திமிர் பிடிச்சவ

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா



‘ஆமாம். நீ திமிர் பிடிச்சவதான்’
‘கோபத்தில இப்படியெல்லாம் வார்த்தைகளை அள்ளிக் கொட்டாத்தீங்க’ அவள் குரல் உடைந்திருந்தது.
‘நான் மனசில உள்ளத தான் சொல்றேன்’
‘ஏன் என்னாச்சி உங்களுக்கு? இப்படியெல்லாம் பேசறீங்க..’
‘இப்ப மணி எத்தனை? ஒரு பொண்டாட்டி வீட்டுக்கு வர நேரமா இது?’ முதல் முறையாய் அவன் எரிந்து விழுவதைப் பார்க்கவே பயமாயிருந்தது அவளுக்கு. அவனா இது என நம்ப முடியாமல் ஒரு பக்க மனதை ஆட்கொண்ட தவிப்பை ஒரு வேளை விளையாடுகிறானோ என இன்னொரு பக்க மனது சமாதானப்படுத்திக் கொண்டிருந்தது. இதற்கு முன் இவன் இப்படியெல்லாம் பேசியதே கிடையாது. இதற்கு முன் என்பது காதலிக்கத் தொடங்கியது முதல் இன்று வரைக்குமான காலக்கட்டம். ஏறக்குறைய மூன்று வருடங்கள்.
‘இன்னிக்கு மீட்டிங் முடிய நேரமாகும்னு சொன்னேன்லெ’
‘பொண்டாட்டி புருஷன்கிட்ட அனுமதி கேட்கனும். சொல்ல கூடாது’
‘நான் உங்க அடிமையில்ல. உங்க வாழ்க்கைத்துணை. அதுக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? தெரிஞ்சிருந்தா இப்படியெல்லாம் பேச மாட்டீங்க’
‘இதான். இந்தத் திமிர்தான். படிச்ச திமிர் உனக்கு. என்னவிட கூட சம்பளம் எடுப்பதால ஆணவம்’ வெறுப்பு வெடித்து சிதறியது
‘தெரிஞ்சுதான என்னை கல்யாணம் பண்ணினீங்க’
சமாதானப்படுத்திக் கொண்டிருந்த மனது முழுதாய் மறைந்து கோபத்திற்கும் எரிச்சலுக்கும் வழி விட்டிருந்தது.
‘அப்ப காதல் கண்ணை மறைச்சிடுச்சி. இப்ப அவதி படறேன். என் கூட்டாளிங்க கூட காதலிச்சிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஆனா எவ்ளோ சந்தோஷமா இருக்கானுங்க. அவனுங்க பொண்டாட்டியெல்லாம் உன்ன மாதிரி இல்ல. புருஷன் சொல்லே மந்திரம்னு நினைக்கிறவங்க. நானும் எத்தனையொ பொண்ணுங்கள பார்த்திருக்கேன். யாருக்கும் உன் அளவு திமிரு கிடையாது, எல்லாம் என் தலைவிதி’ தலையில் அடித்துக் கொண்டான்.
‘அது உங்க தாழ்வு மனப்பான்மை’
‘நீ வாயை மூடு, நீ திமிர் பிடிச்சவ. உன் மூஞ்சில முழிக்கவே பிடிக்கலெ’ கத்திக் கொண்டெ வெளியேறினான். அறைக்கதவை சாத்திக் கொண்டவள் மெல்ல முதுகைக் கதவின் மீது சாய்த்துக் கொண்டாள். அந்த வேளையில் அறைக்கதவு மட்டுமே அவளுக்கு வருடலைத் தந்து இதமளித்தது. பாவம் அதைத் தவிர வேறு எதுவும் அதனால் தரவும் முடியவில்லை. வேலை முடிந்த பொழுது இருந்த பசியை வெறுப்பும் வேதனையும் தின்று விட்டிருந்தன.
காதலிக்கத் தொடங்கிய போது ஒரு நாள். அவளின் பிறந்த நாளாக . இருந்திருக்கக்கூடும். கோவிலில்தான் அவன் சொன்னான். ‘கல்யாணத்திற்குப்புறம் நீ வேலைக்குப் போயிட்டு வந்தா களைப்பா இருக்கும். வீட்டுலயும் வந்து வேலை செய்ரது கஷ்டம். வீட்டு வேலைக்கு வேணுமினா யாரையாவது வச்சிக்கிலாம்’
‘நான் வேலைய விட்டு நின்னுகிட்டா?’
‘வேணாம். நீ வேலைக்கு போ. உன்னோட படிப்பு வீணாக கூடாது. பொண்ணுங்க அடுப்படிய தாண்டி வெளி வரணும்னு சொல்லிக் கிட்டே இருந்தா பத்தாது. செய்யனும். நீ அப்படி இருக்கதான் ஆசை படரென். உனக்கும் இதானெ பிடிக்கும்? ஒரு கணம் மின்வெட்டாய் வந்து அவளைத் தொட்டது.
‘கடவுளே, நான் என்ன செய்வேன்?’ வேகமாய் பெருக்கெடுத்து வந்த வார்த்தைகள் யாவும் தொண்டைக்குழிக்குள் சிக்கி அமிழ்ந்தன. வெறும் கதறல்கள் மட்டுமே அவற்றை முன் தள்ளிக் கொண்டு வந்தன.
மெல்ல கைகள் முகத்தை மூட கால்கள் இனி நிற்க சக்தி இழந்து மடங்கி அவளை அமர செய்தன. ‘நீ திமிர் பிடிச்சவ’ என்ற மூன்றே வார்த்தைகள் பேரோளியாக கிளம்பி பேராயுதமாய் உருப்பெற்று அவளை நோக்கி வந்தது.
‘அய்யோ, வேண்டாம். நான் செத்துருவேனே’ கைகள் இரண்டும் காதைத் தானாகவே மூடிக் கொண்டன. பேராயுதம் அசுர வேகத்தில் அவளை நோக்கி வந்தது. அவள் சொல்வது அந்த ஆயுதத்திற்குக் கேட்கவே இல்லை. ஒருமுறை தாக்கினாலே மரணத்தைத் தந்து விடும் வல்லமை படைத்த ஆயுதம் அது. ஒரு வேளை அதற்கே கூட இது தெரியாமல் இருந்திருக்கும். திருப்தி இல்லாமல் மேலும் மேலும் தாக்கியது. அதன் வேகம் கூடிக் கொண்டே போனது. மெல்ல சரிந்தது அவள் உடல். ஆயுதம் தாக்குவதை நிறுத்தவில்லை.

¸.áƒõÃïºÉ¢, Á§Äº¢Â¡
ktrajamranjini@yahoo.co.in

Series Navigation

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா