பதவி உயர்வு

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

தி.சு.பா



கிருஷ்ணாவுக்குள் வெந்நீரூற்று ஒன்று கொதித்தெழ இருந்தது.

“என்னை என்ன இநா வாநா ன்னு நெனச்சுண்டானா? நாலு வருஷமா ப்ராஜக்ட் லீடரா இருக்கேன் ம்…ஹ்ம்…..ப்ராஜக்ட் லீடராவேஏஏ இருக்கேன்….ஆனா நீ…..வருஷம் தவறாம ப்ரமோஷன் வாங்கிண்டு போற….”

இந்த கோபத்திற்கு ஊக்கியாக அந்த காலைப்பொழுதில் இருந்தது எதுவென்று தெரியாது. ஆனால் கிருஷ்ணா படு கோபமாக இருந்தான். அவனுடைய ப்ராஜக்ட் மேனேஜருக்கு ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து கொண்டிருந்தான்.

“ராஸ்கல்லு…நான் கேக்கறதெல்லாம் அஸிஸ்டெண்ட் ப்ராஜக்ட் மேனேஜர் ப்ரமோஷன் தானே…கொடுத்தா கொறஞ்சா போய்டுவ? ப்ராஜக்டோட ஏபிசிடி தெரியுமா உனக்கு? ஒரு இமெயில் அனுப்பறதுக்குள்ள நூறு வாட்டி கால் பண்ணுவ….”

வேலை – வாழ்க்கை! இதன் விகிதாச்சாரம் சரிவர அமைக்கத் தெரியாமல் திணறும் லட்சோபலட்சம் ஐ.டி. இளைஞர்களில் கிருஷ்ணாவும் ஒருவன். அன்று காலை அவனுக்கு ஆறுதல் சொல்ல அவன் வீட்டில் ஒருவரும் இல்லர். கோபம் அடங்க வேண்டுமானால், கேள்விகள் குறைய வேண்டும். இல்லையேல், “எங்க போனேள், எல்லாரும்? அப்பாஆஆ….பக்கதாத்து கிழம் கூட பேசலன்னா ஒனக்கு பொழுது விடியாதே? அம்மா…மா……அம்மாவ்……கடைக்குப் போயிட்டியா? காலங்கார்த்தால எழுந்த ஒடனே தான் ஒனக்கு ஞாபத்துக்கு வரும்….அதில்ல, இதில்லன்னு…..த்து…..”

ஐ.டி. இளைஞர்களுக்கு வேலையின் கடுமை ஒரு பக்கம். ப்ராஜக்ட் மேனேஜர் கொடுமை ஒரு பக்கம். ப்ராஜக்ட் லீடர் படுத்தல் ஒரு பக்கம். டீம் மெம்பர்கள் தொல்லை ஒரு பக்கம். இதெல்லாவற்றிற்கும் மேல் பதவி உயர்வு, சம்பள உயர்வு கவலை ஒரு பக்கம். இப்படி அவர்களைப் பற்றி பக்கம் பக்கமாக சொல்லிக்கொண்டே போகலாம்!

அவன் வீட்டுக் கூடத்திலிருந்து கிழக்கே சமையல் கட்டை நோக்கி நடந்தான். நுழையும் தருவாயில், அங்கே தொங்கிக் கொண்டிருந்த காலண்டரில் தேதியைக் கிழித்தவன், “மிதுனம்….ம்ம்ம்ம்ம்…..அப்பா, சந்திராஷ்டமம் இல்ல…இன்னிக்கு நறுக்குனு நாலு வார்த்தை கேட்டுடலாம்னு இருக்கேன்….அடப்பாவி! நா ஒனக்கு என்னடா துரோகம் பண்ணேன்…என்ன மட்டும் ஏன்டா இப்படி சோதிக்கற?”

சமையல் கட்டுக்குள் நுழைந்தவன், சற்றுமுன் அவன் அம்மா ஒறக்குத்தி வைத்திருந்த பாலில் காபியை போட்டுக் குடிக்க ஆரம்பித்தான். மடக் மடக்கென்று குடித்தி விட்டு பென்டியம் ப்ராஸசர் வேகத்தில் வெளியே வந்தான். எதிரே கூடத்தில் வலதுபுறம் பரவியிருந்த சுவரை நோக்கினான். ஆக்ரோஷம் வார்த்தைகளாக உருவெடுத்து, ஆடிப்பெருக்கு வெள்ளம் போல் திரண்டு எழுந்தது.

“டேய்! டேய்! அந்த ப்ரஸ்ண்டேஷன் அவுட் அண்ட் அவுட் நா பண்ணிக் கொடுத்ததுடா…..எனக்கு அல்வா கொடுத்துட்டு நீ மட்டும் ப்ரமோஷன் வாங்கிண்டுட்ட…அசிங்கமா இல்ல? எப்படி இருக்கும்? நீ ப்ரஜக்ட் மேனேஜராச்சே…அதெல்லாம் கூட பரவால்லடா….ஒரு வாட்டி கிளையன்ட் விசிட்டுனு கூட்டிண்டு போன…நானும் பெருமையா இருந்தேன்….மொத நாள் ராத்திரி மூணு மணி வரைக்கும் கண் முழிச்சு எதஎதையோ வேற படிச்சு வச்சேன்…..அந்த கான்ஃபிரன்ஸ் ஹாலுக்கு கூட்டிண்டு போய் ப்ரின்ட் அவுட்டுக்கெல்லாம் ஸ்டேப்ளர் போட சொன்ன பாரு….அப்புறம் அந்த…..அந்த பேப்பர்ஸ் எல்லாத்தையும் ஃபைல்ல அடுக்கி தர சொன்ன பாரு….அங்கயே தூக்கி போட்டு மிதிச்சுருப்பேன்….ஒன்ன தான்டா…”

கிருஷ்ணா ஒரு நிலையில் இல்லை! ஒறக்குத்திய பாலில் காபி, சௌக்காரம் போட்டு குளியல், கறுப்பு &சாம்பல் நிற சாக்ஸ் என்று ஒரு வழியாக அலுவலகம் கிளம்பினான். இதில் எதுவும் அவனுக்குத் தெரியாது. அவன் கடிவாளம் போட்ட குதிரை!

எந்தவொரு அலுவலருக்கும் அவரவர் நிலை நியாயமானதாகவே இருக்கும். உதாரணத்திற்கு ப்ராஜக்ட் லீடருக்கு தன் டீம் மெம்பர்களையும், ப்ராஜக்ட் மேனேஜரையும் கரித்துக் கொட்டவில்லையென்றால் தூக்கம் வராது. அது போல் டீம் மெம்பர்களுக்கு ப்ராஜக்ட் லீடரை காலை வாரி விடுவதில் அலாதி இன்பம். ப்ராஜ்க்ட் மேனேஜருக்கோ தன் கீழ் பணிபுரியும் மக்களையும், பெருந்தலை என்று அழைக்கப்படும் வி.பி.க்களையும் பொரிந்து தள்ளியாக வேண்டும். கிருஷ்ணா மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

“என் பேட்ச்ல சேர்ந்த எல்லாரும் அ.மேனேஜரா எப்பவோ ப்ரமோட் ஆயிட்டா. நா மட்டும் தான் லெஃப்ட் அவுட். இத விட கொடுமை எங்கயும் கிடையாது. முடிவா சொல்லிட்டேன். இல்லன்னா உன் ப்ராஜக்ட்லேர்ந்து ரிலீஸ் தான்டீ. கொழஞ்சுண்டே வருவ இல்ல, அப்போ வச்சுக்கறேன்….அப்போ வச்சுகக்றேன்னே…”

இவ்விதம் திருவான்மியூர் ஃபர்ஸ்ட் சீவார்டிலிருந்து புலம்பிய வண்ணம் பெருங்குடி அலுவலகம் நோக்கி தன் பைக்கில் சென்று கொண்டிருந்தான். அவன் சிக்னலில் காத்திருந்த பொழுது உரக்க பேசிய வசனங்களை யாரும் காதில் வாங்கி கொண்ட மாதிரி தெரியவில்லை. அந்த சாலையில் பயணிப்பவர் அனைவரும் ஐ.டி. மக்களே!!!

அலுவலகத்திற்குள் நுழைந்தவன் யாரிடமும் சரியாக பேசவில்லை. தன் இருக்கையில் அமர்ந்து கொண்டவன், வந்தததும் வராததுமாக ப்ராஜக்ட் மேனேஜரை தொலைபேசியில் அழைத்தான்.

“சேகர்! இன்னிக்கு டெவெல்வ் ஓ க்ளாக் ஃப்ரீயா இருப்பீங்களா?”

“யெஸ், கிருஷ்ணா! என்ன விஷயம்?”

“ஒங்க கிட்ட கொஞ்சம் பேசணும், அதான். நேர்ல வந்து சொல்றேனே…”

“ஓகே, நோ ப்ராப்ளம்…மீட் யூ அட் டெவெல்வ் நூன்”

தனது கம்ப்யூட்டரின் மானிட்டரை ஒருமுறை நோட்டம் விட்டான். கறுப்பாக இருந்தது. அதை எதுவும் தொந்தரவு செய்யாமல் காபி குடிக்க கிளம்பினான். ஒரே யோசனை! எப்படி ஆரம்பிக்கலாம், என்ன பேசலாம் என்று அவன் மனது கேள்வி மேல் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது.

“ச்ச…..ச்ச…அப்படி கேட்டு டென்ஷன் ஆயிட்டான்னா? சாதரணமாவே சிடு சிடுன்னு தான் இருப்பான். அத சொல்லவே கூடாது….இப்படித்தான்……இத சொல்லணும்…..அப்படியே நிறுத்திக்கணும்….என்ன சொல்ற?….ஆமாம், மீதிய அவன பேச விட்டுறணும்…..”
வழியில் நாலைந்து பேரைச் சந்தித்தான். எல்லாரிடமும் ஏதோ பிதற்றித் தள்ளிவிட்டு தன் இருக்கைக்குத் திரும்பினான்.

“கிருஷ்ணா…”

“கிருஷ்ணா…”

அவன் கீழ் பணிபுரியும் டீம் மெம்பர் ஒருவன் அவனை சிலமுறை அழைத்த பின் திரும்பினான்.

“யெஸ்….சொல்லு”

“ஒங்கள லெவன் ஓ க்ளாக் மீட் பண்ணனும்….ஃப்ரீயா இருப்பீங்களா?”

தன் நிலையில் இருந்து மீள முடியாமல் தவித்து கொண்டிருந்ததால், அவனிடம் “என்ன சொன்ன?”என்று திருப்பிக் கேட்டான்.

“ஒங்கள லெவன் ஓ…………..”

“எ…எ….எதுக்கு?”

கொஞ்சம் சுதாரித்துக் கொண்டவன், “இப்பவே மீட் பண்ணலாமே!”என்றான்.

“ஒங்களுக்கு தெரியாததில்லை….நா ப்ரோக்ராமரா மூணு வருஷமா இருக்கேன். ஸீனியர் ப்ரோக்ராமர் ப்ரமோஷன் பத்தி பேசலாம்னு….”

சற்று நேரம் யோசித்தவன், “கண்டிப்பா…நா சேகர் ட பேசிட்டு சொல்றேன்…..”

“ஒகே…தேங்க்யூ….பாசிட்டிவா சொல்லுங்க கிருஷ்ணா!”

“ஷ்யூர்…ஷ்யூர்….”

அவன் செல்பேசியில் ஓர் அழைப்பு,”ஹே, கிருஷ்ணா! சேகர் ஹியர். இப்போ ஃப்ரீயா தான் இருக்கேன். ஏதோ பேசணும்னு சொன்னியே, இப்போவே வாயேன்….”

“ஒண்ணுமில்ல சேகர், நேத்திக்கு அந்த இமெயில் அனுப்ச்சோம்ல அதைப் பத்தி தான்…..ஒண்ணும் அவசரமில்ல………………………”

தி.சு.பா
balaji.trichy@gmail.com
http://thisuba.wordpress.com/

Series Navigation

தி.சு.பா

தி.சு.பா

பதவி உயர்வு

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

ரம்யா நாகேஸ்வரன்


குழந்தை தீபிகாவின் உடல் அனலாக கொதித்தது. இருமல், சளியோடு ஆரம்பித்த பிரச்சனை இப்பொழுது ஜுரத்தில் முடிந்திருக்கிறது. குமரனின் அலுவலகத்திற்கு போன் செய்தாள் கீதா.

“குழந்தைக்கு ரொம்ப ஜுரம் அடிக்கிறதுங்க. பக்கத்து வீட்டு ஆண்டி வேற ஊருலே இல்லை. கொஞ்சம் உடனே வர்றீங்களா ?” என்றாள்.

“என்ன கீதா ? இந்த மூணு நாள் நான் பயிற்சி வகுப்பு எடுக்கறேன்னு உனக்கு தெரியுமே. ஒரு டாக்சி பிடிச்சு வழக்கமா போகிற குழந்தை நல மருத்துவர் கிட்டே போய்ட்டு வந்துடு,” பதில் சொல்வதற்கு முன் போனை வைத்து விட்டான் குமரன்.

கீதாவிற்கு கோபமும் அழுகையும் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. டாக்ஸியில் செல்லும் பொழுது யோசித்தபடி சென்றாள். கீதாவிற்கும் குமரனுக்கும் திருமணம் நடந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. தஞ்சாவூரில் ஒரு பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த இரண்டு பெண்களில் கீதா மூத்தவள். குமரன் தூரத்து சொந்தம் தான். குமரனின் தாய் தந்தையர் அவனின் சிறு வயதிலேயே ஒருவரின் பின் ஒருவராக மறைந்து விட்டனர். தன் ஒரே அண்ணனின் உதவியோடு கஷ்டபட்டு படித்து முன்னுக்கு வந்தவன் குமரன். சிங்கப்பூரில் ஒரு நல்ல நிறுவனத்தில் ஊழியர் நல மேலாளர் மற்றும் பயிற்சியாளராக பணியாற்றி வந்தான். அதாவது ஊழியர்களுக்கு வேண்டிய, அவர்களின் வேலையை மேலும் சிறப்பாக செய்ய தேவையான வகுப்புக்கள் நடத்துவது மற்றும் அவர்கள் தங்கள் பதவிகளில் உயர தேவையான பயிற்சிகள் அளிப்பது தான் குமரனின் வேலை. கீதாவின் தந்தை செல்லமாக வளர்ந்த மகள் வெளிநாட்டில் செளகரியமாக வாழ்வாள், சின்ன குடும்பம், சொந்தமாக முன்னுக்கு வந்த மருமகனுக்கு பணத்தின் அருமை தெரிந்திருக்கும் என்ற காரணங்களுக்காக குமரனை தேர்ந்தேடுத்தார். கீதாவிற்கும் பூரண சம்மதம் தான். ஆனால் சிங்கப்பூர் வந்த பிறகு அவளுக்கு கணவனின் போக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஒன்றா, இரண்டா, பல காரணங்கள்!

கல்யாணம் முடிந்த மூன்று மாதங்கள் இனிமையாக கழிந்தது. சிங்கப்பூரில் பல இடங்கள் சுற்றுவது, சிராங்கூன் ரோட்டில் இருக்கும் உணவகங்களில் சாப்பிடுவது, ஈஷுனில் தமிழ் சினிமா பார்ப்பது என்று வாழ்க்கை சுகமாக இருந்தது. பிறகு மெதுவாக குமரனின் போக்கு மாறியது. ஊரிலிருந்து தனக்கு வீட்டு வேலை செய்ய ஒரு நடுத்தர வயது பெண்மணியை அழைத்து வந்திருந்தாள் கீதா. ஆறே மாதங்களில் அவளிடம் அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்லி ஊருக்கு திருப்பி அனுப்பிவிட்டான் குமரன். தானே எல்லா வேலைகளையும் செய்ய மெதுவாக பழகிக் கொண்டாள் கீதா. பக்கத்து வீட்டு ஆண்டியின் உதவியோடு எம். ஆர். டி யில் பல இடங்களுக்கு சென்று வந்தாள். வங்கி விவகாரங்கள், வீட்டை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்துக் கொள்வது, கடைக்கு செல்வது என்று எல்லாம் பழகி விட்டது கீதாவிற்கு.

குழந்தை பிறப்பு பற்றி பேச்சேடுக்கும் பொழுதேல்லாம் “ஒரு வருடம் போகட்டும்” என்றான் குமரன். குழந்தைகள் என்றால் பிடிக்காதோ என்று பேசிப் பார்க்கும் பொழுது “சேச்சே! அதெல்லாம் ஒன்றும் இல்லை” என்று மழுப்பினான். அவன் விருப்பப்படியே இரண்டு வருடங்கள் கழித்து தான் கீதா கருவுற்றாள். இப்பொழுது தீபிகாவிற்கு ஒரு வயது முடிய போகிறது. மற்றபடி கீதாவிடம் அன்பாக இருந்ததால் அவள் இந்த விஷயங்களை பெரிது படுத்தவில்லை. இன்றைய சம்பவம் அவளுக்கு எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி கோபத்தை கிளறியது. “இன்னிக்கு இரண்டுலே ஒண்ணு பார்த்துடறேன்,” என்று முடிவேடுத்தாள் கீதா. நல்லவேளை, தீபிகாவிற்கு சாதாரண ஜுரம் தான், பயப்படும்படியாக ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார் குழந்தை நல மருத்துவர்.

ஏழு மணிக்கு குமரன் வீட்டிற்குள் நுழைந்த உடன் ஆரம்பித்து விட்டாள் கீதா. “நீங்க செய்யறது கொஞ்சம் கூட நல்லாயில்லீங்க. கல்யாணமான இந்த நாலு வருஷத்திலே வீட்டைப் பற்றிதான் அக்கறை காட்டலை. எப்ப பார்த்தாலும் வேலை, வேலை! சரி, இரண்டு பேரும் ஆசைபட்டுத்தானே குழந்தை பெத்துக்கிட்டோம்னு பார்த்தா குழந்தை மேலேயும் அக்கறை இல்லை. தினம் சாயந்திரம் ஒரு மணி நேரம் குழந்தையோட விளையாட மட்டும் தான் உங்களுக்கு உரிமை இருக்கா ? கஷ்டத்துலே பங்கேடுக்க கடமை இல்லையா ? உங்க போக்கு எனக்கு பிடிக்கவே இல்லை. இப்பவே என்னை ஊருக்கு அனுப்பிடுங்க” என்று அழுகையோடு முடித்தாள் கீதா.

பதறிய குமரன், “என்ன கீதா ? என்னை நீ நல்ல புரிஞ்சு வெச்சுறுப்பேன்னு நினைச்சேன். நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லையே! நம்ம திருமண வாழ்க்கையை கொஞ்சம் யோசிச்சு பாரு. கல்யாணம் ஆகும் பொழுது நான் இருந்த பதவியை விட இப்போ எனக்கு பொறுப்புகளும் இரண்டு மடங்கு, சம்பளமும் இரண்டு மடங்கு. கடுமையான உழைப்புனாலேயும், திறமையினாலேயும் தானே இந்தப் பதவி உயர்வு கிடைச்சுது. அதே மாதிரி உனக்கும் பதவி உயர்வுகள் கிடைக்கத்தான் கொஞ்சம் கடுமையா நடந்துக்கிட்டேன்”, என்று நிறுத்தினான் குமரன்.

கீதாவின் முகத்தின் குழப்ப ரேகைகள். “நீங்க என்ன சொல்லறீங்க ?” என்றாள் கண்களை துடைத்தபடி.

“உனக்கு தான் தெரியுமே கீதா. நான் கஷ்டபட்டு வாழ்க்கையிலே முன்னுக்கு வந்தவன். ஆனா, நீ பெரிய பணக்கார வீட்டு பெண். உனக்கு சிங்கப்பூர் புதுசு. எந்த வேலையும் தானே செய்யற பழக்கமும் கிடையாது. முதல் மூணு மாசம் கொஞ்சம் விட்டு பிடிச்சேன். சரி, நீயாவே எல்லா விஷயமும் கத்துப்பேன்னு நினைச்சேன். ஆனால், நீ நல்லா சாப்பிட்டு விட்டு, மெகா சீரியலோ, வி.சி.டி லே சினிமாவோ பார்த்துகிட்டு பொழுதை கழிக்க ஆரம்பிச்சே. உன் கூட உதவி செய்ய வந்த அம்மாவின் கையை எல்லாவற்றுக்கும் எதிர்பார்க்க ஆரம்பிச்சே. அவங்க ‘நாம இல்லைன்னா இந்த வீட்டிலே ஒண்ணும் நடக்காதுன்னு ‘ நல்லா தெரிஞ்சு வைச்சு கிட்டு பாதி வேலை கூட செய்யாமல் பொழுதை வீணடிக்க தொடங்கினாங்க. அதனால் தான் அவங்களை ஊருக்கு அனுப்பி உன்னை உன் கால்கள்லே நிற்க பழக்கினேன். உனக்கு புத்திசாலித்தனம் இருந்தது ஆனால் தன்னம்பிக்கையும், தன்னார்வமும் இல்லை. அந்த காரணத்துக்காக தான் நான் எதிலேயும் பெரிசா ஆர்வம் காட்டலே. நீயே வேற வழியில்லாம ஒண்ணு ஒண்ணா செய்ய கத்துகிட்டே. நான் உதவி செய்திருந்தா நீ எல்லா விஷயத்துக்கும் என்னை சார்ந்து வாழ ஆரம்பிச்சிருப்பே. உனக்கு சிங்கப்பூரும் பழகியிருக்காது, வீட்டு நிர்வாகமும் வந்திருக்காது. இப்ப நீ சிங்கப்பூருக்கு புதுசா கல்யாணமாகி வந்த என் இரண்டு நண்பர்களின் மனைவிகளுக்கு எவ்வளவு விஷயம் கத்து கொடுத்திருக்கே. அவங்க என்கிட்டே “கீதா தான் எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி”ன்னு சொல்லும் பொழுது எனக்கு எவ்வளவு பெருமையா இருந்தது தெரியுமா ? எங்க அண்ணனும் அண்ணியும் இங்கே வரும் பொழுது என்கிட்டே “உனக்கு நல்ல திறமையான மனைவி அமைஞ்சிருக்கா தம்பி”,ன்னு சொன்னாங்களே நீ கேட்டுக்கு கிட்டு தானே இருந்தே ? இப்ப புரிஞ்சுதா ? உனக்கு கிடைத்த முதல் பதவி உயர்வு ஒரு நல்ல நிர்வாகி!

யோசித்து பார்த்த பொழுது கீதா ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது.

“நீங்க சொன்னதெல்லாம் சரிதாங்க. நான் கொஞ்சம் சோம்பேறியாத்தான்

இருந்தேன். உங்களோட நடவடிக்கை எனக்கு கோபத்தை வர வழிச்சுது உண்மைதான். ஆனா இப்பத்தான் நீங்க மறைமுகமா எனக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சு என்னை சுறுசுறுப்பானவளா, தன்னம்பிக்கையுள்ள ஒரு இல்லதரசியா ஆக்கியிருக்கீங்கன்னு புரியுது. இப்ப குழந்தை விஷயத்துக்கு வாங்க,” என்று மடக்கினாள்.

“கீதா! நான் கொஞ்ச நாள் காத்திருக்க சொன்னதிற்கு காரணம் நாம உடல் ரீதியா மட்டும் தயாரா இருந்தா போதுமா ? மன ரீதியாவும், பொருளாதார ரீதியாவும் தயாராக இருக்க வேண்டாமா ? குழந்தை பெத்துகிறதுன்னா சும்மாவா ? எவ்வளவு கூடுதல் பொறுப்புக்கள் ? இயற்கையாகவே, குழந்தை பிறப்புனா பெண்களுக்கு தான் பங்கு அதிகம். எவ்வளவு தான் நான் உதவ நினைச்சாலும் பல வேலைகளை ஒரு தாய் தான் செய்ய வேண்டியிருக்கு. எனக்கு வேலையிலே சம்பள உயர்வு கிடைக்கவும், உனக்கு பல வேலைகளை சமாளிக்கிற திறமை வரவும் காத்துகிட்டு இருந்தேன். அதானாலே தான் இரண்டு வருடம் கழிச்சு தான் உனக்கு அம்மா என்ற பதவி உயர்வு. ஒரு நல்ல தந்தையா என் பங்குக்கு தீபிகாவோட படிப்புக்காக இப்பவே சேமிக்க ஆரம்பிச்சுட்டேன். பக்கத்துலே இல்லாததுனாலே எனக்கு தீபிகா மேலே அக்கறை இல்லைன்னு நினைக்காதே. வேலைக்கு நடுவே டாக்டருக்கு போன் பண்ணி பேசிட்டு தான் வேலையை தொடர்ந்தேன்.”

“நீங்க ஒரு சிறந்த பயிற்சியாளர்னு வீட்டிலேயும் நிரூபிச்சுடாங்களே. எனக்கு எப்பங்க அடுத்த பதவி உயர்வு ?” என்று சிரித்தபடி கேட்டாள் கீதா.

“ம்… உன் அடுத்த பதவி, பாட்டி பதவி தான்!” என்றான் குமரன்.

வெகு நாட்களுக்கு பிறகு இருவரும் வாய் விட்டு சிரித்தார்கள்.

(தமிழ் முரசு, 10/5/2003)

ramyanags@hotmail.com

Series Navigation

ரம்யா நாகேஸ்வரன்

ரம்யா நாகேஸ்வரன்