தொழில் நேர்த்தி

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

ராமலக்ஷ்மி, பெங்களூர்.


சந்துருவுக்கு சந்தோஷமாக இருந்தது தன் தொழில் நேர்த்தியை நினைத்து. ஐந்து வருடங்களில் தனி ஆளாக இருபது முகமூடிக் கொள்ளைகள் நடத்தி விட்டான். ஏடிஎம், ஒதுக்குப் புறமான தனிவீடுகள், சிலபல கடைகளின் கல்லாக்கள் என அவன் கைவரிசை காவல்துறைக்குப் பெரும்தலைவலியாகவே இருந்து வந்தது. போலீசாரின் திறமையைப் புகழ்ந்து ஏதேனும் செய்தி பத்திரிகையிலோ தொலைக்காட்சியிலோ வந்தால் தாங்க முடியாத சிரிப்புத்தான் வரும் அவனுக்கு.

அன்றைய ப்ராஜக்ட்டையும் போட்ட திட்டம் இம்மியும் பிசகாமல் முடித்து விட்டிருந்தான். அவன் குறி வைத்தது ஒரு சின்ன நகைக் கடைக்கு. நகை என்று வந்து விட்டால் சின்னது பெரியது என்பதெல்லாம் ஒரு பொருட்டா என்ன? குண்டுமணி அளவேயானாலும் தங்கம் தங்கமாயிற்றே.

ஓரளவு அதிகமான போக்குவரத்துக் கொண்ட சாலை ஒன்றிலிருந்து பிரியும் சந்தின் முனையில் இருந்தது அந்தக் கடை. நேர் எதிரே பிள்ளையார் கோவில். அதுவும் காலை பத்து மணிக்கெல்லாம் நடை சாத்தி விடுவார்கள். கடையையும் கோவிலையும் விட்டால் அந்தச் சந்து முழுவதும் தனி வீடுகள். மதிய நேரம் ஆள் நடமாட்டமே இருப்பதில்லை.

ஒரு பக்கம் கலகலப்பான சாலை என்பதால் நகைக்கடை உரிமையாளர் காவலாளி ஏதும் வைத்துக் கொள்ளவில்லை. சரியாக இரண்டு மணியளவில் தனது நோஞ்சான் மச்சானின் பொறுப்பில் கடையினை விட்டுவிட்டு உரிமையாளர் சாப்பிடக் கிளம்பிச் சென்றால் திரும்புவதற்கு இரண்டு மணிநேரமாகும். கூட ஒரே ஒரு விற்பனைப் பெண்மணிதான். ஒருவாரமாக தினம் அந்த சமயத்தில் வந்து நின்று ஃபீல்ட் வொர்க் செய்தாயிற்று. பிள்ளையார் தும்பிக்கையை நீட்டிப் பிடித்தால்தான் உண்டு என நினைத்துக் கொண்டான் சந்துரு.

எதிர் திசையில் தன் பைக்கை நிறுத்தி விட்டு சாலையைக் கடக்க நிற்கையில் சரியாக ஒரு ஸ்கூட்டி வந்து நின்றது கடை முன்னே. ஒரு இளம் பெண்ணும், நடுத்தர வயதுப் பெண்மணியும் இறங்கினார்கள். சந்துரு அசரவில்லை. போட்ட திட்டம் நடந்தே ஆக வேண்டும். எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கத்தான் ப்ரீஃகேஸில் சகல ஆயுதங்களும் இருக்கிறதே.

கடைக்குள் நுழையும் முன் தயாராக வைத்திருந்த முகமூடியை மாட்டிக் கொண்டவன், மடமடவென செயலில் இறங்கினான். தானியங்கிக் கதவாகையால் பிறர் சந்தேகத்துக்கு இடமின்றித் தாழிட எளிதாயிற்று. கல்லாவிலிருந்த நோஞ்சான் திடுக்கிட்டு சுகாதரிப்பற்குள் நெற்றியில் துப்பாக்கியை அழுத்தி “ஹேண்ட்ஸ் அப்” என்றான்.

“அலார ஸ்விட்ச் எதையாவது அழுத்த நினைச்சே அவ்ளோதான். நான் சொல்றதையெல்லாம் ஒழுங்காக் கேட்டா நாலு பேருக்கும் உயிர் மிஞ்சும். கூப்பாடு போடலாம்னு நினைச்சீங்க.. ஆட்கள் வருமுன்னயே அடுத்தடுத்து சுட்டுப் போடுவேன். இது சைலன்சர் பொறுத்தின துப்பாக்கி நினைவில இருக்கட்டும்” என்றவன் விற்பனைப் பெண்மணியை நோக்கி “திற என் பெட்டிய” என்றான்.

அதிலிருந்த கயிறுகளையும் துணிப்பந்துகளையும் அவளை விட்டே எடுக்க வைத்து வாடிக்கையாளர்கள் கைகளையும் நோஞ்சானின் கைகளையும் கட்டவைத்து வாயில் துணிப் பந்துகளைத் திணிக்கச் செய்தான்.

“இப்போ ஒழுங்கு மரியாதையா ஷோகேஸில் இருக்கும் நகை அம்புட்டையும் அள்ளிப் இதில போடல அப்புறம் ஒம் பொணத்ததான் இங்கிருந்து அள்ளிட்டு போக வேண்டியிருக்கும்” எனப் பெட்டியைக் காட்ட நடுநடுங்கி அவன் சொன்னவாறே செய்தாள் அவள். காரியம் முடிந்ததும் ஏற்கனவே விதிர்விதிர்த்துப் போயிருந்த அந்தப் பெண்ணைக் கட்டிப் போடுவதும், வாயில துணியை அடைப்பதும் கஷடமாக இல்லை.

“கொஞ்ச நேரத்துல ஒங்க முதலாளி வந்து அவுத்து விடுவாரு. வரட்டுமா கண்ணுங்களா” என்றபடி யாரும் வருகிறார்களா எனக் கவனமாகப் பார்த்து விட்டு, வெளியேறும் சமயம் முகமூடியைக் கழட்டிக் கொண்டவன் பைக்கில் ஏறி சிட்டாய் பறந்து வந்து விட்டான்.

“என்ன மேடம் சொல்றீங்க. அவனை நேரில பார்த்ததே இல்லைங்கறீங்க. இப்பவும் உங்க யாராலேயும் முகத்தைப் பார்க்க முடியல. அப்புறம் எப்படி?” ஆச்சரியமாய்க் கேட்டார் ராம்.

ஆனால் வாடிக்கையாளராக மாட்டிக் கொண்ட பாமாவோ உறுதியாக இருந்தாள் அது அவன்தான் என்று.

“இன்ஸ்பெக்டர் நான் சொன்ன தகவலை வச்சுக்கிட்டு உடனே அவனை வளைச்சுப் புடிக்க முடியுமான்னு முதல்ல பாருங்க. புடிச்ச பிறகு இதோ இந்த நம்பரில் என்னைக் கூப்பிடுங்க. பொண்ணு ரொம்ப பயந்து போயிருக்கா. இப்ப நான் கிளம்பறேன்” என்றவள் மகளை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டியை நோக்கிச் செல்ல அவளை தடுக்க விரும்பவில்லை ராம்.

‘அங்கே குண்டு இங்கே குண்டு’ என வரும் அனாமத்து தொலைபேசித் தகவல்களை எப்படி ஒதுக்க முடியாதோ அதே போல இதையும் எடுத்துக் கொண்டால் என்ன எனத் தோன்றிற்று. அது மட்டுமின்றி பாமாவின் உறுதி மேல் ஏற்கனவே ஒரு நம்பிக்கை படர்ந்து விட்டிருந்தது.

அடுத்த சில மணி நேரத்தில் பாமா வீட்டில் இருந்தார் ராம்.

“உங்களை ஸ்டேஷனுக்கெல்லாம் அலைக்க வேண்டாமேன்னு நானே வந்துட்டேன் நன்றி சொல்ல. நீங்க சொன்ன ஏஜன்ஸியிலே போய் விசாரிச்சதுமே வீட்டின் அட்ரஸ் கிடைத்து விட்டது. மஃப்டியில் ரவுண்டு கட்டி நின்னு அவன் வீட்டுக்குள் நுழைகையிலேயே புடிச்சுட்டோம். நீங்க எப்பேர்பட்ட உதவி செஞ்சிருக்கீங்க தெரியுமா? எனக்கு அவார்டு கிடைக்கோ இல்லையோ, நிச்சயமா உங்களுக்கு ரிவார்டு வாங்கிக் கொடுப்பேன்.”

“அதெல்லாம் வேண்டாம். ஒரு சிட்டிசனா என் கடமையைத்தானே செஞ்சேன்.”

“இருந்தாலும் க்ரேட் நீங்க. அவனோட மெயின் தொழிலு கொள்ளை. ஆனா, ஊரின் பார்வைக்கு அப்பாவியா காட்டிக்க ஒரு தொழில். என்னா கில்லாடிங்கறீங்க! சரி, இப்பவாவது சொல்லுங்க எப்படி அவனை கைகாட்டினீங்கன்னு..”

“இன்ஸ்பெக்டர், அந்த ஏஜன்ஸியிலிருந்து கடந்த அஞ்சு வருஷமா எங்க கம்பெனிக்கு சப்ளையரா இவன்தான் வந்துட்டிருக்கான். முதல்ல இதக் கேளுங்க. நான் பத்து வருஷம் முன்னே மும்பையில் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து ஒருத்தர் ஏதோ விஷயமாய் எங்க மேனஜர்ட்ட பேச ஃபோன் போட்டார். அவர் ‘ஹலோ’ன்னு சொன்ன அடுத்த செகன்ட் . ‘யெஸ் அருண்’ன்னு பேரைச் சொல்ல அசந்தே போயிட்டார். அதுபோலத்தான் அவன் ‘ஹேண்ட்ஸ் அப்’ன்னதுமே எனக்குப் புரிஞ்சு போச்சு..”

அங்கே சிறையில் சந்துருவுக்கு, ‘எங்கேடா வச்சிருக்க முன்ன கொள்ளையடிச்சதையெல்லாம்’ எனக் கேட்டு போலீஸ் தன்னைச் செய்ய போகிற சித்திரவதையை விட, ‘எப்படி எப்படி எப்படி மாட்டினோம்’ என்கிற சிந்தனையே மிகப் பெரும் சித்திரவதையாய் இருக்க..

இங்கே இன்ஸ்பெக்டர் ராம், பாமா சொல்வதை வியப்பு அடங்காமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

“நீங்கன்னு இல்ல, பொதுவா எல்லோருமே ஒரு ஆளைக் கண்ணால பார்த்து உள்வாங்கித்தான் அடையாளம் கண்டுக்கறீங்க. ஆனால் என்னை மாதிரியானவங்க காதால குரலை உள்வாங்கினாலே ஆளைத் தெரிஞ்சிடும்.”

இப்போது ராமின் முகத்திலிருந்த வியப்பு குழப்பமாக மாறுவதைக் கவனித்த பாமா சிரித்தாள்.

“ஏன்னா அது எங்க தொழில் இன்ஸ்பெக்டர். இருபது வருஷமா டெலிஃபோன் ஆப்பரேட்டரா இருக்கேன்.”
*** ***

ராமலக்ஷ்மி, பெங்களூர்.

ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி