நினைவுகளின் பிடியில் ..

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

சக்தி இராசையா


விடிய எழும்பினத்தில் இருந்து ,மாடியில் இருந்து எப்போதும் வரும் அப்பையாண்ணையின் சத்தத்தை காணவில்லையே என ஜோசித்தபடி அம்மாவிடம் “என்னமா அப்பையாண்ணை என்னும் எழும்பவில்ல போல … சத்தத்தையே காணோம் ? எனக் கேட்டேன் தேத்தண்ணியை குடித்தபடி …

“நீ கும்பகர்ணன் மாதிரி கிடப்ப .. இரவு என்ன நடந்து தெரியுமே பிள்ள ..அவருக்கு ஏலாம போயிட்டுது. இங்க அக்கம் பக்கத்தில இருக்கிற எல்லோரும் சேர்ந்து தான் ஆஸ்பத்திரியில சேர்த்தது .. ”

“ஐயோ ஏனம்மா என்னை எழுப்பி இருக்கலாம் தானே .. பாவம் தனிய அங்க என்ன செய்கினமோ … நான் போகட்டே …? ”

“வேண்டம் பிள்ள … அண்ணை இராத்திரி அவரோடதான் போனவன் .. அவன் அங்க நிக்கிறான் தானே …நான் அப்பாட்ட சாப்பாடு குடுத்து விடுறன் ..நீ படிக்கப் போ .. ” என சொல்லியபடி சமையல் வேலையில் மும்மரமானார் .

கல்லூரிக்கு வெளிக்கிட்டு போனாலும் அப்பையான்னையின் நினைவுகள் துரத்திக் கொண்டு இருந்தன ..

பாவம் அப்பையாண்ணை .. 70 வயசு இருக்கும் … அம்மா ,அப்பா அப்பையாண்ணை என கூப்பிட நாங்களும் அப்படியேதான் கூப்பிடுறதும் ..தூரத்து சொந்தமாம் அப்பாவுக்கு ..
நல்ல வசதியாய் காணி ,பூமி என்று வாழ்ந்தவராம் .. நாங்க இங்கால வெளிக்கிட அவர் தான் மண்ணை விட்டு விட்டு வர மாட்டன் என்று இருந்த மனுசனாம் … நாங்க சின்ன பிள்ளையள இருக்கேகிள்ள அம்மா,அப்பாவுக்கு நிறைய உதவி செய்தவராம் …

“செய் நன்றி மறக்க கூடாது ,அந்த மனுஷன் செய்த உதவிகளுக்கு நாம கடன் பட்டு இருக்கிறம் ” என அம்மா அடிக்கடி சொல்லக் கேட்டு இருக்கிறேன் . அவர் மகன் “அவரையும் ,அவர் மனைவியையும் வெளியில் எடுக்கப் போவதாயும் ,அதுவரை அவர்களை பார்த்துக் கொள்ள முடியுமா ?” என கேட்ட நாளில் இருந்து,அம்மாவின் சந்தோசத்தால் அவரைப் பார்க்க வேணும் என ஆவல் கூடி இருந்தது எங்களுக்கு .

அவர் வந்த போது அவரைப் பார்த்து அம்மா அழுது விட்டா ..பிறகு ஏன் என்று நானும் ,அண்ணாவும் விசாரிக்க சொன்னா .. ” ராஜா மாதிரி இருக்கும் மனுஷன் ..வெள்ளை வேட்டி சட்டையில ,பிரம்புப் பிடியோட நடப்பார் .. அந்த பிரம்பு சத்தமே எதோ தேர்பூட்டி வாற ராஜா மாதிரி தான் இருக்கும். எத்தனை வேலை ஆள் அவர் தோட்டத்தில இருப்பினம் தெரியுமே ..அவர் துப்பாக்கி எல்லாம் வைத்து இருந்தவர் , வேட்டைக்கு போனா எங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம் தான் ,மான் கறி ,பண்டிக்கறி எல்லாம் கொண்டு வந்து தருவார் .. நல்ல மனுஷன் . உதவி என்று போன ,வெறும் கையோட திருப்பி அனுப்பாது .. அவற்ற பொஞ்சாதி மட்டும் என்ன குறைச்சலே .. பெயர் மாதிரியே குணமும் தங்கம் ..எப்பவும் நாலு படி அரிசி கூட வேகுமாம் … வாறவங்களுக்கு சாப்பாடு போட ,இப்ப பார் எழும்பும் தோலுமாய் இந்த கோலத்தில பார்க்க என்னையும் அறியாமல் கண்ணீர் வந்திட்டுது..” எனச் சொல்லிக் கொண்டு எழுந்து போனார் .. அதுக்கு பிறகு எங்களுக்கும் நல்ல மரியாதையை வந்திட்டுது அவர் மேல …

அவர் ஊரில நடந்தது, ‘காம்ப்’நடந்த கொடுமைகள் எல்லாம் சொல்ல சொல்ல அழுகை வரும் .. கடைசி நேரத்தில சனத்தோட சனமா அள்ளுப் பட்டது சொல்லும் போது ,குரல் தழுதழுக்க மேல சொல்ல முடியாமல் கஷ்டப் படுவார், நானும் அவரா மேல சொல்லட்டும் எனப் பார்த்து விட்டு,நேரம் போக எழும்பி வருவன்.

எங்கயோ வெறித்துப் பார்த்தபடி இருக்கும் நேரங்களில் கண்கள் கசிந்து இருப்பதை பார்த்து இருக்கிறன் ..அம்மாவிடம் சொன்ன போது “பாவம்டி எப்படி எல்லாம் இருந்த மனுஷன் .. எல்லாத்தயும் இழந்து போட்டு வாறது ஏன்டா எவ்வளவு கஷ்டம் .. நீ போய் எதுவும் கதைத்துக் கொண்டு இரு “என சொல்லி அனுப்புவா ..

ஆனால் கொஞ்ச நாளாவே அவர் கதை குறைய தொடங்கியது .. எப்போதும் வாயிக்குள் எதோ முணுமுணுத்த படி …. கண்கள் அலைக்கழிய ,முகட்டு விட்டத்தை வெறித்தபடி , எதோ சொல்ல முடியாமல் அவர் படும் அவஸ்தை பார்க்க கஸ்ரமாக இருக்கும் ..அப்பா எவ்வளவோ கதை குடுத்தும் அவர் நினைவுகள் ஒரு இடத்தில் இருந்து திரும்பி வராதது போல தனக்குள்ளேயே கதைக்க தொடங்கினார் .

அவர் சொல்லாது விட்ட கதைகளை அவர் மனைவியிடம் போய் கேட்போம்.அவா அழுது
கொண்டுதான் சொல்லுவா .
கடைசி நேரத்தில அத்தனை குண்டுக்கும் ,ஷெல் அடிக்கும் மத்தியில பதுங்குகுழிதான் எந்நேரமும் ..
சுத்தி வர எங்க பார்த்தாலும் பிணக்காடாம்.. எங்க பார்த்தாலும் ரத்த வெள்ளமாம் . செத்தவர் , காயம் பட்டவர் எல்லாம் வழி நெடுக்க கிடந்தவினமாம் ,எங்க பார்த்தாலும் ஒரே அலறல் சத்தமாம் ..
சரியான சாப்பாடோ , மருந்து வசதியோ இல்லையாம் ..
அதை கேட்டு விட்டு நான் இரவு முழுக்க அழுதனான் … எத்தனை சின்ன பிள்ளைகள் இருந்து இருப்பினம் ? அவேள் எல்லாம் என்ன பாவம் செய்ததுகள்?

அப்பையாண்ணை கடைசி வரை தன்ர ஊர விட்டிட்டு வர மாட்டன் என்று இருந்தவராம் .. இவாதான் காலிலை விழுந்து அழுது கூட்டிக் கொண்டு வந்து இருக்கிறா . கடைசி நேரம் இவாக்கு காயம் பட்டு விட்டதாம் ..அதுக்கு பிறகுதான் சனங்களோட சேர்ந்து இராணுவப் பகுதிக்கு போக சம்மதித்தவராம் .

“நான் தப்பு செய்து போட்டேனே … என்ர பரமேஸ்வரி என்னை மன்னிக்க மாட்டாள் ..
இந்த பாவிக்கு நரகம் தான்…”பாவம் அந்த சின்ன பிள்ளை ! இப்ப உயிரோட இருக்குதோ இல்ல ..எந்த நாய் நரி சாப்பிட்டுதுகள்ளோ தெரியல்லையே .. இந்தப் பாவிக்கு எப்படி மனம் வந்தது பார்த்து விட்டு விடு ஓடி வர.. இன்னும் நான் உயிரோட இருக்கனுமா ? எனக்கு நல்ல சாவே வராது …” என்னும் புலம்பல் அடிக்கடி அவர் வாயில் இருந்து வரத் தொடங்கியது . அந்த நேரங்களில் அவர் மனைவி ,
” நீங்க என்னப்பா செய்விங்க ? என்னை கூட்டிக் கொண்டு வருவிங்களா ? இல்ல அவேளைப் பார்ப்பிங்களா ? அவேலுக்கு எதுவும் நடந்திருக்காது … நீங்க யோசிக்கதிங்கோ .. ” என சொல்லி அவரை தேற்றுவதை கண்டிருக்கிறேன் .

கல்லூரி முடிந்து வர ஆரவாரப் பட்டுக் கொண்டு இருந்தது வீடு…
“என்னம்மா என்னாச்சு ? அப்பையாண்ணை சுகம் தானே ?
“இல்ல பிள்ள அவருக்கு அங்க சுயநினைவு இல்லையாம்..அப்பா இப்ப தான் கதைத்தவர் .. ஆஸ்பத்திரியிலே தான். நீயும் வா ..போய் பார்த்து விட்டு வருவம் .. பாவம் அந்த மனுஷி ஒரே அழுது கொண்டு இருக்குதாம் ” என சொல்ல அவசரமாக ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தோம் .

அறை வாசலில் அப்பா கவலையோடு நிற்கிறார் .”என்னப்பா என்னாச்சு?” என கேட்க ,அப்பவோ “அப்பையான்னைக்கு புத்தி பேதலிச்ச மாதிரி இருக்கு,யாரையும் நினைவு இல்ல ,இப்ப தான் டாக்டர் பார்த்து விட்டு போறார். தன் பாட்டுக்கு எதோ முணுமுணுத்துக் கொண்டு இருக்கிறார். அவா அழுது கொண்டு இருக்கிறா நீ போய் பார் ” என அம்மாவை அனுப்பினார். நான் மெல்ல நகர்ந்து அப்பையாண்ணை படுத்து இருக்கும் அறையைக்குள் நுழைந்தேன் .கசக்கி போட்ட காகிதம் போல கட்டிலில் படுத்துக் கிடக்கும் அவரை பார்க்க முடியவில்லை. கண்ணின் ஓரமாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது .

கதைவை திறந்து கொண்டு வெளியே வர “யாருக்கும் எந்த தீங்கும் செய்ய நினைத்து பார்த்திருப்போமா ,எல்லோருக்கும் அள்ளி அள்ளி குடுத்த மனுஷனுக்கு எப்படி ஒரு நிலைமையா ?.. இப்படி எல்லாம் சீரழிய வேண்டி இருக்குதே! இதுக்கு அங்கேயே கிடந்தது செத்துப் போயிருக்கலாமே..” என்னும் குரல் அழுகையோடு வந்து கொண்டு இருந்தது ..

“கண்னுக்கு முன்னால ஒரு தாயுக்கு ஷெல் பட்டு நல்ல காயமாம், தவண்டபடியே “என்ர பிள்ளையையாவது காப்பாத்துங்கோ” ,எடுத்துக் கொண்டு போங்கோ” என்று கெஞ்சினவாவாம் ,இவர் அந்த நேர அவசரத்திலையும் , தன்ர மனுஷியை எப்படியாவது காப்பத்தனும் என்று அந்த பிள்ளைய அங்கேயே விட்டு விட்டு வந்திட்டாராம் .கேம்ப்ல வைச்சுத்தான் இதை பிறகு மனுஷிக்கு சொன்னவராம் .. அந்த கவலைதான் இப்ப அவரை பாடாப்படுத்துது போல … “என அம்மாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தார் ..

அம்மாவின் ராஜா வேச அப்பையாண்ணை மெல்ல கலைந்து கொண்டு இருந்தார் எனக்குள் … அந்த முகம் தெரியா குழந்தை தேவ தூதுவனைப் போல இப்போது அப்பையான்னையின் கட்டிலின் மேல் பறப்பதாக தேன்றியது….

இனி சத்தமாய் ஒலிக்கக் கூடும் , அந்த நான்கு சுவர்களுக்குள் அப்பையாண்ணையின் குரல் …..

snehidhi15@yahoo.co.in

Series Navigation

சக்தி இராசையா

சக்தி இராசையா