வன்முறை 11

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

சூர்யா லட்சுமிநாராயணன்


இதய நோயாளிகள் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள்

தனது மனைவி இன்னொருவனுடன் படுக்கையில் இருப்பதை

சென்னை தியாகராய நகரில் ஒரு கிரவுண்ட் விலை என்ன என கேட்பதை

நகரப் பேருந்தின் பின்பக்க சீட்டில் அமர்ந்திருக்கும் நடத்துனரிடம், இந்த பேருந்து எங்கே செல்லும் எனக் கேட்பதை

சென்னை எஸ்கேப் தியேட்டரில் ஒரு பாப்கார்ன் பக்கெட்டின் விலை என்ன எனக் கேட்பதை

ரங்கநாதன் தெருவின் மிகமிக அருகில் உள்ள ரயில் நிலையத்தில் விடுமுறை நாட்களில் மாலை வேளையில் டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் நிற்பதை

அங்கே 4 கவுண்டர் இருக்கும், ஆனால் இதுவரை 2 கவுண்டர்களில் மட்டுமே பயணச்சீட்டு கொடுத்து நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரு நாள் …………… ஒரே ஒரு நாள் அந்த பயங்கரம் நடந்தேறியது. அங்கே 4 கவுண்டர்களிலும் பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டிருப்பதாக கெட்ட கனவு ஒன்றைக் கண்டுவிட்டேன். அது நிறைவேறாத மன ஏக்கத்தின் விளைவாக இருக்கலாம். பிராய்ட் உயிருடன் இருந்திருநதால் அவரிடம் கேட்டிருக்கலாம். ஏன் சூரியன் மேற்கே உதிப்பதை போன்று கனவு வருகிறது. ஏன் தண்ணீருக்குள் நான் மூச்சு விடுவதைப் போன்று கனவு வருகிறது. நாய் வால் ஏன் 180 டிகிரியில் நேராக நிற்பதைப் போன்று கனவு வருகிறது. ஏன் என் மனைவி நான் பேசுவதை எல்லாம் அமைதியாக கேட்பதைப் போன்று கனவு வருகிறது. ஏன் நான் கானல் நீரில் கிலோ கணக்கில் மீன்பிடித்து விற்று கோடீஸ்வரன் ஆவதைப் போன்று கனவு வருகிறது. ஏன் நிலாவை மதிய வேளையில் பார்ப்பதைப் போன்று கனவு வருகிறது. ஏன் ரங்கநாதன் ரயில்வே ஸ்டேஷனில 4 கவுண்டர்களிலும் டிக்கெட் கொடுப்பது போன்று கெட்ட கனவு வருகிறது. இப்படியெல்லாம் கேட்டால் செருப்பால் அடிப்பேன் என்று அவர் மட்டும் சொல்லாமல் இருப்பாரேயானால் இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன.

காத்திருப்பதில் தான் எவ்வளவு சுகம் என்று எவனாவது வெட்டித்தனமாக கவிதை எழுதுவானேயானால் அவனது பிடிவாதத்தை சுலபமாக திருத்தி விடலாம். அப்படிப்பட்ட கருத்துடைய நோயாளிக்கு சிகிச்சை, ரங்கநாதன் தெருவுக்கு மிகமிக அருகில்தான் உள்ளது. ஒரு மோசமான குற்றவாளிக்கு 2 ஞாயிற்றுக் கிழமை காத்து நிற்கும் தண்டனை வழங்கினால்போதுமானது என்பது என் உள்ளக் கருத்து.

ஒரு நாய் அந்த இடத்தை வெகு நாட்களாக தனது படுக்கை அறையாக பயன்படுத்தி வருகிறது. நள்ளிரவு நேரத்தில் அதன் படுக்கையறையே அதற்கு கழிவறையாகவும் மாறிவிடுவது பற்றி சென்னையில் யாருக்கும் தெரியாது.

மதிய வேளையில் உண்ட களைப்பில் அந்த நாய் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் யாரேனும் அதன் வாலை மிதித்து விட்டால், அந்த நாய் வெடுக்கென்று தலை நிமிர்த்தி பார்க்கும். பிறகு மிதித்தவனை பெரிய மனது பண்ணி மன்னித்துவிட்டு திரும்ப நித்திரை கொள்ள ஆரம்பித்து விடும். அந்த நாய் மன்னிப்பை கற்றுக் கொண்டது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்.

அந்த நாயை பார்த்து நானும் மன்னிக்கக் கற்றுக் கொண்டேன். என் பின்னால் நின்று முட்டித் தள்ளிக் கொண்டிருந்தவனை நான் 16 முறை மன்னித்துவிட்டேன். பாவம் அவன் அதிக பயத்துடனும், படபடப்புடனும் காணப்பட்டான். எங்கே வரிசையில நான் முன்னே நகர்ந்ததும், பின்னே வந்து டம்மென்று முட்டிக் கொண்டு நிற்கவில்லையென்றால் இடையில் வந்து எவனும் புகுந்து கொள்வானோ என்கிற பயம். வேறொன்றுமில்லை. அவன் மீது எனக்கு அன்பு பொங்கி வழிந்தது. என் கோரைபற்களிலிருந்து எச்சில் தெரித்து விழும் அளவிற்கு அன்பு பொங்கி வழிந்தது.

அவன் ஏன் வயதுக்கு வந்த பெண்ணை உரசுவதைப் போல் இடித்துக் கொண்டே வருகிறான் என்று எனக்குத் தெரியவில்லை. திரும்பி நின்று மீசையை முறுக்கிக் காண்பித்தால் ஒருவேளை அவனுக்கு பயம் ஏற்படலாம். ஆனால், அவன் கவனிப்பதாய் தெரியவில்லை. விஜய் படம் பார்ப்பவன் போல.

பொதுவாக பெண்கள் தான் கன்னத்தில் அறைவார்கள். அல்லது தனது ஒரு செருப்பை கழற்றி அடிப்பார்கள். ஒரு ஆணாக பிறந்துவிட்ட நான் எப்படி அதையெல்லாம் செய்ய முடியும். ஆணாக பிறந்தாலே இதுதான தொல்லை. எனக்கு பெண்மைத் தன்மையுடைய வன்முறையில் சுத்தமாக விருப்பமில்லை. இதை முட்டிக் கொண்டு நிற்கும் அந்த இளைஞனால் புரிந்து கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன். அவனால் நிச்சயமாக என்னை புரிந்து கொள்ள முடியும். அவனால் நிச்சயமாக என்னை மன்னிக்க முடியும். அந்த ஒரு காரணத்தால் மட்டும் தான்……… வேறொன்றுமில்லை.

ஆனால் ஒரு குத்துக்கு முகம் இவ்வளவு வீங்கியிருப்பது அநியாயம். எனக்கு அந்த நாயின் அளவுக்கு கூட பொறுமையில்லை என்று நொந்து கொண்டுதான் என்ன பிரயோஜனம். உடனே அங்கு ஸ்காட்லாந்து போலீசார் ஐயோ மன்னிக்கவும், தமிழ்நாட்டு போலீசார் வந்து விட்டார்கள். இந்த முறை நான் வெள்ளை நிற உள்ளாடை அணிந்திருந்தேன். அது சமாதானத்தின் அடையாம்.

எனக்கு ஆள் வைத்து அடிப்பதில் சுத்தமாக விருப்பமில்லை. முக்கிய காரணங்களும் முதன்மையானது எனது சம்பளம் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அதில் இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் போக 5 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே அனுமதிக்கப்படும். இதன் நோக்கம் என்னவென்றால் ‘நீ சோறு தின்று உயிருடன் இருந்தால் போதும், வந்து வேலையை பார்” என்பதாகும். சென்ற வருடம் 250 ரூபாய் சம்பள உயர்வு கிடைத்தது. வீட்டு வாடகை என்ற பெயரில் 500 ரூபாய் அநியாயமாக ஏற்றிய மதிப்பிற்குரிய வீட்டுச் சொந்தக்காரரை, இவ்வளவு குறைந்த சம்பளம் வாங்கக் கூடிய நான் எப்படி ஆள் வைத்து அடிப்பது. நடிகை த்ரிஷாவை போல் குதிரை வால் வைத்து கொண்டை போட்டிருக்கும் அந்த 35 வயது ரவுடி சார், எனக்கு நன்றாக தெரிந்தவர்தான் என்றாலும் அவர் என்ன கூறுகிறார் தெரியுமா? அவரது ஒருவேளை பிரியாணிக்கு ஆகும் செலவே 500 ரூபாய் ஆகுமாம். அதில் கண்டிப்பாக ஆட்டின் வலது மற்றும் இடது கால்களின் தொடைப்பகுதி இருக்க வேண்டுமாம். அதோடு டாட்டா சுமோ மட்டும் தான் அவருக்கு ஓட்டத் தெரியுமாம். அடுத்தத் தெருவில் தான் என் வீட்டுச் சொந்த்காரர் இருக்கிறார் என்றாலும், ஆட்டோ அவரது உடல் நிலைக்கு ஒத்துக் கொள்ளாதாம். எனக்காக 2 ஆயிரம் ரூபாய் தனது சம்பளத்தில் இருந்து குறைத்துக் கொள்வதாகக் கூறினார். நான் கடவுளிடம் வேண்டினேன், அவரது மொத்த சம்பளம் 2500 ரூபாயாக இருக்க வேண்டும் என்று, ஆனால் இனிமேல் அந்த ஆளிடம் வேண்டிக் கொள்ளவே கூடாது என்கிற முடிவுக்கு 129வது தடவையாக தள்ளப்பட்டேன். வாய் கூசாமல் 10 ஆயிரம் ரூபாய் கேட்கிறார் அந்த ரவுடி சார். நான் மீதி 8 ஆயிரம் ரூபாய்க்கு 8 மாதங்கள் போராட வேண்டும்.

விஷம் என்று வெள்ளை பேப்பரில் கொட்டை எழுத்தில் எழுதி, அதை டானிக் பாட்டிலில் ஒட்டி வைத்து, சென்ற வாரம் முழுவதும் கேமராவை பார்த்து வசனம் பேசிக் கொண்டிருந்த அந்த சீரியல் நடிகை எனக்கு திடீரென ஞாபகத்திற்கு வந்தாள்.

விஷம்…………………. இவ்வளவு சுலபமான வழி இருக்கும் பொழுது நான் எப்படி வன்முறை பாதைக்குத் திரும்பினேன். அஹிம்சை முறையில் அமைதியாய் உயிரை எடுப்பதை விட்டுவிட்டு, அசிங்கமாய் அடிதடியில் இறங்கப் பார்த்தேனே. கடவுள் என் கண்களை திறந்துவிட்டார். அந்தக் கடவுளின் திருவிளையாடலைத்தான் என்னவென்று சொல்வது. இவ்வளவு நேரம் சோதித்தது இதற்காகத்தானோ? என்னவோ?

நான் போட்டுக் கொடுக்கும் காபி என் வீட்டு சொந்தக்காரருக்கு மிகவும் பிடிக்கும். அது ஏற்கனவே விஷம் போல்தான் இருக்கும் என்றாலும், அதை இன்னொரு டம்ளர் கேட்டு வாங்கிக் குடிப்பார். அதில் விஷத்தை கலந்து விட்டால் போதும். விஷயம் முடிந்தது.

ஆனால் 2 தவறுகள் நடந்துவிட்டது. விஷம் கலந்த காப்பியை குடித்துவிட்டு அடுத்த நாள் காலை 50 தண்டால் போடுகிறார் என்றால்………… நடந்தது என்ன……….. ஆராய்ச்சிக்குப் பிறகு கண்ணில் தட்டுப்பட்ட 2 தவறுகள்.

1. காப்பிப் பொடி பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த எலி மருந்து பொடி அரை பாக்கெட் குறைந்திருந்தது. எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. நான் எந்த எலிக்கும் மருந்து வைக்கவில்லை. காரணம் என் அறை எலிகளுக்க எலிமருந்து பொடி என்பது சரவணபவன் ஹோட்டலில் விருந்து சாப்பிடுவது போன்றதாகும். ஒவ்வொரு நாளும் அவைகள் தலைநிமிர்த்தி என்னை பார்க்கும் பொழுது ‘எனக்கு உணவு வைக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்” என்று கேட்பது போல் தோன்றுகிறது.

2. நான் கஷ்டப்பட்டு வாங்கிய அந்தவிஷம இருந்த டப்பாவின் அடிப்பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது ‘மேட் இன் இந்தியா”

கடவுளே உன்னை 130வது தடவையாக நிராகரித்துவிட்டேன். நீ 130 தடவை கருணையேயின்றி என்னை ஏமாற்றிவிட்டாய்.

அன்று அந்த ஆட்டோ ஓட்டுனர் கிண்டியிலிருந்து, பரங்கி மலை செல்வதற்கு 250 ரூபாய் கட்டணமாகக் கேட்டார். ‘அந்த தொகையை சிரிக்காமல் கேட்டதற்காக உங்களுக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டதற்கு கடுமையாக கோபித்துக் கொண்டார் அந்த ஆட்டோ ஓட்டுனர். ஏன் மீதி 750 ரூபாயை விட்டு விட்டீர்கள். மொத்தமாக ஆயிரம் ரூபாய் கேட்டிருந்தால் எவ்வளவு கெத்தாக இருந்திருக்கும் என்று ஒரு நல்லெண்ணத்தின் அடிப்படையில் கேட்டதற்கு சண்டைக்கே வந்துவிட்டார் அந்த ஆட்டோ ஓட்டுனர்.

அவர் என்னிடம் கூறினார், ‘வெங்காயம் என்ன விலை விற்கிறது தெரியுமா? விலைவாசியெல்லாம் ஏறிப்போச்சு சார், நாங்க நியாயமாத்தான் கேட்கிறோம்”

எனக்கு நியாயத்தின் அர்த்தம் மறந்து விட்டது என்றே தோன்றுகிறது. இல்லையென்றால ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் நான் ஏன் இவ்வளவு பேரம் பேசப்போகிறேன். ஒரு வேளை நான் மட்டும் ஜெர்மனியிலிருந்து வெங்காயம் வாங்கி சமைத்து சாப்பிடுகிறேனோ என்கிற சந்தேகம் வேறு என்னைத் தொற்றிக் கொண்டது. என் பள்ளி ஆசிரியர் ஜெர்மனியை உலக மேப்பில் காட்டுமாறு, கைகளில் பிரம்பை வைத்துக் கொண்டு மிரட்டிய போது கூட, நான் அண்டார்ட்டிகாவைத்தானே அவரிடம் சுட்டிக் காட்னேன். எனக்கு சத்தியமாக ஜெர்மனி எங்கிருக்கிறது என்று தெரியாது. நானும் இதே இந்தியாவில், இதே தமிழகத்தில், இதே சென்னையில் தான் வெங்காயம் வாஙகி சமைத்து சாப்பிடுகிறேன் என்பதை அம்மன் கோவிலில் சூடம் பொருத்தி அதை அனைத்து சத்தியம் செய்யக் செய்யக் கூட தயாராக இருக்கிறேன். விலைவாசி உயர்வுமீது ஆட்Nடுh ஓட்டுனர்கள் சுயஉரிமை கொண்டாடுவது சற்றும் நியாயமே இல்லாத விஷயம்.

சரியாக கணக்கிட்டுப் பார்ப்போமேயானால் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய விமானத்தில் கூட அவ்வளவு தொகை கேட்கப்படுவதில்லை. உன் எதிர்கால லட்சியம் என்ன? என பள்ளிச் சிறுவனிடம் கேட்கப்பட்டால், நான் மருத்துவராக விரும்புகிறேன், நான் இன்ஜீனியர் ஆக விரும்புகிறேன் என்று சொல்லாமல் நான் ஆட்டோ ஓட்டுனராக விரும்புகிறேன் என்று சொல்லிவிடுவான் போல. ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு 250 ரூபாய் வசூலிக்க முடியும் என்றால் யார்தான் டாக்டர் ஆக விரும்புவார்கள்.

இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் அவ்வப்பொழுது நியாபகப்படுத்திவிடுகிறார்கள் நடைபயிற்சி உடலுக்கு அவசியமானது என்று. ஏன் அதிகாலையில் தான் நடைபயிற்சி செய்ய வேண்டுமா? எப்பொழுது நடந்தால் தான் என்ன? தமிழக மக்களின் உடல் நலத்தை பாதுகாப்பதில் மருத்துவர்கள் மட்டுமல்ல, ஆட்டோ ஓட்டுனர்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

மேற்குத் தொடர்ச்சி மலையை செங்குத்தாக நிற்க வைத்தது போல் பெரிய, பெரிய தொப்பைகளை சுமந்து திரியும் இந்திய மக்கள் மீதுதான் அவர்களுக்கு எவ்வளவு அன்பு. ஒரு ஆட்டோ ஓட்டுனர் கேட்கும் தொகை காதில் விழுந்தவுடன் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நடைபயிற்சி செய்வதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுகிறான். மனதிற்குள்ளாக நடைபயிற்சியில் உள்ள நன்மைகளைப் பற்றி பட்டியலிடுகிறான். சர்க்கரை வியாதி உடையவர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியா என்ற அவப்பெயரை நீக்கும் முயற்சியில் ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனரும் பங்கெடுத்துக் கொள்கிறார் என்பதில் இந்தியராகிய நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.

அன்று அந்த ஆட்டோ ஓட்டுனரைப் பார்த்து விலையுயர்ந்த உணவுப்பொருளாகிய மதிப்புமிக்க வெங்காயத்தை உருவகமாக்கி இவ்வாறு கூறினேன்.

‘யோவ் வெங்காயம் மாதிரி பேசாதயா, உங்க அநியாயத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு”

இந்த வார்த்தையை கேட்டபிறகு, கதாநாயகியை கட்டிப்பிடித்து உம்மா கொடுக்க வரும், கதாநாயகனைப்போல் ஆவேசமாக பாய்ந்து வந்தார் அந்த ஆட்டோ ஓட்டுனர். ஆனால், என் கன்னத்தில் விழுந்ததோ ஒரு கும்மாங்குத்து.

அப்பொழுதுதான் அந்த வாசகம் என் நியாபகத்திற்கு வந்தது.

‘உன் ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு”

ஆனால் இந்த பேருண்மையை அந்த ஆட்டோ ஓட்டுனர் அறிந்து கொள்ள வேண்டுமே. அந்த வாய்ப்பை வேறு யார்தான் அவருக்கு வழங்குவார்கள். அவருக்கும் மறு கன்னம் என்ற ஒன்று உண்டு என்கிற உண்மையை அவர் எப்பொழுதுதான் புரிந்து கொள்வது. அதற்காகத்தான் ………….. அந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான் அவரது ஒரு கன்னத்தில் நான் மிதவன்முறையை கடைபிடித்து மெதுவாக அறைந்தேன். ஆனால் துரதிஷ்டமான விஷயம் அவர் மறு கன்னத்தை காட்டவே இல்லை. அதனால் அவருக்கு மறு கன்னத்தை காட்டும் வாய்பை 16 முறை வழங்கினேன். ஏனெனில் 17வது முறை அவர் கீழே விழுந்துவிட்டார். மயக்கம் போல.

அவர் 10 முறை எனக்கு அந்த வாய்பை வழங்கினார். ஆனால் மயங்கி விழுந்த ஆட்டோ ஓட்டுனர் கடைசிவரை மறு கன்னத்தை காட்டுவது என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளவே இல்லை என்பதை நினைக்கையில் வருத்தம் மேலிடுகிறது. என்ன செய்வது.

ஆனால் இந்த முறை சைரன் ஒலியை நாலாபுறமும் சிதறவிட்டபடி வந்த காவல்துறையினர், 5 பைசா செலவில்லாமல் என்னை அந்த காருக்குள் அமரவைத்து பரங்கிமலை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த காவல்துறையினரின் சேவை மனப்பான்மை கூட இல்லை, அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு. காவல் நிலையத்தின் அருகில் தான் என் வீடு இருக்கிறது என்று நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் 2 நாட்கள் கழித்துதான் என்னை வெளியே விட்டார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். அந்த சைரன் ஒலி பொருத்தப்பட்ட காரில் ஏசி போடப்பட்டிருந்தது.

Series Navigation

சூர்யா லட்சுமிநாராயணன்

சூர்யா லட்சுமிநாராயணன்