மாற்றம் தானம்

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

சித்ரா


டிங் டாங்..எட்டு மணிக்கு வாசல் அழைப்பு மணி என்றால்,லயா வீட்டிற்கு,சமையல் வேலைக்கு சவிதா வந்தாச்சு .
கதவு திறந்ததும், மெலிந்த தேகத்தில்,மிரட்சியான பார்வையை,தினம் தவறாமல் சவிதாவிடம் பார்க்கலாம்.

இருக்காதா பின்னே..சவிதாவின் கணவனின் பின் இழுப்பு அப்படி..
தெரிந்த குட்டை தினம் தென்பட்டால்,தாண்டி குதித்து போய்கொண்டெயிருக்க பழகியிருக்கனும்,பழகவில்லை சவிதா.இன்னமும் கணவனின்
ஆட்டத்தை கண்டு மிரண்டு போகிறாள்,தினம் தவறாத ஒரே மனநிலை என்பது கொஞ்சம் தூக்கலாக தெரிந்தது.

லயாவுக்கு தாண்டி போக, மனநிலை மாற்றி கொள்ள தெரியும்,அலுவலக வருட இறுதி விடுமுறையில்,பூனாவிலுள்ள தோழி வீட்டிற்கு புறப்பட்டு கொண்டிருந்தாள்.சவிதாவை கூப்பிட்டு “பசங்களுக்கு லீவ் விட்டிருப்பாங்க இல்லே..இந்தா நூறு ரூபாய் .எங்கேயாவது வெளியே கூட்டிட்டு போயிட்டு வா ..இந்த பணத்தை வேறு எதுக்கும் செலவு செய்யாதே,எப்பவும் இருக்கவே இருக்கு செலவு,இது உனக்கு மாற்றம் வேணுங்கறதுக்கு தான் தரேன்,நானும் அதுக்கு தான் ஊருக்கு போறேன்.”

சவிதா சொன்னாள் “அக்கா, சாப்பாடு கொடுப்பாங்க.துணி கொடுப்பாங்க,அதுக்கு பணம் கொடுப்பாங்க..நீங்க மாற்றம் வேணும்னு
பணம் கொடுத்து இருக்கீங்க ,பசங்க கூட சொல்லீச்சுங்க,எங்கேயும் கூட்டிட்டு போறது இல்லேன்னு..”.நெகிழ்ந்தாள்.

லயா பூனாவில் தோழியுடன் பேசி சிரித்து,தோழிக்கு தெரிந்தவர்களின் வீட்டிற்கும் சென்று,பலதரப்பட்ட வாழ்க்கைகளின் அறிமுகத்துடன்,புது துளிர்ச்சியுடன் சென்னை திரும்பினாள்.

மறுநாள் காலை 8 மணி . டிங் டாங். சவிதாவை பார்தததும் ,லயா கேட்டாள்.
“பசங்களை கூட்டிட்டு எங்கே போனே ?
“அண்ணாநகர் டவர் பார்குக்கு கூட்டிட்டு போனேங்கா.குழந்தைங்க ரொம்ப சந்தோசபட்டாங்க க்கா..” சொல்லும் போதே சவிதாவிடமிருந்து சந்தோசம் தெரித்தது .

மாற்றம் செய்யும் மாற்றம் .
தினம் தவறாத ஒரே மனநிலையிலும் ஒரு மாற்றம்.

Series Navigation

சித்ரா

சித்ரா