அன்பு மகள்

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

சூர்யா லட்சுமிநாராயணன்


அன்பு மகள்

புகை உடலுக்கு பகை என்று எழுதப்பட்டிருக்கும் அட்டைக்கு எதிர்த்தாற் போல் நின்று கொண்டு, ஆழ்ந்து ரசித்தபடி புகை விட்டுக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன், அந்த இடம் அவரது அலுவலக கேன்டீன். எதிரே நூறடி தூரத்தில் அவரது அலுவலக நண்பர் ராமகிருஷ்ணன், கையில் கைப்பேசியுடன், சிரித்த முகத்துடன் ஓடி வந்து கொண்டிருந்தார். அருகே வந்த ராம்கி (ராமகிருஷ்ணன் என்ற பெயர் மருவி ராம்கியாகிவிட்டது) அந்த கைப்பேசியை கோபாலகிருஷ்ணனின் கையில் திணித்தார், பின் அவரது வாயிலிருந்த சிகரெட்டை ஒரு நொடியில் பிடுங்கி தூக்கி எறிந்து விட்டார். அந்த சிகரெட் மீண்டும் உபயோகப்படுத்த முடியாத இடத்தில் (சாக்கடையில்) போய் விழுந்துவிட்டது. கோபாலகிருஷ்ணன், கோப கிருஷ்ணனாக மாறுவதற்குள் கைப்பேசியில் வந்த அந்த மகிழ்ச்சியான விஷயத்தை கூறினார்.

‘கோபாலகிருஷ்ணா, உனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது இப்பொழுது தான் போன் வந்தது.”

அதுக்கு, எதுக்குடா சிகரெட்டை பிடுங்கி தூக்கி எறிஞ்ச என்று பார்வையாலேயே கேட்டார் கோபாலகிருஷ்ணன். அந்த பார்வை குறிப்பை புரிந்து கொண்ட ராம்கி இவ்வாறு கூறினார்.

‘நீ இப்படி பொறுப்பில்லாமல் சிகரெட் பிடிச்சுகிட்டிருந்தா உன் பொண்ணுக்கு எப்படி நகை சேர்க்க முடியும்………….ம் , சிகரெட் பிடிக்கிறத விட்டிடு, அந்த காச மிச்சப்படுத்துனா ஒரு பத்து பவுனாவது சேத்துடலாம்ல”

இவ்வளவு நேரமாக கோபாலகிருஷ்ணனின் மூக்கு மற்றும் வாய் வழியாகத்தான் புகை வந்து கொண்டிருந்தது. இப்பொழுது காதின் வழியாகவும் வழியமைத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தது புகை.

மருத்துவமனையில், பெண் குழந்தை அழகாக இருந்தாள். அனைவரும் பாராட்டினார்கள், இங்கு மட்டும் தான் பொழுது போகவில்லையென்றால் கூட பாராட்டுவார்கள். மருத்துவமனைக்குள் வேகமாக ஓடிவந்தாள் ஒரு பெண்மணி கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை எடுத்து குழந்தையின் கழுத்தில் போட்டாள.; கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சிக்குள்ளாகிப் போனார். அதை உற்றுப் பார்த்தால் தங்கம் போன்று தான் தெரிந்தது. இதயம் லேசாக ஆட்டம் கொடுத்தது, கண்கள் படபடத்தன. இந்த உலகைப் பற்றி நாம் தவறாக எண்ணிவிட்டோமோ என்ற சிந்தனையில் ஆழ்ந்து போனார். பின் இரண்டு மணி நேரம் கழித்து அந்த தங்கச் சங்கிலியை எடுதது தன் கழுத்தில் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டார் அந்த பெண்மணி. மீண்டும் கோபாலகிருஷ்ணனின் இதயம் ஆட்டம் கண்டது. கண்கள் படபடத்தன. இந்தியாவில் இதய நோய் பரவலாக காணப்படுவது இது போன்ற நிகழ்வுகாளால் தான். பின் ஒரு இதயம் இத்தனை முறை ஆட்டம் கண்டால் என்னதான் செய்வது.

சில மாதங்களுக்கு பிறகு

தாய்பாலின் அருமை பெருமைகளை பற்றி தன் மனைவி கோகிலாவிடம் கூறிக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன். கோகிலா, தாய்பால் கொடுப்பதன் மூலம் தன் அழகு எங்கு கெட்டுவிடுமோ என்று நினைக்கும் மாடர்ன் பெண் இல்லையென்றாலும், தாய்பாலின் சிறப்புத் தன்மை குறித்த தனது கருத்தை நிலைநாட்டுவதில் குறியாக இருந்தார் கோபாலகிருஷ்ணன். அவர் கூறியதையெல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டால் படித்துக் குழம்பிப் போகும் சில ஆயிரம் பேர்களில் அமெரிக்க விஞ்ஞானிகள் கூட இருப்பார்கள் என்பதில் எந்த ஆச்சரியமும் இருக்காது. இவ்வளவு பொய், புரட்டுகளையும் காது கொடுத்து கேட்கும் பொறுமை ஒரு இந்திய மனைவியிடம் மட்டும் தான் இருக்கும் எனபதை நிரூபித்து கொண்டிருந்தார் திருமதி, கோகிலா. ஆனால் விஷயம் இவ்வளவு தான், ஒரு பால் பவுடர்; டின் விலை 199 ரூபாய் 50 பைசா.

அன்று திடீரென்று பெரியாரை பற்றி பக்கம் பக்கமாக பேசிக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன். பெரியாரை பற்றி இவ்வளவு விஷயங்கள் கோபாலகிருஷ்ணனுக்கு எப்பொழுது தெரிந்தது என்கிற விஷயம் அலுவலகத்தில் அனைவரின் புருவங்களையும் உயர்த்திவிட்டது. இந்த மத சடங்குகளை பற்றி கிழிகிழியென கிழித்துக் கொண்டிருந்தார்.

‘குழநை;தைகளுக்கு பெயர் வைக்க வேண்டுமானால், வைத்துவிட்டு போக வேண்டியது தானே, ஒரு ஐயர் வருவானாம், மந்திரங்களை ஓதுவானாம், பிறகு அந்த பெயரை 3 முறை குழந்தையின் காதில் சொல்ல வேண்டுமாம். என்ன மூட நம்பிக்கை இது. அமெரிக்கா காரனெல்லாம் இப்படியா செய்து கொண்டிருக்கிறான். சரி அதோடு விட்டார்களா? கடாவெட்டி சோறு போடணுமாம் சொந்த பந்தங்களுக்கு. என்ன கொடுமை சார் இது. இந்த நாடே மூட நம்பிக்கையால கெட்டு குட்டிச் சுவரா போச்சு சார். இவங்களயெல்லாம் நூறு பெரியார் வந்தாலும் திருத்த முடியாது சார்.”

ஹெட் கிளார்க் சீனிவாச ஐயர் கோபத்தில் முகம் சிவந்து போய் விஷயம் தெரியாமல் இவ்வாறு பேசினார்.

‘என்ன கோபாலகிருஷ்ணன், இவ்வளவு பகுத்தறிவு பேசுறேள், ஆனா திருநீறு மட்டும் தவறாமல் இட்டுண்டு வர்றேள்”

சற்று தடுமாறிப் போனாலும், கோபாலகிருஷ்ணன் சமாளித்தார்.

‘சீனிவாச ஐயரே, காலங்காத்தால குளிச்சிட்டு திருநீறு இட்டுகிட்டா தலையில் நீர் இறங்காது உமக்குத் தெரியுமா? இதெல்லாம் சயின்ஸ்”

கோபாலகிருஷ்ணனை பொருத்தவரை எதை பற்றி பேசுகிறாரோ அதுவாகவே மாறிப் போவார். அவரது இத்தனை சமூக சிந்தனைகளுக்கும் அடிப்படைக்காரணம், குழந்தையின் பெயர் வைக்கும் விழாவில் 17,500 ரூபாய் செலவானது தான். பின் இந்த புலம்பல் கூட இல்லையென்றால், அவர் ஒரு நடுத்தர குடும்பஸ்தனாக இருந்து என்ன பிரயோஜனம். லத்திகா என்று பெயர் வைக்க 17,500 ரூபாய் செலவு. என்ன கொடுமை இது. இந்த பணத்திற்கு ஒன்றரை பவுன் நகை வாங்கியிருக்கலாம் என்று நினைக்ககையில் அவருக்கு துக்கம் தாளவில்லை. ஆனால் பெரியார் தான் எவ்வளவு உதவியாக இருக்கிறார். பின் இது போன்ற சமயங்களில் கூட அவரை உபயோகப்படுத்திக் கொள்ளவில்லையென்றால் அவர் எதற்கு. அவர் ஈரோட்டில் பிறந்து மடிந்த சாதாரண வயதான கிழவராக அல்லவா போயிருப்பார்.

அன்று ஒரு நாள் கோகிலா மற்றும் குழந்தை லத்திகாவுடன் கோவிலுக்கு சென்றிருந்த பொழுது. அங்கு சீனிவாச ஐயர் வந்துவிட எப்படியும் சமாளித்துவிடலாம் என அவரது கொளுத்த மூளையில் தேடித் தேடிப் பார்த்து ஒன்றும் கிடைக்காமல் போக, அவர் ஒளிவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

பின்னொரு நாள் குழந்தை லத்திகாவின் தீவிரவாதத் தனத்தை பார்த்து தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்ததார் கோபாலகிருஷ்ணன். அந்த குழந்தைக்கு எப்பொழுதுமே ஒரு பொருள் தரமானதாக இருக்கிறதா இல்லையா என்று சோதித்து பார்ப்பதில் ஆர்வம் அதிகம் லத்திகா தன் தந்தை வாங்கிக் கொடுத்த பல விளையாட்டு சாமான்களில் இந்த சோதனையை மேற்கொண்டிருக்கிறாள். சில சமயம் கட்டிலில் ஏறி நின்று கொண்டு அந்த பொருளை தூக்கி வீசுவாள் தரையை நோக்கி, சில சமயம் மாடியிலிருந்து, சில சமயம் சுற்றிக் கொண்டிருக்கும் மின்விசிறியை நோக்கி. அந்த பொருள் உடையவில்லை என்றால் அது தரமான பொருள், உடைந்து விட்டால் அதை தொடக் கூட மாட்டாள். ஒரு சமயம் டி.வி.யை நோக்கி வீச ( அது ஒரு ரயில் பொம்பை) இடையில் புகுந்து டி.வியைக் காப்பாற்றினார் கோபாலகிருஷ்ணன். கடைசியாக வாங்கிக் கொடுத்த கார் பொம்மையை அவள் பரிசோதித்த விதமே தனி, அந்த குட்டிக் காரில் தான் பயணம் செய்ய வேண்டும் என்று விரும்பினாள். பாருங்கள் அதில் ஏறி உட்கார்ந்ததுதான் தாமதம் அதன் நான்கு சக்கரங்களும் தரையோடு தரையாகிப் போனது. இது போன்ற தரமற்ற விளையாட்டு பொருட்களை வாங்கிக் கொடுக்கும் தன் தந்தையின் மீது அவளுக்கு கடுமையான கோபம். கோபாலகிருஷ்ணன பொம்மை கடைக்காரனிடம் இவ்வாறு கேட்டுப் பார்த்தார்.

‘முற்றிலும் இரும்பால் செய்த உடைக்கவே முடியாத விளையாட்டுப் பொருள் ஏதேனும் இருக்கிறதா?”

‘இருக்கிறது சார்” என்று கூறிய அந்த இளைஞன், புரூஸ்லி பயன்படுத்தும் ‘நின்சா” கட்டையை எடுத்து காட்டினான், லத்திகாவும் அது என்னவென்று புரியாமல் ஆசையாக வாங்கிப் பார்த்தாள். கோபாலகிருஷ்ணனுக்கு என்னவோ இது சரியாகப் படவில்லை. அவள் சாதாரண பிளாஸ்டிக் பொம்மைகளையே ஆயுதத்தை போலத்தான் பயன்படுத்துவாள். இதில் ஒரிஜினல் ஆயுதத்தை வாங்கிக் கொடுத்தால் தன் தலைக்கு உத்தரவாதம் இல்லை, பின் அவள் தன் தலையில் சோதனை செய்தாலும் செய்து விடுவாள். அந்த பொருள் என்னவோ உடையாது தான். ஆனால் அவர் தலை.

வேண்டாம் என்று கூறிவிட்டு வேகமாக கிளம்பிவிட்டார். அவரது ஆழ் மனதில் ஓடிய விஷயம் இது தான். இவளுக்கு வாங்கிக் கொடுத்த விளையாட்டுப் பொருட்களுக்குரிய பணத்தை வைத்து 2 பவுன் தங்க நகை வாங்கியிருக்கலாம்.

லத்திகாவை பொறுத்தவரை உடைப்பதற்கு ஒரு பொருள் இல்லையென்றால், அழ ஆரம்பித்துவிடுவாள். கோபாலகிருஷ்ணனுக்கு சிறு வயதிலிருந்தே கசல் என்னும் இசையை கேட்பதில் ஆர்வம் அதிகம் உண்டு. ஞாயிற்றுக் கிழமைகளில் மதிய வேலையில் தூக்கம் வரவில்லை என்றால் ரேடியோவில் கசல் பாடலை போட்டுவிட்டு தூங்க ஆரம்பித்துவிடுவார். கசல் பாடல்களை தூக்க மாத்திரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்பது அவரது கருத்து. அன்று தான் நிதானித்துக் கேட்டார், தன் குழந்தை லத்திகா அழுவதும், அந்த கசல் பாடலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பது. அவர் ஏதோ கண்டுபிடித்துவிட்டதாகவும், நகைச்சுவை செய்வதாகவும் நினைத்துக் கொண்டு மனைவியிடம் கூற, திருமதி, கோகிலாவோ தன் மகளுக்கு மிகப்பெரிய இசைஞானம் இருப்பதாக நினைத்துக் கொண்டு, ஒரு வீணை வாங்கிக் கொடுத்தால் தான் பச்சைத் தண்ணீர் கூட குடிப்பேன் என விரதம் இருக்க ஆரம்பித்துவிட்டார். வீணையின் விலையை கேட்ட பொழுது நெஞ்சு பதறியது. ஆனால் கோகிலா பச்சை தண்ணீர் குடிக்க வேண்டுமே என்ன செய்வது.

அந்த மிகப்பெரிய விளையாட்டுப் பொருளை எப்படி உடைப்பது என்பது தெரியாமல் திகைத்து போயிருந்தாள் லத்திகா, பின் அதை ஒரு குதிரை பொம்மையாக பாவித்து அதன் மேல் அமர்ந்து கொண்டு சவாரி செய்ய ஆரம்பித்து விட்டாள். கோபால கிருஷ்ணனின் பயமெல்லாம் இது தான், கோகிலா ஒரு குதிரையை வாங்கி வந்தால் தான் தண்ணீர் குடிப்பேன் என்று சொல்லிவிடக் கூடாது. ஆனால் கோகிலா தனது ஆசையை முழுவதுமாக தீர்த்துக் கொண்டார். அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து தினசரி இரு பார்வையாளர்களாவது அதை வந்து பார்த்துச் செல்கிறார்கள். அப்படி பார்த்தச் சென்ற மாமிகளின் ஆச்சரியப்படத்தக்க வசனங்கள் சில

‘ஏண்டீம்மா, கோகிலா திருடன் வரும் போது இதைத் தூக்கி ஓங்கி அவன் மண்டைல நச்சுன்னு அடிச்சா அவன் மிரண்டு ஓடிட மாட்டான், பிடிக்கிறதுக்கு நல்லா வாட்டமா இருக்கு பாறேன்”

‘ஏண்டி கோக்கி, எங்காத்து மாடில வடாம் காய போட்டிருக்கேன் உன் வீணைய செத்த எடுத்துட்டு வந்தண்ணா, காக்கா, குருவி, பக்கத்துல வராம இருக்கும்டி, அப்படியே நானும் வீணை கத்துக்குவேன்.”

‘அடியே கோக்கி இது என்ன மரத்தால செஞ்சது, இந்த மரத்த பார்தா அடுப்புக்கு நல்லா எரியும்னு தோணுது”

‘கோகிலா (காதோரம் ரகசியமாக) வீணை ஒடைஞ்சு போச்சுன்னா அந்த கம்பிய தூக்கி போட்றாதடி, அதுல திரைசீலை செஞ்சு மாட்டிக்கலாம் சரியா”

குழந்தை லத்திகா பல்வேறு வழி முறைகளில் முயற்சி செய்தும் அதை உடைக்க முடியவில்லை. அதில் அவள் இருமுறை காபியை ஊற்றியிருக்கிறாள். பின் ஒரு முறை அதன் மேல் 2க்கு போய் விட்டாள். இதையெல்லாம் பார்த்தும், கேட்டும் கோபாலகிருஷ்ணனின் இதயம் தான் எவ்வளவு வலித்தது என்று யாருக்குத்தான் தெரியும்.

பின் ஒரு நாள் லத்திகாவிற்கு ஜுரம் வந்துவிட்டது, குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார் கோபாலகிருஷ்ணன். எவ்வளவுதான் வைத்தியம் பார்த்தாலும் குழந்தைக்கு ஜுரம் நிற்கவேயில்லை. குழந்தைக்கு நோய்த்தடுப்பூசிகள் எதுவுமே போடவில்லை என்பது மருத்துவரின் குற்றச்சாட்டு. இந்த ஜுரம் சிறிது சிறிதாகத்தான் குணமடையும் என்று அவர் கூறிவிட்டார். இதற்கு மாற்று வழி கண்டுபிடிக்க கோகிலா முனைந்தார். பலவேறு தரப்பினரிடமும் ஆலோசனை கேட்கப்பட்டது, அதில் ராம்கியின் துணைவியார் கூறிய அந்த வழி முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது, அது என்னவென்றால் நோய்களை குணமடையச் செய்யும் சக்தி வாய்ந்த சாமியாரிடம் அந்த குழந்தையை காட்டி பரிகாரம் செய்வது. கோபால் இதிலெல்லாம் தனக்கு நம்பிக்கை இல்லையென்று கூறினால் அவ்வளவுதான், திருமதி. கோகிலா அவரை பார்வையாலேயே எரித்துவிடுவார்.

அன்று வாயில் விரல் வைக்காத குறையாக, கோகிலாவுக்கு பின்னே நின்று கொண்டிருந்தார் வரிசையில், அமைதியாகவும் மற்றும் பவ்யமாகவும். அவ்வளவு கூட்டம். ஒவ்வொருவராக கடந்து செல்ல, ஒன்றரை மணி நேரத்திற்குப் பின்அவர்களது முறை வந்தது. அந்த சாமியார் பார்க்கவே கொடூரமாக இருந்தார். அவரது கண்கள் சொருகிப் போய் கிடந்தது. பட்டசாராயம் குடிப்பார் போல என்று நினைத்துக் கொண்டார் கோபால். கொத்து திருநீரை கைநிறைய அள்ளி குழந்தையின் முகத்தில் வீசினார். தூங்கிக் கொண்டிருந்த லத்திகா கதறி அழ ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு மட்டும் பேசத் தெரிந்திருந்தாள் இவ்வாறு கேட்டிருப்பாள்.

‘எந்த பரதேசி பயல் இப்படி செய்தது” என்று

அவள் குழந்தையல்லவா வேறு என்ன செய்ய முடியும். அந்த சாமியார் மட்டும் பிரான்ஸ் போன்ற தேசங்களில் இந்த செயலை செய்திருந்தால். குழந்தைக்கு எதிரான வன்முறைச் சட்டத்தின் கீழ் 5 வருடங்கள் உள்ளே போட்டு மிதித்திருப்பார்கள், இது இந்தியா அல்லவா?

அந்த சாமியார் எவ்வளவு நேரம் கண்களை மூடிக் கொண்டு மந்திரம் ஓதுகிறாரோ, அந்த அளவிற்கு பில் தொகை ஏறிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். வெகு நேர ஜெபித்தலுக்குப்பின். கண்களை திறந்தார். கோபாலின் மனம் பதறியது. என்ன சொல்லப் போகிறானோ என்று. கோகிலாவின் கண்களில் கருணை ஒளி மின்னியது. பின் அந்த ஆள் இவ்வாறு கூறினான்.

‘ஆத்தா உன் குழந்தையை பார்த்துக் கொள்வாள் போய் வா”

தமிழக அரசு நிச்சயமாக அவருக்கு வரிச்சலுகை அளித்திருக்கும் அப்படி ஒரு சுத்த தமிழ்

கோகிலா : சாமி கட்டணம் எவ்வளவு

கோபால கிருஷ்ணனின், சட்டைப் பாக்கெட்டின் அந்தப் பக்கம் லப்டப் சத்தம் அதிகமாக கேட்டது.

சாமியார் : ஒன்றும் தேவையில்லை போய் வா

ஒரு லிட்டர் ஆரோக்கியா பாலை இதயத்தில் வார்த்ததை போல் உணர்ந்தார் கோபாலகிருஷ்ணன்.
‘நீ நல்லவண்டா” எ;னறு மனதிற்குள்ளாக பாராட்டினார்.

சாமியார் : ஒரு நிமிடம்,……. ஆத்தாவுக்கு செய்ய வேண்டிய நேர்த்திக் கடன மறக்காம செய்திடனும்.

கோகிலா : என்ன நேர்த்திக் கடன் சாமி

சாமியார் : உன் குழந்தையின் இடுப்பு அளவிற்கு ஒரு தங்க அருணாக்கொடி செய்து ஆத்தாவுக்கு சாத்தணும்

அந்த ஒரு நொடியில்;, கோபாலகிருஷ்ணனின் இதயம் வாய் வழியாக வெளியே வந்து விழுந்தது.

‘ஒரு முழுச் சுற்று தங்க அருணாக்கொடி, அதை இதற்கு முன் அவன் கடையில்சென்று வாங்கியிருப்பானா? ஐயோ இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே செல்வேன். இந்த கோகிலா என்ன தன் நகைiயையா கழற்றித் தரப்போகிறாள், புதிதாக அல்லவா வாங்கி போடச் சொல்வாள்”

கோபாலின் உள் மன புலம்பல் யாருக்கு புரிந்ததோ இல்லையோ? ராம்கி புரிந்து கொண்டார். அவரை தனியாக அழைத்துச் சென்றார், பின் இவ்வாறு ஆறுதல் கூறினார்.

‘கோபால கிருஷ்ணன், கவலைப் படாதிங்க, விஷயத்தை சிம்பிளா முடிச்சிடலாம். அதிகம் தேவைப்படாது, அந்த சாமியாருக்கு ஒரு புட்டி சாராயம் போதும். இன்று இரவு வேலையை முடித்து விடலாம், எனக்கு ஏற்கனவே இதில் அனுபவம் உண்டு”

அன்று இரவு சாமியாருடன் நடைபெற்ற காக்டெய்ல் பார்ட்டியின் விளைவாக ஆத்தா விரும்பிய தங்க அருணாக்கொடி, பின் வெள்ளி அருணாக்கொடியாக மாறியது. இன்னொரு காக்டெய்ல் பார்ட்டி நடக்கும் பட்சத்தில் அது கருப்பு கயிறாகக் கூட மாறலாம்.

எத்தனை காட்டாறுகளை கடக்க வேண்டியதிருக்கிறது. தன் அன்பு மகளின் எதிர் காலத்துக்கு சிறிது பணம் சேர்த்து வைப்பதற்குத் தான் எத்தனை போர்கள் செய்ய வேண்டியதிருக்கிறது. உண்மையில் தன்னுடன் ஒப்பிடும்பொழுது ஒரு போர்க்கள வீரன் இரண்டாம் பட்சமாகத்தான் இருப்பான் என்று எண்ணிக் கொண்டார்.

மகள் வளர வளர செலவுகளும் அதிகரித்துக் கொண்டுதான் சென்றன. ஒரு ரூபாய் சேர்த்து வைப்பதற்குள் உயிர் போய்விடுகிறது. ஏதோ ரகசிய உளவாளியைப் போல பணத்தை சேர்க்க வேண்டியதிருக்கிறது. அடுத்ததாக தன் குழந்தைக்காக திரு. கோபால் செய்ய இருக்கும் போர் குழந்தையை படிக்க வைப்பது. பள்ளிகளில் கூட ஆங்கில வழி பள்ளிகூடம், தமிழ் வழிப் பள்ளிக் கூடம் என தனித்தனியாக பிரிந்து கிடக்கிறது. இதில் ஆங்கில வழி பள்ளியைத் தான் பலரும் தங்கள் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கிறார்கள், கோபால் மட்டும் என்ன முட்டாளா?

இளம் வயதில் காவல் துறையில் சேர்வதற்காக கடுமையான உடற்பயிற்சிகளெல்லாம் மேற்கொண்டிருக்கிறார் திரு. கோபாலகிருஷ்ணன். அப்பொழுதெல்லாம் பொங்கி வராத வேர்வை, லத்திகாவை பள்ளியில் சேர்க்க சென்ற போது பள்ளித் தலைமை கேட்ட டொனேஷன் தொகையை கேட்டதும் மொத்தமாக வெளி வந்து விட்;டது. தமது நண்பர் ராம்கியிடம் கேட்டார் .

‘தலைச்சுற்றலுக்கு என்ன கூல்டிரிங் குடித்தால் நல்லது.”

(தொடர்ச்சி அடுத்த பக்கம்)

Series Navigation

சூர்யா லட்சுமிநாராயணன்

சூர்யா லட்சுமிநாராயணன்