வெள்ளநிவாரணம்

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

வே பிச்சுமணி



“ஆயா ரேசன்கார்டு ஜெராக்ஸ் எடுத்து வை” என்றாள் பக்கத்துவீடடு ராணி

“என்னத்துக்கடி” என்றார் அஞ்சலை ஆயா

‘உனக்கு தெரியாதா 2000 ரூபாய் மழை பெஞ்சதுக்கு கொடுக்காங்க”
‘என்னத்துக்கடி”
“வெள்ள நிவாரண நிதியாம்”
“யாரடி சொன்ன”
“வார்டு மெம்பர் சொன்னார், ரேசன் கார்டு ஜெராக்ஸ் எடுத்து வை”
“நீ எடுக்கும் போது எனக்கும் எடுத்துதாயேன்”
“உன் பேரன் எடுத்துட்டு வாரேன் சொல்லிட்டுங்க நான் போகல”
“ எம்மா முதலெ சொல்லக்கூடாது”
‘மறந்துட்டு ஆயா, உங்க சங்கர்கிட்ட சொல்ல வேண்டியதுதானே”
“அவன் சொன்னத கேட்டுட்டு தான், மறுவேலை பார்ப்பான்
ஆங்………… சொல்லி பார்க்கனு……. அது எங்க கேட்க போது”
“சரி நான் வாரேன் ஆயா”
“சரிம்மா”

“சாந்தி மேடம், அந்த தர்மபுரம் 4 வது வார்டு வெள்ள நிவாரண பெனிபிஸரி லிஸ்ட் தயாரா”என உதவியாளர் ராஜா
“சார் நிறைய பேர் இருக்காங்க இன்னைக்கு முடியுமானு தெரியல” என்றார் தட்டச்சர் சாந்தி
“என்னம்மா சொல்ற 6 மணிக்கு அந்த ஊராட்சிததலைவர் , ஆர்.ஐ யோடு வந்து லிஸட் வாங்க வாரேன் என்று சொல்லி இருக்கார் நீங்க என்னனா இப்படி சொல்றீங்க”
“என்ன சார் செய்றது நாலு பேர் செய்ய வேண்டிய வேலையை நான் மட்டும் செய்யனும்ன லேட்டாதான் ஆகும்”
“உங்கள குறை சொல்லல அம்மா, அவங்க வந்த என்ன சொல்றதுன்னு தான் பார்க்கேன்”
“அவசரப்படுத்தாதீங்க சார் தப்பாயிட்டுன்னு என்னை குறை சொல்ல கூடாது’
“சரிம்மா நாளைக்காவது முடியும்மா”
“நாளைக்குள் முடிச்சிராலாம் சார்”
“நாளைக்கு மதியத்துக்குள் முடிச்சிருனும்”
“சரி சார்”
“நான் அவங்களை நாளைக்கு வரச்சொல்றேன்”

“உறலோ நான் மணியூர் வட்டாட்சிஅலுவலகத்திலிருந்து
உதவியாளர் பேசுறேன் தலைவர் இருக்காறா”
“தலைவர்தான பேசுறேன் சொல்லுங்க சார்”
சார் இன்றைக்கு லிஸ்ட் ரெடி யாகாது போல நாளைக்கு வாங்கிகோங்க”
“என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க நாளைக்கு கொடுத்த நாங்க என்னைக்கு டோக்கன் கொடுத்து என்னைக்கு பணம் கொடுப்பது”
“சாரி சார் நாளைக்கு வாங்கிகோங்க. எங்க ஆர்.ஐ யிட்ட நான் இன்பார்ம் பண்ணிறேன் சார்.”
“சரி என்ன செய்ய நாளைக்கு சீக்கிரம் கொடுக்க பாருங்க இல்லைனா சாலை மறியல் கிறியல் பண்ணி தொலைக்க போறனுக பின்னே பிரச்சனையாய் போயிடும் அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்”
“நாளைக்கு கட்டாயம் ரெடியாய்டும்”
“சரி சார்”

“கேட்லெம்மா, நாளைக்கு ரெடி பண்ணிரு இல்லையனு பெரிய பிரச்சனை ஆயிடும்”
“சரி சார்”

“உறலோ நான் தான் பேசுறேன்” என்றார் கயல்
“சொல்லு” என்றார் கயலின் கணவர் சந்திரன்

“ஒன்னுமில்லே வெள்ள நிவாரண நிதிக்கு ரேசன் கார்டு ஜெராக்ஸ் கேட்டார் வார்டு மெம்பர், கொடுக்கவா”
“வேண்டாம் நமக்கு எதுக்கு”
“நம்ம வீட்டை சுத்தி ஏரி தண்ணீர் எப்படி ஒடிச்சு இப்பமும் தேங்கி நீற்கிறது தண்ணீயே வராத ஏரியால உள்ளவங்க எல்லாம வாங்கறாங்க.நம்ம வாங்கினா என்ன “
“வேண்டாம்மா அசிங்கமா…… இருக்கும்”
“நானும் இதை சொன்னேன் அதுக்கு எங்க உங்களை விட பணக்காரங்கள் எல்லாம் வாங்கறாங்க. .நீங்க நம்ம கட்சிகாரங்க வேற, கட்டின வரியை திரும்ப வாங்கற மாதிரி நினைச்சுக்கோங்க என்று வார்டு மெம்பர் சொல்றாறர் என்ன செய்ய”
“வேண்டாம்னு சொன்ன கேட்கமாட்டங்கற உனக்கு இஷ்டம்னா செய்”
“என்னங்க இப்படி சொல்லிட்டிங்க வேண்டாம்னு சொல்லிறவா”
“சரி சரி கொடு, நம்ம வார்டில் உள்ள அரசு பள்ளிகூடம் கட்டுமான வேலை முடியாம கிடக்குல அதை கட்டுவதற்கு டோனஷனாக கொடுத்திறலாம்”

என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டு மனதுக்குள் எல்லாருக்கும் வெள்ள நிவாரணநிதி உண்டு என்று சொன்ன அரசாங்கத்தின் மீது சின்னதாக கோபம் வந்தது. சந்திரனுக்கு

“ஆயா எல்லாம் ரெடியா வச்சிருக்கிறயா” என்றார் வார்டு மெம்பர்
“ ஏன்ப்பா கட்டாயம் கிடைக்கும்ல “
“ஆயா உன்ன மாதிரி கஷ்டபடுறவங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். சரி ரேசன் கார்டு ஜெராக்ஸை கொடு ஞாயிற்று கிழமை காலையில் பஞ்சாயத்து ஆபிஸக்கு வந்துரு”
“சரிப்பா நீ நல்லா இருக்கனும்”
“சரி சரி ஞாயிற்று கிழமை மறந்திறாதே”
“சரிப்பா” என்றாள் மகிழ்ச்சியாக.

ஞாயிற்றுகிழமை தர்மபுரம் ஊராட்சிஅலுவலகம் காலை 5 மணியிலிருந்து களை கட்ட ஆரம்பித்தது. பெண்கள் கூட்டம் ஆண்கள் கூட்டத்தை விட அதிகமாக இருந்தது. அஞ்சலை ஆயா பேரனை கெஞ்சி கூத்தாடி பார்த்தும் வெள்ள நிவாரண பணத்தை வாங்க வரிசையில் வரபோக மாட்டேன் என்று சொல்லி விட்டதால், கஷ்டப்பட்டு வயல் வழியாக நடந்து ஊராட்சி அலுவலகம் வருவதற்குள், அவளுக்கு முன்பாக ஐம்பது பேர் நின்று கொண்டிருந்தார்கள். ஆயா கடைசியாய் நின்றவள் பின் போய் நின்றார்.

“என்ன ஆயா வேறு யாரும் வீட்ல இல்ல நீ எவ்வளவு நேரம் நீப்ப” என வரிசையில் முன்னால் நின்ன பெண் கேட்டாள்
“தறுதலை வரமாட்டனு சொல்லிட்டு”
“யாரு”
“அதான் ஒன்னை பெத்து போட்டுட்டு, போய் சேந்துட்டாள என்மவ, அவ பிள்ளையைத்தான் அதாம்மா என் பேரன்”
“எல்ல பிள்ளைகளும் அப்படிதான் இருக்குக”:
ஆயா நிக்க முடியம்ம நின்ன இடத்திலேயே உட்கார்ந்தார்

பத்து மணிக்கு வாருவாங்க வந்து பணம் கொடுப்பாங்கனு யாரோ சொல்லிட்டு போனார்கள். ஆயா காலையில் கொஞ்சம் கஞ்சி வச்சு குடிச்சுட்டு வந்ததுதான்.நேரமாக நேரமாக கூட்டம் மழைக்கால எறும்பு கூட்ட வரிசை போல் நீண்டு கொண்டே போனது. வெயில் ஏற ஆரம்பித்தும் ஆயாவுக்கு லேச மயக்கம் வருவது போல் இருந்தது. பக்கத்திலிருந்த பெண்ணிடம்

“ஏம்மா நான் நிழலிருக்கேன் ஆபிஸர்மார்கள் வந்த கூப்பிடும்மா”

ஆயாவின் நிலமை பார்த்து அந்த பெண்ணும்

“சரி ஆயா கண்ணுக்கு எதிரே நிழலில் உட்காரு அப்பதான கூப்பிட வசதியாய் இருக்கும்”

ஆயா நிழலில் உட்கார்நதாலும் மீண்டும் கூட்டத்தில் போய் சேரும் பொழுது யாரும் தன்னை இடையில் நுழைஞ்சுட்டுனு திட்ட கூடாதே எனும் சின்ன பயத்துடன் ஆபிஸர் வருகிறாரா என வழியையும், கூட்டத்தில் அவள் நின்ற இடத்தையும், சொல்லிட்டு வந்த பெண்ணின் முகத்தையும் உத்தேசமாக பார்த்து சிரித்தாள் . ஆபிஸர் வருகிற மாதிரி தெரியல. ஆயா லேசாக சாய்ந்து கண் அயர்நதாள் . ஏதாவது சத்தம் கேட்டால் அரை குறையாக கண்ணை திறந்து பார்த்து விட்டு தூஙகுவதும் விழிப்பதுமாக இருந்தாள்.யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு ஆயா திடுக்கிட்டு எழுந்து பார்த்தாள் . கூட்டம் அலை மோதி கொண்டு இருந்தது .ஆயா தான் நின்ற இடம் தேடி வரிசை பக்கம் சென்றாள். நின்ற இடம் தெரியாமலும், சொல்லி வந்த பெண்ணும் தெரியாமலும் முழித்தாள். அதற்குள் கூட்டத்தினர், ஆயா ஊடே நுழைவதாக சிலர் சத்தம் போட்டனர். ஆயா ‘நான் முதலிலே வரிசையில் தான் நின்னேன் மயக்கமாக இருந்ததால் நிழலில் நின்னதாக கூறியது’ கூட்டம் போட்ட சத்தத்தில் ஆயாவுககே கேட்கவில்லை. அதற்குள் ஆயா சொல்லி விட்டு வந்த பெண் ஆயாவை அழைத்து தன் பக்கம் நிப்பாட்டி கொண்டு கூட்டத்துக்கு ஆயா முதலில் வந்து நின்னதை சொல்லி விளக்கமளித்தாள் .கூட்டம் லேசான சலசலப்புடன் முணுமுணுத்தது. எல்லாரும் இப்படி சொல்லிட்டு ஏமாத்தறாங்க என சிலர் சததமாக காதுபட பேசினார்கள். நிவாரணநிதி கொடுக்கும் ஆபிஸர்கள் வந்து விட்டதாக யாரோ சொல்ல கூட்டம் நெருக்க ஆரம்பித்தது. ஐந்து ஐந்து பேராக உள்ளே விட்டு பணம் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆயா பக்கத்தில் இருந்த பெண்ணிடம் தண்ணீர் வாங்கி குடித்தாள். இப்ப ஆயாவுக்கு கொஞ்ச பரவாயில்லை போல் இருந்தது. இன்னும் பத்து பேர் போன ஆயாவின் முறை வந்து விடும் ஆயா ஆவலுடன் அந்த பணம் கொடுக்கும் வாசலை நெருங்குவதை ஏதோ வைகுண்ட ஏகாதேசிக்கு சொர்க்கவாசல் திறப்பு போல் ஆவலுடன் பார்த்தாள். இன்னும் அஞ்சு பேர்தான், பணம் வாங்கி செல்பவர்களிடம் என்னவெல்லாம் கேட்கிறார்கள் என விசாரித்தாள்.

“ஒன்னுமில்ல ஆயா ரேசன் கார்டு வாங்கி பார்த்து, சீல் போட்டு கையெழுத்து வாங்கிட்டு பணம் கொடுக்கறாங்க’

ஆயாவிற்கு கைநாட்டு போட மை வச்சிறாப்பாங்களா என அந்த பெண்ணிடம் கேட்பதற்கு முன் வெளியெ வந்த பெண் போய்விட்டாள. கைநாட்டு மை வச்சிறாப்பாங்களா எனும் பயம் வேறு வந்துவிட பக்கத்திலிருந்த பெண்ணிடம் விசாரித்தாள்

“மை வைச்சிருப்பாங்களா நான் கைநாட்டு அதான்”
“ ஆயா தொண தொணக்காத மை வச்சிறுப்பாங்க கவலைபடாதே” என்றாள் முன்னால் நின்ற பெண்

ஆயாவும் நான்கு பெண்களும் உளளே சென்றார்கள்.
ஆயா நான்காவதாக இருந்தார். ஆயாவிற்கு முன நின்ற பெண்கள் பணம் வாங்கி சென்றார்கள் .ஆயாவின் முறை வந்ததது. ஆயாவுக்கு லேசாக சந்தோஷம் முகத்தில் வந்து சென்றாலும், சின்ன பதட்டமும் ஏற்பட்டது.

“ஆயா உன் கார்டை கொடு” என்றார் ஒரு அலுவலர்

“எனனதுப்பா”
“ரேசன் கார்டைகொடு ஆயா”
“இந்தப்பா”

கார்டை வாங்கியவர் தன்னிடம் உள்ள லிஸ்ட்டில் உள்ள
பெயர்கள் கார்டு எண்கள் ஆகியவற்றில் ஆயாவின் கார்டு நம்பர் பெயா ஆகியவற்றை சரிபார்த்தார்.ஆயாவிற்கு எப்ப முடிப்பார் எப்ப பணம் கொடுப்பார்கள் என பதட்டம் ஏற்பட்டது. மனதுக்குள் தன் பேரனை வைதாள். இறந்து போன தன் மகளையும் வைதாள். கார்டை சரி பார்த்தவன் எழுந்து போய் பணம் கொடுப்பவனிடம் ஏதோ கேட்டான். ஆயா என்ன இழவு . ‘என்னத்தை போய் கேட்கிறான் இவன். பணம் கொடுத்தால் போதும்’ என மனதில நினைத்து கொண்டாள்.கார்டை சரி பார்ப்பவன் . அவன் இடத்தில் வந்து அமர்ந்து மீண்டும் ஒரு தடவை ஆயாவின் ரேசன் கார்டை லிஸ்டுடன் சரி பார்த்தான்.
ஆயாவிற்கு என்ன இது, என சின்ன பயம் மனதில வர

“என் கார்டுதான்.. ப்பா . என்னால நிக்க முடியல.” என்றாள்

“இல்ல ஆயா . கார்டு நம்பர் சரியில்ல அதான்”

“என்னப்பா சொல்ற “

“ஆயா, உன் கார்டு நம்பரும் லிஸ்ட்டில் இருக்கும் நம்பரும் ஒரே மாதிரி இல்ல, அதானால…………..”
“அதானல……….. என்னப்பா”

அவன் தயங்கி தயங்கி “ஆயா உனக்கு பணம் கொடுக்க முடியாது “

ஆயாவுக்கு தலை சுற்றி மயக்கமே வந்து அப்படியே சரிந்து கீழே உட்கார்ந்து விட்டாள். அலுவலர்கள் போலீஸ்காரரை அழைத்து ஆயாவை வெளியே கொண்டு விடுமாறு கூறினார்கள்.

அதற்குள் வெளியே ஆயா மயக்கம் அடைந்த விஷயம் கேள்விபட்டு வார்டு மெம்பர் உள்ளே வந்து அலுவலரிடம்

“ஏன் சார் ஆயா கார்டு நம்பரை நான்தான் எழுதி கொடுத்தேன்.”
என்று கூறினார்

“சார் நம்பர் சரியாகத்தான் இருக்கு, கார்டில் ‘G” இருக்கு லிஸ்ட்டில் ‘G” க்கு பதிலாக ‘W” என டைப அடிச்சிருக்கு. அதனால………..” என இழுத்தார்

வார்டு மெம்பர் லிஸ்டை கையில் வாங்கி தான் கொடுத்த லிஸ்ட் நகலுடன் சரிபார்த்தார். அலுவலர் சொன்ன படி G” க்கு பதிலா லிஸ்ட்டில் ‘W” என அடிச்சிருந்தது..

“ஏன் சார் எழுத்துதானே மாறியிருக்கு, கொடுங்க. எனக்கு தெரிஞ்சவங்கதான்”.

“சாரி சார், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது”.

வார்டு மெம்பர் ஆர்.ஐ யிடம் சென்று முறையிட்டார். ஆர்.ஐயும் தன்னால் ஒன்றும் செய்யவியலாது என தெரிவித்து விடவே, வார்டு மெம்பர் ஊராட்சி தலைவரை அழைத்து வந்து அலுவலர்களிடம் பேசி பார்த்தார்..

“சார் எங்களால் ஒன்றும் செய்யவியலாது. தாசில்தார் நினைத்தால் கூட செய்யமுடியுமா” என தெரியாது என அலுவலர்கள் கைவிரித்தனர்.

ஆயா அதற்குள் மயக்கம் தெளிந்து அழ ஆரம்பித்து விட ஆயாவை சுற்றி கொஞ்ச கூட்டம் . உச் கொட்டி வருத்தம் அடைந்தது. முடிந்த அளவு முயற்சி செய்தும் ஒன்றும் செய்யவியலாது. ஆயாவின் முகத்தில முழிக்க கஷ்டபட்டு
கொண்டு ஆயாவின் அருகே வந்த வார்டு மெம்பர்

“வா ஆயா போகலாம், வீட்டில் கொண்டு விடுகிறேன்”

ஏன் தனக்கு பணம் கிடைக்கவில்லை என்பது தெரியாமலும், இனி கிடைக்குமா என்பது தெரியாமலும், வார்டு மெம்பர் வாங்கி தருவர் என்ற அரை குறை நம்பிக்கையுடன் ஆயா வார்டு மெம்பர் வண்டியில் கண்ணீரை சேலையால் துடைத்து கொண்டு ஏறி அமர்ந்தாள்


vpitchumani@yahoo.co.in

Series Navigation

வே பிச்சுமணி

வே பிச்சுமணி