ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

M.ராஜா



சுள்ளுன்னு வெய்யில் அடிச்சிட்டு இருக்கும். திடீர்னு சொல்லாம கொள்ளாம வர்ற மழை மாதிரி அந்த பொண்ணு ஞாபகம் வந்து மனசை நனைச்சிட்டு போய்டுச்சு. TORTOISE கொசுவர்த்தி சுருளோடு ஜாலியா ஒரு FLASHBACK போயிட்டேன்.

TROUSER போட்டு சுத்திட்டு இருந்த காலத்திலிருந்தே எனக்கு அபிராமிய தெரியும். அந்த வயசுல எனக்கு பரிச்சயமாயிருந்த பொண்ணுங்கள்ல அவ அழகாயிருப்பா. இருந்தாலும் ஸ்வீட் கடையில வேலை பார்க்கிறவனை பாதிக்காத ரசகுல்லா மாதிரி அவ என்னை சலனப்படுத்தியதே இல்லை. டிரௌசெர் – பேண்ட் – லுங்கின்னு நான் கலாச்சார வளர்ச்சி கண்டிருந்த போது, அவ குட்டை பாவாடை – சுரிதார் – தாவணின்னு பருவ வளர்ச்சி அடைஞ்சிருந்தா. குருட்டுப் பிச்சைக்காரனுக்கு முன்னாடி ஒட்டின ஐஸ்வர்யா ராய் போஸ்டர் மாதிரி அப்பவும் நான் அவளை கண்டுக்கவே இல்லை.

லாட்டிரி சீட்டு வாங்கினவன் கூட ஒரு நம்பர்ல தான் பரிசை தவறவிடுவான். ஆனா நான் அரை மார்க்ல MBBS சீட்டை மிஸ் பண்ணிட்டு மறுபடியும் எம்பிட்டு இருந்தேன். நல்லா படிப்பேன்றதால என்மேல அவளுக்கு ஒரு “இது.” MBBS கிடைக்காததால என்மேல அவளுக்கு இன்னும் ஒரு “இது.” இப்படி இரண்டு இதுவும் சேர்ந்து “அது”வாயிடுச்சு. (அதுன்னா ‘பிரியம்’ அவ்வளவே) PART – TIME ல படிச்சிட்டு FULL – TIME அவளை சைட்டடிக்க ஆரம்பிச்சேன். சிரிப்பைக்கூட அவ சிக்கனமா தான் செலவு செய்வா. நான் பத்து ரூபாய்க்கு சிரிச்சா அவ இரண்டு ரூபாய்க்கு சிரிப்பா. போகப் போக , குடுத்த காசுக்கு கரெக்டா டிக்கெட் கிழிக்கிற கண்டக்டர் மாதிரி என் முதலீட்டுக்கு ஏத்த சிரிப்பு லாபமாச்சு.

ஒருநாள் புதுசா ஒரு சட்டை போட்டுட்டு டியூஷன் கிளம்பினேன். வழியில, அபிராமிய பார்த்தேன் . என்னைப் பார்த்தவுடனே மத்தாப்பு, புஸ்வாணம், சங்குச் சக்கரமெல்லாம் கலந்த ஒரு தீபாவளிப் பிரகாசம் அவ முகத்துல. தன் சுட்டு விரலையும், கட்டை விரலையும் நுனியில சேத்து, மத்த விரல்களை வானத்தை நோக்கி காட்டி, முருகர் மாதிரி நின்னு , “சட்டை சூப்பர்”ன்னா. அவ சொன்னது அருள் வாக்காய் காதில் விழுந்தது. ஒரு வாரத்துக்கு அந்த சூப்பர் சட்டையை போட்டுட்டு சூப்பர் ஸ்டாரா மிதந்துட்டு இருந்தேன்.இப்படி தினமும் தீபாவளி கொண்டாடிட்டு இருந்தது எங்கம்மாவுக்கு சந்தேகத்தை கிளப்பி விட்டுடுச்சி. டிராபிக் போலீஸ் பாக்கிறப்போ மட்டும் பம்மிட்டு, அவர் திரும்பின உடனே, நோ என்ட்ரில வண்டிய விடுறவன் மாதிரி எங்கம்மா அசந்த நேரத்துல, நான் அப்பப்போ பட்டாசு கொளுத்திட்டு வந்திடுவேன்.

ரொம்ப அவசியமான ஒரு விஷயம் சொல்றதுக்காக அவசரமா அபிராமிய பாக்கப் போனேன். “இன்னிக்கு பால்காரர் வர மாட்டாராம்.” அபிராமி கேள்விக்குறியும், ஆச்சரியகுறியும் கலந்து வினோதமா பாத்தா. “அப்புறம்…? உங்க பாட்டி சௌக்கியமா?” எதுவும் பேசாம கால் நகத்தை எண்ண ஆரம்பிச்சா. “ஏய் !அடுத்த வருஷம் எலெக்க்ஷன் வருதாம்.” சன்னமா சிரிச்சா. அதே கஞ்சத்தனம்.தமிழ் சினிமாவும் டைட்டிலும் மாதிரி நான் சம்பந்தமே இல்லாம நியூஸ் வாசிச்சிட்டு கிளம்பிட்டேன். வாசல்கிட்ட வரும் போது எதேச்சையா திரும்பி பார்த்தேன். அவளும் எட்டிப் பாத்தா. அப்புறம் தலைய குனிஞ்சிட்டா.

துப்பட்டா போட்டும் மறைக்க முடியாத மாதிரி அவளால வெட்கத்தை மறைக்க முடியலே. சாப்பிட்டுட்டு இருக்கிற ஐஸ்கிரீம் தவறி சட்டைக்குள்ள விழுந்துருச்சுன்னா நெஞ்சு பகுதியில ஜில்லுனு ஆகுமே, அப்படி ஒரு சிலிர்ப்பு எனக்குள்ளே. தன்னை ஒரு பொண்ணு கவனிக்கிறாங்கறது வயசுப் பையனுக்கு பெரிய கொண்டாட்டம். அவளும் என்னை சைட்டடிக்கிறாள்ன்னு அன்னைக்குத்தான் கண்டுபிடிச்சேன். அமெரிக்காவ கண்டுபிடிச்ச கொலம்பஸ் சந்தோஷம் என் மனசுக்குள்ளே.

எண்ணெய் கிணறா வழிஞ்சிருக்கேன்னு வந்ததுக்கப்புறம் தான் உறைச்சுது. கடந்த காலத்தை திரும்பிப் பார்னு சொல்வாங்க. இன்னிக்கு என் வருங்காலத்த திரும்பி பாத்திருக்கேன். யோசிச்சதெல்லாம் கவிதை மாதிரி இருந்தது. கண்ணை மூடினா, கனவெல்லாம் கலர்ல வந்தது. பறக்க ஆரம்பிச்சேன். நான் கட்டியிருந்த வாட்ச் அவளுக்கு, ரொம்ப பிடிக்கும். ஆசையா கேப்பா. என்னை வாட்ச் பண்றவளாச்சேன்னு கழட்டி குடுத்துடுவேன். இப்படி சின்ன சின்னதா நிறைய சிலிர்ப்புகள்ல சிக்கி மனசு சீக்கியடிசிட்டு இருந்துச்சு.

வாரங்கள் எல்லாம் நாட்களை மென்னு முழுங்கி, மாதங்களா ஏப்பம் விட்டதில் ஒரு வருஷம் P.T. உஷா மாதிரி ஓடிப்போயிடுச்சு. EXAMS வந்தது. நல்லா எழுதினேன். MMCல சீட் கிடைச்சது. ஒரு வருஷம் கழிச்சு புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சிருந்தேன். மெட்ராஸ் வந்ததுக்கப்புறம் அபிராமிய சுத்தமா மறந்துட்டேன். ஊருக்கு போறப்ப மட்டும் அவளை போய் பார்ப்பேன். பேசுவேன். திரும்பி பார்க்காம வந்துடுவேன்.

ஒரு வருஷங்கழிச்சு அபிராமிக்கு கல்யாண ஏற்பாடு ஆகியிருந்தது. போனேன். GIFT குடுத்தேன். கிளம்பிட்டேன். வர்றப்போ யாரோ என் முதுகையே பார்க்கிற மாதிரியே இருந்தது. திரும்ப போன கால்களை மனசு கட்டிப் போட்டது. திரும்பி பார்க்காம வந்துட்டேன். வீட்டுக்கு வந்து யோசிச்சேன். என்ன மாதிரி உணர்ச்சி இது. பழுப்பேறிப் போன வெள்ளை பனியனை சொட்டு நீலம் போட்டு மறைக்கிற மாதிரி FRIENDSHIP ன்னு மழுப்பிட முடியாது. LOVE தான்னு சொன்னா மப்புல உளர்ற மாதிரி இருக்கும். ரெண்டும் இல்லை. வயசுக் கோளாறு. ஹார்மோன்களோட சில்மிஷம். விவரம் தெரியாத வயசுல பரிச்சயமில்லாத ரெண்டு குழந்தைகள் அம்மா- அப்பா விளையாட்டு ஆடுவாங்களே, அந்த மாதிரி, அந்த வயசு கடந்தவுடன் மறந்திடும். இல்லே மழுங்கிடும். மனசு ராஜானந்தா சுவாமிகளாகி சமாதானம் பண்ணியது.

கவனமாய் மனசுக்குள்
கண்ணியமாய் இடைவெளி காத்து
ஏதோவொரு இடத்தில் துவங்கி
சுற்றி வளைத்து முடித்ததில்
ஆரம்பம் முடிவு தெரியவில்லை;
சிக்கலா கோலமா புரியவில்லை.
இருந்தாலும் ஒவ்வொரு புள்ளியிலும்
அழகாய் சிரிக்கிறாய் அன்பே!

ஒரு கவிதை, ஒரு சட்டை, ஒரு வாட்ச், அவ திரும்ப பாத்தது – இப்படி சில ஞாபகங்கள் இன்னைக்குக்கூட சுகமா இருக்கு, தூக்கத்துக்கு தலையணை மாதிரி.

_____________________

Series Navigation