இந்த வாரம் இப்படி – அக்டோபர் 27 , 2001

This entry is part [part not set] of 16 in the series 20011029_Issue

மஞ்சுளா நவநீதன்


இந்தியாவின் துணைக்கோள்

ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து துணைக் கோள் வானில் வெற்றிகரமாய்ச் செலுத்தப் பட்டிருக்கிறது. ஒரு மீட்டர் அளவு நுணுக்கமாக இது பார்வைகளைச் செலுத்த வல்லது என்று சொல்கிறார்கள். முன்னர் வானில் நிலைநிறுத்திய துணைக்கோள்கள் ஐந்தரை மீட்டர் அளவிற்கு நுணுக்கம் கொண்டது. இது யுத்தத்திற்கான கருவி அல்ல என்று அரசாங்கம் தெரிவித்தாலும் கூட இது போர்க்காலத்தின் போதும் உளவு சாதனமாய்ப் பயன் படும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் முந்திய துணைக்கோள்களின் மூலமாக கார்கிலில் நடந்த பாகிஸ்தானிய ராணுவ ஊடுருவலைச் சரியான சமயத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் உண்மை தான். கண்டுபிடிக்கவே முடியவில்லையா அல்லது, கண்டுபிடித்திருந்தும் ராணுவ அதிகாரிகளின் அலட்சியமும் மெத்தனமும் சேர்ந்து சரியான முறையில், சரியான நேரத்தில் உளவுத்துறை செயல்படாமல் செய்து விட்டதா என்பது சிதம்பர ரகசியம்.

சிறந்த கருவிகள் மட்டும் போதாது, அந்தக் கருவிகளைச் சரியான முறையில் பயன்படுத்துகிற மனிதர்கள் வேண்டும். மனித வள வளர்ச்சி என்பது இந்திய விஞ்ஞான உலகில் மிகக் குறைவாகவே உள்ளது. ஒரு கஸ்தூரி ரங்கனும், அப்துல் கலாமும் எல்லா விஞ்ஞானிகளின் பிரதி நிதியல்ல. விஞ்ஞான மனித வளத்தை மேம்படுத்துவதில் அரசு செலுத்தும் அக்கறை இன்னமும் சிறப்பாய்ச் செயல் பட வேண்டும்.

இந்தத் துணைக்கோளின் வெற்றிக்குப் பின் உள்ள விஞ்ஞானிகளை வாழ்த்துவோம்.

*********

முதல்வர் பன்னீர் செல்வத்துடன் ஸ்டாலின் சந்திப்பு.

ஸ்டாலின் மற்றும் பிற தி மு க மேயர்கள் முதல்வர் பன்னீர் செல்வத்தைச் சந்திருத்திருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு ஒரு சடங்காக இருப்பினும், சில நேரங்களில் சடங்குகளும் கூட ஒரு முக்கியத்துவம் பெற்று விடுகின்றன. ஜெயலலிதா முதல்வரான பின்பு ஸ்டாலின் ஜெயலலிதாவைச் சென்று சந்திக்காதது பற்றி ஜெயலலிதா சட்டசபையிலேயே குறைப்பட்டுக் கொண்டார். ஆனால் அன்று நிலைமை வேறு சட்ட ரீதியாய் ஜெயலலிதா நியமனமே கோணல் என்று வாதப் பிரதிவாதங்கள் எழுந்த நேரம். இரு கட்சிகளுக்கிடையே பெரும் சண்டை சச்சரவும், பெருத்த குரோதமும் வெளிப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. இப்போது சற்றே இது அமைதி பூண்டிருக்கிறது. கருணாநிதியும் இனி தேர்தல் காலப் பகைமையை மறந்து விட்டு மக்கள் நலனுக்காக இரண்டு கட்சிகளும் பாடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததன் மூலம் தான் முதிர்ச்சியுற்ற தலைவர் என்பதை நிரூபித்திருக்கிறார். இனி இந்த பரஸ்பர ஒத்துழைப்பைச் செயல் படுத்த வேண்டிய கடமை அ தி மு க விற்கு இருக்கிறது.

********

போப்பாண்டவர் மன்னிப்புக் கேட்கிறார்

போப்பாண்டவர் சீனாவிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். காரணம் : சீனாவின் மீது காலனியாதிக்கம் இருந்த காலகட்டத்தில் மிகுந்த உக்கிரமாக கத்தோலிக்க மதம் பரப்பப் பட்டது. சீனா மீது ஜப்பானியப் படையெடுப்பின் போதும் ஜப்பானை கத்தோலிக்க சர்ச் ஆதரித்தது. சீனாவின் மக்களின் நம்பிக்கைகளை எள்ளி நகையாடியது மட்டுமின்றி காலனியாதிக்கத்துடன் நெருக்கமான உறவு பூண்டு மதப் பரப்புதலைச் செய்தது. சமீபத்தில் கத்தோலிக்க சர்ச் சீனாவில் இப்படிப் பட்ட மதப் பரப்புதலில் ஈடுபட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட ஆட்களை புனிதர்கள் ஆக்கி அறிவிப்பு வெளியிட்டது சீனாவின் அரசாங்கத்தையும் , சீனாவின் அறிஞர்களையும் கோபமுறச் செய்தது. இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்த அவர்கள் வாதங்களை ஏற்றுக்கொண்டு கத்தோலிக்க சர்ச் இப்போது மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இது போன்றே கோவாவிலும் வேறு சில இடங்களிலும் , இந்தியாவில் அக்கிரமங்கள் நடந்ததுண்டு. கோவாவில் விசாரணை என்ற பெயரில் (Inquisition) கத்தோலிக்க மத நம்பிக்கை அற்றவர்கள் மீது நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கும் தெய்வ நிந்தனைக்காரர்கள் என்று குற்றம் சாட்டி கத்தோலிக்க சர்ச் கொன்றது வரலாறு. இது குறித்து இடதுசாரிகளோ, இந்திய அரசாங்கமோ மூச்சு விடுவதில்லை.

அநீதிக்குக் காரணமானவர்கள் அந்த அநீதிக்குப் பொறுப்பேற்பது என்பது ஓர் ஆரோக்கியமான மரபு. அந்த விதத்தில் கத்தோலிக்க சர்ச்சின் இந்த மன்னிப்புக் கேட்கும் செயல் வரவேற்கத் தக்கது. இந்த செயலுக்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள் . கத்தோலிக்க மதம் பிரசாரம் செய்ய சீனாவில் அனுமதி இல்லை. இந்த மன்னிப்புக் கோரலுக்குப் பிறகு வாடிகனுக்கும், சீனாவிற்கும் உறவு சீர்பட்டு கத்தோலிக்கப் பிரசாரகர்களை அனுப்ப அனுமதி கிடைக்கும் என்று போப்பாண்டவர் எதிர் பார்க்கிறார்.

*****

ஆஃப்கானிஸ்தானத்தில் போர் : இன்னும் எவ்வளவு நாள் ?

சீக்கிரமாய் இந்தப் போர் முடிவு பெறும் என்று எதிர்பார்த்தவர்கள் பலரும் தாலிபன் இவ்வளவு உறுதியுடன் போராடும் என்று எதிர் பார்க்கவில்லை. தாலிபன் ஏற்கனவே தனக்கு இருந்த எதிர்ப்பாளர்களையெல்லாம் கொன்று குவித்துள்ளது. ஈராக்- அமெரிக்க யுத்தம் போல இரு அரசாங்கங்களுக்கு இடையிலான போர் என்றால் யுத்தத்தில் ஈடுபட்ட படையினரை எதிர்த்துப் போரிடுவது சுலபமாய் இருக்கும். ஆனால் இங்கு போர்க்களம் என்றோ , யுத்தத் தயாரிப்பு என்றோ எதுவும் இல்லை. வான் வழிப்போரில் அமெரிக்கா வெற்றி பெற்றாலும், தரைவழிப் போரில் அமெரிக்கா வெற்றி பெறுவது சுலபமில்லை. அமெரிக்கத் தரைப்படை, வியத்நாமிற்குப் பிறகு , வேறெந்த நாட்டிலும் தீவிரமான போரில் ஈடுபடவில்லை என்பது தான் உண்மை. தாலிபன் அரசிற்கு, அமெரிக்க நண்பன் வேடமிட்டபடியே, பாகிஸ்தான் மறைமுக ஆதரவு அளித்து வருகிறது. தாலிபனின் தீவிரம் குறைந்த தலைமையை, தாலிபனின் வீழ்ச்சிக்குப் பிறகு அரியணையில் அமர்த்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியிருப்பதும் கூட இப்படிப் பட்ட ஒரு செயல் தான். எனவே எப்படி அமெரிக்கா தாலிபன் கையில் உள்ள நாட்டைக் கைப்பற்றும் என்பதும், எப்படிப் பட்ட தலைமை வரும் என்பதும் கேள்விக்குறி. இந்தப் போர் மிக நீண்ட போராய்த் தான் இருக்கும்.

**************

பயங்கர வாதத் தடுப்புச் சட்டம் – புதிய மொந்தையில் பழைய கள்

பயங்கர வாதத் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் இன்னொரு சட்டம் இயற்றி அதன் கீழ் பயங்கர வாதிகளைப் பிடித்து விடலாம் என்பது கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போலத்தான். முன்பிருந்த தடா சட்டத்தின் கீழ் 75000 பேருக்கும் மேலாகக் கைது செய்யப் பட்டார்கள். ஆனால் 1500 பேரின் மீது கூடக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யமுடியவில்லை. குற்றம் என்னவென்றே தெரியாமல் மக்கள் சிறையில் அடைபட்டிருந்தது தான் மிச்சம். முன்பு தடா கொண்டுவந்த காங்கிரஸ் இப்போது பா ஜ கவின் சட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. இது சரியான போலித்தனம். அரசியல் காரணமே தவிர காங்கிரஸ் திடாரென்று மனித உரிமைகளை மதிக்கும் கட்சியாய் மாறிவிடவில்லை. இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் பெறாது என்று தெரிகிறது.

இருக்கிற சட்டங்களை ஒழுங்காகப் பின்பற்றினாலே போதும், யாரையும் விசாரணையின்றி உள்ளே அடைக்க வேண்டியதில்லை. காவல் துறை புலனாய்வுத் துறையை வலுப் படுத்தாமல் சும்மாவேனும் சந்தேகத்தில் மக்களை உள்ளே தள்ளுவதற்குத் தான் இப்படிப் பட்ட சிறப்புச் சட்டங்கள் பயன் படும். அந்த நேரத்து ஆளும் கட்சிக்கு வேண்டாதவர்களையும் எதிர்கட்சிக்காரர்களையும் அச்சுறுத்துவதற்கும், பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பதற்குமே இந்த சட்டம் பயன் படும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

********

மார்க்ஸிஸ்ட் கட்சி – காங்கிரஸ் ஏன் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸை எதிர்க்கின்றன ?

ஜெயலலிதா என்ற தண்டனை பெற்ற புனிதர் என்றால் இந்த இரு கட்சிகளும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும். ஆனால் ஜார்ஜ் பாவம். மார்க்ஸிஸ்ட் கட்சியின் எதிர்ப்புக்குக் காரணம் ஜார்ஜ் சீனாவைத் தன் பேச்சில் தாக்கியதாய் இருக்கலாம். சீனாவின் மீதான விசுவாசம் இன்னமும் மார்க்ஸிஸ்ட் கட்சிக்குக் குறைந்ததாய்த் தெரியவில்லை.

*******

சென்ற சில வாரங்களுக்கு முந்தியது

கேரளாவில் சிபிஎம் கட்சி கைரளி என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறது. சமீபத்தில் அதில் வேலை செய்யும் 20 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. இவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களில் உயர்ந்த பதவியில் இருந்தவர்களும் அடக்கம்.

இது சம்பந்தமாக கேரள சிபிஎம் கட்சி தலைவர் விஜயன் பேசும்போது, ‘லாபம் ஈட்டாத வியாபார நிறுவனங்கள் தங்களது செலவுகளை குறைத்துக்கொள்ள தங்கள் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதில் எந்தவிதமான தவறும் இல்லை ‘ என்று சொல்லியிருக்கிறார்.

இதே காரணத்துக்காக மற்ற நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தால், அதை எதிர்த்து பிரச்சாரம் செய்யத்தான் இந்த தொலைக்காட்சி நிறுவனத்தையே சிபிஎம் தொடங்கியது என்று நினைத்துக்கொண்டிருந்த சிபிஎம் கட்சி உறுப்பினர்களுக்கும், தொழிலாளர்களின் சர்வாதிகாரம் நோக்கிப் போராடிக்கொண்டிருந்தவர்களுக்கும் பெப்பே காண்பித்துவிட்டு லாபம் நோக்கி முன்னேறுகிறது கைரளி தொலைக்காட்சி நிறுவனம். வாழ்த்துக்கள்.

அடுத்த முறை வேலை இழந்த தொழிலாளர்களைக் கொண்டு சிபிஎம் கட்சி எந்த விதமான போராட்டத்தில் ஈடுபட்டாலும், இந்த விஷயத்தைக் மேற்கோள் காட்டி அதனை அடிப்பது தொடர்ந்து நடக்கும். சிபிஎம் கட்சி நடத்தும் நிறுவனம் ஆள்குறைப்பு வேலை செய்யலாம், மற்ற தொழில் முனைவர்கள் செய்யக்கூடாதா என்று விவாதம் நடக்கும். அதற்கு மயிர் பிளக்கும் வாதங்கள் இடதுசாரியினரால் வைக்கப்படும்.

ஆனால் தொழிலாளர்கள் சிபிஎம் போன்ற கட்சி நிறுவனங்களைச் சார்ந்து மட்டுமே போராடமுடியும் என்ற நிலை மாறலாம்.

ஆனால் இந்த விஷயத்தால், தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்குப் போராடுவது நின்றுவிடாது. நிற்கவும் கூடாது.

அதே நேரத்தில், கட்சி நிலைப்பாட்டைத் தாண்டி, ஒரு நபர் வேலை நீக்கத்தை எதிர்த்துப் போராடி, அந்த தொழில் நிறுவனத்தையே செயலிழக்கச்செய்து, மீதமுள்ளவர்களின் வேலை வாய்ப்பை அழிப்பதைக் காட்டிலும், நிறுவனத்தை லாப நோக்கில் காப்பாற்றி மற்றவர்களது வேலையையும் தக்கவைத்துக்கொள்ள முடிந்தவரை முயல்வதற்கு சங்கங்கள் துணை புரிய வேண்டும். இதற்கு, தொழிற்சங்கங்களுக்கு அடிப்படைப் பார்வை மாற்றம் வேண்டும்.

இதனால். தொழிலாளர்கள் வேலை இழக்கும் போது, அவர்கள் புது வேலைகளைக் கற்றுக்கொள்ளும் வசதிகளுக்காகவும், இடைப்பட்ட நேரத்தில் அவர்களது வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க பாதுகாப்பு ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து போராடவேண்டும்.

****

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – அக்டோபர் 21 , 2001

This entry is part [part not set] of 18 in the series 20011022_Issue

மஞ்சுளா நவநீதன்


உள்ளாட்சித் தேர்தல் : ஒரு வன்முறை வெறியாட்டம்

உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரையும் வெட்கித் தலைகுனியச் செய்ய வேண்டும். ஜன நாயகத்தின் நிரந்தர விரோதியாய்த் தன்னை மீண்டும் ஒரு முறை திட்ட வட்டமாய் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஜெய லலிதா. அமைச்சர்களே தேர்தல் மையங்களைக் கைப்பற்றுவதில் துணை நின்றிருக்கிறார்கள். வாக்குப் போட வந்த மக்கள் துரத்தியடிக்கப் பட்டிருக்கிறார்கள். வேட்பாளர்கள் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். பூத் ஏஜண்டுகள் மிரட்டப் பட்டிருக்கிறார்கள். வன்முறை கோர தாண்டவம் ஆடியிருக்கிறது. இதையெல்லாம் தவிர்த்திருக்க வேண்டிய போலிஸ் துறையின் உயர் அதிகாரி போன தேர்தலை விட இப்போது வன்முறை குறைவு தான் என்று அ இ அ திமுகவிற்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார். இந்த நற்சான்றிதழ் இப்போது நடந்திருக்கும் வன் முறையை மறுக்க வில்லை என்பது ஒரு விஷயம் . போகிற போக்கில் தம் சக போலிஸ் துறையினர் மீதும் சேற்றை வீசுவது இன்னொரு புறம்.

அரசியல்வாதிகளுக்குக் கால் கழுவி வாழ நேர்கிற அதிகாரிகளின் அவலம் , உண்மையில் தவிர்க்கக் கூடிய ஒன்று தான். நாங்கள் அரசியல் நிர்ப்பந்தங்களுக்குத் தலை சாய்க்க வேண்டிய அவசியமில்லை என்று நெஞ்சு நிமிர்த்திப் பிரகடனம் செய்ய வேண்டிய போலிசும் அதிகார வர்க்கமும் ,கைகட்டி வாய் பொத்தி அரசாங்கச் சேவையை , அரசியல்வாதிக்குச் சேவை என்று மாற்றியிருக்கிறார்கள். தேர்தல் ஆணையர் , நீதிபதி என்று சகட்டு மேனிக்கு தம் கட்சியில் ஐக்கியப் படுத்திக் கொண்ட சகோதரி ஜெயலலிதா ஏற்படுத்தியுள்ள இந்த உதாரணம் வெகு நாட்களுக்கு தமிழக அரசியலில் புண்ணாகிக் கிடக்கும்.

அரசியலிலிருந்து நியாய உணர்வு உள்ளவர்களை விரட்டியடிப்பதற்கும், சேவை மனப்பான்மை உள்ளவர்களை தீவிரவாதிகள் ஆக்குவதற்கும் இப்படி ஜன நாயகத்தின் குரல் வளையை நெறிக்கிற முறை கேடான அரசியல் வாதிகளும் ஒரு காரணம்.

ஜெயலலிதாவிற்கு மற்றவர்களின் வெற்றியை அங்கீகரிக்கிற மனப் பக்குவம் என்றுமே கிடையாது. கருணாநிதியின் ஆட்சியைக் கவிழ்க்கிற அசிங்கத்தை பா ஜ க அரசு செய்யவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அரசைக் கவிழ்த்துக் கொட்டியவர் இவர்.

தமிழகத்தைப் பீடித்துள்ள அ இ அ தி மு க நோய் எப்போது தீரும் என்று தெரியவில்லை. விலகி நின்ற காங்கிரஸ் , அ இ அ தி மு கவுடன் கூட்டு நிச்சயம் தொடர்கிறது என்று குலாம் நபி ஆசாத் கட்டியம் கூறியிருக்கிறார். ராம்தாஸ் சகோதரியின் மீதான தாக்குதல்களை அடக்கி வாசிக்கிறார். பின்னாட்களில் சகோதரியின் தயவு தேவைப் படலாம் என்ற எண்ணமோ என்னவோ. பா ஜ க-விற்கு தி மு க தயவால் தமிழ் நாட்டில் காலூன்ற இடம் கிடைத்து விட்டது. பாவம் ம தி மு க போன்ற கட்சிகள், சிதம்பரம் போன்றவர்கள்.

******

தலித் மக்கள் : உள்ளாட்சியில் இடமில்லையா ?

பல இடங்களில் தலித் மக்கள் தேர்தலில் போட்டியிடுவது தடை செய்யப் பட்டிருக்கிறது. ஊர்க் கட்டுப் பாடு என்ற பெயரில் இவர்கள் மிரட்டப் பட்டிருக்கிறார்கள். ஆனல் இதற்கு அ இ அ தி மு க முக்கிய காரணம் என்று சொல்ல முடியாது. கட்சி சார்பில்லாமல் தமிழகத்தில் நடக்கிற ஒரே விஷயம் – சாதீயம் தான். தலித்கள் மீதான தாக்குதல் தான். இதுவும் ஒரு வன்முறையே – இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது தமிழ் நாட்டின் மேல் சாதிகள் அனைத்தும் தான். இவர்கள் திருந்துவது எப்போது ?

*********

கள்ளச் சாராயத்திற்கு மீண்டும் பலி

போலிஸ்காரர்களின் ஆசீர்வாதத்துடன் துணையுடன், உள்ளூர் அரசியல் வாதிகள் அரவணைப்புடன் கள்ளச் சாராய வியாபாரம் விமர்சையாய் நடந்து கொண்டிருப்பதே யாராவது மண்டையைப் போட்டால் தான் நமக்குத் தெரியும் போலிருக்கிறது. இதற்கு முதல்வர் பன்னீர் செல்வம் அளித்த தீர்வு மெதனால் கலக்க முடியாத படி மெதனாலின் நிறத்தையும் சுவையையும் மாற்றுவது தான். ஆகா தீர்க்க தரிசனம். ஒரு விதத்தில் கள்ளச் சாராய விற்பனை தவிர்க்க முடியாது என்பதாய் ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் இது.

முன்பே ஒரு முறை நான் எழுதியிருந்தேன். கள்ளச் சாராயம் என்ற வார்த்தையே தப்பு. சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்களைத் தடுக்க அல்லது மாமூல் பெற போலிஸ் கண்டு பிடித்த வார்த்தை இது. கள்ளுக்கடைகளைத் திறப்பது தான் இந்தப் பிரசினைக்கு ஒரு தீர்வாய் இருக்க முடியும். பாக்கெட் சாராயம் தயார் செய்யலாம். பால் பாக்கெட்கள் போல் இவை கிடைக்குமெனில் கள்ளச் சாராயம் தேடி யாரும் போக மாட்டார்கள்.

*******

விடுதலைப் போராட்டமும் , பயங்கர வாதம்

விடுதலைப் போராட்டங்களை பயங்கர வாதம் என்று அழைக்க முடியாது என்று பாகிஸ்தான் சர்வாதிகாரி பர்வேஸ் முஷரஃப் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார். எது விடுதலைப் போராட்டம், எது பயங்கர வாதம் என்று சொல்லாமல் விட்டு விட்டார்.

உண்மைதான், ஆஃகானிஸ்தானில் அமெரிக்கத் தலையீட்டில் நடைபெறுவது தாலிபானின் பிடியிலிருந்து ஆஃகான் மக்களை விடுவிக்கும் விடுதலைப் போர். காஷ்மீரில் பாகிஸ்தானின் கூலிப் படைகள் மேற்கொண்டிருப்பது பயங்கரவாதம்.

************

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – அக்டோபர் 14 2001

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

மஞ்சுளா நவநீதன்


பன்னீர் செல்வம் படைக்கும் முன்னுதாரணம்

முதல்வருக்குரிய பந்தா, பரிவாரங்கள், ஊர்வலங்கள் எல்லாம் இல்லாமல் அமைதியாய் தில்லி சென்று திரும்பியிருக்கிறார் முதல்வர் பன்னீர் செல்வம். ஆடம்பர விழாக்களில் முதல்வரைப் பார்த்தவர்களுக்கு இது ஒரு அபூர்வமான காட்சி. ஜெயலலிதாவின் கோபத்திற்குப் பயந்து பன்னீர்செல்வமும் கட்சிக் காரர்களும் அடக்கி வாசிக்கிறார்கள் என்று காரணம் சொல்லப் பட்டால் கூட இது ஒரு நல்ல முன்னுதாரணம் . தொடரட்டும் எளிமை.

******

காலிதா ஜியா பிரதமர் ஆகிறார்

பங்களா தேஷில் காலிதா ஜியா பிரதமர் ஆகியிருக்கிறார். ஷேக் ஹசீனாவின் கட்சி 62 இடங்களையே பிடிக்க முடிந்தது. இஸ்லாமிய அடிப்படை வாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தவர் காலித ஜியா. இதன் விலை என்ன என்பது போகப் போகத் தெரியும். குறுகிய கால நலன்களுக்காக ஜன நாயக விரோத சக்திகளுடன் கூட்டுச் சேர்வது எவ்வளவு பெரிய தவறு என்று தெற்காசிய நாடுகளின் அரசியல் தலைமைகள் எவ்வளவு பட்டாலும் உணர்வதாகத் தெரியவில்லை. பிந்திரன்வாலேயும் இந்திரா காந்தியும், ஜியா உல் ஹக்கும் தாலிபானும் என்று தொடரும் இந்த அவல நிலையின் அடுத்த கட்டம் என்னவாகுமோ ?

ஆரம்ப அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. பங்களாதேக்ஷில் இருக்கும் ஐரோப்பிய பிரதிநிதி, ஜியாவின் வெற்றிக்குப் பிறகு, இந்துக்கள் வெகுவாகத் தாக்கப்படுவதையும், அவர்கள் எல்லைக்குத் துரத்தப்படுவதையும் குறிப்பிட்டு பங்களாதேஷின் அரசு இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

********

மூன்றாம் உலகப் போர் : வேறொரு வடிவம்

அமெரிக்காவில் செப்டம்பர் 11ல் நடந்த தாக்குதல் மூன்றாவது உலகப் போருக்கு வழி வகுக்கும் என்று பலடும் அச்சம் தெரிவிக்கும் வேளையில், நைஜீரியாவிலும், இந்தோனேஷியாவிலும், ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவான முஸ்லிம்களும் , எதிரான கிரிஸ்துவர்களும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் இது போலக் கலவரங்கள் நடந்தவாறு உள்ளன. ஒசாம பின் லேடன் போன்றவர்களின் நோக்கம் ஒரு விதத்தில் இதுதான் என்று கூற வேண்டும். இந்த உலகப் போர் ஒரு மையப் புள்ளியில் நாடுகளுக்கிடையில் நடப்பதற்குப் பதிலாக உள்நாட்டுப் போர்களாகவும், மக்கள் ஒருவரையொருவர் சந்தேகிக்கும் படியும், அதனால் ஏற்படும் உள்நாட்டுக் குழப்பங்களாகவும், குழுக்கள் சமரசத்திற்கு வழியின்றி இரு துருவங்களில் நிற்பதாகவும் அமையும் போலிருக்கிறது. இதனால் விரிந்த ஒரு தளத்தில் சாதாரண மக்களின் துயரங்கள் அதிகமாகும் போலிருக்கிறது.

******

திமுக கூட்டணியில் பா ம க

அதிமுகவை அரியணையில் ஏற்றி உட்கார வைத்துவிட்டு , இப்போது ஊழல் பற்றியும் சகோதரியின் துரோகம் பற்றியும் பேசுவது போலித்தனம் தான். தமிழ் நாட்டின் அரசியலில் போலித்தனம் இல்லாமல் பிழைப்பு நடக்குமா என்ன ? பா ம க வின் நோக்கம் தி மு க அணி வெற்றி பெற வேண்டும் என்பதைக் காட்டிலும் தன்னுடைய செல்வாக்கு மண்டலத்தை அதிகப் படுத்திக் கொண்டு விட வேண்டும் என்பதாய்த் தோன்றுகிறது. இந்த விதத்தில் ம தி மு கவின் போக்கு சற்றே தன் காலில் தானே நிற்க வேண்டும் என்கிற முனைப்புக் கொண்டதாய்த் தெரிகிறது.

******

வி எஸ் நைபாலுக்கு நோபல் பரிசு

பல காலமாக வி எஸ் நைபாலுக்கு நோபல் பரிசு என்ற பேச்சு இருந்து வந்தது உண்மை. இப்போது கிடைத்திருக்கிறது. பால் தெரோ என்ற அவருடைய நண்பர் சென்ற வருடம் அவரைப் பற்றியும், அவர் அணுகுமுறைகள் பற்றியும் அவ்வளவாகப் பாராட்டமுடியாத ஆளுமை அவருடையது என்பதாக ஒரு புத்தகம் எழுதினார். இஸ்லாமிய நாடுகளில் அவர் பயணம் மேற்கொண்டு எழுதிய புத்தகங்கள் பல விதமாய் விமர்சனத்திற்கு ஆட்பட்டதுண்டு. முஸ்லிம்களின் விரோதி என்று அவரை விமர்சனம் செய்ஹ்டவர்களும் உண்டு. ஆனால் இந்தியர்கள் பற்றியும் இந்தியர்கள் பற்றியும் கூட அவர் விமர்சித்திருக்கிறார். ‘இந்தியா ‘ ஒரு காயமுற்ற கலாச்சாரம் ‘ ‘லட்சக்கணக்கில் கலகங்கள் ‘ போன்ற புத்தகங்களில் அவர் சொல்கிற விஷயங்கள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை. சுதந்திரப் போராட்டம் பற்றியும் ,காந்தி பற்றியும் பல உவப்பற்ற விமர்சனங்கள் உண்டு. பாபரி மசூதி உடைபட்ட போது ‘இந்துக்களுக்கு இப்போது தான் வரலாறு உணர்வு வந்துள்ளது ‘ என்பது போன்ற ஒரு தவறான , நியாயமற்ற கருத்தையும் அவர் தெரிவித்தது உண்டு. அவரை விரோதி என்று பார்க்காமல் விமர்சகர் என்று பார்த்து அவர் விமர்சனங்களின் உண்மையை உணர்ந்து கொள்ள முயல்வது தான் விவேகமான செயல். துரதிர்ஷ்டவசமாக, விமர்சனங்களைக் கண்டாலே தம்முள் சுருங்கிக் கொண்டு, இன்னமும் அந்த விமர்சனத்துக்கு ஆளான விஷயங்களுக்குக் சப்பைக் கட்டுக் கட்டுவது ஒரு பழக்கமாய் எல்லோருமே மேற்கொண்டு விட்டார்கள்.

******

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – அக்டோபர் 7,2001

This entry is part [part not set] of 18 in the series 20011007_Issue

மஞ்சுளா நவநீதன்


உள்ளாட்சி தேர்தல்கள்

உள்ளாட்சி தேர்தல்களில் தி முக அணி, அ தி மு க அணி, ம தி மு க , காங்கிரஸ் அணி என்று நான்கு அணிகளாய் மோதுகின்றன. கட்சி நோக்கில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வேண்டாம் என்றும் சில அமைப்புகள் கோரியுள்ளன. தமிழ் நாட்டில் கட்சி சார்பற்ற தேர்தல் என்பது சாத்தியமா என்று தெரியவில்லை. அதிகாரப் பகிர்வில் பெண்களுக்கும் மற்றும், தலித்களுக்கும் நியாயமான பங்கு கிடைக்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தல் உள்ளன என்பது மகிழ்விற்கு உரிய விஷயம். துரதிர்ஷ்ட வசமாக பழைய பெருச்சாளிகளின் மகன்களும் , மகள்களுமே வேட்பாளராய் நிற்பது கவலை தருகிறது.

சிதம்பரத்தின் தலைமையில் குமரி அனந்தன், த மா க, மற்றும் ஒத்த கருத்துடையவர்கள் இணையக் கூடுமானால் அது உண்மையான மாற்றுக்கு வழி வகுக்கலாம். மற்றபடி, மதிமுக, அதி மு க , பா ம க என்பதெல்லாம் ஆட்கள் மாற்றம் தானே ஆட்சி மாற்றமோ அடிப்படைக் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வையின் மாற்றமாய்த் தெரியவில்லை.

*******

ஆஃப்கானிஸ்தானின் தாக்குதல்

அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானைத் தாக்கத் தொடங்கிவிட்டது. ஆஃப்கானிஸ்தானின் மக்கள் இதனால் எவ்வளவு துயரம் அனுபவிப்பார்கள் — ஆனால் தாலிபன் இதைச் சொல்ல அருகதை இல்லை. மக்களை மிருகங்களை விடக் கீழாக நடத்திய ஒரு சர்வாதிகாரக் கும்பல் அது. சாதாரண மக்களுக்கு உணவு, வானொலி போன்றவற்றை வீசுவதாகவும்ஒரு செய்தி சொல்கிறது. ஆனால் உடனடியாக அமெரிக்காவிற்கு ஆதரவாக இதனாலெல்லாம் மக்கள் திரும்பி விடுவார்களா என்று சொல்வது கடினம். ஏற்கனவே அமெரிக்கச் சைத்தான்களுக்கு எதிரான புனித யுத்தம் என்பதாகப் பிரசிஅனையைத் திசை திருப்ப தாலிபானும் தாலிபன் பின்பற்றும் பல முஸ்லிம் தலைவர்களும் பேசத் தொடங்கிவிட்டார்கள். தாஜிக்ஸ்தானிலிருந்தும் பாகிஸ்தானிலிருட்ந்தும் தாக்குதல்கள் நடத்தப் படவிருக்கின்றன – நடத்தப் படுகின்றன. தீவிரவாத முஸ்லீம் தலைவர்களை பாகிஸ்தான் ராணுவ ஆட்சி வீட்டுக் காவலில் வைத்துள்ளது. பாகிஸ்தானில் பிரசினை எந்தத் திசை நோகித் திரும்பும் என்று பார்க வேண்டும். பர்வேஸ் முஷரஃபின் கைக்குள் முழு ராணுவமும் இருக்கிறதா இல்லையா என்று இனிமேல் தான் தெரியும்.

*****

பாகிஸ்தானில் தொடரும் சர்வாதிகார ஆட்சி.

சந்தடி சாக்கில் பர்வேஸ் முஷ்ரஃப் தன் ஆட்சியை காலவரையறையின்றி நீட்டிக் கொண்டு விட்டார். உம், எந்த சர்வாதிகாரி தான் தானாக பதவியைத் துறந்து ஜனநாயகத்திற்கு வழி கோலியிருக்கிறார் ? அதுவும் பகிஸ்தானில் அது நடந்ததே இல்லை. ஆனால் இன்றைய நிலையில் ஆட்சி மாற்றம் இன்னமும் நிலையின்மையைத் தருமோ என்ற அச்சமும் உள்ளது.அதில்லாமல் பர்வேஸ் முஷரஃபை நம்பித் தான் அமெரிக்கா கோடி கோஇட்யாய்க் கொட்டி கொடுத்திருக்கிறது. அந்த ‘முதலீடு ‘ ஆள் மாறினால் என்ன ஆகும் என்று சொல்ல முடியாத நிலை.

********

ஓசாமைவைப் பிடிக்க பாகிஸ்தான் பணம் பெற்றதா ?

1999-ல் பாகிஸ்தான் ஓசாமவை ஒப்படைக்கப் பணமும், பயிற்சியும் அமெரிக்காவிடமிருந்து பெற்றதாக ஒரு செய்திக் குறிப்புச் சொல்கிறது. என்றால், நவாஸ் ஷரீஃப் துரத்தப் படாதிற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

********

தமிழ் நாட்டில் போலிஸ் சங்கம்

போலிஸ்காரர்களுக்கு சங்கம் வைப்பதற்கு அனுமதி வழங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதி அளித்து அ தி மு க ஆட்சிக்கு வந்தது. இதனால் உருவான போலிஸ் சங்கத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். போலிஸ் சங்கம் என்ன விதமான கோரிக்கைகளை வைத்துப் போராடும் என்றோ , எப்படிப் பட்ட போராட்டங்களில் ஈடுபடும் என்றோ தெளிவில்லை. மற்ற தொழிற்சங்கங்களுக்கு முன்னோடியாக, மக்களைப் பாதிக்காத முறையில் இவர்கள் சங்கச் செய்ல்பாடுகளைக் கொண்டிருந்தால் வரவேற்கலாம்.

*******

ஆஃப்கானிஸ்தானில் எந்த அரசு அமையும் ?

பாகிஸ்தான் ஆதரவில் இயங்கும் தாலிபன் அரசு வீழ்வது கிட்டத்தட்ட நிச்ச்யம் என்ற நிலையில் எப்படிப் பட்ட அரசு அங்கு அமையும் என்ற தெளிவில்லை. அங்கு காஷ்மீருக்குப் பயங்கரவாதிகளைத் தயார் செய்து அனுப்பாத அரசு வேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது. பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானில் இந்திய ஆதரவு அரசு அமைவதை விரும்பவில்லை. ஆஃப்கானின் பழைய அரசரும், வடக்குப் பிரதேசக் கூட்டணி என்ற பெயரில் இயங்கிவரும் தாலிபன் எதிர்ப்பு அமைப்பும் இணைந்து அரசு அமைக்கலாம் என்ற யோசனை பாகிஸ்தானிற்குப் பிடிக்க வில்லை. எதிர்காலம் நிச்சயமில்லாத ஒரு நிலையில் உள்ளது ஆஃப்கானிஸ்தான். அங்கே சகஜ வாழ்க்கை திரும்பும் என்று நம்புவோம்.

*********

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – அக்டோபர் 16, 2000

This entry is part [part not set] of 6 in the series 20001015_Issue

சின்னக் கருப்பன்


சீன எழுத்தாளருக்கு நோபல் பரிசு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது. சீன மொழியின் குவாங் ஜாங் பரிசு பெறுகிறார். சீன இலக்கியம் பரந்த இலக்கியப் பாரம்பரியம் உள்ளது. ஒரு விதத்தில் கன்ஃபூஸியஸ் உலகின் முதல் ‘மதச் சார்பற்ற ‘ சிந்தனா வாதி என்று சொல்ல வேண்டும். ஆனால் ஜாங்கின் இலக்கியம் பற்றிச் சிந்திக்க விடாமல் சீனா இந்தப் பரிசளிப்பை அரசியல் நோக்கமுடையது என்று கண்டனம் செய்துள்ளது. தலாய் லாமாவிற்கு அமைதி நோபல் பரிசு தரப் பட்ட போதும் சீனா அதனைக் கண்டனம் செய்தது.

அரசியல் நோக்கம் இல்லாத செயல் என்று எதுவும் இல்லை. ரஷ்யாவின் போரிஸ் பாஸ்டர்நாக் பரிசு பெற்ற போது அவரைப் பரிசு பெற ஸ்வீடன் செல்ல அனுமதிக்க மறுத்தது, சோவியத் யூனியன். ஜாங் அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்தப் பட்டார். இப்போது ஃபிரான்ஸில் வாழ்கிறார். கவிஞர் ஜோசப் பிராட்ஸ்கியும் இவ்வாறே சோவியத் யூனியனால் புறக்கணிக்கப் பட்டார். சல்மான் ரஷ்டிக்குப் பரிசு தரப் பட்டிருந்தால் ஈரான் அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கும். அரசாங்கங்கள் எல்லாமே தனக்கு அடங்கி நடக்கிற கலைஞர்களைத் தான் விரும்புகின்றன. கம்யூனிஸ்டுகளை வேட்டையாடிய போது அமெரிக்காவில், பல எழுத்தாளர்களை அமெரிக்கத் துரோகிகள் என்று குற்றம் சாட்டப் பட்டார்கள். ஹாலிவுட்டில் அவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது என்று அமெரிக்க நிர்வாகம் தடையிட்டது. சார்லி சாப்ளினைக் கூட விட்டு வைக்க வில்லை.

ஆனால் மீறல்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஜாங்கை சீனாவை விட்டு விரட்டியது அரசியல் என்றால், அவருக்கு அளிக்கும் பரிசு எப்படி அரசியல் இல்லாமல் இருக்கும் ?

***

கவிதை வாழ்க – பிரிவினை ஒழிக

பாகிஸ்தான் பிரிவினையை மிகத் தீவிரமாய் ஆதரித்தவர் கவிஞர் இக்பால். கிட்டத் தட்ட அந்தப் பிரிவினைக் கருத்துக்கு வித்திட்டவரே அவர் தான் என்று சொல்லிவிடலாம். ஆனால், இந்தியாவில் அவர் வெறுக்கப் படவில்லை. அவர் எழுதிய கவிதை நம் எல்லோருக்கும் பரிச்சயமான வரிகள். ‘ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா ‘ எல்லாராலும் பாடப் பட்டு கெளரவம் பெறுகிறது. உண்மையிலேயே பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு தான்.

பாகிஸ்தானில் வாஜ்பாயின் கவிதைகளை மொழி பெயர்ப்புச் செய்த ‘குற்றத்தி ‘ற்காக ஒருவர் தேசத் துரோகி என்று குற்றம் சாட்டப் பட்டிருப்பதையும் இதனுடன் சேர்த்து நினைவு கொள்ள வேண்டும்.

****

நெடுமாறன் தூதுவர்

வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்த நெடுமாறனும் , கல்யாணியும் சென்றுள்ளனர். நெடுமாறன் பலகாலம் காங்கிரஸ் முதலிய தேசீயக் கட்சிகளில் இருந்தவர். ஆனால் இன்று அவர் நிலை பாடு வேறு. தமிழினத்தலைவர்களாய்த் தம்மை இனம் கண்டுகொள்கிற பலரில் ஒருவர். இந்திரா காந்தியையும் , நேருவையும் தலைவராய் ஏற்றுக் கொண்டிருந்தவர் இன்று, வீரப்பனையும் , வீரப்பன் மனைவியையும் தலைவராய் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

தமிழ்த் தேசீய இயக்கத்தின் மாநாடு ஒன்றும் நடத்தியிருக்கிறார். 100 வருடமாக, இந்தத் தனித் தமிழ் நாடு குரல் தமிழ் நாட்டில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. இதில் குறுகிய நோக்கம் கொண்ட , தமிழினத்தின் பாதுகாவலர்களாய்த் தம்மைப் பிரகடனம் செய்து கொண்டு அரசியல் லாபம் தேடும் ‘லெட்டர் பேட் ‘ கட்சிகள் இருக்கின்றன. மார்க்ஸீய-லெனினிய-பெரியாரிய வழி என்று சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகள் உள்ளன. இப்படிப் பட்ட கூக்குரல்களை மக்கள் தீர்மானமாக நிராகரித்துத் தான் வந்துள்ளார்கள்.

இந்தப் பிரிவினை வாதம் மக்களிடம் வேரூன்ற வில்லையென்றாலும், தலைவர்களுக்குப் புரட்சி கிரீடம் சூட்டிக் கொள்ளப் பயன் பட்டு வந்திருக்கிறது. நெடுமாறனை அரசு தூதுவராக அனுப்பியதன் மூலம், ராஜ்குமார் விடுவிக்கப் பட்டால் நல்லது தான். ஆனால் இப்படிப் பட்ட துண்டுக் கட்சிகளுக்கு ஒரு அரசியல் மதிப்பு ஏற்பட இது வழி செய்யக் கூடும் என்றால் அது தவறான முன்னுதாரணமாக ஆகி விடும்.

****

பாகிஸ்தானில் இன்று

உலக மின்வலை அரங்கம் பல விஷயங்களை மிக அருகாமையாய்க் கொண்டு வந்து விடுகிறது. பாகிஸ்தானைப் நேர்முகமாய்ச் செய்திகளை அறிந்து கொள்ள முன்பு வழியில்லை. ஆனால் இப்போது அப்படியில்லை. ‘ஜங் ‘ பத்திரிகைகள், ‘டான் ‘, ‘ஃப்ரைடே டைம்ஸ் ‘ , ‘ஃப்ராண்டியர் போஸ்ட் ‘, என்று பல பத்திரிகைகளைப் படிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. பல விஷயங்களில் தெளிவும் கிடைக்கிறது. பத்திரிகைகளும் மிகுந்த அளவு சுதந்திரமாய்த் தான் செயல் படுகின்றன.

பல பிரசினைகள் நம் இந்தியாவில் உள்ள பிரசினைகளை ஒத்தவாறு தான் இருக்கிறது. லஞ்சம் எல்லா மட்டங்களிலும் தலை விரித்து ஆடுகிறது. ராணுவம் கூட நம் போஃபர்ஸ் ஊழல் போல ஒரு ஊழலில் மாட்டிக் கொண்டுள்ளது. யாருமே வரியை ஒழுங்காகக் கட்டுவதில்லை. வரி வசூல் செய்வதற்கு வியாபாரிகள் பெரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அரசியல் கட்சிகளும் ஜாதி- இன அரசியல் நடத்துகின்றன. இங்கே இந்தியாவில் ஒரு ஆர்.எஸ்.எஸ் என்றால் அங்கே எல்லாக் கட்சிகளுமே ஆர்.எஸ்.எஸ் மாதிரி தான் பேசுகிறார்கள். இந்தியாவை முதல் எதிரியாக உருவகம் செய்யாமல் அங்கே அரசியல் பண்ண முடியாது. மதச் சார்பின்மையின் குரல் மிகச் சன்னமாகத் தான் ஒலிக்கிறது. மதம் பொது வாழ்வில் மிகத் தீவிரமாய் உள்ளது. காஷ்மீர் பிரசினை பேசப் படாத நாளே இல்லை. அரசியல் கட்சிகளும், ராணுவமும் சேர்ந்து மக்கள் மனதை இந்தியா எதிரி, காஷ்மீர் பிரசினை தலையாய பிரசினை என்று திசை திருப்பி விட்டிருக்கின்றனர். ஜனநாயகம் தேவை என்கிற குரலும் சன்னமாய்த் தான் ஒலிக்கிறது..

டான் என்ற பத்திரிக்கை (ஜின்னா ஆரம்பித்தது) அலுவலகத்தை பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகள் சோதனை போட்டு மிரட்டியிருக்கிறார்கள். இது பற்றிய கண்டனமும் மற்றைய பாகிஸ்தானிய பத்திரிக்கைகளில் காணோம்.

பலுச்சிஸ்தான் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கும் பலுச்சிஸ்தான் போலீஸ் பற்றி கண்டனம் தெரிவித்து டான் தலையங்கம் எழுதியிருக்கிறது. அங்கங்கே கொஞ்சம் இதுபோல் ஆறுதலாய்.

******

மீண்டும் இஸ்ரேல் – பாலஸ்தீனம்

தீராத உலகப் பிரசினைகளில் ஒன்றான இஸ்ரேல்-பாலஸ்தீனம் தகராறு மீண்டும் பிரசினையாகிவிட்டது . அரசியல் வாதிகள் எப்படிப் பிரசினைகளை உருவாக்கக் கூடும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் இது. பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு புனிதஸ்தலத்திற்கு வருகை தந்த ஒரு யூத அரசியல் வாதியால் பாலஸ்தீனர்கள் வெகுண்டெழ, இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனர்களின் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதற்குப் பதிலாக பாலஸ்தீனர்கள் மூன்று இஸ்ரேல் படை வீரர்களைக் கொன்றதன் எதிரொலி : இஸ்ரேல் படை அராஃபத் வசிப்பிடம் மீது குண்டுகளை வீசுகிறது.

அமைதிக்கான தேடல் சுலபமானதல்ல. அராஃபத் பல நிலைகள் இறங்கி வந்து இஸ்ரேலிடம் தீர்வு காண முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, மக்களைத் தூண்டி விடும் முறையில், இஸ்ரேல் பொறுப்பற்று நடந்து கொண்டது. பேச்சு வார்த்தைகள் பலன் அளிக்கும் என்று எதிர் பார்ப்போம்.

*****

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்

இந்த வாரம் இப்படி – அக்டோபர் 9, 2000

This entry is part [part not set] of 11 in the series 20001008_Issue

சின்னக்கருப்பன்


ஜஸ்வந்த சிங் லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிக்கையில் சொன்னது உண்மையா ?

சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிக்கையில் ஆச்சரியமானதும் வருந்தத்தக்கதுமான ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.

ஐநாவின் ஆரம்பகாலத்தில் இந்தியாவுக்கு பாதுகாப்புக்குழுவில் இடம் அளிக்கப்பட்டது என்றும், நேரு அது வேண்டாம் என்று கூறிவிட்டார் என்றும் கூறுகிறார். அது மட்டுமல்ல அவர் சீனாவுக்கு அந்த இடத்தை அளிக்கக் கோரினார் என்றும் ஜஸ்வந்த் சிங் கூறியிருக்கிறார்.

நேரு தனிமனிதராக இருந்தால் அவரது இந்த Gentlemanதனத்தை நான் பாராட்டலாம். அவர் இந்தியாவின் பிரதமராக இந்தியாவின் பிரதிநிதியாக இந்தியாவுக்கு உரிய இடத்தை உலக அரங்கில் பெற்றுத்தர போராட வேண்டிய சூழ்நிலையில் இருந்தவர். இங்கே Gentlemanதனத்துக்கெல்லாம் இடமில்லை. இடமும் இருக்கக்கூடாது. டூப்ளிகேட் சீனர்களான என்,ராமும் சுப்பிரமணிய சாமியும் வேண்டுமானால் இதை பாராட்டலாம். நேருவுக்கு கெளரவ சீனர் விருதும் வேண்டுமானால் வழங்கலாம். நான் பாராட்டத் தயாராக இல்லை.

இது உண்மையா என்பது இந்தியர்களுக்குத் தெளிவாக்கப்பட வேண்டும். அல்லது ஜஸ்வந்த் சிங் பொய் சொன்னாரா என்பதும் வெளிப்பட வேண்டும். இது ஒரு முக்கியமான் தீவிரமான விஷயம். அமெரிக்கப் பத்திரிக்கையில் ஜஸ்வந்த் சிங் பொய் சொல்லியிருப்பார் என்பது கருத முடியாது. அதைப் படிப்பவர்கள் இந்தியர்கள் மட்டுமல்ல. பெரும் உலகத்தலைவர்களும் வரலாற்றாசிரியர்களும் படிக்கக்கூடிய விஷயத்தில் ஒரு பெரும் நாட்டின் வெளியுறவு அமைச்சர் தகுந்த ஆதாரம் இல்லாமல் பேசமுடியாது.

இதை இந்தியர்களுக்கு விளக்கவேண்டிய கடமை இந்திய அரசாங்கத்தைச் சாரும்.

***

மீண்டும் திபேத்திய பெளத்த கன்னியாஸ்திரீகள் சித்திரவதைக் கொலை.

திபேத்திய கன்யாஸ்திரீகள் சீன அரசாங்கத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது. யாரும் கண்டுகொள்ளக்காணோம். என்.ராம் இந்த கன்யாஸ்திரிகள் பற்றி சீன அரசாங்கத்தின் ஊழியர்களிடம் கேட்டுச் சொல்வார் என்று நம்புவோம். பிபிஸியும் இதை தெரிவித்துவிட்டு அடுத்த செய்திக்குச் சென்றுவிட்டது.

நாமும் அடுத்த செய்திக்குச் செல்வோம்.

***

யூகோஸ்லாவ் புரட்சி

மக்களுக்கேற்ற தலைவர்கள் என்பதை யூகோஸ்லாவிய மக்கள் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். தலைவன் எவ்வழி அவ்வழி மக்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் (முக்கியமாக இந்தியாவில்), பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் தேர்தலை மதிக்காத தலைவனை தூக்கியெறியவும் தயங்குவதில்லை.

முட்டாள் மக்கள் முட்டாள் தலைவர்கள். படிப்பறிவு வாய்ந்த மக்கள் சிறந்த தலைவர்கள். அதனால்தானோ என்னவோ, இந்தியாவில் சுதந்திரம் இருந்தும், இன்னும் 50 வருடங்களாக படிப்பறிவை காங்கிரஸ் கட்சி தடுத்துகொண்டே இருக்கிறது. மோசமான தலைவர்கள் படிப்பறிவு அற்ற மக்களையே விரும்புகிறார்கள். இன்னும் விசிலடிச்சான் குஞ்சுகளையே உருவாக்க ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.

***

ஹைதராபாத்தின் உயிரியல் பூங்காவில் உயிர்க்கொலை

ஒரு புலி இறந்ததற்காக வருத்தப்படவில்லை நான். ஒரு பசு கொல்லப்பட்டு தோலுரிக்கப்படுவதும் ,கோழி கொல்லப்பட்டு தோலுரிக்கப்பட்டு உண்ணப்படுவதும் தினந்தோறும் தெருதோறும் நடக்கும் ஒரு விஷயம். ஆனால் இங்கு இது செய்யப்பட்ட முறையும், பாதுகாக்கப்பட்ட ஒரு இடம் எவ்வளவு பாதுகாப்பற்று இருக்கிறது என்பதும்தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

இது போன்ற விஷயங்கள் நாட்டில் அரசாங்கம் இருக்கிறது என்ற எண்ணத்தையே தொலைத்துவிடும். இது ஒரு சாதாரண திருட்டு அல்ல. இது ஒரு கூட்டுக் களவாணித்தனம் என்பது சாதாரண பார்வையிலேயே தெரிகிறது. இதுபோல் சென்னை உயிரியல் பூங்காவிலும் நடப்பதாக எனது நண்பர் சொன்னார். அதற்கு ஆதாரம் இல்லை. அந்த செய்தி வருவதில்லை. எனவே நடக்கவில்லை என்று கொள்ளலாம்.

இந்த குற்றம் புரிந்தவர்கள் உடனே கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.

***

காஞ்சீபுரம் ரயில் நிலையத்துக்கு குண்டு வெடிப்பு மிரட்டல்

ஏன் காஞ்சீபுரத்தை தேர்ந்தெடுத்தார்கள் ?

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்