வெளிச்சம்..

This entry is part [part not set] of 34 in the series 20101107_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


*******************

கோவையில் ஈச்சனாரி பிள்ளையார் கோயில் தாண்டியது. கை அனிச்சை செயலாய் வணங்கியது.. அம்மாவும் அப்பாவும் காத்திருப்பார்கள்.. மெல்ல வீசிய காற்றில் பவளமல்லி வாசம்.. தூங்கும் கணவரின் தோளில் சாய்ந்தாள்.. அம்மாவின் ஆயாவும் வந்து இருக்கிறார்களாம்.. பேத்தி மகளின் தலைதீபாவளிக்கு.. தலைமுறை தாண்டிய உறவுகள்..

ஜூன் மாதம் திருமணம்.. அடுத்த ஐந்து மாதங்களில் தீபாவளி.. தாய் வீடு செல்லும் மகிழ்ச்சியோடு புகுந்த வீட்டினரை விட்டுச் செல்லும் சிறிய பிரிவுத்துயரும் இருந்தது.. மாமியார் தாய்க்கும் மேலே அன்பு செலுத்துவதாலோ என்னவோ..

எப்போது எழுந்தாலும் எழுந்து கொள்ளும் முன்னரே மாமியார் எழுந்து சுறுசுறுப்பாய் வேலைசெய்வது ஆச்சர்யம்தான்..அவளுக்கு.. எத்தனையோ முறை முயன்று விட்டாள்.. இந்த விஷயத்தில் மட்டும் வெல்ல முடியவில்லை.. காபியைக் கலந்து கையில் கொ்டுக்கும் அன்பு வேறு .. தன் பிள்ளைகளைப் போல நடத்துவதும்.. எதையும் செய் என்று சொல்லாததுமாய் வித்யாசமான மாமியார்தான்..

மாமியார் சொல்லவில்லை என்பதால் எதுவும் செய்யாமலும் இருப்பதில்லை அவளும்.. நன்கு சமைப்பாள்.. சில சமயம்.. கடலை எண்ணெய்க்கு பதிலாக நல்லெண்ணெயில் பூரி சுட்டது., வெறுமே வறுத்த உளுந்த மாவை கோதுமை மாவு என நினைத்து சப்பாத்திக்குப் பிசைந்து பின் அதை மச்சினன்கள் உதவியோடு முறுக்குக் கட்டையை ஆளுக்கு ஒரு பக்கம் முக்கி முக்கி முறுக்குப் பிழிந்தது என சிலதும் இருக்கு.. ஊரிலிருந்து வந்த மாமியார் ஏன் இப்படி செய்தாய் ஒரு வார்த்தை கூட கேட்பதில்லை..

பின் நன்கு சமைக்கக்கற்று மூன்று ஃப்ளேவர்களில் ஐஸ்க்ரீமும்., கட்லெட்டும்., சமோசாவும் போட்டுக் கொடுத்து அனைவரின் பாராட்டையும்வாங்கி இருக்கிறாள்.. மச்சினன்கள்., நாத்தனார்தான். இந்த விஷயத்தில் சாப்பிட்டு ஊக்குவித்தவர்கள்.. கணவர் இதில் எதுவும் தலையிடுவதில்லை..

காலையில் மாமனார் எழுந்தது்ம் சிவ பூஜை செய்வார்.. ஒரு தாம்பாளத்தில் சிவன்., நந்தி., அம்பாள்., கோஷ்ட தெய்வங்கள் எல்லாம் பிரதிஷ்டை செய்து.. பாலாபிஷேகம்., செய்வார்.. கடைசியில் சங்காபிஷேகமும் நடக்கும்.. 108 சூடம் ஏற்றுவது.. எல்லா தெய்வங்களின் பேரையும் கோலத்தில் எழுதி வணங்குவது., காக்கைக்குச் சோறிட்டபின் சனிக்கி்ழமைகளில் உண்பது.. சாமி பாடல்களையும்., ஸ்தோத்திரங்களையும் சொல்வது என வீடே பக்தி மணத்தில்தான் மிதக்கும்..

இருந்தும் .,” ஏம்மா ஷார்ட் ஹாண்ட் படிச்சே இல்லையா அதை முடிச்சு பரிட்சை எழுது .. எம் ஏவை செகண்ட் இயர் கம்ப்ளீட் பண்ணு..” என ஊக்குவித்துக் கொண்டே இருப்பார்.. ஹ்ம்ம் சொல்ல இருக்கு ஏராளமா..

முதல் முதல் வீட்டுக்கு டிவியை கணவர் வாங்கி வந்ததும்., ஃப்ரிட்ஜ் வந்ததும் மாமியார் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

எப்போது ஊர் வந்தது என தெரியவில்லை.. விடிந்து இருந்தது.. முதல் தீபாவளி என்பதால் ஒரே கும்மாளம்தான்.. மச்சினன்கள் மூவரும் மாப்பிள்ளையோடு வெடி வெடித்து ., புதுசு உடுத்தி சினிமா பார்த்து அரட்டை அடித்து அமர்க்களப்படுத்தினார்கள்..

அம்மா,., ஆயா., பாட்டி அனைவருக்கும் ஆச்சர்யம்தான்.. அவளுக்கு மாமியாரைப் பற்றி சொல்ல அனேகம் இருந்தது,, அவர்கள் காது புளிக்கும் வரை புகழ் பாடிக் கொண்டிந்தாள்..

*******************************************************************************************************

பல வருடம் ஆகிவிட்டது .. இந்த வருடம் தீபாவளி.. எப்படி பிள்ளைகளை வளர்த்தோம் என்றே தெரியவில்லை.. கல்லூரிக்கு வந்து விட்டான் சின்னவன் .. பெரியவன் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறான்..

தம்பிகள் திருமணம் முடிந்து குழந்தை குட்டிகளோடு குடும்பஸ்தர்களாகி விட்டார்கள்.. நிறைய மாற்றம் வாழ்விலும் .. பிஸினஸ் செய்து நொடித்து மீண்டது., பல ஊர்களுக்கும் ட்ரான்ஸ்ஃபர் நிமித்தம் சென்றது.. கற்றுக் கொடுத்த குழந்தைகள் பெரிய மனுஷன்களாகி அம்மாவுக்கு கணனி சொல்லித்தருவது என ..

தோழிகளின் மகள்களுக்கு திருமணமாகிக் கொண்டிருந்தது.. சிலர் பாட்டிகளாகவும் ஆகிவிட்டார்கள்.. சென்ற வாரம் ஒரு தோழி சொன்னாள்.. ” அம்மாவா அன்பு செலுத்துறது கஷ்டம் இல்லைடி.. மாமியார் அம்மா மாதிரி அன்பு செலுத்துறது ரொம்பக் கஷ்டம்.. என்று..என் மாமியாருக்கு நான் என்றால் ரொம்பப் பிடிக்கும்.. என் மருமகளையும் எனக்கு பிடிக்குது .. ஆனா சிலது சொல்லாம இருக்க முடியல.. சொன்னா ..பேசமாட்டேங்கிறா.. கஷ்டமாருக்கு .. தப்பை சொல்லவே கூடாதுங்குறாங்களா இவங்க.. “

கேட்டேன் .. “ ஏண்டி நீ கல்யாணமான புதுசில எல்லாம் கரெக்டாத்தான் செய்தியா என்று “ “ என் பையன் ..எனக்குத் தெரியும் அவனுக்கு இதுதான் பிடிக்கும் என்று நீ நினைக்கிறாய்.. ஆனா அவங்க அம்மா கத்துக் கொடுத்தது வேறு முறையில் இருக்கலாம்.. விட்டுத்தான் பாரேன்.. ஒன்றிரண்டைக் கெடுக்கட்டும் ..பின்தானே கற்றுக் கொள்வாள் என்று.. நாமெல்லாம் டிகிரி படித்தும் என்ன வேலைக்கா போனோம்,.. வீட்டில் இருந்ததோம்..எல்லாம் ஆர அமரக் கற்றுக் கொண்டோம்.. வேலைக்குப் போற அவ செய்து கொடுக்க நினைக்கிறத அப்படியே விடு.. செய்து் பழகட்டும்.. உன்னிடம் ஆலோசனை கேட்டா மட்டும் சொல்லு ..”என்றேன்..

ஆச்சு ..எனக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க.. திருமணம் ஆகும் வரை எனக்கு அவர்கள் மீது இருக்கும் உரிமையை மருமகள் வந்ததும் விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ வேண்டும்.. அதற்கு நானும் என் மாமியார் போல குணம் நாடி., குற்றமு்ம் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்.. என இருக்க வேண்டும் என முடிவு செய்தேன்…

தீபாவளி பலகாரம் எல்லாம் செய்யணும்.. பசங்க ஹாஸ்டலில் இருந்த வர்றாங்க .. நண்பர்கள் கூட்டத்தோட..கொட்டமடிக்க …விடியத்துவங்கி இருந்தது .. வெளிச்சத்தில் எல்லாம் பளிச்சென்று இருந்தது மனசைப் போல..

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்