கள் மீது சுமத்தும் அசிங்கமான ஒரு பிரசாரத்தை பாகிஸ்தானில் சிலர் மேற்கொண்டார்கள்.

பிரச்சாரம் இரண்டாம் பட்சமாகவும், பேச்சு மூன்றாம் பட்சமாகவும், செயல் முதல் பட்சமாகவும் இருக்க வேண்டும்.

************

உலகத் தமிழர் பேரமைப்பு – ஒற்றுமையா பிரிவினையா ?

உலகத் தமிழர் பேரமைப்பு என்ற ஓர் அமைப்பு பழ நெடுமாறனைத் தலைவராய்க் கொண்டு துவங்கப்பட்டுள்ளது என்று அறிகிறேன். தமிழரின் தேசிய உடையை வடிவமைக்கவும் ஒரு குழு நிர்ணயித்திருக்கிறார்கள் என்று செய்தி வாசித்த போது சிரிப்புத் தான் வந்தது. இனிமேல் கால்சராய் அணிந்தவர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்லப் போகிறார்களா ? இப்படிப் பட்ட தமிழர் தலைவர்களிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்றியாக வேண்டும்.

எதற்காக இந்தப் பேரவை ? ஒரு சிலருக்குச் சில லெட்டர் பேட் பதவிகள் கிடைக்கும் என்பது தவிர வேறு என்ன பயன் விளையப் போகிறது ? மலேசியத் தமிழர்கள் எதிர் கொள்ளும் பிரசினையும், ஈழத் தமிழர்கள் எதிர் கொள்ளும் பிரசினையும், அடிப்படையிலேயே வெவ்வேறு விதமானவை. மொழி ஒன்றை மட்டுமே வைத்து ஒற்றுமையும், ஒரு அடையாளமும் தோன்ற முடியும் என்றால், பங்களாதேஷ்- மேற்கு வங்கம் எப்போதோ ஒன்று பட்டிருக்க வேண்டும். ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, இங்கிலாந்து , கனடா என்று எல்லா நாடுகளும் ஒன்றுபட்டிருக்க வேண்டும். ஸ்பானிஷ் மொழி பேசும் தென் அமெரிக்க நாடுகள் எல்லாம் ஒன்றாகியிருக்க வேண்டும். தமிழ் நாட்டில் ஜனநாயக உரிமைகள் பற்றிப் பேசாமல், சாதியம் பற்றிப் பேசாமல், பொருளாதார உயர்வினைப் பற்றிப் பேசாமல், கல்விப் பரப்புதலைப் பற்றிப் பேசாமல், தமிழனின் அன்றாட பிரசினைகளைப் பேசாமல் உலகளாவிய ஓர் அமைப்பை ஏற்படுத்துவது மனித சக்தியின் விரயம் தான்.

இப்படிப் பட்ட அமைப்புகளால் அந்தந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களை மற்ற இனத்தவர் ஐயத்துடனும் ,அச்சத்துடனும் பார்க்க நேரிடும் என்பதைத் தவிர இதனால் எந்த பயனும் விளையும் என்று தோன்றவில்லை

********

மாணவர்கள் மீது தாக்குதல்

தமிழ் நாடு மெல்ல போலீஸ் அரசாக மாறி வருகிறது என்பதற்கு இது இன்னொரு உதாரணம். கருணாநிதி காலத்தில் தாமிரவருணி போல இப்போது இது. சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது நடந்த தாக்குதல்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

*********

பாஜகவுடன் அ தி மு க உறவா ?

பா ஜ க-வை மெள்ள ஆதரவினால் அரவணைத்துக் கொள்ளும் நிலையில் அதிமுக உள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு ஆதரவு மட்டுமல்லாமல், வேறு சில முறைகளிலும் பா ஜ க -வுடன் நெருக்கம் கொள்ளத் தீர்மானித்திருக்கிறது போலிருக்கிறது. பா ஜ க பற்றிய விமர்சனங்கள் அறவே அ தி மு க-விலிருந்து வரவில்லை. சென்ற தேர்தலில் சோ அதிமுகவை ஆதரித்த போதே இதற்கான விதைகள் தூவப்பட்டுவிட்டன என்று எண்ணுகிறேன். காங்கிரஸ் தி மு க பக்கம் நகர்வதும், அதிமுக பா ஜ கவை நோக்கிச் செல்வதும் நிகழக்கூடிய ஒன்று தான். ஆனால் எந்த ஒரு தேசீயக் கட்சியும், எந்த அளவுக்கு ஜெயலலிதா தலைமை கொண்ட அதிமுகவை நம்பும் என்பது கேள்விக்குறிதான்.

*********

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (கள், விலைவாசி, புதிய அரசு, வரலாறு)

This entry is part [part not set] of 19 in the series 20011210_Issue

மஞ்சுளா நவநீதன்


மலிவு விலை சாராயம் மட்டும் – கள்ளுக் கடை இல்லை

கள்ளுக் கடை திறப்பது பற்றி இப்போது எதுவும் முடிவு செய்யவில்லை எறும் , ஆனால் மலிவு விலை சாராயம் விற்பனை உண்டு என்றும் அறிவித்திருக்கிறார்கள். மீண்டும் சாராய மொத்த வியாபாரிகளுக்கு லாபம். சிறு தொழில் கள்ளுக் கடைக்கு வஞ்சனை.

****

விலைவாசி உயர்வு : கொஞ்சம் போல குறைப்பு

அறிவிக்கப் பட்ட விலை வாசி உயர்வில் ஓரளவு குறைத்து அறிக்கை வெளீ வந்திருக்கிறது. இதற்கும் , ஜெயலலிதா வழக்கில் விடுதலை பெற்றதற்கும் நிச்சயம் தொடர்பு உண்டு என்று தோன்றுகிறது. ஜெயலலிதா எம் எல் ஏ ஆவதற்கு ஆயத்தங்கள் நடக்கிற இந்த நேரத்தில் விலை வாசி உயர்வு என்பது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு ஆயுதமாய்ப் பயன் படக் கூடாது என்பதற்காக நடந்த நாடகம் இது என்பது தெளிவு. ஜெயலலிதா முதல்வர் ஆகிவிட்டால் நிச்சயம் இது மீண்டும் உருவெடுக்கெளம் என்று நம்பலாம். பஸ் கட்டணத்தினை உயர்த்தி, பல பஸ் தடங்களை தனியார் வசம் ஒப்படைப்பதின் பின்னணி என்னவெண்ரு யரும் மிக எளிதாக ஊகித்துக் கொள்ள முடியும்.

*********

ஆப்கானிஸ்தானில் புதிய அரசு

ஆஃப்கானிஸ்தானில் அமைந்திருக்கும் புதிய அரசிற்கு இந்தியா நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆஃப்கானிஸ்தானை முன்பு போருக்குப் பின்பு மேல் நாடுகள் கைவிட்டது போல் இப்போது செய்யலாகாது என்று ஒரு கருத்து உருவாகிவருகிறது. இந்தக் ‘கைவிடுதல் ‘ என்றால் என்னவென்றே எனக்குப் புரியவில்லை. வெளிநாடு, சில குறிக்கோள்களுக்காக விடுதலை இயக்கங்களில் உதவுகின்றன. அப்படி உதவி அளித்ததற்குப் பின்பு விடுதலை பெற்ற பின்பும் அங்கே வெளி நாடு இருப்பது உள்ளூர் மக்களின் வெறுப்பைத் தான் சம்பாதிக்குமே தவிர , அன்பைச் சம்பாதிக்காது. ஒரு நாட்டின் உயர்வும் தாழ்வும் அந்தந்த நாட்டில் தான் அடிப்படிஅயில் உருவாக வேண்டும். அதற்கு நல்வழி காட்டும் தலைவர்கள் உலக அளவில் அறிவும் தொலை நோக்கும் கொண்டவர்களாய் அமைய வேண்டும். துரதிர்ஷ்டமாக ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் , சாதியம் போன்ற ஒரு இனக்குழு மனப் பான்மை, ஆஃப்கானிஸ்தானின் குடிமக்கள் நாம் என்ற உணர்வைக் குலைத்து வந்திருக்கிறது. பாகிஸ்தானின் குறுக்கீட்டால் தாலிபன் போன்ற ஒரு அநாகரிகக் கும்பல் எழுந்து வளர்ந்து வந்திருக்கிறது. வெளிநாடுகளின் குறுக்கீடு அந்தந்த வெளி நாடுகளின் நலன் கருதித் தான் அமையும்.

இனியேனும் ஆஃப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும். பாகிஸ்தானின் ராணுவம் தன் குறுக்கீட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆஃப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் கானூனி தெரிவித்துள்ளார்.

*********

வரலாறு (மீண்டும் ?) திருத்தப் படுகிறது

வரலாறு என்பதே வெற்றி பெற்றவர்களின் வரலாறு தான் என்று ஒரு கருத்து உண்டு.

காங்கிரஸின் கீழ் நேரு-காந்தி வரலாறாய் இருந்தது. நேதாஜியும் , காமராஜரும் , ராஜாஜியும் உரிய இடம் பெறவில்லை என்றும் சொல்ல வேண்டும். இடது சாரிகள் எழுதிய வரலாற்றில் பெரியார், அண்ணா போன்றோரின் பங்களிப்புகளும் சரியான முறையில் பதிவு செய்யப் படவில்லை. முகலாய ஆளுகையில் நிகழ்ந்த மத ரீதியான வன்முறைச் சம்பவங்கள் பொருளாதாரக் காரணம் என்று பூசி மெழுகப் பட்டதுண்டு. லெனினை வயதானவர் என்று சித்தரித்த ஒரு நாடகம் கொல்கத்தாவில் தடை செய்யப்படலாயிற்று.

இப்போதைக்கு பாரதீய ஜனதா கட்சி ‘வெற்றி ‘ பெற்ற கட்சி என்பதால் , இதன் பார்வையில் வரலாறு எழுதப் படுகிறது போலும். பிராமணர்கள் மாட்டுக் கறி தின்றார்களா இல்லையா ? குரு கோவிந்த சிங்கின் இடம் வரலாற்றில் என்ன ? – இதெல்லாம் கேள்விகள் . விடைகளில் இரு பகுதி உண்டு.

ஒன்று _ வெறுமே விவரங்கள். விவரங்கள் என்றால் , ஆமாம் மாடு சாப்பிட்டதுண்டு. ஆமாம், முஸ்லீம்களுக்கும் , சீக்கியர்களுக்கும் இடையில் போர்கள் – பலசமயம் பெரும் வன்முறையுடன் நடந்ததுண்டு.

இரண்டாவது அம்சம் : இந்த விவரங்கள் ‘தெரிவிக்கும் ‘ செய்திகள் . இந்த இரண்டாம் அம்சம் தான் பல நிலைகளில் வரலாற்றாசிரியர்களுக்குள் விவாதங்களைக் கிளப்பியுள்ளன. அன்றைய பிராமணர்கள் மாட்டுக் கறி சாப்பிட்டார்கள் என்பது இன்றைய நிலையில் எந்த விதத்திலும் யாரையும் பாதிக்காத விஷயம். சொல்லப் போனால் – மார்வின் ஹாரிஸ் திண்ணையில் எழுதியிருக்கும் கட்டுரைகளை அடியொற்றிப் பார்த்தால், — மாட்டு மாமிச உணவு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உழவு மாடுகளுக்கான ஒரு பஞ்சத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், அதனால் மறு விளிம்பிற்குச் சென்று மாடு புனிதமானது, மாடு சாப்பிடுவது பாவம் என்றும் விதி ஏற்பட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ‘உணவுச் சக்கரத்தில் ‘ மாட்டு மாமிசம் அடியோடு விலக்கப் படுவதும் பிரசினைகளை ஏற்படுத்தும் என்பதால் சில குறிப்பிட்ட வகுப்பினர்கள் சாப்பிடலாம் என்றும் பரிந்துரை நடந்திருக்கலாம்.

வரலாற்றை மறப்பவர்களும் , மறைப்பவர்களும் மீண்டும் அவல வரலாற்றை வாழ்ந்திட நேரும் என்பது நமக்கு உலக சரித்திரம் கற்பிக்கும் படிப்பினை. ஜெர்மனியில் யூதர்கள்-ஒருபாலினத்தார்-நாடோடிகள் மீது நடந்த தாக்குதலை மறுப்பது ஒரு தண்டனைக்குரிய குற்றமாய்க் கருதப் படுகிறது. வரலாறு பதிவு செய்யப் பட வேண்டும். அன்றைய வரலாற்றிற்கு இன்று பரிகாரம் தேடும் முட்டாள்தனத்தைத் தொடர்ந்து விமர்சித்து வருவதன் மூலம் தான் ஒரு அறிவுமிக்க தலைமுறை உருவாக முடியும்.

********

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (மலிவு சாராயம், விலைவாசி, பெனசீர், ஆஃப்கானிஸ்தான்)

This entry is part [part not set] of 20 in the series 20011202_Issue

மஞ்சுளா நவநீதன்


கள்ளுக் கடை – மலிவு விலை சாராயம்

கள்ளுக் கடை திறப்பும் , மலிவு விலை சாராயமும் விற்பனை செய்வதென்று தமிழக அரசு முடிவெடுத்திருப்பது பாராட்டப் பட வேண்டிய ஒன்று. முக்கியமாய்க் கள்ளுக் கட்டை திறப்பு. கள்ளுக் கடையும் , கஞ்சாவும் இயற்கை போதை வஸ்துக்கள் என்ற அளவிலும், விவசாயம் சார்ந்த பொருட்கள் என்ற முறையிலும் தடை செய்யப் பட வேண்டாதவை. சாராயம் போன்றவற்றிலிருந்து மக்களை விலக்கவும் இவை ஓரளவு உதவக் கூடும். இந்த முடிவை வரவேற்போம். இனியாவது விஷச் சாராயம் அருந்தி மரணம் பெறும் நிலை தமிழ் நாட்டில் வராது என்று நம்புவோம்.

****

விலைவாசி உயர்வு : கஜானா காலியா ? மூளை காலியா ?

எக்கச்சக்கமாய் விலைவாசி உயர்ந்திருக்கிறது. மக்கள் வேலைக்கோ, வருமானத்திற்கோ உத்தரவாதம் இல்லாத நிலையில் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவது மிக மன்னிக்க முடியாத குற்றம். இதனுடன் சேர்ந்தே பார்க்க வேண்டிய இன்னொரு அம்சம் அரசு வங்கிகளில் வைப்புகளின் வட்டி விகிதம் குறைப்பு. பல பணி ஓய்வு பெற்றவர்கள் வைப்பு நிதியின் வட்டியில் தான் தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். மாதச் சம்பளம் மிகக் குறைவாய் வாங்குபவர்கள் தம் வருமானத்தை ஏற்ற எந்த வழியும் இல்லாத போது, விலைவாசிகள் உயர்வதைக் கண்டு என்ன செய்ய முடியும் ? இது தான் உலக மயமாதலின் விளைவு என்றால் வேண்டாம் அந்த உலக மயமாதல்.

அரசின் கீழ் உள்ள பல அமைப்புகளில் சிறப்பாக வேலை நடைபெறவில்லை என்பது உண்மை தான். ஆனால் , அரசாங்கம் பெருமுதலீட்டில் ஈடுபட்டு ஒரு அமைப்பைக் கட்டி எழுப்பியபின்பு, தனியாருக்கோ அல்லது கூட்டுறவு அமைப்பிற்கோ விட்டு விட்டு வேறு பணியைத் தொடங்க வேண்டும். போக்குவரத்துத் துறையை முழுக்கவுமே தனியார் வசம் ஒப்புவிக்கலாம். ஆனால் பெரும் கம்பெனிகள் வசம் இல்லாமல், ஓட்டுனர் நடத்துனருக்கு மலிவு விலைக்கு பஸ்ஸையும், தடங்களையும் விற்பனை செய்யலாம்.

வழக்கம் போல முந்தைய ஆட்சியைக் குறை சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. முதல்வர் பன்னீர் செல்வமோ மூச்சு விடக் கூட அனுமதி பெற வேண்டிய நிலை. ஆட்சி செய்யவக்கில்லாதவர்கள் ராஜினாமா செய்து விட்டு, மறு தேர்தலுக்கு ஏற்பாடு செய்தபின்பு, வனவாசம் போகலாமே.

***********

பேநஸீர் புட்டோ – வரவேற்போம்

இந்தியாவிற்கு வந்து பேநஸீர் புட்டோ சில இடங்களில் பேசியிருக்கிறார். காஷ்மீரில் வெளிநாட்டுக் கொலைகாரர்கள் புரட்சி வேடம் போடுவது பற்றியும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

பாகிஸ்தானின் ராணுவம் வேட்டையாடிய பேநஸீர் புட்டோ அல்லது நவாஸ் ஷரீப் தொடர்ந்து பாகிஸ்தான் தலைமை பீடத்தில் இருந்திருந்தால் ஒரு வேளை இந்தியா-பாகிஸ்தான் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம். புட்டோ- ஷரீஃப் இருவருமே ஊழல் புரிந்திருக்கலாம். ஆனால் ஜனநாயக ரீதியாக – சட்ட ரீதியாக அவர்களை தண்டிக்க வேண்டும் . ஆனால் பாகிஸ்தான் ராணுவம் ஜன நாயகத்தைக் கண்டு தான் மிகவும் அஞ்சுகிறது அதனால் தான் மக்களிடையே ஆதரவு உள்ள இந்தத் தலைவர்களை பாகிஸ்தானிற்குள் வரவிடாமல் செய்கிறது. பாகிஸ்தான் மக்களின் முதல் எதிரி பாகிஸ்தான் ராணுவமே. பாகிஸ்தான் துண்டாடப் படவும், ஆஃப்கானிஸ்தானில் தாலிபன் உருவாகி வளரவும், காஷ்மீரின் பிணக்காட்டிற்கும் பாகிஸ்தான் ராணுவம் தான் காரணம். நவாஸ் ஷரீஃப் உறவினர்கள் பாகிஸ்தான் சமீபத்தில் வந்தது குறித்து பாகிஸ்தான் அரசு பயப் பட்டதற்கும் இதுவே காரணம்.

பாகிஸ்தானில் ஜனநாயகம் வரும் வரையில் பாகிஸ்தான்-இந்தியா உறவில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது.

*********

ஆஃப்கானிஸ்தானில் – இனி என்ன ?

ஒரு வழியாக ஆஃப்கானிஸ்தானில் கூட்டணி அரசு ஏற்படும் வாய்ப்புத் தெரிகிறது. துருக்கியில் தோன்றிய கமால் அதாதுர்க் போன்ற ஒரு பார்வையும் முதிர்ச்சியும் உள்ள தலைவர் ஆஃப்கானிஸ்தானில் இல்லை. ஆஃப்கானிஸ்தானில் உள்ள வெவ்வேறு இனக்குழுக்கள் இணைந்து பணியாற்றுவதும் சந்தேகம். ஆஃப்கானிஸ்தானில் ஜனநாயகம் வேரூன்ற உதவி செய்ய வேண்டுயது மேல் நாடுகளின் கடமை.

********

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்