ஆண்டு 2050

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

முருகன் சுப்பராயன்


அழகான அமைதியான கிராமத்தில் தடத்தடவென சத்தத்துடன் காவல்துறையினர் இரு சக்கர வாகனத்திலும் நான்கு சக்கர வாகனத்திலும் மண்புழுதிக் கிளப்பிக்கொண்டு வேகமாக சென்றனர்.
என்னடா பிரச்சினை, காவல்துறையினர் போறானுங்க-னு பண்ணைக் குளத்தில் மாடு குளிப்பாட்டிக் கொண்டிருந்த ஜப்பான் பிள்ளை, குளத்தோரம் இருந்த பூசனை, இலுப்பை மரத்தில் ஆடுகளுக்கு தழைகள் ஒடித்து கொண்டிருந்த காரைக்காலானிடம் கேட்டார்.
“என்ன.. பள்ளிகூடத்துக்கு பக்கத்துல சாராயம் விக்குற பாலாஜிய பிடிக்க வந்து இருப்பாங்க… மாசக் கடைசி இல்ல… அவங்களுக்கும் கேஸ் வேணும்ல என்றனர் அந்த இளைஞர்கள். ”

காவல்துறையினர் வாகனங்கள் பள்ளிகூடத்துக்கு சாலையில் நுழைந்ததுமே, சாராயம் குடித்து கொண்டிருந்தவர்கள் மூங்கில் தோப்பிலிருந்து திக்குக்கு ஒன்றாக ஓட ஆரம்பித்தனர். பாலாஜியும் மோகன்தாசும் அமைதியாக போலீசாரை வரவேற்று வெள்ளை சாக்கை விரித்து உட்கார சொன்னார்கள்.

டேய் மோகன்தாசு, அய்யாவுக்கு சரக்கு ஊத்திக் கொடு என்றான் பாலாஜி.
சாராய பாக்கெட்டை எடுத்து பிரிக்க போனவனை தலையில் அடித்த பாலாஜி, அய்யா வந்து இருக்காங்க, ஸ்பெசல் சரக்கு கொடுக்கனும்டா, போயி தெற்கு மூலையில் பாம்பு புற்றுக்கு பக்கத்தில் இருக்குற சரக்கு எடுத்து வா என்றான்.
பதுக்கி வைத்திருந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் கேனில் உள்ள கலப்படம் இல்லா சாராயத்தை சிறு கேனில் ஊற்றி எடுத்து வந்த மோகன்தாசு, கிளாசில் ஊற்ற போனவனை, தண்ணில நல்ல அலம்பிட்டு ஊற்றுடா என்றான் பாலாஜி.
வந்திருந்த அனைவரும் சாராயம் குடித்துவிட்டு, டேய் என்னடா இந்த ஊருகாயில காரமே இல்ல என்று அலுத்துக்கொண்ட காவல்துறை ஆய்வாளர், சரி ஒரு சாராய கேனை வாகனத்தில் வச்சிட்டு ஏறி உட்காருடா என்றார்.

காவல்துறையினருக்கு கொடுக்க ரூபாய் 2000 மட்டும் கையில் எடுத்துக் கொண்டு, மீதியை வீட்டுல கொடுத்துடுன்னு மோகன்தாசு கையில் திணித்து விட்டு, பாலாஜி ஒரு காலி பிளாஸ்டிக் கேனை எடுத்து வைத்துக்கொண்டு போலிஸ் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டான்.

அடுத்த நாள், ஏட்டு எகாம்பரத்திடம் கைதிகள் பதிவேட்டில் தேவையான இடத்தில் கையெழுத்து வாங்கிட்டு பாலாஜிய என்னை வந்து பார்க்க சொல்லு என்றார் காவல்துறை ஆய்வாளர்.
“டேய் பாலாஜி இந்த மொட்டை கடுதாசிய பாரு உங்க ஊருலிருந்து யாரோ நீ எந்த இடத்துல சாராயம் விற்கிறாய் என அழகா படம் போட்டு அனுப்பி இருக்கான். இந்த கடுதாசி மாவட்ட கண்காணிப்பாளர் கையில் மட்டும் கிடைச்சிட்டுருந்தா அவ்ளோ தான். நீ என்ன மயிர் புடிங்கிட்டு இருக்கியான்னு கேட்பார், அது மட்டும் இல்ல குண்டர் சட்டத்துல கைது செய்ய சொல்வார்” என்றார் காவல்துறை ஆய்வாளர்.

சரிங்க சார், நான் பாத்துக்குறேன்னு என கோபத்தோட கிராமத்திற்கு வந்து சேர்ந்தான் பாலாஜி.

அந்த மொட்டை கடுதாசிய எழுதியது யாராட இருக்கும் என சக கூட்டாளிகளிடம் கேட்க, இது நிச்சயம் அந்த வழுக்க தலை வாத்தியார் மொவன் பரணி தான் எழுதி இருப்பான். அவன் தான் போன மாசம் பாரதி இளைஞர் மன்றம்னு தொடங்கி, எங்கு பார்த்தாலும் கிடக்குற காலி சாராய பாலித்தின் பைகளை எல்லாம் பொறுக்கி மாரியம்மன் கோயில் வாசலில் போட்டு நம்ம ஊரு மக்களை எல்லாம் வரவழைத்து “இத பாருங்க இந்த கள்ள சாராயம் குடிக்குறது உயிருக்கு மட்டும் ஆபத்து இல்ல. இந்த மக்கி போகாத சாராய பாலித்தின் பைகள், பாண்பராக் பாக்கெட் எல்லாம் நம்ம வயலில் போயி பயிறு வளராது, அதுக்கப்பறம் விளைச்சல் இருக்காது. எல்லாரும் இதுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நம்ம ஊருல சாராயம் விக்காம பாத்துக்கணும். அது மட்டும் இல்ல இந்த மக்கி போகாத சாராய பாலித்தின் பைகள், பாண்பராக் பாக்கெட் எல்லாம் இல்லாத ஊரா ஆக்கிக் காட்டணும்-னு சொல்லி இருக்கான்.”

சரிடா அந்த வழுக்க தலை வாத்தியார் வீட்டுக்கு போயி அவர மிரட்டிட்டு வரலாம்னு ஆறு பசங்களோட கத்தி, கம்புகளோடு போயி மிரட்டினான் பாலாஜி.
இத பாருங்க தம்பிகளா இந்த கள்ள சாராயம் உடம்புக்கு ரொம்ப கெடுதல். அது மட்டும் இல்ல, இந்த பாலித்தின் பைகள் எல்லாம் மக்கி போகாம.. செடிகள், கொடிகள், மரங்கள், பயிர் எல்லாம் வளராது. அப்புறம் மழையும் பெய்யாது. தண்ணி இல்லாம சிரம படுவோம் என்று கூறிய வழுக்க தலை சாரை பார்த்து அசிங்கமான வார்த்தைகளை சொல்லி திட்டினான் பாலாஜி.
எங்க அப்பாவப் பத்தி ஏதும் பேசினிங்கனா நான் என்ன செய்வேன்னு தெரியாது என்று சொன்ன பரணியை ஓங்கி அடித்தான் மோகன்தாசு.
அதனை தடுக்க வந்த பரணி அப்பாவின் வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு இந்த ஊரு விட்டே போயிடுங்க.. இல்ல உங்க எல்லாரையும் கொன்னுடுவோம் என்றான் பாலாஜி.

மருத்துவமனையில் மயக்கம் தெளிந்து விழித்து பார்த்த வாத்தியார், வேண்டாம் பரணி…இந்த ஊரை விட்டே போயிடுவோம். இந்த ஊரு வேண்டாம். இங்கே உள்ள மக்கள் எல்லாம் அந்த சாராய விற்கிறவன் பக்கம் தான் நிற்கிறாங்க. நம்மால் இவர்களை திருத்தவும் முடியாது…அவர்களை எதிர்த்தும் வாழ முடியாது. நம்மிடம் மக்கள் பலம் இல்ல, பண பலமும் இல்ல. அதனால இந்த ஊரை விட்டே போயிடுவோம். அவங்களுட்ட நீ எதுவும் பிரச்சினை வச்சிக்காதே சரியா என்றார்.

வேலை மாற்றல் வாங்கி மயிலாடுதுறையில் பணிபுரிந்த ஒரு சில மாதங்கள் கழித்து ஒய்வு பெற்றதும், பரணியின் மேற்படிப்பு படிக்க சென்னைக்கு செல்கிறார்கள்.
சில வருடங்கள் கழித்து பரணியின் மகன் அருள்மொழிதேவன் பள்ளியில் புவி வெப்பம் ஆதலை தடுக்கும் வழிமுறைகள் பற்றிய கட்டுரைக்கு உதவி கேட்கிறான்.
பரணியும் பூமி வெப்பம் அதிகரித்து மழை குறைந்து, நிலத்தடி நீர் குறைந்து, பனிமலை உருகி வெப்பம் அதிகமாகி உடலுக்கு வியாதி வருகிறது, அதற்கு மழை பெருக செடி கொடிகள் வளர்த்து, பிளாஸ்டிக்கை ஒழித்து, கார்பன்-டை-ஆக்சைடை குறைக்கணும் என்று விளக்கி சொல்கிறான். அந்த கட்டுரைக்கு முதல் பரிசும் கிடைக்கிறது.
ஒரு சில வருடங்கள் கழித்து அருள்மொழிதேவன் கல்லுரி படிப்பு முடித்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிப் பெற்று நாகப்பட்டிணத்துக்கு மாவட்ட ஆட்சியாளராக பதவி ஏற்றுக் கொள்கிறான்.

சொந்த கிராமத்திற்கு வருகை தரும் மாவட்ட ஆட்சியாளர் அருள்மொழிதேவன் ரேஷன் கார்டு மற்றும் இந்திய குடியுரிமை நிரந்தர எண் வைத்துள்ள எல்லாருக்கும் மாநில முதலமைச்சர் மு.க. ஆதித்தியாவின் மணிவிழா 5 லிட்டர் இலவச தண்ணீர் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைக்கிறார். இலவச தண்ணீர் பெற மக்கள் முண்டியடித்து சண்டை போடுவதை காவல்துறையினர் ஒழுங்கு படுத்துகின்றனர். தள்ளாத வயதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பாலாஜி தன் பேரனுடன் 5 லிட்டர் இலவச தண்ணீர் வாங்கி செல்கிறான்.

Series Navigation

முருகன் சுப்பராயன்

முருகன் சுப்பராயன்