ஊர்க்கிணறு

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

ஷைலஜா



தங்கராசு மூச்சிறைக்க குடிசைக்குள் ஓடிவந்தான்.

உலையில் போடுவதற்கு அரிசியைத்தேடிக்கொண்டிருந்த அஞ்சலை மகனின் குதூகலத்தைக் கண்டு,”இன்னாடா தங்கராசு…இம்புட்டு குத்தாட்டம் போட்டுட்டு வரே சீமான் வூட்டூப்புள்ளமாதிரி கண் ரண்டும் பளபளக்குது?’ என்று கேட்டாள்.

மேல்மூச்சு வாங்க தங்கராசு தன் நிஜாரின் பட்டியை சரசெய்தபடி,”அம்மா உனக்கு விஷயமே தெரியாதா? குடிசைய விட்டு வெளில
வாம்மா….வானத்தப்பாரு… வா! வா!” என்றான் உரத்தகுரலில் மகிழ்ச்சி கொப்பளிக்க.

“தங்கராசு….வானம்பாத்தபூமியா நம்ம ஊருதான் பலவருஷமா கிடக்குதே…இதுல நான் வேற அதப் பாகக்ணுமா?
சம்பாதிக்க துப்பில்லாம குடிச்சி குடிசை ஓரமா படுத்துக்கிடக்குற உங்கப்பனை அழைச்சிட்டுப்போயி அந்த வானத்தக்காட்டு…இந்த ஆளைக் கட்டிக்கிட்ட நாளுமுதலா என் தல குனிஞ்சிபோச்சிப்பா…அது நீ தல எடுத்துதான் நிமிரணும்”

“அம்மா! நம்மஊருக்கு விடிவுகாலம் வந்திடிச்சிம்மா… வூரு வாழ்ந்தா நாம வாழலாம்னு பள்ளிக்கூட வாத்தியார் சொல்வாரு.ஆமாம்மா..
.சீக்கிரம் வெளிலவந்து வானத்தப்பாரு..கருத்திட்டு வருதும்மா வானம்!”

“மெய்யாலுமா சொல்ற தங்கராசு? அடி ஆத்தீ !மகமாயீ !மனசு வச்சியாடிதாயே ?மள பொளிய மனசுவச்சியா மகராசீ?” உற்சாகக்குரலோடு அஞ்சலை வாசலுக்கு வந்தாள்.

என்ன அதிசயம்! ஏழுவருஷத்துக்கு மேலாய் மாலைப்பொழுதுகளில் நிறம்மாறாத நீலவானம் இன்று கருத்துக்கிடக்கிறதே! இடிச்சத்தம் வேற… வானத்தின் புருவ நெறிப்பாய் மின்னல் வந்துவந்து போனது!

பகலிலும் இரவிலும் உஷ்ணக்காற்ரையே வீசிக்கொண்டிருந்த தெருவில் லேசான குளிர்மிதந்துவரவும் சேரித்
தெருகுடிசை ஜனங்கள் மொத்தமும் வாசலுக்கு வந்துவிட்டது.

“மாரியாத்தா இந்தவாட்டி ஏமாத்திடாதிடிமா… பெருமளை பெஞ்சி ஊரையும் எங்கமனசையும்
குளிர்வைக்கணும்தாயே” எதிர்க்குடிசை ராக்காயிகிழவி வாய்விட்டுக்கத்தினாள்

“வயலு கிணறு எல்லாம் வறண்டுகிடக்கு..மரம் செடியெல்லாம் வாடிவதங்கிக் கிடக்கு குடிக்கத்தண்ணி இல்லாம நம்ம ஊர் பொதுக்கிணறும் வத்திக்கிடக்கு இப்படி ஊரே நாறிட்டு கிடக்குறதுக்கு இப்போ விமோசனம் வந்திடிச்சா?”

“மளை வந்தா மண்மட்டுமில்ல எங்க வயிறும் நனையும்! ”

ஆளாளுக்கு குரல்கொடுத்தபோது ஊரில் ஒரே ஒருவன் மட்டும் மழையை சபித்தான். வானத்தை நோக்கி இடியாய் உறுமினான். அவன் டவுனிலிருந்து தண்ணீர்லாரியை வரவழைத்து தன் கிணற்றுக்குள்
ஊற்றிக்கொண்டு அதை ஒன்பதுபங்கு விலைக்கு ஊர்மக்களிடம் விற்பான். அவனைமீறி ஊருக்குள்
வேறுதண்ணீர்லாரிகள் வந்துவிடமுடியாதபடி அரசியல் செல்வாக்கு வேறு அவனை அநியாயங்கள் செய்ய
துணையாய் நின்றது.

.ஒரு குடத்துக்கு ஒருரூபாய். என விற்கும் அவன் தவிச்சவாய்க்கு இலவசமாய் தண்ணீர் தராத பாதகன்.

நவரத்தினங்களில்உயர்ந்த மாணிக்கம் என்கிற பெயரைவைத்துக்கொண்டு கீழ்த்தரமான புத்தியோடு அலைபவன். பணம், பணம் ,பணம். அது ஒன்றே அவன் குறிக்கோள்! இப்போது மழைபெய்து ஊருக்கு
நன்மை செய்ய இருப்பதைப்பார்க்க பற்றிக்கொண்டுவந்தது மாணிக்கத்துக்கு.

அய்யெயோ ஊர்க்கிணறு நிரம்பிவிடுமா அப்புறம் என்கிணறுபக்கம் யாரும் வரமாட்டாங்களா?
*********

தப் தப்..

நீர்ச்சொட்டுக்கள் சாலையில் விழுவதை சேரிக்கூட்டம் முழுவதும் ஆனந்தமாய் பார்த்தது.

“யே சாமி! ஈர மண்ணு வாசம் ! ஹ்ம்ம்..எத்தினி நாளாச்சு அனுபவிச்சி?”

அஞ்சலை மூக்கை இழுத்து சுவாசித்தாள்.

“அம்மா!நான் இந்த மளைல நனைஞ்சிகிட்டே நம்ம ஊரை ஒரு சுத்து சுத்திட்டுவரப்போறேன்:” தங்கராசு மேல்சட்டை அணியாத எலும்பு துருத்தி நிற்கும்திறந்த மார்போடு தெருவில் நடக்க ஆரம்பித்தான்.

“பாத்துடா மகனே! சளிபிடிக்கபோவுது….சீக்கிரமா வீடுதிரும்பிவா…நான்போயி அரிசி தேடி இன்னிக்கு
அரிசிசோறுவச்சி மளையக்கொண்டாடறேன்”

‘அஞ்சலை! இனிமேட்டு நாம மணிக்கம் வீட்டுக்கிணறுக்கு காசுகொடுத்து தண்ணீ சேந்தப்போகவேணாம் ..நம்ம ஊர்க்கிணறுல நீரு வந்திடும் வெள்ளமா வந்திடும்”

“ஆமாடீ பெரமாயி!…இந்தமழை வலுத்து பெஞ்சா நம்ம ஊருக்கிணறுக்கு கொஞ்சம் ஊத்து வந்துகிட்டா
போதும்…பொதபொதன்னு மண் அத்தினியும் மளை நீரை சரிஞ்சி வாங்க்கிடுமில்ல?”

“அந்த படுபாவி மாணிக்கம் அதர்மமா காசு பிடுங்கறான்… முன்னே குடத்துக்கு எட்டணா வசூலிச்சவன் இப்போ என்னடான்னா ஒத்தரூபா ஆக்கிட்டான்…பத்து ருபா ஆகுது குடிக்க குளிக்க கொள்ள ஒருநாளுக்கு. ….நமக்கெல்லாம் இது கட்டுப்படி ஆவுதா? ..அவன் நெஞ்சுல ஈரம் இருந்தா இந்த அக்குரமம் நடக்குமா?அவன் கொட்டத்த அடக்கத்தான் வருணபகவான் வந்துருக்கணூம்”

“நாசமாப்போறவன் ..நெஞ்சுல ஈரம் இல்லாத அவன் நம்மையும் தண்ணீ லாரிய தனியா வரவளைச்சி காசு சல்லிசா வாங்கிக்க விடமாட்டேங்குறான்… இவன்லாம் பெரியமனுஷனாம் பெரியமனுஷன்! கொணங்கெட்டவன்லாம் பெரியமனுஷன்னா நாட்டுல அவனுகளுக்குத்
தான் இடம்…அஞ்சலையும் பெரமாயியும்பெருமுச்சு விட்டு நகர்ந்தனர்.

மாரிமுத்து வாயில் நுரைதள்ளும் மாடுகளை ஓட்டியபடியே.
:”ஏ சின்னாத்தா! அருக்கஞ்சட்டிய எடுத்தா…மளைநீரப்புடிக்கலாம்…மாடுகன்னுங்க நல்லா குடிக்கட்டும் பாவம்” என்றான்.

“ஐஸ்வர்யாகுட்டி..மளை பாக்கணும்னியே பாரு பாரு…சின்ன தூறலாஆரம்பிச்சி பெருசாயிட்டெ போவுதுபாரு இதான் மளை”

செண்பகம் தன் மூணுவயது மகளுக்கு மழையை அறிமுகப்படுத்தினாள்.

“காத்தான் வாடா! மளைத்தண்ணில கப்பல் விடலமாடா?” சிறுவர்கள் தொப்பலாய் நனைந்தபடி ஆட்டமாடத் தயாரானார்கள்.

சேரி முழுதும் களிப்பில் மிதக்க , அங்கே கடுப்பில் தவித்தான் மாணிக்கம்.

********************

மேலத்தெருவில் அவன் வீட்டில் வெறிபிடித்தவன் போல குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான்.

எது நடக்காது என்று நினைத்தானோ அது நடந்துவிட்டதே?
இனி யாரும் தன் கிணறுக்கு தண்ணீருக்குக் கை ஏந்திவரமட்டார்கள் என நினைக்கும்போதே எரிச்சலானது.

அதட்டி உருட்டி அதிகாரமாய் அவர்களிடம் காசுபெற்றதெல்லாம் இனி கனவாகிவிடுமா?

“அப்பா” கூவிக்கொண்டு வந்தாள் அவன்செல்லமகள் வசந்தராணி.

“என்னம்மா ராணி?”

“அப்பா…மழைநீர்ல கப்பல் விடணும்….காகிதக்கப்பல் செஞ்சிதாங்கப்பா”

“என்ராணிக்கு நெசக்கப்பலே தருவேன் கண்ணு”

“இப்பொ கப்பலு வேணுமே?” மேலே விழாத குறையாய் அவனிடம் இழைந்து நின்று கெஞ்சினாள் ராணி.

“இரும்மா கொஞ்சம்,,இடி மழை மின்னலுன்னு வானம் என்னவோ கொக்கரிக்குது…உங்கம்மா வேற ஊர்ல இல்ல…அக்கா மக செம்பருத்தி பெரியமனுஷி ஆனான்னு ஊருக்குப்போயிட்டா….உனக்கு மட்டும் பரிட்ச இல்லன்னா உன்னையும் அனுப்பி இருப்பேன்.. நீ வீட்லயே இரும்மா…இந்த மழைசனியன் திடீர்னு வந்திருக்குது அதுவும் வலுவா வந்துருக்குது..நான் அவசரமா வெளியே போய்வரணும்..வந்து கப்பலு செய்துதரேன் இல்லாட்டி பட்டணம் போயி வாங்கியே தரேன் தாயி சமத்துப்புள்ள இல்ல?”..”என்று மகளைக்கொஞ்சி பின் குடையோடும் கையில் டார்ச் லைட்டுடனும் வெளியேவந்தான்.

வெளியே வந்ததும் சிறிது தொலைவு நடந்தவன் ஊர்க்கிணறு வந்ததும் அதனருகில் வந்து நின்றான். வருடக்கணக்காய் ஜனநடமாட்டமே இல்லததால்
முள் செடிகளும் காட்டுக்கொடிகளும் கிணற்றில் பந்தலிட்டிருந்தன. கைப்பிடிச்சுவர் திராணியில்லாமல் எந்த நேரமும் விழுந்துவிட தயாராய் இருந்தது. எண்ணைகாணாத ராட்டினம் துருப்பிடித்து தெரிந்தது.

கையிலிருந்த டார்ச் லைட் வெளிச்சத்தில் கிணற்றுக்குள் குனிந்துபார்த்தான். வறண்டபாலைவன்மாயிருந்த பிரதேசத்தில் மழைநீர் தன் கொடைத்தனமையைக்காட்டி இருந்தது. இப்போதே கால்வாசிக்கிணறு ரொம்பிவிட்டது இன்னும் நாளைக்காலைக்குள் முக்கால்கிணறு ரொம்பிவிட்டால் ஊர்ப்பயலுகள் ஒருத்தன் நம்மை சீந்தமாட்டானுங்க..

சாட்டை சாட்டையாய் மழைக்கொத்துகள் நிலத்தில்விழுந்து தெறிப்பதைப்பர்த்தபடி திகைபும் எரிச்சலுமாய் அப்படியே நின்றுவிட்டான் மாணிக்கம்.

சற்றுநேரம் யோசித்தவன் உடனே தனது தோட்டத்திற்கு ஓடிவந்தான்,அங்கே கிடந்த பெரிய அஸ்பெஸ்டாஸ் ஷீட்டினை
குடை,டார்ச்லைடுகளைகீழே போட்டுவிட்டு கொட்டும் மழையில் தனி ஒருவனாய் இழுத்துக்கொண்டு ஊர்க்கிணறு வரை கொண்டு
போனான்.

அவன் மனைவி வேறு ஊரிலில்லை இருந்தால் அவள், நீதிதர்மம் நியாயம் என புலம்புவாள்.அவள் இல்லாததும் நல்லதாயிற்று என
நினைத்து பெருமூச்சுவிட்டான். அஸ்பெஸ்டாஸ் ஷீட்டின் .பாரம் அவனை நடக்கவிடாமல் சில நேரம் பின்னுக்கு இழுத்தது..

******************

“அப்பாரு கப்பலு செய்துதராம போயிட்டாரே” சிணுங்கினாள் ராணி.
திண்ணைக்குவந்து உட்கார்ந்துகொண்டாள்.
.
அப்போது தெருவில் மழையில்நனைந்தபடி நடந்த தங்கராசுவைப்பார்த்தாள்.

“தங்கராசு?”

அவன் சட்டென் நின்றான்.

“தங்கராசு எனக்கு கப்பலு செஞ்சிதரியா?”

தங்கராசு பெருமையாய் தலை ஆட்டினான்.

“காகிதம் இருக்குதா ? நான் இப்படி உங்கவீட்டுதிண்ணைல உக்காந்திட்டு செய்துதரலாமா ?உங்கப்பாரு பார்த்தாருன்னா சத்தம்போடுவாருல்ல?” என்றான் தங்கராசு பய்ந்த குரலில்.

“அப்பாரு வெளிய போயிருக்காரு …வர நேரமாகும் ..அதுக்குள்ள நீ செஞ்சிடு தங்கராசு..இந்தா பேப்பரு”

“சரி கத்திக்கப்பலா சாதா கப்பலா?”

“கத்திக்கப்பலுதான்”

தங்கராசு தாளை சதுரமாய் கிழித்தபடி அவளிடம்,” ஆமா..நீ இப்போ டவுன் பள்ளிக்கூடமா போவற ராணி?”எனக்கேட்டான்

“ஆமா இங்கிலீஷ் மீடியம்.. அஞ்சுகிளாஸ் வந்திட்டேன்னு அப்பா அங்க கொண்டு சேர்த்துட்டாரு,.ஆனா எனக்கு நம்ம ஊரு பள்ளிக்கூடம்தான் இன்னமும் பிடிச்சிருக்கு..நீயி, சுந்தரி, செந்திலு., லதா.சுமதி எல்லாரும் இங்கதான் இருக்கீங்க…நாமல்லாம் பள்ளிக்கூடத்துல நல்லா விளையாடுவோமே>”

“ஆமா..இப்போவும் நாங்கள்ளாம் வௌயாடறோம்” சதுரத்தாளைமடித்து திருப்பி செருகி மறுபடி இழுத்து கத்திக்கப்பல் செய்துமுடித்தான் தங்கராசு.

“தாங்க்ஸ் தங்கராசு” ராணி முகமெல்லாம் பூரிக்க கப்பலை வாங்கிகொண்டாள்.
“சரி நான் வரேன் ராணி.மளைல ஊர சுத்தப்போறேன்”

“எனக்கும் ஆசைதான் ஆனா எங்கப்பாரு திட்டுவாரு…ஆனா நீ செஞ்சிதந்த கப்பலு எடுத்துக்கிட்டு ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்னும் இருக்கேன்”

தங்கராசு தெருவில் இறங்கி மழையில் குளித்தபடி நடந்தான்.

ராணியும் கப்பலை தெருவில் ஓடும் நீரில் செலுத்த ஆவலோடு வெளியே வந்தாள்..

தங்கராசு, ஊரின் அந்த பெரியகிணறு அருகே வந்தபோது திடுக்கிட்டு நின்றான்.
அங்கே மாணிக்கம் கிணற்றின்மீது அஸ்பெஸ்டாஸ் ஷீட்டினைமுற்றிலும்பரப்பிமழைநீரைத்தடுத்து தரையில் ஓடவிட்டுக்கொண்டிருந்தான். அவன்காலடியில் இப்போதே மழைவெள்ளம்.

“ஐயா..பொதுக்கெண்றை மூடாதீங்கய்யா.. ? அதுஇருந்தா ஊருமக்களுக்கு குடிநீருக்கு ஆகுமில்ல?அதை நம்பி நாங்கஎல்லாரும் இருக்கோம்.நீங்க இப்போ அதை மூடறது நியாயாமாங்க?வேணாங்கயா வேணாம்..”

கதறினான் தங்கராசு.

மழைநீர் நெற்றியிலிருந்து கன்னம் வழியே உடம்பில் வெள்ளமாய் வழிவதை அலட்சியமாய் விரல் நுனியில் தள்ளியபடி நிமிர்ந்த மாணிக்கம் தங்கராசுவை புழுவைப்பார்ப்பதுப்போல ஏறிட்டான் .பிறகு, ” நீ எங்கடா இந்தப்பக்கம் வந்த? நியாய அநியாயமெல்லாம் எனக்குத் தெரியும் போடா? போக்கத்தப்பயலே..ஒரு வார்த்த பேசினே.. மகனே.. கல்லெடுத்து தலைல ஒரே போடு.. ஆம்மா?” என்று சீறினான்.

“ஐயா…கெணறு நீரு நெரம்பட்டுமுங்க….தயவுபண்ணி..”

“எலேய்….” என்று சீறியபடிமாணிக்கம் பாறாங்கலொன்றை எடுக்கக் கீழே குனிந்தான்.

தங்கராசு பயந்துபோய் ஓடிவிட்டான்.
வெற்றிக்களிப்புடன் மாணிக்கம் திரும்ப வீடுவரும் பாதைநோக்கிநடக்க ஆரம்பித்தான். மழை ஈட்டீஈட்டியாய் உச்சந்தலையை முகத்தை என குத்திக்கிழித்து விழாஅரம்பித்தது. பேய்மழை.இதுபோன்றமழைஅயை அவன் பார்தததேஇல்லையானதால் திகைப்பும் எரிச்சலுமாய் காலை எட்டிப்போட்டான்.அப்போது…

இடிஒலியினூடே நெளிந்த ஒளியில் மின்னல் ஒன்று அவனுடைய கிணற்றைஒட்டிய ஒருபச்சைமரத்தின் மீது வந்துவிழுந்து அதைத்தாக்கியது.

சிலீர் என் கண்ணாடி உடைந்த ஒலி. தொடர்ந்து….

“அப்பாஆஆஆஆஆஆஆ”

தீனமான அலறல்கேட்டு அதிர்ந்து ஓடினான் மாணிக்கம். அங்கே கரிக்கட்டையாய் கிடந்த உருவம்
பார்த்து

” ராணீஈஈஈ” என வீறிட்டான்.

மழைநீரில் காகிதக்கப்பல் ஒன்று திசை தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தது.


shylaja01@gmail.com

Series Navigation

ஷைலஜா

ஷைலஜா