அப்பாச்சி -2

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை


வீட்டுக்குள் சுற்றி வந்த அப்பாச்சி டீவியைப் பார்த்துவிட்டாள். இருபத்தொன்பது இஞ்ச் கலர் டீவி. சவீதாவின் அடம்பிடித்தலுக்கு அப்பா வாங்கிக் கொடுத்தது. டீவியில் ஓடும் அன்றைய நிகழ்ச்சிநிரலை அறிவிப்பாளருக்கு அடுத்து சவீதா மனப்பாடமாக ஒப்பிப்பாள். அந்தளவுக்கு அவளுக்கும் டீவிக்கும் நெருக்கம். அப்பொழுது இரவுச் செய்தி போய்க்கொண்டிருந்தது.

” உவள் எப்படியடி உந்தப் பெட்டிக்குள்ள போய்க் கதைக்குறாள்? மூச்சு முட்டாதே ” என்றார் அப்பாச்சி செய்தி வாசிக்கும் பெண் அறிவிப்பாளரைப் பார்த்து. சவீதாவும், சங்கீதாவும், சித்தப்பாவும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு சிரிக்கத் தொடங்கினர். அப்பாவுக்கும் சிரிப்புச் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்து விஷயம் தெரிந்து திரும்பவும் அவர் வாயில் குரும்பட்டி.

இரவுச் சாப்பாடு முடிந்த கொஞ்சநேரத்தில் அப்பாச்சிக்குத் தூக்கம் வந்துவிட்டது. அறைக்குள் தனியாகப் போய்த் தூங்கப்பயம். யாரிடமும் சொல்லவும் வெட்கம். ” இனி எல்லோரும் தூங்குவம். என்ன? ” என்றார்.

” மாமிக்கு நித்திரை வருதே ? மாமி போய்த் தூங்குங்கோ” என்ற அம்மா அப்பாச்சியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாள். கடைசியில் அப்பாச்சியை மேலும் உசுப்ப விரும்பாமல் எல்லோரும் நேர காலத்துடன் தூங்கவேண்டியதாகிவிட்டது. இதில் இரண்டு சகோதரிகளுக்கும் தான் கடும் வருத்தம். அன்றைக்குப் பார்த்துப் புதிய தமிழ்ப்படமொன்று டீவியில் போட இருந்தார்கள். நாளைக்கு வகுப்பிலும், பள்ளிக்கூடத்திலும் சினேகிதங்களுக்கிடையில் நடக்க இருக்கும் இப்படம் சம்பந்தமான திரை விமர்சனத்தில் இவர்களால் கலந்துகொள்ள முடியாது.

அப்பாச்சி தூங்கும்வரை சுலோகங்களைச் சொல்லியபடி இருந்தார். கனவில் காமாட்சியும், புளியமரமும், தென்னஞ்சூளையும் வந்துவிடக்கூடாதென்பது அவரது வேண்டுதலாக இருந்தது. அதிகாலையில் இல்லாத சேவல் கூவி நாலு மணிக்கே எழும்பிவிட்டார். அம்மாவையும் எழுப்பி முகம் கழுவிக் கொண்டு மகள்களை எழுப்பச் சொன்னார்.

இரண்டு அருமைச் சகோதரிகளும் பிறந்த காலம் தொட்டு “சூரியன் கிழக்குத் திசையில் உதிக்கும்” எனப் பாடத்தில் மட்டுமே படித்துவளர்ந்தவர்கள். அவர்கள் சூரியோதயத்துக்கு முன்னர் எழும்பியதாகச் சரித்திரம், விஞ்ஞானம் எதுவுமே இல்லை. அப்படிப்பட்டவர்கள் ஆச்சியின் சத்தத்துக்குச் சலிப்போடு எழும்பி குட்மோர்னிங் சொல்லிக் கொண்டார்கள்.

அப்பாச்சிக்குத் தேநீர் ஊற்றித்தர அம்மா ஹீட்டரைப் போட்டாள். ஆச்சி அருகில் வந்து ஹீட்டரைப் பார்த்து ” என்ன இது? “என்று கேட்டார். ஆச்சிக்கு அம்மா மின்சாரம் கண்டுபிடித்த எடிசனின் கதையிலிருந்து ஆரம்பித்து ஹீட்டரின் உருவாக்கமும் பயன்பாடுகளும் வரை விபரிக்கவேண்டியிருந்தது. எல்லாவற்றையும் பல குறுக்குக்கேள்விகளோடு காதில் வாங்கிக் கொண்ட ஆச்சி ” இரும்பைச் சூடாக்கித் தண்ணியில கலந்து , அதுல தேத்தண்ணி ஊற்றி என்னைக் கொல்லப்பார்க்குறியோ? ” என அம்மாவைக் கடுப்பாக்கினார்.

பிறகு அம்மா அவருக்காகக் கேத்தலில் தண்ணீர் சுட வைத்துத் தேநீர் ஊற்றிக் கொடுத்தார். அதிலும் ஆயிரம் குறைகள் சொல்லிக் குடித்தவருக்கு நேற்றைய இரவின் அம்மி நினைவுக்கு வந்துவிட்டது. உடனே ஸ்டோர் ரூமுக்குப் போகவேண்டுமெனச் சொன்னார். இன்னும் முற்றாக இருள் கூட விலகியிருக்கவில்லை. அம்மாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அம்மி இருப்பது ஸ்டோர் ரூமின் உள்ளே ஒரு மூலையில். அதனைத் தேடிப் போவதென்பது ஆபிரிக்காவின் தங்கச் சுரங்கத்துக்குள் போவது போல மிகக் கடினமான வேலை. இடையிடையே தேள், பல்லி, கரப்பான் பூச்சி,எலி எனக் காவல்காரர்களும் எதிர்ப்பட்டு பயமுறுத்துவார்கள். அவைகள் கூடப் பரவாயில்லை. அப்பாச்சியுடன் ஒப்பிடும்போது அவை சாதுக்கள். அப்பாச்சியுடன் ஸ்டோர் ரூமில் மல்லுக்கட்டுவதை மூன்றாம் உலகப்போரை எதிர்கொள்வது போல எண்ணிப்பயந்தாள் அம்மா.

அப்பாவுக்கு அன்று ஆபிஸ் லீவு. அப்பாச்சிக்கு அம்மிக்குளவியைக் கண்டுபிடிக்க அப்பாதான் சரியான ஆள். அவருக்குத் தேநீர் கொடுத்துவிட்டு வருவதாக ஆச்சியிடம் சொல்லிவிட்டு தேநீரோடு விஷயத்தை அவரிடம் சொல்லிவிட்டாள். அப்பாவுக்கு ‘இன்றைக்கும் ஆபிஸ் இருந்திருக்கலாமே’ எனத் தோன்றியது. துணைக்குச் சித்தப்பாவையும் கூட்டிக் கொண்டு வீட்டின் பின்முற்றத்தின் ஒரு மூலையிலிருந்த ஸ்டோர் ரூமுக்கு அப்பாச்சியுடன் வந்துவிட்டார்.

” எங்கேயடா இங்க வச்சிருந்த கோழிக் கூடு? ”

” அது பராமரிக்க ஏலா எண்டு வித்துப்போட்டம் அம்மா. ஏழெட்டு வருஷத்துக்கு முன்னம் இருந்தது. உங்களுக்கு இன்னும் நினைவிருக்கே?”

” ஏன் நினைவில்லாமல்? நான் முட்டை வச்சுக் குஞ்சாக்கிக் கொடுத்தவை. நீயெல்லாத்தையும் வித்துப் போட்டனியோ? நீ எதுமறியாப் பிள்ளை. எல்லாம் உவளின்ர வேலைதான் ”

விற்கும் போது அம்மா வேண்டாமெனத் தடுத்தவர். அப்பாதான் கோழி நாற்றம் வீடுமுழுக்க வீசுகிறதெனச் சொல்லி எல்லாக் கோழியையும் கோழிக் கடைச் சந்திரனுக்கு விற்றார். அப்பா எதுவும் பேசவில்லை.

ஸ்டோர் ரூமுக்குள் அம்மி தேடிய பொழுது அப்பாச்சி அப்பாவுக்குக் கொடுத்திருந்த பல பொக்கிஷங்கள் ‘இவ்வளவு நாளும் இதற்குள்ளேதான் அடைபட்டுக் கிடந்தோம்’ என அப்பாச்சியின் முன்னால் தலை நீட்டின. அப்பாவுக்கான அர்ச்சனைகள் அப்பாச்சியிடமிருந்து வரத்தொடங்கின. அந்த அர்ச்சனைகளில் அம்மாவையும் அவரது ஜாதகத்தோடு சேர்த்துவிட அப்பாச்சி தவறவில்லை.

ஸ்டோர் ரூமினைப் பார்த்துவிட்டு வந்த அப்பாச்சியிடமிருந்து ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாகப் புலம்பல்களும் , வசவுகளும் ஓயாமல் வந்துகொண்டே இருந்தன. அம்மா, அவித்துக்கொண்டிருந்த இடியப்பத்தின் துளைகளில் அப்பாச்சியின் வசவுகளை நழுவவிட்டாள்.

வாசலில் “சங்கீ, சங்கீ” என யாரோ அழைக்கும் குரல் கேட்டது.

தனது அழகுக்கலை வகுப்புக்குப் போவதற்கான அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சங்கீதாவுக்கு உடனே எழுந்துபோய் வரவேற்க முடியாமல் போனது அழைத்தவளின் துரதிஷ்டம். அழைத்தவள் அன்று யார் முகத்தில் விழித்தாளோ, அப்பாச்சிதான் முதலில் போய் யாரென்று பார்த்தார்.

” ஆரடா நீ? ஆர் வேணும் உனக்கு? ” என்றார் அப்பாச்சி அவளைப் பார்த்து. அவள் ஜீன்ஸும், டீசேர்ட்டும் அணிந்து தலைமுடியை பாப் கட் வெட்டியிருந்த பக்கத்துவீட்டுப் பெண். சங்கீதாவுடன் தான் அழகுக்கலை படிக்கிறாள். அவளை வகுப்புக்கு அழைத்துப்போக வந்திருந்தாள். அப்பாச்சியின் கண்களுக்குப் பையனாகத் தெரிந்ததில் ஆச்சரியமேதுமில்லை.

” சங்கி இருக்கிறாளோ ஆண்ட்டி ?”

” அப்படி ஆரும் இங்க இல்லை ”

இப்பொழுதுதான் சங்கீதா முன்னால் வந்தாள்.

” உள்ளே வா..இதுதான் என்ர பாட்டி ” வந்தவளுக்கு அறிமுகப்படுத்தினாள்.

” நில்லு. ஆரிந்தப் பையன்? அதுவும் பொம்பிளைக் குரலில பேசுறான் ? ”

” ஐயோ பாட்டி. இது பையனில்லை. பொண்ணு. ”

” இந்த மாதிரி உடுப்பெல்லாம் உடுத்துக்கொண்டிருக்குது ? உன்ர பழைய உடுப்புக்கள் இருந்தாக் கொடு இவளுக்கு..என்ன பேர் சொல்லிக் கூப்பிட்டனீ என்ர பேத்தியை ? சங்கீதா எண்டு இவளோட அப்பாம்மா வடிவா வச்சிருக்காங்கள். முழுப்பேரைச் சொல்லிக் கூப்பிடு…என்ன ? ”

வந்தவளுக்குப் பேயறைந்தால் போல் ஆகிவிட்டது. இது போல ஒன்றை அவள் தன் வாழ்நாளில் அனுபவித்ததில்லை. அவள் கராத்தே எல்லாம் கூடக் கற்றறிந்திருக்கிறாள். ஆனால் அப்பாச்சியின் வாய் பற்றி அந்தக் கலையில் சொல்லித்தரவில்லை. தப்பித்தால் போதுமென சங்கீதா அம்மா,அப்பாவிடமும், அப்பாச்சியிடமும் சொல்லிவிட்டு அவளுடன் வகுப்புக்குக் கிளம்பிவிட்டாள். அப்பாச்சி சவீதாவைக் கூட்டிக் கொண்டு முற்றம் முழுதும் ஒவ்வொரு சாணுக்கும் ஒவ்வொரு குறைகள் சொல்லியபடி உலாத்தித் திரிந்தார்.

ஏறத்தாழ ஐந்துநாட்கள் அப்பாச்சியின் அதிகாரம் அந்த வீட்டில் மேலோங்கியிருந்தது. அவர் அந்த வீட்டிலிருந்த நாட்களில் ஒவ்வொருவரும் அப்பாச்சிக்கு எதிர்த்திசையிலேயேதான் மூச்சுக் கூட விட்டார்கள். அம்மாவின் பாடுதான் பாவம். எல்லாவசவுகளின் இறுதியிலும் அம்மாவைச் சாடாமல் அப்பாச்சிக்குச் செமிக்கவில்லை.

அப்படியாகப்பட்ட ,அதிகாரமிக்க அப்பாச்சி தன் மகன் வீட்டுக்கான அடுத்த விஜயத்தை இன்னும் இரண்டுநாட்களில் மேற்கொள்ளவிருக்கிறார் என்ற செய்தி ஒரு பேரிடியாக இப்பொழுது அம்மாவையும், சங்கீதாவையும் தாக்கியிருந்தது. அப்பா வந்தபிறகு அவரையும் தாக்கும்.

இப்பொழுது சித்தப்பாவின் கிராமத்துக்கு மின்சாரம், டீவி எல்லாம் வந்துவிட்டது. கேஸ் அடுப்பும் வந்திருக்கும். ஊருக்குத் தொலைபேசியும் வந்திருந்தது. அப்பாச்சி இருக்கும் வீட்டுக்குள் போனிருந்தால் ஒரு மாத போன் பில் கட்ட அவரது முழுச்சொத்தையும் விற்க வேண்டி வருமென நினைத்தோ என்னவோ அவர் வீட்டுக்குத் தொலைபேசி இணைப்பை எடுக்கவில்லை.அப்பா வந்ததும் அவருக்குத் தகவல் சொல்லப்பட்டது. அவருக்கிருந்த பதற்றத்தில் நல்லவேளை மீன்கறி நினைவில் வரவில்லை. ஒல்லிப்பெண் சவீதாவுக்கும் கூடப் பதற்றமாக இருந்தது. இரண்டாவது நாள் அப்பா ஆபிஸுக்கு லீவு போட்டுவிட்டுத் தன் அம்மாவைக் கூட்டிவர கிராமத்துக்குப் போனார்.

வீட்டின் கேட் அருகில் ஆட்டோ வந்துநின்றது. இந்த முறை முதலில் அதைக் கவனித்தவள் சவீதா. அப்பாச்சியின் முன்னால் எப்படி நடந்துகொள்ளவேண்டுமெனத் தன் அனுபவங்கள் மூலம் தங்கைக்குப் பாடம் எடுத்திருந்தாள் சங்கீதா. அதன்படி மெதுவாக, நிலத்துக்கும் வலிக்குமோ என்பது போல ஆறுதலாக நடந்துசென்று கேட்டைத் திறந்தாள். தனது நடையைப் பார்த்து அப்பாச்சி பூரித்துப் போயிருக்குமென நினைத்து ஆச்சியின் முகத்தைப் பார்த்தவளுக்கு ஆயிரம் கருந்தேள் ஒன்றாகக் கொட்டிய அதிர்ச்சி. அப்பாச்சியின் முகத்தில் அன்று போல் இன்றும் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

” என்னடி நீ? சித்திரைத் தேர் போல மெதுவாக வர்றாய்? அங்க சாரதா பிள்ளைத்தாச்சியாயிருக்கிறாள். நேற்று வலியெடுக்க ஆரம்பிச்சிட்டுது. அவளிண்ட வீட்டுக்காரன் கூடப் பக்கத்துல இல்ல.என்ன ஆச்சோ? ஏதாச்சோ? நீ என்னடாவென்றால் இவ்வளவு மெதுவா வாறாய்.. ”

அப்பாவுக்கும் , சவீதாவுக்கும் ஆச்சரியமாகப் போய்விட்டது. யார் இந்த சாரதா ? அவளுக்குப் பிரசவ வலியெடுத்தால் அப்பாச்சி எதற்குப் பதற வேண்டும் ? ஒருவேளை வயசான காலத்தில் ஆச்சிக்கு மூளை பிசகிவிட்டதோ ? ஆச்சியின் கையைப் பிடித்த சவீதாவின் கையை உதறிவிட்டு, சாரதா ஏதோ அவர்கள் வீட்டுக்குள்தான் இருந்து துடிப்பதைப் போல அப்பாச்சி விறுவிறுவென வேகமாக வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

சுற்றுமுற்றும் எதையும் பார்க்கவில்லை. வாசலில் அம்மாவின் வரவேற்பிற்காகக் காத்திருக்கவில்லை. நேராக டீவி இருந்த அறைக்குள் போய் ” போடடி டீவிய” என்று சங்கீதாவிடம் சொல்லிவிட்டு அருகில் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டார் தொலைக்காட்சித் தொடர்களுக்குள் தன்னைத் தொலைத்திருந்த அப்பாச்சி !

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்