அமெரிக்காவில் இந்தியர்

This entry is part [part not set] of 19 in the series 20011125_Issue

ஜவஹர சைதுல்லா


(அக்வெண்ட் இதழில் காப்பி ஆசிரியராக இருக்கிறார், ஜவஹர சைதுல்லா)

அமெரிக்காவில் இருக்கும் ஒரு இந்தியர், குறைந்தது ஒரு தடவையாவது கீழ்க்கண்ட கேள்விகளில் ஒன்றை எதிர்கொண்டிருப்பார்.

நீங்கள் பள்ளிக்கூடத்துக்கு யானையில் போவீர்களா ?

அங்கே நீங்கள் உண்மையிலேயே மிகவும் மிகவும் ஏழையாக இருந்தீர்களா ?

அங்கே எல்லோரும் மிகுந்த ஞானவான்களாக இருக்கிறீர்கள், இல்லை ?

நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால்,

ஆக நீங்கள் மிகவும் அடிமைத்தனப்பட்டு கொடுமைப்பட்டு இருந்தீர்களா ? அதாவது உங்கள் சகோதர்களை விட உங்களிடம் அதிகம் வேலை வாங்கினார்களா ?

அங்கே எல்லா மணப்பெண்களும் எரிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையா ?

இந்த அப்பா அம்மா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கு அர்ரேஞ்ச்ட் மேரேஜ் என்றால் என்ன ? அது எப்படி இருக்கும் ?

நீங்கள் சிரிக்கலாம், உதாசீனம் செய்யலாம், கேள்விகளுக்கு பதிலாக எதிர்த்துப் பேசலாம். அது உங்களது அப்போதைய மனநிலையைப் பொறுத்தது. சில விஷயங்கள் இந்தியாவில் இருப்பது உண்மைதான். ஆனால், அதையெல்லாம் தாண்டி நிறைய விஷயங்கள் இந்தியாவில் இருக்கின்றன. உண்மையென்னவென்றால், அமெரிக்காவில் சென்று தங்கும் பெரும்பாலான மக்கள், இந்தியாவின் மேல்தட்டிலிருந்து சென்றவர்கள். இது ஒரு நிச்சயமான உண்மை.

இந்தியாவைப் பற்றி அமெரிக்கப் பத்திரிக்கைகளில் கீழ்க்கண்டவாறு படிக்கலாம். ‘உலகத்தின் மிக அடித்தட்டு ஏழை நாடுகளில் ஒன்றான இந்தியா, சமீபத்தில் ஒரு சூப்பர் கணினி வாங்கியது ‘. செய்தியோடு கூடவே ‘இந்தியா உண்மையில் என்ன என்பதை மறந்துவிடாதே ‘ போன்ற ஒரு ஆசிரியர் குறிப்பு.

என்னுடைய அமெரிக்க நண்பர்களுக்கு என்னுடைய கோபத்தைப் புரிந்துகொள்ளாமல் ஆச்சரிய்ப்படுகிறார்கள். இந்தியாவில் அமெரிக்கா பற்றி ஒரு செய்தி வெளியிட்டால் அதில், ‘உலகத்திலேயே அதிக எண்ணிக்கையில் கல்யாணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள் நிறைந்த அமெரிக்கா (இதற்கு பதிலாக, அதிக அளவு பள்ளிக்கூட வன்முறை, துப்பாக்கி சாவுகள், போன்றவற்றை போட்டுக்கொள்ளலாம்) இன்று ஒரு துணைக்கோளை விண்வெளிக்கு ஏவியது ‘ என்று இருப்பது போன்றது என்று என்னுடைய நண்பர்களிடம் விளக்குகிறேன்.

இந்தியா, யானைகளின் நாடாகவும், பாம்புகள், நிர்வாணா, பெற்றோரால் நிச்சயிக்கப்படும் திருமணம் போன்ற கால வழக்கொழிந்த பழக்கவழக்கங்கலாலும், மணப்பெண்ணை எரிப்பது போன்றவைகளாலும், மாய உருவாக்கம் செய்யப்படுகிறது. இன்னும் பல வண்ணங்களும், கறுப்பும் வெள்ளையும் இல்லாத நிழல்வண்ணங்களாலும், இன்னும் பல லட்சக்கணக்கான விஷயங்களும் இல்லாத ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. ‘ஞானம் ‘ பெற மக்கள் போகும் இடமாகிறது. அதை விட பெரும்பாலான அமெரிக்க மக்கள் தங்களது வாழ்க்கையை ‘நன்றாகவே இருக்கிறது ‘ என்று உணர்வதற்காக கட்டமைக்கப்படுகிறது. (இந்தியாவில் இருக்கும் பசித்த நிர்வாணமான மக்களைப் பாருங்கள். என்னுடைய வாழ்க்கை ஒன்றும் மோசமாக இல்லை) என்னுடைய புறநகர் வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு மோசமில்லை. ‘எனக்கு செருப்பு இல்லை என்று வருந்தினேன், கால்கள் அற்ற ஒருவனைப் பார்க்கும் வரை ‘ போன்றதோர் வியாதி.

சமீபத்தில், எனக்கு இன்னும் இந்தக் கேள்விகளைப் பார்க்க பொறுமை போய்க்கொண்டிருக்கிறது. சின்ன பதில்கள், விளக்க உரை அல்ல, பதில் இந்தியாவை விட்டு விலகி வேறு விஷயம் பேசும்படியான பதில்கள். பெரும்பாலும் எனக்கு வெற்றிதான்.

எனக்கு வெற்றிகிடைக்காத இடம், இந்தியர்கள் கூடும் இடங்கள்தான். இவர்களது வழியில், இந்த இந்திய மக்கள் தங்களது கலாச்சாரத்தை ஒரு பாட்டிலில் போட்டு தங்களிடமே விற்றுக்கொள்ளவும், தங்கள் பிள்ளைகளிடம் விற்கவும், அமெரிக்க மையநீரோட்டத்தில் விற்கவும் முனைகிறார்கள். இவர்களுக்கு இந்தியா என்பது, ஒரு பாரம்பரிய நடனம், காட்டமான உணவு, தொலைதூர தாய்மொழி, தன் பிள்ளைகளின் பெயர், அவர்கள் பிறந்ததிலிருந்து நடக்கும் சடங்குகள். இவர்களைப் பொறுத்தவரை இந்தியா என்பது மாறாத மாறக்கூடாத நிலையான விஷயம். இந்தியர்கள் மாறுகிறார்கள் என்பதைக் கேட்டாலே இவர்களுக்குக் கோபம் வருகிறது.

‘என்னுடைய பெண் இந்தியாவில் இருக்கும் என் சகோதரனின் பெண்ணைவிட மிகவும் இந்தியன்.ஆமாம், என் பெண் பரத நாட்டியம் கற்றுக்கொள்கிறாள், இவளுக்கு நீளமான முடி இருக்கிறது. என் சகோதரனின் பெண்ணோ பாலே கற்றுக்கொள்கிறாள். அவளுக்கு குட்டை முடி ‘

‘ஆமாம் இந்தியாவில் 62 தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. ‘இன்னொருவர் தன் தலையை ஆட்டுகிறார், ‘நாங்கள் இந்தியாவில் இருக்கும் இந்தியர்களை விட சிறந்த இந்தியர்கள் ‘

‘இந்திய இந்தியர்கள் மிகவும் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்குகிறார்கள் ‘ என்று இன்னொருவர் அறிவிக்கிறார்.

எனக்கோ கத்த வேண்டும் போல இருக்கிறது. இந்தியர்களை விட இந்தியர்கள்!இவர்கள் ஞாபகத்தில் இருந்த இந்தியா போலவே வைத்துக்கொள்ள விழையும் இந்த மக்கள், தங்கள் குழந்தைகளையும், குழந்தைகளின் பிறப்பால் அவர்களல்லாத ஒரு நாட்டை தங்களதாக அடையாளப்படுத்திக்கொள்ள அந்த ஞாபகத்தோடு பிணைக்கிறார்கள்.

கத்துவதற்குப் பதிலாக என் உதடுகளைக் கடித்துக்கொண்டு கேட்கிறேன். தங்களது இந்தியத்தன்மையையும் தன் குழந்தைகளது இந்தியத்தன்மையையும் பராமரிக்க விரும்பும் இந்த ஆசையை உணர்கிறேன். அமெரிக்காவில் வாழ தேர்ந்தெடுத்துக்கொண்டும் அங்கு தன் குழந்தைகளை வளர்க்க தேர்ந்தெடுத்துக்கொண்டும் வாழும் போது, பல வருடங்களுக்கு முன்னர் தாங்கள் விட்டு வந்த இந்தியாவிலேயே வாழவும் விழைவதைப் பார்க்கிறேன். குழந்தைகள் பார்ப்பதோ, விடுமுறையின் போதும், கலப்பட பார்ட்டிகளில் சல்வார்கமீசுடன் பெண்கள் சமயலறையிலும் ஆண்கள் வாழும் அறையிலும் உட்கார்ந்து பேசுவதையும், சாப்பாட்டு மேஜையில் பேப் பூரியும், பிஸ்ஸாவும் போட்டி போடுவதையும் பார்க்கும்போதும் தான்.

இவர்கள் தக்கவைக்க நினைக்கும் இந்தியா நிலையானது, மாறாதது, தேங்கிய கலாச்சாரத்தைக் கொண்டது. உண்மை இந்தியாவோ, இயங்குவது, சிக்கலானது, பரந்தது, தினமும் மாறுவது. இவர்கள் தங்களது ஞாபகத்து இந்தியாவை பாட்டிலில் போட்டு மதத்தின் மூலமாகவும், இசை, நடனத்தின் மூலமாகவும் தக்க வைக்க நினைக்கிறார்கள். இந்த முயற்சியில், வளரும், உயிருள்ள ஒரு கலாச்சாரத்தின் ஆன்மாவைக் கொன்று விடுகிறார்கள்.

இங்கு வாழும் எல்லோரும், நமது வேர்கள் இந்தியாவில் இருக்கின்றன என்பதையும், நம் எதிர்காலம் அமெரிக்காவில் இருக்கிறது என்பதையும் உணர வேண்டிய நேரம் வந்து விட்டது. நமது கலாச்சார பாரம்பரியத்திடமிருந்து நம் சக்தியையும் ஆன்மாவையும் பெற்றுக்கொள்ளும்போதே, நாம் திரிசங்கு சொர்க்கமான நடன பாடங்களிலும் வறுத்த பூரிகளிலும் ஞாயிறு பார்ட்டிகளிலும் இல்லை என்பதையும் உணர வேண்டும்.

நாம் இங்கே இருக்கிறோம். இந்தியா நம்மை கண்டுகொள்ளாமல் தான் பாட்டுக்கு வளர்கிறது. சில விஷயங்கள் சிறப்பானவை. சில சிறப்பானவை அல்ல. அதுதான் வாழ்க்கையின் உண்மை. அதுவே எல்லா இடத்திலும் உண்மை இல்லையா ? இந்தியா, அமெரிக்கா, குட்டேமாலா, எந்த இடமாக இருந்தாலும். விடிவெள்ளி நேரம்போல இங்கும் அங்குமில்லாத நேரத்தில் மாட்டிக்கொண்ட நிலையாக உண்மையான இந்தியாவை நம் ஞாபகத்து இந்தியாவோடு தொடர்ந்து ஒப்பிட்டுக்கொண்டே இருப்பது அபத்தமானது.

அமெரிக்கர்கள் மாயதந்திர இந்தியாவையும், வினோத கதைகளையும் தேடுகிறார்கள். இந்தியர்களோ, தேடக்கிடைக்காத, பரிசுத்தமான ஒரு இறந்தகாலத்தைத் தேடுகிறார்கள். எனக்கு இரண்டுமே அயர்வு தருகின்றன. ஏனெனில், இந்த இரண்டு வேறுபட்ட குழுக்களும் அடிப்படையில் ஒன்றானவை என்பதால்தான். அமெரிக்க அமெரிக்கன், இந்திய இந்தியன். இருவருமே சேர்ந்து உரையாடவேண்டும்.

**

Series Navigation

ஜவஹர சைதுல்லா

ஜவஹர சைதுல்லா